31 டிசம்பர் 2010

மன்மதன் அம்பு - உண்மைத்தமிழனின் விமர்சனம் தவறில்லை!

நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லையென்றாலும் (ஏன் என்று பதிவின் இறுதியில் கூறுகிறேன்) எனக்கு பிடித்த பதிவாளர்களின் பதிவுகளை படிக்க தவறுவதில்லை. இதற்காகவே ப்ளாகரின் ரீடிங் லிஸ்ட்டில் பட்டியலிட்டு இத்தகையோர் எழுதும் பதிவுகளை படித்துவிடுவது வழக்கம்.

இவர்களில் உண்மைதமிழனும் ஒருவர். சமீபத்தில் அவர் எழுதிய மன்மதன் அம்பு திரைப்பட விமர்சனமும் அதற்கு வந்திருந்த பலதரப்பட்ட பின்னூட்டங்களும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

மிக, மிக சாதாரணமான ஒரு படத்தை (அதுவும் சொந்த சரக்கு அல்ல) எடுத்துவிட்டு அதிலுள்ள மிக, மிக, மிக சாதாரணமான பாடல்களுக்காக ஒரு பகட்டான (பூனை சூடு போட்ட கதையாக) வெளியீட்டு விழாவையும் நடத்திய உதார் நாயகனின் (என்னை பொருத்தவரை அவரை இப்போதெல்லாம் உலக நாயகனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை) படத்தைப் பற்றிய உண்மைத் தமிழனின் விமர்சனத்தை விமர்சிப்பதில் பொருளில்லை. அது 'என்னுடைய கருத்து' என்று அவரே கூறிவிட்டார்!

ஆனால் அதில் அவர் கூறியிருந்த கருத்துக்களில் ஒன்றைப் பற்றி மட்டும் சற்று விமர்சிக்கலாம் என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு.

ஒரு திரைப்படத்திலுள்ள பாத்திரங்கள் பேசுகின்ற வசனங்கள் அந்த வசனகர்த்தாவின் கருத்துக்களாக கருதுவது சரியா?

உண்மைத்தமிழனின் கருத்துக்கு அவரை சிலர் கிண்டல் செய்திருந்தனர்.

ஆனால் அவருடைய கூற்று தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

ஒரு சில உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம் என எண்ணுகிறேன்.

பழம்பெரும் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா கே.எஸ். கோபாலகிருஷ்ணன் காலத்திலிருந்து பாலசந்தர், பாலு மகேந்திரா, விசு என சமீபத்திய மணிரத்தினம் வரையிலும் உண்மைத்தமிழனின் கருத்து சரிதான் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

கோபாலகிருஷ்ணன் மற்றும் விசு எழுதி இயக்கிய அனைத்து திரைப்படங்களில் வரும் பாத்திரங்கள் வளவளவென்று பேசுவார்கள். பாணி மட்டுமல்லாமல் அவர்கள் பேசும் வசனங்களில் தொனிக்கும் கருத்துக்களும் வசனகர்த்தாவைத்தான் முன் நிறுத்தும்.

பாலசந்தரும் அப்படித்தான். அவருடைய எண்ணங்களைத்தான் அனைத்து படங்களிலும் பாத்திரங்கள் வழியாக எடுத்துரைப்பார். அனைவருமே நாடக பாணியில், உரத்த குரலில், எதுகை மோனையுடன் பேசுவார்கள்.

பாலு மகேந்திரா படங்களில் பாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். புருவத்தை உயர்த்தி, தோள்களை குலுக்கி, உதட்டை பிதுக்கி, தலையை மேலும் கீழும் அசைத்து... இப்படி அதிகம் பேசாமல் முக, உடல் சேஷ்டைகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துவர். 'நீங்கள் கேட்டவை' என்ற மசாலா படத்தில் அன்றைய சில இயக்குனர்களின் பாணியில் கதாபாத்திரங்கள் செயல்பட்டிருந்தாலும் வசனம் என்னவோ ஏறத்தாழ அவர் பாணியில்தான் இருந்தன.

மணிரத்தினம்? அவர் படங்களில் வரும் அனைத்து படங்களிலும் வசனம் ஒரே ஸ்டைலில்தான் இருக்கும். அவருடைய 'ஒருசொல்' வசன பாணியை 'தமிழ்படத்தில்' மிக அருமையாக கிண்டல் செய்திருப்பார்கள். பாணி மட்டுமல்லாமல் அவருடைய 'அடிதடியை நியாயப்படுத்தும்' நோக்கத்தில்தான் அவருடைய பெரும்பாலான படங்களில் வரும் வசனங்களும் இருந்துள்ளன.

இந்த வரிசையில் பாரதிராஜா மட்டுமே விதிவிலக்கு என கருதுகிறேன். இதற்கு அவருடைய திரைப்படங்களுக்கு வசனம் அவர் எழுதியதில்லை என்பதும் ஒரு காரணம்.

திரைப்படங்கள் என்றில்லை. சிறுகதைகளும், நாவல்களும் அப்படித்தான். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு பாணி இருக்கும். அதே பாணியை அவர்கள் புனையும் அனைத்து கதைகளிலும் காணலாம். அவர்களுடைய பெரும்பாலான கதைகளில் வரும் பாத்திரங்கள் வழியாக சமூகத்தைப் பற்றிய அவர்களுடைய பார்வையே வெளிப்பட்டு வந்துள்ளன. இதற்கு உதாரணமாக நான் மிகவும் மதித்துப் போற்றும் ஜெயகாந்தனை கூறலாம். அவருடைய பெரும்பாலான புனைவுகள் இலக்கியங்களாக போற்றப்பட்டாலும் இன்றைய எழுத்தாளர்களைப் போன்று பாமரனும் படித்து புரிந்துக்கொள்ளவோ அல்லது படிப்பதற்கு சரளமாகவோ அல்லது சுவையாகவோ அவருடைய எழுத்து இருக்கவில்லை. அவருக்கு தான் ஒரு இலக்கியவாதி என்கிற மமதை அவருடைய எல்லா கதைகளிலும் இழையோடுவதை காணலாம்.

அத்தகைய மமதை சமீபகாலமாக கமலுக்கும் ஏற்பட்டுள்ளது. தனக்கு தெரியாத விஷயம் இல்லை என்பதைப் போன்ற ஒரு எண்ணம். அவர் ஒரு நல்ல அற்புதமான நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் ஒருபோதும் ஜனரஞ்சக நடிகராக முடியாது. அல்லது ஒரு திறமையான கதாசிரியராகவோ அல்லது வசனகர்த்தாகவோ ஆக முடியாது. அதை அவர் உணர்ந்துக்கொள்ளாமல் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். இபோதெல்லாம் அவர் பேசுகின்ற தமிழே புரிவதில்லை.

நடிப்பு மட்டுமே முழு நேர சிந்தனையாக அவருக்கு இருந்த காலகட்டத்தில் வந்த அவருடைய அனைத்து திரைப்படங்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டதுடன் வசூலையும் அள்ளி தந்தன. 'ஹே ராமில்' துவங்கிய அவருடைய இந்த 'மமதை' தசாவதாரம், மன்மதன் அம்பு என தோல்விகளாக தொடர்கின்றன.

இதை அவர் மட்டுமல்லாமல் அவருடைய தீவிர ரசிகர்களும் (இவர்களுள் பெரும்பாலானோரும் அறிவுஜீவிகள்தான்) உணர்வது நல்லது.

சரி இப்போது ஏன் அதிகம் எழுதுவதில்லை என கூறிவிடுகிறேன். கடந்த ஆறு மாதங்களாக எனது வலது தோள்பட்டையில் பயங்கர வலி. அப்போல்லோவில் சி.டி. ஸ்கேன் செயததில் தோள் எலும்பு தேய்ந்துவிட்டது என தெரிந்தது. இதற்கு பிசியோதெரப்பி மற்றும் தினசரி உடற்பயிற்சியை தவிர வேறு நிவாரணம் இல்லையாம். ஒரு ஆகவே வலது கையால் கீபோர்டை பயன்படுத்த முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தினமும் தொடர்ந்து லேப்டாப் மவுஸ் பேடை பயன்படுத்தியதுதான் என்கிறார் எலும்பு மருத்துவர். நான் சுமார் பத்து ஆண்டுகளாக தினமும் எட்டு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தியதன் விளைவு!

ஆகவே நண்பர்களே, லேப்டாப் பயன்படுத்துபவர்களும் தனியாக ஒரு எக்ஸ்டேர்னல் எலிக்குடியை பயன்படுத்துவது நல்லது. மேலும் எலிக்குட்டியை இடது கையிலும் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். அரைமணிக்கு ஒருமுறை கையை மாற்றி பயன்படுத்துவது நல்லதாம்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

25 அக்டோபர் 2010

எந்திரன் - லாஜிக் இல்லா மாஜிக்!

நான் தீவிர ரஜினி ரசிகன் என்றாலும் 'முதல் நாள் முதல் காட்சி' ரகம் இல்லை. அம்மாதிரியான ரசிகர்கள் அடிக்கும் விசில் சப்தம் ஏதும் இன்றி எனக்கு மிகவும் பிடித்த நடிகரின் படத்தை ரசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஜினியின் படத்தை முதல் நான்கு வாரங்கள் கழித்துத்தான் குடும்பத்துடன் பார்ப்பது வழக்கம்.

