23 பிப்ரவரி 2010

டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்களின் தற்கொலை. ஏன்?

கடந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகளில் ஒன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டபிள்யூ.ஆர். வரதராஜன் அவர்களின் தலைமறைவு!

சமீபத்தில்தான் அவர் கட்சி தலைமையால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் எவ்வித தவறும் இழைக்காத தன்னை கட்சி தீர விசாரிக்காமல் தண்டித்துவிட்டதாகவும் ஆகவே அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தன்னை கொல்வதாகவும் கட்சி தலைமைக்கு எழுதி வைத்துவிட்டு தலைமறைவானதாக பத்திரிகைகள் கூறின. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு அவருடைய உடல் போரூர் ஏரியில் இருந்து மிகவும் அழுகிய நிலையில் எடுக்கப்பட்டு அந்த உடல் அவருடையதுதான் என்று கண்டுபிடிப்பதற்கே காவல்துறையினர் சிரமப்பட வேண்டியிருந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த ஒரு தலைவர் கட்சி தன்னை தண்டித்துவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுவாரா என்பதுதான் இப்போதையே கேள்வி நம் அனைவர் மனதிலும் எழுகின்றது. மேலும் 'நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன்' என்று கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு சென்றதும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளது.

பொதுவாக நம் எல்லோருக்குமே இரண்டு வாழ்க்கைகள் உள்ளன. ஒன்று வீட்டுக்கு வெளியில். மற்றொன்று வீட்டுக்கு உள்ளே. வீட்டுக்கு வெளியில் என்றால் அலுவலகம், வாணிகம் அல்லது தொழில். இத்தகைய வாழ்க்கை நம்முடைய தினத்தில் மூன்றில் ஒரு பங்கை செலவிடுகிறோம். அதாவது குறைந்தபட்சம் எட்டு மணி நேரம். 'இருபத்தி நாலு மணி நேரமும் ஓய்வு ஒழிவில்லாமல் வேலைங்க' என்று நம்மில் சில சலித்துக்கொள்வது அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. இந்த வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

நம்முடைய வெளிவாழ்க்கையில் நாம் பெறும் வெற்றி, தோல்விகள் நம்முடைய சொந்த வாழ்க்கையை (Personal Life or Family life) பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் இதில் ஏற்படுகின்ற தோல்வியை யாரும் 'நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன்' என்று கூறுவதில்லை.

நம்முடைய வெளிவாழ்க்கையில் என்னதான் வெற்றிபெற்றாலும் அதை நம்முடன் இணைந்து கொண்டாட வீட்டில் மனைவி, மக்கள் இல்லையென்றால்  அல்லது அதில் அவர்கள் பங்குபெற விரும்பவில்லையென்றால் அந்த வெற்றியால் நம்முடைய சொந்த வாழ்க்கையில் எவ்வித பயனுமில்லை என்பதையும் நம்மில் பலரும் அனுபவித்திருக்கிறோம். நான் அலுவலகத்தில் பெரிய பதவியில் இருந்தாலும் என்னுடைய தலைமையில் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணிபுரிந்தாலும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினால் நான் என்னுடைய மனைவிக்கு கணவன் மற்றும் என் குழந்தைகளுக்கு தகப்பன். அவ்வளவுதான். வெளியுலகத்தில் என்னுடைய பிறரை அச்சுறுத்தும் அல்லது அடக்கியாளும் அதிகாரம் வீட்டில் பெரும்பாலும் எடுபடுவதில்லை 'ஒங்க அதிகாரத்த ஆஃபீஸ்ல வச்சுக்குங்க. இது வீடு.' என்கிற வாதத்தை நம்மில் கேட்காதவர் எவர்?

என்னுடைய வங்கி தலைவர்களுள் ஒருவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற தினம். அவருடன் நெருங்கி பழகியவர்களுள் நானும் ஒருவன் என்பதால் அவரை வீடுவரை சென்று விடைபெற எண்ணி அவருடன் சென்றிருந்தேன். அவருடைய ஒரே மகள் அன்று மிகவும் சாதாரணமாக சொன்ன வார்த்தைகள் என் மனதை வெகுவாக பாதித்தன. 'அங்கிள் அப்பா சேர்மனா இருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்து தங்கறதே தன்னோட தகுதிக்கி குறைவா நினைச்சி எங்கள அவரோட ஸ்டார் ஓட்டலுக்கு வந்து பாத்துட்டு போங்கன்னு சொல்வார். அங்க போனாலும் இத தொடாத, அத தொடாத, சத்தமா பேசி என் மானத்த வாங்காதன்னு சொல்வார். இருக்க சொந்தமா ஒரு வீட்ட கூட இனிமேதான் கட்டணும். அதுவரைக்கும் எங்க இருப்பார்னு கேளுங்க?'