என் வழக்கப்படி எந்திரன் படத்தை கடந்த வியாழனன்று சென்னை பிவிஆர் திரையரங்கில் பார்த்தேன். என் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை நான் சென்றிருந்த அன்று என்னை சுற்றிலும் ஒரு பெரிய குடும்பம். குழந்தை, குட்டி சகிதம் சுமார் இருபது பேர் அமர்ந்திருந்தனர். (கட்டண சீட்டின் விலை ரூ.120/-, ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தால் கூடுதலாக ரூ.30/- - ஆக இருபது பேர் திரைப்படம் பார்க்க கட்டணம் மட்டும் ரூ.3,000/- - எப்படித்தான் கட்டுப்படி ஆகிறதோ தெரியவில்லை.)

ஆக, நான் எதை தவிர்க்கலாம் என்று நினைத்து நான்கு வாரங்கள் கழித்து சென்றேனோ அது பலிக்கவில்லை. காட்சிக்கு காட்சி விசில், கைதட்டல், சூப்பர் என்ற பாராட்டு மழையில் பல சமயங்களில் திரையில் பேசுவதே கேட்கவில்லை. இதில் பலர் ஏற்கனவே படத்தை பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஷங்கரின் திரைப்படங்களில் பெரிதாக சஸ்பென்ஸ் ஏதும் இருப்பதில்லை என்றாலும் இருந்த ஓரிரண்டு சஸ்பென்சையும் அருகில் இருந்த வானரங்கள் (அப்படி சொல்லலாமா?) தீர்த்து வைத்தன.

'உதார் நாயகன்' கமலின் படங்களுக்கு செல்வதுபோன்று பெரிய எதிர்பார்ப்புகளுடன் 'ஸ்டைல் மன்னன்' ரஜினியின் படங்களுக்கு நான் செல்வதில்லை. ஆகவே அவருடைய படங்களை வெகுவாக ரசிக்க முடிகிறது.

தமிழ்மணத்தில் எந்திரனைப் பற்றி வந்த பல்வேறு விமர்சனங்களை நான் படித்திருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி ரஜினிக்காகவே படத்தை ரசிக்க முடிந்தது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகின் முடிசூடா மன்னன், சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் இருக்கும் ரஜினி போன்ற ஒரு நடிகர் ஒரு படத்திற்காக இத்தனை சிரமங்களை பட தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இருந்தது அவருடைய நடிப்பு. அதுவும் தன்னுடைய டிரேட் மார்க் பஞ்ச் வசனங்கள், மாஸ் ஹீரோயிசம், மானரிசங்கள் என எதுவும் இல்லாமல்.... நிர்வாணமாக ஒரு இளம் பெண்ணை அப்படியே கொண்டு வந்து அதனால் அவர் தற்கொலை செய்துக்கொள்ள காரணமாக இருப்பதுபோல்... அதாவது இத்தகைய பெண்களை காக்கும் நாயகன் என்ற அவருடைய இமேஜையும் கூட கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரத்திற்காக அவர் இறங்கி வந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

பொதுவாக இயக்குனர் ஷங்கரை பற்றி லாஜிக்கே இல்லாமல் பிரம்மாண்டம் என்ற பெயரில் பம்மாத்து செய்பவர் என்பதுதான் என்னுடைய கணிப்பு. அவருடைய இந்தியன், அன்னியன், சிவாஜி வரிசையில் எந்திரனும் பல இடங்களில் அப்படித்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும் அந்த படங்களில் இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த படத்தில் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு முழு நேர உல்லாச படம் என்ற கணிப்புடன் பார்த்துவிட்டு (அதாவது சற்று நேரம் நம்முடைய ரீசனிங் பவரை மறந்துவிட்டு) வரலாம் என்று சென்றால் இந்த படத்தை ம்ழுமையாக ரசிக்க முடியும் என நினைக்கிறேன்.

இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த நான் ஷங்கரின் இணையதளத்திற்கு சென்று 'என்னை கேளுங்கள்' என்ற பகுதியில் அவருக்கு இவ்வாறு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். "இந்த படத்தின் ஒரு நகலில் (Print) பாடல் மற்றும் நகைச்சுவை காட்சிகளை நீக்கிவிட்டு சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் அளவுக்கு எடிட் செய்து சென்னையிலுள்ள ஒரு சிறிய திரையரங்கில் வெளியிடுங்களேன்.' அவர் அதை கண்டுக்கொள்ளவே இல்லை. இதற்கு என்ன காரணம் என்று படத்தை பார்த்ததும்தான் தெரிந்தது. படத்தை இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்க்க பாடல்கள் எந்த அளவுக்கு உதவுகின்றன என்பது. 'காதல் அணுக்கள்' மற்றும் 'கிளிமஞ்சாரோ' பாடல்களை படமாக்கிய விதமும் லொக்கேஷனும் மிகவும் அருமை.

படத்தின் க்ளைமாக்சில் சுமார் அரை மணி நேரம் வரும் அனிமேஷனை சரிபாதியாக குறைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

லாஜிக் பல இடங்களில் உதைக்கத்தான் செய்கிறது. Most glaring என்று ஒன்றையாவது சொல்ல வேண்டும் என்றால் விஞ்ஞானி ரஜினிக்கு ரோபோட்டை உருவாக்க உதவ இரண்டே உதவியாளர்களாம்! தேவையற்ற காட்சிகளில் எல்லாம் 'ரிச்' ஆக இருக்க வேண்டுமே என்று திரை நிறைய உதிரி நடிகர்களை காட்டிய ஷங்கர் ரஜினியின் லாபில் குறைந்தபட்சம் ஒரு ஐம்பது உதவியாளர்கள் இருப்பதுபோல் ஒரு காட்சியிலாவது காண்பித்திருக்கலாம்.

இருந்தாலும் எந்திரன் இவற்றையெல்லாம் மறந்து ஒரு மூன்று மணிநேரம் உல்லாசமாக இருக்க செய்யும் அளவுக்கு ஒரு லாஜிக் இல்லா மாஜிக் என்றுதான் சொல்ல வேண்டும்.

30 செப்டம்பர் 2010

நிஅயோத்தி தீர்ப்பு சாராம்சம்

அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம்:

1. 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்புக்கும், பாபர் மசூதி அமைப்புக்கும் மற்றும் இந்து மகாசபை அமைப்புக்கும் வழங்க வேண்டும்.

2. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மூன்று மாத அவகாசம்.

3. அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்.

ஆனால் சர்ச்சைக்குரிய இடம் உண்மையில் ராமர் பிறந்த இடம்தான் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிஜேபி வழக்கறிஞர் பேட்டி. இஸ்லாமிய சகோதரர்கள் இதை ஏற்றுக்கொண்டு அங்கு மசூதி கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை!

தீர்ப்பின் முழு விவரமும் வெளிவராத நிலையில் அவருடைய இந்த பேட்டி சரிதானா என்று தெரியவில்லை.

28 செப்டம்பர் 2010

என்று மாறும் இந்த இழிநிலை!

நேற்று நான் எழுதியிருந்தது, அதாவது காமன்வெல்த் போட்டி கிராமத்தில் (Games Village) பத்திரிகைகளும் ஊடகங்களும் கூறியிருந்ததுபோன்று அவ்வளவு மோசமாக இல்லை என்பதற்கு நேற்று வந்திறங்கிய வெளிநாட்டு வீரர்களின் பேட்டிகளிலிருந்து உண்மைதான் என்பது தெளிவாகிறது.

'Impressed with Games Village' என்ற தலைப்பில் ஹிந்து தினத்தாளில் வெளியாகியுள்ள சில கருத்துக்கள்:

இங்கிலாந்தின் ஹாக்கி அணியின் வீரர்களுள் ஒருவரான அலெக்சாண்ட்றா:

"நான் என்னுடைய நாட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை படித்துவிட்டு எப்படி இருக்குமோ என்று இங்கு வந்தேன். ஆனால் அப்படி ஏதும் குறைகள் இல்லை என்பதுடன் நான் இதுவரை பார்த்த ஏற்பாடுகளை விடவும் இங்கு மிகவும் சிறப்பாகவே உள்ளன. வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளும் விசாலமாகவும், தூய்மையாகவும் உள்ளன. உங்களுடைய உள்ளூர் பத்திரிகைகள் சற்று அதிகமாகவே எதிர்மறையாக இதைப்பற்றி எழுதியுள்ளன என்றே தோன்றுகிறது. அதை அப்படியே எங்களுடைய பத்திரிகைகளும் பிரசுரித்துவிட்டன என்று நினைக்கிறேன்."

கடந்த உலகைக் கோப்பை ஹாக்கியின் சிறந்த கோல்கீப்பர் என்ற பட்டத்தை வென்ற பெத் என்னும் வீராங்கனை:

"வீரர்கள் உணவருந்தும் பகுதி மிகவும் சிறப்பாக உலகதரம் வாய்ந்ததாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டிகள் மிகவும் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். இங்கு வந்து இவற்றைக் கண்டவுடனே என்னுடைய குடும்பத்தினருக்கு 'இங்கு எல்லாமே சிறப்பாக உள்ளது கவலைப்படாதீர்கள்' என்று மின்னஞ்சல் செய்தேன்.'

கடந்த இரண்டு நாட்களில் போட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாண்ட், நைஜீரியா, மலேசியா வீரர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். இதிலிருந்து NDTV மற்றும் CNN-IBN தொலைக்காட்சிகள் ஒரு வார காலமாக அளித்து வந்த எதிர்மறை செய்திகள் அனைத்தும் உண்மையல்ல என்பது தெளிவாகிறது. அவ்ர்களுடைய செய்திகளை அப்படியே காப்பியடித்து ஒளிபரப்பி வந்த சன் நெட்வொர்க் இப்போதும் அதே பல்லவியை பாடிக்கொண்டிருப்பது வேதனை.

அதுமட்டுமா கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் வெளியாகியிருந்த எதிர்மறை பதிவுகளை எழுதிவந்த பதிவர்களும் வெட்கப்பட வேண்டும். விஷயம் என்னவென்றே புரிந்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு எழுதி வந்தவர்களை என்ன சொல்வது? அந்த பதிவுகளுக்கு பின்னூட்டத்தில் வெறுப்பை உமிழ்ந்தவர்களுடைய எண்ணிக்கையைப் பார்த்தால் நாட்டில் எதிர்மறை கருத்துக்களுக்குத்தான் மவுசு அதிகம் என்பதும் தெளிவாகிறது. என்று மாறும் இந்த இழிநிலை?


********

27 செப்டம்பர் 2010

காம்ன்வெல்த் போட்டிகள் நிச்சயம் வெற்றிபெறும்

எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தியதி துவங்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு 2010 போட்டிகள் நம் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனுக்கும் ஒரு சவாலாகவும் இருந்தாலும் இறுதியில் முழுமையான வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதை நடத்தும் உரிமையை பெறுவதற்கு இந்தியாவைத் தவிர ஏற்கனவே இந்த போட்டியை நடத்தி அனுபவம் பெற்றுள்ள கனடாவும் போட்டியிட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் காமன்வெல்த் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இந்தியாவையே தெரிவு செய்தனர்.

இதன் பின்னணியில் ஏதோ தில்லுமுல்லு இருப்பதாக சமீபத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளதையும் படித்திருப்பீர்கள். இதில் ஒன்றும் ரகசியமில்லை. இந்த போட்டியை நடத்த இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்ததற்கு இதில் பங்குபெறும் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டுத்துறைக்கும் 100,000 அமெரிக்க டாலர் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்ல விமான சீட்டு
உட்பட அனைத்து செலவினங்களையும் தாங்களே ஏற்றுக்கொள்ள முன்வந்ததும் ஒரு முக்கிய காரணம் (ஆதாரம்:விக்கிபீடியா).

இந்த போட்டியை நடத்தும் உரிமையை 2003ம் ஆண்டே இந்தியா பெற்றது என்றாலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேவையான செலவினங்களை (சுமார் 43,000/- கோடி!) கணக்கில் கொள்ளும்போது இதன் பிரம்மாண்டத்தையும் அதற்கு தேவைப்படும் கால அவகாசத்தையும் நம்மால் உணர முடிகிறது. இந்த செலவினம் மற்றும் முதலீடுகளின் அளவு கடந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா செலவிட்டதை விட ஆறு மடங்கு!

எழுபத்திரண்டு நாடுகள் பங்குபெறப் போகும் இந்த போட்டி நம்முடைய நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே கல்மாடி தலைமையில் ஒரு தலைமை நிர்வாக குழுவும் அதன் கீழ் ஒவ்வொரு துறையையும் சார்ந்த பல குழுக்களும் நியமிக்கப்பட்ட பிறகும் நம் நாட்டுக்கே உரித்தான சம்பந்தப்பட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட உட்பூசல், போட்டி, பொறாமை நம்முடைய நாட்டின் ஆட்டின் நிர்வாக மற்றும் ஆளுமை திறமைகளை பல நாடுகளும் (அவற்றில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெறும் பொறாமை காரணமாகவும்) சந்தேகப்பட வைத்துவிட்டது என்னவோ உண்மைதான்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் பலவும் இரண்டு நாட்களுக்குள்ளேயே பின்வாங்கப்பட்டு இப்போது நிலைமை சீராகிவிட்டது என்று அவர்களே கூறுவதிலிருந்தே அவர்கள் கண்ட குறைகளின் அளவு எவ்வளவு என்பதை உணர முடிகிறது. படுக்கை விரிப்பு சரியில்லை, பாத்ரூமில் குழாய்கள் ஒழுகுகிறது, வாஷ் பேசின் சுத்தமாக இல்லை என்பதுதான் அவர்கள் கூறிய
'சுகாதாரமின்மை'. இவை யாவுமே ஆங்கிலத்தில் கூறும் 'last minute things to do' அலுவல்கள்தான் என்பதும் விளையாட்டு வீரர்கள் வருவதற்கு முந்தைய இரண்டு, மூன்று தினங்களில் செய்து முடிக்க வேண்டியவையே என்பதும் புலனாகிறது. இத்தகைய குறைகள் நம் நாடு அல்ல எந்த நாட்டிலும்
இருந்திருக்கும். ஆனால் அவற்றை சம்பந்தப்பட்ட நாட்டின் பத்திரிகைகளே வெளிச்சம் போட்டு காட்டியதில்லை. சீனா போன்ற நாடுகளில் நிலவும் இரும்புத்திரை இல்லாத பத்திரிகை சுதந்திரம் நம் நாட்டில் இருப்பதும் அதை தவறாக பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் நம்மவர்கள் என்பதுதான் இவை
யாவும் வெளிச்சத்திற்கு வர காரணம். இதற்கு வேறு ஒரு கோணமும் உண்டு கல்மாடி துவக்கமுதலே பத்திரிகைத் துறையை சரியாக 'கவனிக்க' தவறிவிட்டார். ஆகவே அந்த கோபத்தில் சகட்டுமேனிக்கு சிறிய விஷயங்களைக் கூட பூதாகரமாக எழுதி பழிதீர்த்துக்கொள்கிறது இந்தத்துறை. இடையில் நாட்டின் மானம் கப்பலேறுவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?




எழுபது நாடுகள். சுமார் 2000 தடகள வீரர்கள், 500க்கும் மேற்பட்ட நடுவர்கள், அதிகாரிகள். இவர்களை தங்க வைக்க சுமார் 2000 குடியிருப்புகளைக் கொண்ட வின்னைத் தொடும் கட்டிடங்கள். இவர்களுக்கு
அவரவர் விரும்பும் உணவு வழங்க சமையற்கூடம். பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த கூடங்கள், பயிற்சி மையங்கள், மருத்துவக் கூடம்.... இவை அனைத்தும் ஒன்றுமில்லா பாலைவனம் போன்ற இடத்திலிருந்து from scratch என்பார்களே அதுபோன்று உருவாக்க வேண்டும். அதிகபட்சம் ஆறு அறைகளைக் கொண்ட ஒரு இரண்டு மாடி வீட்டைக் கட்டி முடிக்கவே ஓராண்டுகாலம் தேவைப்படுகிறதே.. அதையும் கட்டி முடித்து குடியேறுவதற்குள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளோகிறோம். நம்மில்
எத்தனை பேர் கட்டுமானப் பணிகளை பாதியிலேயே விட்டுவிடுகிறோம். இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே இதன் சிரமமும் வேதனையும் புரியும்.



சுமார் 2000 குடியிருப்புகள் (10000 அறைகள்!) கொண்ட விளையாட்டு கிராமத்தில் ஒரு அறையில் பாம்பாம், சில அறைகள் இன்னும் சுத்தப்படுத்தப்படவில்லையாம், சில அறைகளில் படுக்கை விரிப்பில் நாய்கள் ஏறி அழுக்காகிவிட்டனவாம்.... இன்னும் என்னவெல்லாம் கூப்பாடுகள்! என்னைக் கேட்டால் பாலம் இடிந்து விழுந்ததை தவிர வேறு எந்த குறைபாடும் இத்தனை பெரிதுபடுத்தப்பட தேவையில்லை.

இடிந்து விழுந்த பாலத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பு உண்டா, 'கமிஷன்' பெற்றுக்கொண்டு தரமற்ற நிறுவனத்திற்கு இந்த பணியை ஒப்புவித்ததால்தான் பாலம் இடிந்து விழுந்ததா என்பது விசாரனையில்தான் தெரிய வரும். மற்றபடி அரங்கத்தின் கூரையே பெயர்ந்து விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் பேசி தீர்த்ததே அது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். உண்மையில் விழுந்தது அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்து 'False ceiling'கின் ஒரு சிறிய பகுதியே. அரை நாளி சரி செய்துவிடக் கூடிய குறை! ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் 'Just Now' என்ற நாடாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தங்களுடைய 'பிழைப்பை' ஓட்டும் இத்தகைய சானல்கள் தங்களுடைய நாட்டின் மதிப்பையே கெடுக்கிறோமே என்று ஒரு சில நொடிகளாவது சிந்தித்துப் பார்த்தால் நல்லது.