இந்த நிலைக்கு நாமும் ஆளோவோம் என நம்மில் பலரும் எண்ணி பார்ப்பதில்லை. நம்முடைய வெளிவாழ்க்கையில் நாம் பெறும் வெற்றி நம்முடைய சொந்த வாழ்க்கையில் கிடைக்கவில்லையென்றால் வெளிவாழ்க்கையில் நாம் பெற்ற வெற்றிகள் அனைத்தும் வீணே.

வரதராஜன் அவர்களுடைய தற்கொலைக்குக் காரணம் அவருக்கு கட்சியில் ஏற்பட்ட அவமானம்தான் தனக்கும் அவருக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவருடைய மனைவி கூறியதாக பத்திரிகையில் வெளியாகியுள்ளன. இதையும் மீறி பத்திரிகைகள் அவருடைய மரணத்திற்கு காரணம் குடும்ப பிரச்சினைதான் என்று தொடர்ந்து கூறுமானால் அடுத்து தன்னுடைய பிணம்தான் பிணவறைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் வரதராஜன் அவர்கள் தன்னுடைய வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள அனைத்து தொகையையும் தன்னுடைய மகள் தனக்கு அன்பளிப்பாய் அளித்த மடிக்கணினியையும் கட்சிக்கு அளித்துவிடவேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு  சென்றது ஏன்?

***********

10 பிப்ரவரி 2010

புதிதாய் ஒரு ஜனணம்

.

சுமார் முப்பத்தைந்தாண்டுகள். ஒரே நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகளா என்று இன்றைய தலைமுறையினர் மலைத்துபோகிற அளவுக்கு நீண்டதொரு உறவு. முடிந்துவிட்டதாக நான் நினைத்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக ஓய்வு பெற்று இன்னும் (இரு வாரங்களாக தினம் ஒருமுறையாவது ) தொடர்கிற தொலைபேசி உறவு..

இனி தினமும் காலையில் எழுந்தவுடன் அவசரகதியில் இயந்திரமாய் குளித்து, உடைமாற்றி ஓடுகிற தலைபோகும் அவசரம் இல்லை. ஆனால் கண் முன்னே நீளும் எட்டு மணி நேரத்தில் என்ன செய்வது என்கிற மலைப்பு... அதை சாதுரியமாய் எதிர்கொள்கிற தெம்பு சற்று குறைவுதான், தற்போதைக்கு. காலப்போக்கில் அது பழகிப்போகுமோ என்னவோ.

ஜனவரி 31ம் தேதி ஓய்வு பெற்றாலும் கடந்த ஒரு வார காலமாக வீட்டை மாற்றி, புதிய வீட்டில் காஸ், தொலைபேசி இணைப்பு என நடையாய் நடந்து.. இன்றுதான் காஸ் வந்தது. தொலைபேசி இனிதான்...

ஓய்வே இல்லை என்கிற நிலைமாறி ஓய்வுதான் நிரந்தரம் என்கிற நிலையில்... துவக்கத்தில் சுகமாகத்தான் இருந்தது என்றாலும் கடந்த சில நாட்களாக ஓய்வே ஒரு சுமைதானோ என்பதுபோன்ற ஒரு மாயை..

ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆவலில் ஒரு தொண்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன். வருகிற வாரத்தில் வந்து பாருங்கள் என்று வந்த பதில் சற்றே ஒரு நிம்மதியை அளித்துள்ளது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நாளின் சில மணி நேரங்களாவது இதற்கென்று ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவன் விட்ட வழி...சென்று வந்து அதைப் பற்றி கூறுகிறேன்.

தனியார் Internet இணைப்பு வசதி இருந்தாலும் பி.எஸ்.என்.எல் வழங்கும்  Broadband அளவுக்கு வேகம் இல்லாததால் எளிதாய் வலையேற்ற முடியவில்லை. Upload பொத்தானை அழுத்திவிட்டு உறங்கப் போய்விடலாம் போன்றதொரு ஆமை வேகம். கேட்டால் ஃபோட்டான் வேகமாம். இதற்குபோய் அப்படியொரு விளம்பரம்... எதற்கு அதிகமாய் விளம்பரம் வருகிறதோ அதன் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்பது சரிதான் போலிருக்கிறது.

மீண்டும் வருவேன்...

இது எனக்கு இரண்டாம் பிரவேசம்... வேகமில்லாத, ஆர்ப்பாட்டமில்லாத பிரவேசமாய்... கடந்த முப்பதாண்டு நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசைகளுடன் அமைதியாய் ஒரு...


மீண்டும் சந்திப்போம்.. சில தினங்களில்..