இந்த போட்டி சம்பந்தப்பட்ட கட்டுமான ஏற்பாடுகளைத் தவிர தில்லி மாநகரத்தை அழகுபடுத்தவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவற்றை உரிய நேரத்தில் முடிக்க
விடாமல் விடாது கொட்டி தீர்த்த மழையின் தீவிரத்தையும் கருத்தில்கொள்ளும்போது பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டிய குறைகள் ஒன்றும் பெரிதல்ல. ஆயினும் நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனை வெளிநாடுகள் பலவும் குறைத்து மதிப்பிட வேண்டிய சூழலுக்கு உள்ளாக்கிவிட்டீர்களே என்ற ஆதங்கத்தில்தான் நம்முடைய பிரதமர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சாடியிருக்கிறார். ஆனால் இதை சில மாதங்களுக்கு முன்னரே அவர் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

சில வெளிநாடுகள் கூறும் இன்னுமொரு குற்றச்சாட்டு பாதுகாப்பு. இதில் முன்னால் நிற்பது ஆஸ்திரேலியா. தங்களுடைய நாட்டில் சில ஆண்டுகள் தங்கி படிக்க வரும் ஒரு சில மாணவர்களையே தங்களுடைய நாட்டின் 'வன்முறை கும்பல்களிலிருந்து' பாதுகாக்க வக்கில்லாத நாடு அது! அதற்கு சில பொறுப்பற்ற தீவிரவாதி நாடுகளின் தூண்டுதலால் நம் நாட்டில் ஏற்படும் ஒருசில தீவிரவாத செயல்களை சுட்டிக்காட்டி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்ட என்ன தகுதி உள்ளது? அந்த நாட்டிலிருந்து வந்த
கிரிக்கெட் அணி கேப்டனே என்னைப் பொருத்தவரை பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளபோது தங்களுடைய தடகள வீரர்களை தில்லிக்கு வர நிர்பந்திக்கமாட்டோம் என்று
அறிக்கை விட்டால் அது உள்நோக்கம் கொண்டது என்று கூறுவதைத் தவிர வேறென்ன கூறுவது? எங்கே நம் நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டி அவர்கள் 2006ம் ஆண்டு நடத்திய போட்டிகளைவிட சிறப்பாக மைந்துவிடுமோ என்கிற பொறாமையும்தான் காரணமாக இருக்க முடியும். கனடாவுக்கு இது நம்முடைய நாட்டுக்கு கிடைத்திருக்க வேண்டிய போட்டியாயிற்றே என்கிற பொறாமை!

எத்தனை இடர்கள் வந்தாலும் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் போட்டியை நடத்தியே தீருவோம் என்கிற உறுதியுடன் பிரதமரும் அவருடைய சகாக்களும் இறுதிகட்ட ஏற்பாடுகளை முனைப்புடன் ஈடுபடும் இந்த வேளையில் 'மேதாவித்தனமாக' இது இப்படித்தான் முடியும் என்று எனக்கு தெரியும் என்கிற தொனியில் பேசிவரும் மணிசங்கர் ஐயர் போன்றவர்களை புறக்கணிப்போம், எந்தவித தடங்கலும் இன்றி போட்டி வெற்றிகரமாக நடந்து முடிய வாழ்த்துவோம்.

என் வீடு, என் குடும்பம் என்பதில் பெருமை கொள்ளும் நான் என் குடும்பத்தார் என்ன செய்தாலும் மற்றவர்கள் முன்பு அவர்களை விட்டுக்கொடுக்க முன்வருவேனா? அதுபோன்றுதான் நம் நாடும். நான்
இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய நாட்டைப் பற்றி நானே தேவையில்லாமல் குறை கூறமாட்டேன். நிச்சயமாக பிற நாடுகள் குறை கூறுவதை அனுமதிக்கவே மாட்டேன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

நாட்டில் கோடானுகோடி மக்கள் பட்டினியில் வாடும் இன்றைய சூழலில் இத்தனை பொருட்செலவில் இப்படியொரு பிரம்மாண்ட போட்டி தேவைதானா என்ற கேள்வியும் எழுப்பபடுகின்றது. நிச்சயம் தேவைதான். இந்தியா இன்னும் வளர்ந்து வரும் ஒரு நாடாகவே பல நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.  ஆகவே இத்தகைய போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவது அவசியமாகிறது. அத்தகைய முயற்சியில் இடையில் ஏற்படும் சிறு,சிறு தவறுகளை, குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டி நம்முடைய முயற்சிகளை, சாதனைகளை நாமே குறை கூற புறப்பட்டுவிடக்கூடாது.

***

21 செப்டம்பர் 2010

தலை வெடித்துவிடும் போலிருக்கிறது!

கடந்த சில தினங்களாக வாசகர் பரிந்துரை பட்டியலில் சில பிரபல பதிவர்களின் (மும்மூர்த்திகள்) பதிவுகள் காணோமே. என்ன காரணம்?




காரணம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும்போலிருக்கிறது.



தவிப்புடன்,

டிபிஆர்.

08 செப்டம்பர் 2010

இது யார் வீட்டு சொத்தும் அல்ல, பொதுச் சொத்து!

சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சுமார் 12000 டன் உணவு தானிய இழப்பைப் பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட்டு இத்தகைய இழப்புகளை தவிர்க்க ஏன் உபரி தானியங்களை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கக் கூடாது என்ற வினாவையும் எழுப்பியது.

இதற்கு மறுமொழியாக பிரதமர் இத்தகைய கொள்கை
விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும்
தானிய இழப்பு ஏற்படாவண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதும் சர்ச்சையக் கிளப்பிவிட்டது. உச்ச நீதிமன்றமே பிரதமரின் மறுமொழியை தவறாக எடுத்துக்கொள்ளாத
நிலையில் நம்முடைய 'பிரபல' பதிவாளர்கள் சிலர் நம்முடைய பிரதமரை 'யார் வீட்டு அப்பன் சொத்து'; 'எங்கிருந்து வந்தது இந்த ஆணவம்' என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவுகள் எழுத கொதித்தெழுந்து பின்னூட்டத்தில் பலர் பிரதமரையும், விவசாய
அமைச்சரையும் திட்டித் தீர்த்துள்ளனர்.

இதன் பின்னணி என்ன? ஏன் இத்தகைய இழப்புகள்
ஏற்படுகின்றன? அதை தவிர்ப்பதற்கு ஏன் இந்திய உணவுக்
கழகத்தால் (FoodCorporation of India) இயலவில்லை
என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் வெறும்
sensationalisation என்பார்களே அந்த வகையில் பதிவுகளை எழுதி சக பதிவர்களின் பார்வையை ஈர்ப்பதிலேயே சிலர் குறியாயிருப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து உணவு தானியத்தையும் விவசாயிகளிடத்திலிருந்து கொள்முதல் செய்து அவற்றை உணவு பகிர்ந்தளிக்கும் கழகம் வழியாக (Civil Supply Corporation) குடும்ப அட்டைதாரர்களுக்கு
வினியோகம் செய்யும் பணியை காலம் காலமாக இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் கோதுமையை வடமாநில விவசாயிகளிடத்திலிருந்தும் நெல் மற்றும் பிற தானியங்களை மற்ற பகுதிகளிலிருந்தும் கொள்முதல் செய்து அதற்கு சொந்தமான சுமார்
2000 கிடங்குகளில் சேமித்து வைக்கிறது.

கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த பன்னிரண்டு மாத காலத்தில் இந்த கழகம் கொள்முதல் செய்த அளவு இவை:

கோதுமை: 2.53 கோடி மெட்ரிக் டன்
நெல் : 3.05 கோடி மெட்ரிக் டன்

ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் எத்தனை டன்
தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இலக்கை இந்த கழகத்தின் நிர்வாகக் குழுவினருடைய பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் விவசாய இலாக்கா நிர்ணயிக்கிறது. இது குறைந்தபட்ச அளவு மட்டுமே.
அதிக அளவு (Maximum limit) என்ற இலக்கு ஏதும் இல்லை. அதாவது இந்த கழகத்தின் கொள்ளளவு எவ்வளவோ அந்த அளவு தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதானே அடிப்படை நியதியாயிருக்க முடியும்?

இதே கழகம் தனியார்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டால் தன்னுடைய மொத்த கொள்ளளவுக்கு மேல் ஒரு கிலோ தானியத்தைக் கூட அந்த கழகம் கொள்முதல் செய்யாது. ஏனெனில் விலை கொடுத்து தானியத்தை வாங்கி திறந்தவெளியில் வைத்து மழைக்கும், காற்றுக்கும், எலிக்கும்
அவற்றை தாரை வார்க்க லாப நோக்குடன் இயங்கும் எந்த
நிறுவனமாவது முன்வருமா?

ஆனால் அரசு நிறுவனம் அப்படி இயங்க முடியாதே. விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் எந்த அளவுக்கு கழகத்தின் கொள்முதல் நிலையங்களில் (Procurement outlets) தானியங்கள் வருகின்றனவோ அவை அனைத்தையும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற அரசின் கொள்கையை தலைமேல் ஏற்று தங்களுடைய மொத்த கொள்முதல் அளவையும் மீறி இந்த கழகம் கொள்முதல் செய்கிறது.

தங்கள் வசம் உள்ள கிடங்குகள் நிறம்பியதும் எஞ்சியுள்ள
தானியங்களை வேறு வழியின்றி அரசுக்கு சொந்தமான அல்லது தனியார்களிடமிருந்து வாடகைக்கு எடுத்த நிலங்களில் அதாவது திறந்தவெளியில் தானிய மூடைகளை ஒரு சிறிய மர மேடைகளில் கோபுர வடிவில் அடுக்கி மழை நீர் புக முடியாத தார்பாய்களில் மூடி பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்பாராத காற்று, மழையால் சில சமயங்களில் இப்படி சேமித்து வைக்கும் தானியங்களில் சில பாதிக்கப்படுவதுண்டு. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களின் ஈரப்பதம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற அரசின் நியதியையும் மீறி சில உள்ளூர் அரசுகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து ஈரப்பதம் அதிகம் உள்ள தானியங்களையும் கொள்முதல் செய்ய நேரிடுகிறது. அத்தகைய தானியங்கள் என்னதான் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டாலும் புளுத்து போகக்கூடும்.

உணவுக் கழகத்தின் தானிய பாதுகாப்பு அளவு (Storage Capacity) வருடா வருடம் அதிகரிக்கப்பட்டாலும் தானிய
விளைச்சலும் அதிகரித்துகொண்டே செல்வதால் கழகத்தின்
கொள்முதல் எப்போதுமே அதன் பாதுகாப்பு அளவை விட
அதிகமாகவே இருந்து வருகிறது.

ஆனால் கழகத்தின் ஒட்டுமொத்த கொள்முதலுடன் ஒப்பிடுகையில் அதன் இழப்பீடு மொத்த சேமிப்பில் அரை விழுக்காட்டுக்கு மேல் சென்றதில்லை என்கின்றன கழகத்தின் அறிக்கைகள். சமீபத்தில் உச்சநீதி மன்ற கண்டனத்திற்குள்ளான இழப்பின் மதிப்பு 12000
டன். இதை கழகத்தின் மொத்த கொள்முதலான 2.53 கோடி டன் ஒப்பிட்டு பார்த்தால் அரை விழுக்காட்டுக்கும் கீழ்தான் என்பது தெளிவாகும்.

என்ன இருந்தாலும் இழப்பு, இழப்புதானே என்றால், அது
உண்மைதான். அதை தடுத்து நிறுத்த மத்திய அரசும், இந்திய உணவுக் கழகமும் ஆவன செய்ய வேண்டும்.

ஆனால் இப்படி தானியத்தை வீணாக்குவதை விட அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கலாமே என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காடு வறுமைக்கோட்டுக்கும் கீழுள்ளவர்கள் என்கின்றன சமீபத்திய கணக்கீடுகள். அதாவது சுமார் 37 கோடி. இதை ஐவர் அடங்கிய குடும்பமாக பிரித்து ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தானியத்தை இலவசமாக வழங்கினாலும் எத்தனை கோடி டன் வேண்டும் என்று கணக்கிடுங்கள். இது சாத்தியமாகுமா!

ஆகவே அரசையும், அதன் தலைவரான பிரதமரையும்
சகட்டுமேனிக்கு சாடுவதற்கு முன்பு ஒரு அரசை நடத்திச் செல்வது எத்தனை சிரமம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

எதையும் உணர்வுபூர்வமாக அணுகுவதால்தான் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. இதை நிச்சயம் தானிய இழப்பீட்டையோ அல்லது பிரதமரின் செயல்பாடுகளையும் அவர் உச்சநீதி மன்றத்திற்கு அளித்த மறுமொழியை நியாயப்படுத்தவோ எழுதவில்லை.

உணவுக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் யார் அப்பன் சொத்தும் அல்ல. நம் சொத்து. அரசே முன்வந்து இலவசமாக பகிர்ந்தளிக்கிறோம் என்று முன்வந்தாலும் அதை எதிர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இதை அனுமதித்தால் ஓட்டுக்கு பணம் என்பதற்கு பதிலாக ஒரு ஓட்டுக்கு ஐந்து கிலோ அரிசி என்று புறப்பட்டுவிடுவார்கள், எச்சரிக்கை!

இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு மற்றும் அடுப்பு, இலவச மின் இணைப்பு என்பதுபோன்றதல்ல இலவச தானிய வினியோகம்.


*******

06 செப்டம்பர் 2010

பதிவுலக இரட்சகர்கள்!

சமீபகாலமாக பல சில பதிவர்கள் தங்களை தமிழகத்தை காக்கும் இரட்சகர்களாக முன்நிறுத்திக்கொள்ள முளைத்திருக்கிறார்கள்.

ஏதோ தமிழகத்தில் இதுவரை நடந்திராத அளவுக்கு ஊழல் நடப்பதாகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பழிவாங்கப்படுவதாகவும் கற்பித்துக்கொண்டு அதை எதிர்த்து தங்களுடைய குரலை எழுப்பியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் கிளம்பியிருக்கிறார்கள்.

என்னுடைய நான்காண்டு கால சொற்ப பதிவுலக அனுபவத்தில் இப்படி முளைத்து வந்த பலரைக் கண்டிருக்கிறேன். தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பதிவுலகை ஆட்டிப்படைத்துவிட்டு பிறகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்கள் அவர்கள்.

அதுபோன்றுதான் இப்போது கிளம்பியிருப்பவர்களும் என்று நான் சொல்லத் தேவையில்லை. இவர்களுக்கெல்லாம் நன்றாக, சரளமாக தமிழ் எழுத வருகிறது என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

எந்த ஒரு நிறுவனத்தையாவது குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்திலுள்ள இலாக்காவையாவது தலைமையேற்று நடத்தியிருந்த அனுபவம் இருந்திருந்தால் ஒரு அரசை நடத்திச் செல்வது எவ்வளவு சிரமம் என்பது இவர்களுக்கு புரிந்திருக்கும்.

இலவசமாக கிடைத்துள்ள எழுத்து சுதந்திரம், அலுவலக தயவில் இணைய இணைப்பு, கணினி, தோன்றியதை எல்லாம் எழுதி தள்ள ஊதியத்துடன் கிடைக்கும் நேரம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தை எப்படியாவது இந்த ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு எடுத்து ஊழல் அரசியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதித்தள்ளுகிறார்கள்.

இவற்றையும் படித்து மற்ற பதிவர்களுக்கும் பரிந்துரைக்க என்று வேறொரு கூட்டம். இப்போதெல்லாம் அதுவும் தேவையில்லை போலிருக்கிறது. எனக்கு நீ, உனக்கு நான் என்று பரஸ்பரம் நட்சத்திர குத்து விட்டு பரிந்துரை பட்டியலையே எவ்வித கூச்சமும் இல்லாமல் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் இவர்கள்தான் தமிழகத்தில் நடக்கும் ஊழலை எதிர்த்து குரல் எழுப்புகின்றனர்.

இவர்களை பார்த்து சொல்வது ஒன்றுதான். சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டாரே அவரை ஏன் மனத்தளவில் கிறிஸ்துவனாகவும் சட்டப்படி இந்துவாகவும் இன்னும் தொடர்கிறார் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்.

தலித் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்பட்டால் அவருடைய சாதியையே சுட்டிக்காட்டி போராட பல அரசியல் கட்சிகள் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி தலித் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட சலுகையை அனுபவிக்க தகுதியுள்ளவர்தானா என்பதிலேயே சந்தேகம் இருக்கும் சூழலில் அத்தகைய ஒருவருக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் பதிவர்களுக்கு தேவையில்லை.

19 ஆகஸ்ட் 2010

ஜெ சொன்ன குட்டிக் கதை!

இந்த கதையில் வரும் கருமிதான் யார் என்று தெரியவில்லை. ஏனெனில் வாரி வழங்குபவர் அம்மையார் என்பது அனைவருக்கும் தெரியுமே! பிறந்த நாள் பரிசாக கிடைத்த அனைத்து நன்கொடைகளையும் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கியவராயிற்றே!!

17 ஆகஸ்ட் 2010

பின்னூட்ட மோகமும் வாசகர் பரிந்துரையும்

சாதாரணமாக இத்தகைய விஷயங்களைப் பற்றி நான் அதிகம் எழுதுவதில்லை.

ஆனால் சமீபகாலமாக வாசகர் பரிந்துரை பட்டியலில் தினமும் தரிசனம் தரும் சில பதிவர்களின் இடுகைகளை வாசித்துவிட்டு இனியும் வாளாவிருப்பது நல்லதல்ல என கருதியதால் இந்த இடுகை.

கடந்த சில நாட்களாகவே இந்த பட்டியலில் வரும் அனைத்து இடுகைகளையும் தவறாமல் வாசித்ததில் நான் கண்டது இது ஒரு வடிகட்டின அயோக்கியதனம் என்பதுதான்.

அதுவும் ஒரு வங்கியில் பணியாற்றும் பதிவர் ஒருவர் கடந்த வாரம் எழுதிய இடுகைகளில் எதுவுமே இந்த பட்டியலில் வர தகுதியற்றவை என்பது என் கருத்து.

ஒருவேளை அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை தன்னுடைய தினசரி இடுகைக்கு ஓட்டளிக்க வைக்கின்றாரோ என்று கூட கருத தோன்றுகிறது!

இன்னும் சில பதிவர்களைப் பற்றி கூற வேண்டுமென்றால் ஓட்டுக்கு காசு என்கிற அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை.

ஓரிரண்டு பின்னூட்டங்கள் கூட இல்லாத பதிவுகள் எப்படி இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற முடிகிறது? அதிசயம்தான்.

வெட்கக்கேடு.

தமிழ்மணத்தின் செயல்பாடுகளையே ஒருசிலர் கேலிக்கு உள்ளாக்குகின்றனர் என்பதை நிர்வாகம் உணர்ந்து இந்த பட்டியலையே முகப்பிலிருந்து என்று நீக்குமோ அன்றுதான் தமிழ்மணத்திற்கு விடிவுகாலம்.

06 ஆகஸ்ட் 2010

நாமம் போட்டு பேயை விரட்டும் கிராமம்!

என்று அகலும் இந்த மூட நம்பிக்கை!!

சமீப காலமாக நாட்டுப்புறங்களில் இத்தகைய மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருவதற்கு  தொலைக்காட்சிகள் பூதக்கண்ணாடி, நிஜம் போன்ற பிரத்தியேக நிகழ்ச்சிகள் மூலம் இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புவதும் ஒரு காரணம்.

இத்தகைய நிகழ்ச்சிகளில் தொலைகாட்சி நிரூபர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கிராமவாசிகளை பேட்டிக் கண்டு அவர்கள் கூறுவதை அப்படியே அதாவது எவ்வித தணிக்கைக்கும் உட்படுத்தாமல் ஒளிபரப்புவதன் மூலம் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு பதில் அதை வளர்க்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

கடவுளும் பேயும் மனித மனங்களில்தான் என்பதை என்றுதான் மக்கள் உணர்வார்களோ தெரியவில்லை.
***

02 ஆகஸ்ட் 2010

மின் கட்டண உயர்வு!


உண்மைதான்.

என்னிடம் ஏ.சி மட்டும்தான் இல்லை. மற்ற அனைத்து வீட்டு உபயோக மின் சாதனங்களான வாஷின் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹாட் ப்ளேட், ஹாட் ஜக், ஓவன், என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பகலில் இரண்டு மின் விசிறிகளும் இரவில் நான்கு மின்விசிறிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எனினும் கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய மாத மின் பயன்பாடு 300 யூனிட்டுகளை கடந்ததே இல்லை.

மின் கட்டண உயர்வு நிச்சயமாக என்னைப்போன்ற நடுத்தர மக்களை பாதிக்கவில்லை. இரவெல்லாம் குளுகுளு இன்பத்தை அனுபவிக்க நினைப்பவர்கள் சற்று கூடுதல் சிலவு செய்வதில் தவறேதும் இல்லை.

இந்த வகுப்பில் வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்! நிச்சயம் அவர்களுக்கு இது பாதிப்புதான். அதனால்தான்  அலறுகிறார்கள்!!

16 ஜூலை 2010

ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன்!!

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5

3. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது

குடும்பத்தில் நம்மைச் சார்ந்திருக்கும் மனைவி, குழந்தைகள் ஜடப் பொருட்கள் அல்ல அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உண்டு. 'நம்மைச் சார்ந்திருப்பவர்கள்' என்ற வாக்கிலேயே அவர்களுக்கு நம்முடைய வழிகாட்டுதலை எதிர்நோக்கியிருப்பவர்கள் என்பதும் தெளிவாகிறதே. 'குழந்தைகள் விஷயத்த எங்கிட்ட சொல்லாதே அத நீயே பாத்துக்கோ' என்று மனைவியிடம் வேண்டுமானால் விட்டுவிடலாம் ஆனால் மனைவியின் குறைகளை நம்மை விட்டால் யாரால் தீர்க்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.

ஒருநாளில் பத்து மணி நேரம் அலுவலகத்திற்கு ஒதுக்குவதில் ஆண்கள் யாரும் முறையிடுவதில்லை. ஆனால் ஒரு மணி நேரம் மனைவி, குழந்தைகளுக்கு ஒதுக்குவதென்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. 'ஏங்க சனி, ஞாயிறுலயாவது பசங்க என்ன படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, அவங்களுக்கு என்ன வேணும்னு ஏதாச்சும் கேக்கறீங்களா?' இந்த முறையீடு இல்லாத வீடுகள் இன்று உண்டா என்று கேட்கும் அளவுக்கு சனி, ஞாயிறிலும் அலுவலகத்தை தஞ்சம் அடைவது அல்லது அலுவலக நண்பர்களுடன் வெளியில் செல்வது ஆண்களின் வழக்கமாகி வருகிறது.

பணிக்கு செல்லும் பெண்களுள்ள குடும்பங்களிலும் அலுவலக பணிகளுடன் வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளுடைய தேவைகளை கவனித்துக்கொள்வது பெண்களின் கடமையாகிவிடுகிற அவல நிலை இன்று பல குடும்பங்களில் காணப்படுகிறது என்றால் மிகையல்ல.

ஆண்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் என்னதான் வெற்றியடைந்தாலும் மாலையில் நீங்கள் திரும்புவது மனைவியிடம்தான். இதை ஒருபோதும் மறக்கலாகாது. அலுவலகத்தில் நீங்கள் அடையும் வெற்றியை உண்மையான மகிழ்ச்சியுடன், பெருமையுடன் கொண்டாடி மகிழ்வது உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான். அவர்களுடைய தேவைகளை, மனத்தாங்கல்களை கண்டும் காணாததுபோல் இருக்கும் ஆண்களின் அலுவலக வெற்றிகள் காணல் நீர் போன்றவையே.

இளம் வயதில் நேரமின்மையை காரணம் காட்டி குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற மறக்கும் குடும்பத்தலைவனை அவனுடைய முதிய வயதில் குடும்பத்தினரும் மறந்துவிடக் கூடிய சூழல் உருவாகலாம்,ஜாக்கிரதை!

இங்கு குடும்பத்தினரின் 'தேவைகள்' என்பது அவர்களுடைய பொருளாதார தேவைகளை மட்டும் குறிப்பிடவில்லை. அன்பு, பாசம், பராமரிப்பு எனப்படும் உணர்வுபூர்வமான தேவைகள் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அளிக்கக்கூடிய பொருளாதார தேவைகளை விடவும் முக்கியமானவை. ஒரு கணவன் அல்லது தகப்பனிடம் இருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய இத்தகைய தேவைகளை மனைவியோ மக்களோ வேறொரு ஆணிடமிருந்து பெற முடியுமா என்ன?

ஆங்கிலத்தில் Quality time என்பார்கள். அதாவது இவ்வளவு நேரத்தை என் குழந்தைகளுக்கென தினமும் ஒதுக்குகிறேன் என்றால் போதாது. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் செலவிட்டேன் என்பதை விட அதை எப்படி செலவிட்டீர்கள் என்பதுதான் முக்கியம். Quality என்பதை 'தரமுள்ள' என புரிந்துக்கொள்வதை விட 'பயனுள்ள' என புரிந்துக்கொள்வது நலம் என கருதுகிறேன். தந்தை என்ற நிலையிலிருந்து குழந்தைகளின் நண்பன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே, அதாவது நம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறினால் மட்டுமே, அவர்களுடன் நாம் செலவிடும் நேரம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன், உங்களுக்கும் அது எத்தனை புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதை உணர்வீர்கள்! பெண்களும் தங்களுடைய தாய் அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்து குழந்தைகளின் தோழியாக மாறினால் மட்டுமே அவர்களுடைய செலவிட்ட நேரத்தின் உண்மை பொருளை உணர முடியும்.

கணவன் தன் மனைவிக்காக ஒதுக்கும் நேரமும் அப்படித்தான். கணவன் என்கிற நிலையிலிருந்து காதலன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே மனைவியுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாகவும் புத்தணர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இது மனைவிக்கும் இது பொருந்தும்.

மனைவி, குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களுடைய உணர்வுபூர்வமான தேவைகளை நிறைவேற்றும் கணவர்களால் மட்டுமே வீட்டு நிர்வாகத்தில் வெற்றி காண முடியும் என்பதும் அவர்களால் மட்டுமே அலுவலக நிர்வாகத்திலும் வெற்றியடைய முடியும் என்பது உறுதி!

4. பணிக்கு செல்லும் பெண்கள்

மேற்கூறிய அனைத்தும் பணிக்கு செல்லும் பெண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் அதிகார ஏணியில் இன்று பல பெண்கள் இருபது வருடங்களுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத நிலைகளில் அமர்ந்துள்ளனர். ஆகவே நிர்வாக பொறுப்பிலுள்ள ஆண்கள் உள்ளாகும் அனைத்து மனப்பதட்டங்களுக்கும் இத்தகைய பெண்களும் உள்ளாக வாய்ப்புண்டு.

அதிகார வர்க்கத்தில் ஆண்களுக்கு நிகரான நிலையிலுள்ள பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத பொறுப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அலுவலகத்தை நிர்வகிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டு நிர்வாகத்தில் அதே அளவுக்கு பங்கு இல்லை என்பதும் உண்மை. குறிப்பாக, பெண்கள் பணிக்கு செல்லாத காலத்தில் இருந்துவந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இன்றும் அவர்கள் தலையில் சுமையாக உள்ளது.

குடும்பத்திற்கு தேவையானவற்றை (சமையல் சாமான்கள் எனப்படும் மளிகை, காய்கறி ஆகியவற்றிலிருந்து டாய்லெட்றி எனப்படும் சில்லறை பொருட்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போவதுண்டு) கொள்முதல் செய்வது, சமைப்பது, குழந்தைகளுடைய வீட்டுப் பாடம் உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வது , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக/பேராசிரியராக பணிபுரியும் பெண்களுக்கு அடுத்த நாள் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு தயார் செய்வது, தேர்வுத்தாள்களை திருத்துவது ஆகியவை வெறுப்பையளித்தாலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களில் சில.

எனவே ஆண்களை விடவும் அதிகமான அளவு மன உளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்றால் மறுப்பதற்கில்லை.

இதை எப்படி எதிர்கொள்வது?

அ) குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை ஈடுபடுத்துவது

புருஷ லட்சணம் சம்பாதிப்பது மட்டுமே என்பதுபோன்ற பண்டைகாலத்து நிலைப்பாட்டை முழுமையாக கைவிடுவது. சமையலில் இருந்து குழந்தைகளை குளிக்க வைத்து, உடை மாற்றி, உறங்க வைப்பது வரை ஆண்களையும் துவக்கத்திலிருந்து (அதாவது திருமணம் ஆன நாளிலிருந்தே) ஈடுபடுத்துவது. குடும்பத்தில் ஆண்கள் செய்யத்தகாத வேலை என்று ஒன்றுமே இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். வீட்டு அலுவல்களுக்கென பல்வேறு இயந்திரங்கள் பயன்பாட்டிலுள்ள இன்றைய சூழலில் எந்த அலுவலையும் எவ்வித கவுரவு இழப்பும் இல்லாமல் ஆண்களாலும் திறம்பட செய்ய முடியும் என்பதை ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பெண்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அவற்றுள் கணவனை தன்வயப்படுத்தி குடும்ப அலுவல்களில் தனக்கு உதவியாய் இருக்கச் செய்வதும் ஒன்று. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும் என்பதுபோன்று ஆண்களை அவர்கள் வழியிலேயே சென்று குடும்ப அலுவல்களில் சரிபாதியை அவர்கள் தலையில் சுமத்துங்கள். உங்களுடைய சுமை வெகுவாக குறைந்துபோகும்!

ஆ) குழந்தைகளுக்கு அவர்களுடைய பொறுப்பை உணர்த்துவது

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் அவர்களுடைய அனைத்து விஷயங்களிலும் உதவி செய்ய முயல்வது தேவையற்றது. ஆங்கிலத்தில் இதைத்தான் Spoon feeding என்பார்கள். உண்ணும் உணவிலிருந்து, உடுத்துவது, படிப்பது என எல்லாவற்றிலும் அவர்களுக்கு உதவ முயலாதீர்கள். இப்போதெல்லாம் குடும்பத் தலைவிகளின் பெரும்பாலான நேரம் இதற்காகவே செலவிடப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு தேர்வு என்றால் அது குடும்பத்தலைவிகளுக்கே தேர்வு என்பதுபோலாகிவிட்டது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தேர்வு என்று தொடங்குகிறது என்பது கூட தெரிவதில்லை. இத்தகைய குழந்தைகள் தேர்வுகளில் வேண்டுமானால் முதலிடம் பிடிக்க முடியும் ஆனால் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெறுகிறார்களா என்பது சந்தேகமே. வாழ்க்கையின் வெற்றி என்பது நல்ல வேலையில் அமர்வதும் கைநிறைய ஈட்டுவதும்தான் என்றால் ஒருவேளை அது இத்தகைய குழந்தைகளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் திறம்பட நிர்வகிக்கக் கூடிய நல்ல நிர்வாக திறனுள்ளவர்களாக உருவாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய திறன் மிகவும் அவசியம். அதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவது மிக மிக அவசியம். இதனால் தங்களின் பாரமும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இ) வீட்டில் முதியவர்களின் வழிகாட்டுதல்

சமீப காலங்களில் nuclear family எனப்படும் நான், என் கணவர், என் குழந்தைகள் என யாரையும் குறிப்பாக கணவனின் குடும்பத்தினரை சார்ந்திராத குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவருவதை காண முடிகிறது.

வீட்டில் உடன் வசிக்கும் முதியவர்களால் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உணரும் பெண்கள் தாங்களும் அந்த நிலையை அடையப் போகிறவர்கள்தான் என்பதை கவனத்தில் கொள்வதில்லை. Generation gap எனப்படும் இரண்டு தலைமுறைகளுக்கிடையில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது மிகவும் சகஜம். ஆனால் இத்தகைய முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. சச்சரவும் சல்லாபமும் கலந்ததுதான் தாம்பத்தியம் என்பார்கள். கட்டியவனுடன் சல்லாபமும் அவனுடைய குடும்பத்தாருடன் சச்சரவும் என்பதைத்தான் முன்னோர்கள் இப்படி நாசூக்காக கூறி வைத்துள்ளனரோ என்னவோ.

ஒரு குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு கருத்து பேதங்களுக்கும் அதனால் ஏற்படும் சச்சரவுகளுக்கும் முதியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட பல சமயங்களில் காரணங்களாகிவிடுகின்றன. குறிப்பாக கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்துவிட்டால் குழந்தைகளை பேணுவதற்கு வீட்டில் முதியவர்கள் மிகவும் அவசியம். பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் குழந்தைகளுக்கு யாரும் இல்லாத வீடு ஒரு பெரிய வெற்றிடத்தை அவர்களுடைய மனதில் ஏற்படுத்துவதுதான் அவர்களால் ஏற்படும் பல சச்சரவுகளுக்கு காரணிகளாக அமைகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த வெற்றிடத்தை போக்க வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டியால் நிச்சயம் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். மேலும் குடும்பம் மற்றும் அலுவலகம் ஆகிய இருவேறு சுமைகளை ஏற்கனவே சுமந்துக்கொண்டிருக்கும் பெண்கள் குழந்தைகளை பேணுவது என்ற பாரத்தையும் தனியே சுமக்க வேண்டுமா என்ன?

வீடு - அலுவலகம். இரண்டும் வெவ்வேறுதான் என்றாலும் இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒன்றில் நாம் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறோமோ அந்த அளவுக்குத்தான் மற்றதிலும் வெற்றிபெற முடியும் என்பதில் ஐயமில்லை.

நிறைவுபெறுகிறது.

15 ஜூலை 2010

போதும் என்ற மனம்!

உ) போதும் என்கிற மனப்பாண்மை

'உலகிலுள்ள அனைத்தையும் நீ சம்பாதித்தாலும் உன் ஆன்மாவை (நிம்மதியை) இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்?' இது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கேள்வி. அவர் ஒரு பெரிய செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். பிறந்த வயதிலிருந்தே 'தேவைகள்' என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு சகலத்தையும் கிடைக்கப் பெற்றவர். குழந்தை மற்றும் மாணவ பருவத்தில் அவருக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த வசதி வாய்ப்புகள் வாலிப பருவத்தில் ஒரு சுமையாகவே தெரிந்தன. ஆகவே நாளடைவில் தன்னுடைய மனநிம்மதியை இழக்கலானார். எதற்காக இந்த வாழ்க்கை என்ற தோன்றவே அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியானார்.

'People have become so materialistic these days' என்கிறார் ஒரு பிரபல மேலாண்மை ஆய்வாளர். இன்றல்ல, மனிதன் உலகில் தோன்றிய நாள் முதலே அவன் உலகத்திலுள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளத்தான் விரும்பினான்.

நான் வங்கியில் குமாஸ்தாவாக நுழைந்தபோது எப்படியாவது ஒரு அதிகாரியாகிவிட வேண்டும் என்று நினைத்தேன். பணிக்கு சேர்ந்த ஆறு ஆண்டுகளில் அது சாத்தியமாகிற்று. அதற்குப் பிறகு திருமணமாவதற்குள் ஒரு கிளைக்கு மேலாளராகிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டும் நிகழ்ந்தும் ஆசை அத்துடன் அடங்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றினால்தான் மேலும் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்து மாணவ பருவத்திலிருந்த மகள்களை மனைவியுடன் சென்னையில் விட்டுவிட்டு மும்பை சென்றேன். பதவி உயர்ந்தது. ஆனாலும் அத்துடன் திருப்திகொள்ள முடியவில்லை. எனக்கு பதவி உயர்வே தேவை என்பதைவிட என்னுடன் பணிக்கு சேர்ந்தவர்கள் என்னைவிட உயர்ந்த பதவிக்கு சென்றுவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் என் பயணம் தொடர்ந்தது. எட்ட நினைத்த பதவிகளை அடைந்து முடித்து திரும்பிப் பார்த்தபோது வாலிபம் என்னை கடந்துபோயிருந்தது. மகள்கள் இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்து நின்றனர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இதனால் எனக்கு என்ன பெரிதாக கிடைத்துவிட்டது என்று எண்ணிப் பார்க்கிறேன். 'வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் இருந்தும்... No peace of mind' நடிகர் திலகம் திரைப்படம் ஒன்றில் (ஞானஒளி என நினைக்கிறேன்) உதிர்க்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது:

இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்பது எத்தனை சத்தியமான உண்மை! இளம் வயதில் நம்மில் பலருக்கும் இந்த தத்துவம் ஒரு வறட்டு தத்துவமாகவே தோன்றுகிறது. வாணமே எல்லை என்று உயர, உயர பறந்துபோய் யாரும், நம் குடும்பத்தினர் கூட எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிடுகிறோம். அமெரிக்காவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவிட்டு இப்போது தாயகம் திரும்புவதா, திரும்பினால் அந்த சூழலுக்கு நம்மால் இறங்கிவர முடியுமா? என்று கடந்த ஆறு மாத காலமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறார் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர். அவருடைய மனைவிக்கு தாயகம் திரும்பினால் போதும் என்ற மனநிலை. பிள்ளைகள் இருவருக்கும் அந்த எண்ணமே கசப்பை தருகிறது. ஒருகாலத்தில் சுவர்க்கமாய் தெரிந்த அமெரிக்கா இப்போது தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தில் என் உறவினர். இத்தகைய மனக்கலக்கத்தில் பல மேற்கத்திய நாடுகளில் பணிக்கு சென்று நிரந்தரவாசிகளாகிப்போன பலர் உள்ளனர்.

அலுவலக வாழ்க்கையில் எத்தனைதான் சாதித்தாலும் அந்த வெற்றிக்காக இழந்தவைகளை கணக்கிடும்போதுதான் நம்மில் பலருக்கும் புரிகிறது... எத்தனை விலைகொடுத்து பெற்ற வெற்றி இது என்பது! அலுவலக வேஷங்களை களைந்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்பத் தலைவனாகவும், தலைவியாகவும் எளிதில் மாறிவிட முடிகிறவர்களால் மட்டுமே வீட்டையும் அலுவலகத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் என்பது உறுதி!

2. அலுவலகமும் வீடும் ஒன்றல்ல

மேற்கூறிய மனப்பாண்மைகளை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களைந்தாலும் வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை முழுமையாக உணரும் வரையிலும் இரண்டையும் முழுமையாக நிர்வகிப்பது எளிதல்ல.

அலுவலகம் என்பது நாம் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றுசேரும் இடம். ஆகவே அதற்கென்றே பல சட்ட திட்டங்கள், ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி நடக்க வேண்டியது நம்முடைய கடமையாகிறது. அவற்றில் சிலவற்றுடன் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. அதுபோன்றே நம்முடன் பணியாற்றும் சிலருடன் நம்மால் ஒத்துப்போக முடியாமல் போகலாம். அவர்களுடைய சில பழக்கங்கள், பேச்சு, செயல்பாடு ஆகியவற்றுடன் நமக்கு உடன்பாடில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. ஆனால் அத்தகையோருடன் ஒத்துப்போய்த்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் நாம் இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத சக ஊழியர்களை விட்டு விலகிச் செல்கிறோம். நாம் உண்டு நம் வேலையுண்டு என இருந்துவிடுகிறோம்.

ஆனால் நம் வீடு அப்படியல்ல. நம்முடன் வீட்டில் உடன் வசிக்கும் அனைவரும் நம் சொந்தங்கள், ஒரே இரத்தம். ஆகவே அவர்களை அவர்களுடைய நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது. அலுவலகத்திலுள்ளதைப் போன்ற சட்ட திட்டங்களையோ அல்லது ஒழுங்குமுறைகளையோ வீட்டிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். பல குடும்பங்களில் குடும்ப தலைவன் வைத்ததுதான் எழுதா சட்டம். இதை குடும்பத் தலைவியிலிருந்து குடும்பத்திலுள்ள அனைவரும் மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்திலுள்ளவர்களை நிர்பந்திக்க எண்ணுவது காலங்கடந்த செயல் என்பதை ஆண்கள் பலரும் உணர்வதில்லை. இதை என்றைக்கு உணர்கிறார்களோ அன்றுதான் வீடு வீடாக இருக்கும்.

அலுவலகத்தின் செயல்பாடுகள் நமக்கு பிடிக்கவில்லையென்றால் வேலையை உதறிவிட்டு சென்றுவிட முடியும். ஏனெனில் நம்முடைய நோக்கம் ஊதியம் மட்டுமே. மாறாக நாம் பணியாற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவதல்ல. எந்த நிறுவனம் நமக்கு அதிக ஊதியம் அளிக்க முன்வருகிறதோ அதற்கு நம்முடைய உழைப்பை அளிக்க முன்வருகிறோம்.

இப்போதெல்லாம் குடும்பத்திலுள்ளவர்களுடன் ஒத்துப்போக முடியாமல் போகும் சூழலில் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடலாம் என்கிற மனப்பாங்கு சிலரிடம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையோருக்கு அது இன்றும் அத்தனை எளிதல்ல. சொந்தங்களை உதறிவிட்டு செல்வது எளிதல்ல என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். நம் நாட்டை பொருத்தவரை இன்றும் திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே என்கிற மனப்பாங்கு வெகு சிலரிடமே காணப்படுகிறது.

இதில் வேறொரு உண்மையும் உண்டு. 'என்னுடைய ஆஃபீஸ் பிரச்சினைய சால்வ் பண்றதுக்கே எனக்கு நேரம் போற மாட்டேங்குது இதுல வீட்டு பிரச்சினைகள வேற எங்கிட்ட ஏன் சொல்லி என் டென்ஷன் பண்றே?' இது பல ஆண்கள் தங்களுடைய மனைவியிடம் கூறும் முறையீடு. ஏதோ வீட்டு பிரச்சினை பெண்களின் பிரச்சினை என்பதுபோல. Charity begins at home என்பதுபோன்று வீட்டு பிரச்சினை தீராமல் அலுவலக பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. வீடு வீடாக இருக்கும் வரைதான் அலுவலகத்தில் நாம் திறம்பட பணியாற்ற முடியும். அலுவலக தோல்விகளில் சிலவற்றிற்கு வீட்டிலுள்ள சுமுகமற்ற சூழலும் கூட காரணிகளாக இருக்கலாம். அதுபோன்றே குடும்பத்தில் ஏற்படும் சில சச்சரவுகளுக்கு அலுவலக தோல்விகளும் காரணிகளாக அமையலாம்.

ஆகவே வீடும் அலுவலகமும் வெவ்வேறு என்றாலும் இரண்டையும் சரிவர நிர்வகிப்பது நம்முடைய வெற்றிக்கு மட்டுமல்லாமல் மனநிம்மதிக்கும் மிக, மிக அவசியம்.

நாளை நிறைவுபெறும்.

14 ஜூலை 2010

சார் லீவ் வேணும்!

இ) அவ்வப்போது விடுப்பில் செல்வது

அலுவலக அலுவல்களில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்படியென்றால் நிச்சயம் உங்களுக்கு ஓய்வு தேவை.

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு நூற்றுக்கு நூறு அட்டெண்டன்ஸ் என்ற விருது அளிக்கப்படுவதை கண்டிருக்கிறோம். என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு அவருடைய பள்ளியில் 'hundred percent attendance' விருது கிடைத்ததென்று பெருமையுடன் அலுவலக நண்பர்களுக்கு ஒரு விருந்தே அளித்து கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. அவரும் அப்படித்தான். வருடத்தில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திற்கு வருவதில் குறியாயிருப்பார். இதைத்தான் gene கோளாறு என்கிறோம். அதாவது வம்சாவழி குணநலன்கள். இத்தகையோருக்கு தான் இல்லாவிட்டால் அலுவலகம் ஸ்தம்பித்துவிடும் என்று நினைப்பு. எப்போதாவது உடல்நலக் குறைவினால் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் வீட்டிலிருந்தவாறே மணிக்கொரு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு remote control செய்ய முயலுவார்கள். இத்தகையோர் தங்களுடைய அலுவல்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார்கள் என்று பொருளாகாது. இவர்களுடைய நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருப்பதுபோலவும் தோன்றும். எங்கே நாம் செய்கிற தவறுகளை நாம் இல்லாத சமயத்தில் வேறு எவரேனும் கண்டுபிடித்துவிடுவார்களோ என்கிற ஒருவித அச்சம் இருப்பது போலவும் தோன்றும். ஆகவே எங்களுடைய வங்கியில் கிளை மேலாளர்கள் வருடத்தில் இரண்டு வாரங்கள் விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது வேறொரு அலுவலகத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற நியதியை அறிமுகப்படுத்தியது.

அலுவலக சூழல்களிலிருந்து மட்டுமல்லாமல் வீட்டு சூழல்களிலிருந்தும் அவ்வப்போது மாற்றம் தேவை. இல்லையென்றால் ஒருவித சலிப்பு மனதில் குடிகொள்ள வாய்ப்புள்ளது. வருடம் ஒருமுறையாவது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவருவது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்றால் மிகையல்ல. பெரும் பொருட்செலவுடன் நீண்ட தூரப் பயணம் சென்று வரவேண்டும் என்றில்லை. எவ்வளவு தொலைவு அல்லது எங்கு செல்கிறோம் என்பதல்ல முக்கியம். ஆனால் வெளியூர் செல்கிறேன் என்று அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் 'don't worry I will always be available in my cell phone' என்று கூறிவிட்டு செல்வதில் எவ்வித பயனும் இல்லை. சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல் அவருடன் வெளியூர் செல்லும் அனைவருக்குமே அவர் ஒரு தொல்லையாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. 'விடுப்பு' என்ற சொல்லிலேயே அன்றாட சூழலில் இருந்து 'விலகி' இருப்பது என்கிற பொருள் இருப்பதை கவனத்தில் கொண்டு இயன்றவரை விலகியிருந்தால் விடுப்பின் முழு பலனை அனுபவிக்க முடியும். மீண்டும் புத்துணர்ச்சி பெற்று திரும்பி தங்களுடைய அலுவல்களை கவனிக்கவும் முடியும்.

ஈ) 'முடியாது', 'இல்லை' என்பதை தெளிவாக சொல்வது


இறைவன் ஒருவரால் மட்டுமே எதைக் கேட்டாலும் செய்ய முடியும் (அதாவது அப்படியொருவர் உள்ளார் என்பதை நம்புபவர்களுக்கு!). நம்மில் பலருடைய மன அழுத்தத்திற்கு மூல காரணமே நம்மால் செய்ய இயலாதவற்றையும் சரி என்று ஏற்றுக்கொள்வதுதான் என்றால் மிகையல்ல. 'என்னால் முடியாது' என்கிற சொல்லே என்னுடைய அகராதியில் இல்லை என்று கூறிக்கொள்வதை ஒருவித பெருமையாக கருதுபவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்.

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, நம்மால் சிலவற்றைத்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும். இதற்கு நம்முடைய செயல்திறன் (physical ability) மட்டுமல்ல மனத்திறனும் (Mental ability) ஒரு காரணம். உடல் வலிமையால் இயலாதவற்றை மனவலிமையால் சாதித்துவிடலாம் என கருதுபவர்களும் உண்டும். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமாகாது. நூற்றில், ஆயிரத்தில் ஒருவருக்கு ஒருவேளை சாத்தியமாகலாம். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் அவனால் செய்யவியலாத காரியங்கள் பல உண்டு. அதை செய்கிறேன் என ஏற்றுக்கொண்டு அதை சரிவர செய்து முடிக்கவியலாமல் போகும்போதுதான் தேவையற்ற மன அழுத்தத்திற்குள்ளாகிறான்.

வானத்தை ஆடையாக கேட்கும் மனைவியையோ 'மலையையே போய் விற்றுவிட்டு வா' என்கிற உயர் அதிகாரியையும் திருப்திப்படுத்த முயன்றால் தோல்வி நிச்சயம்தானே!

'How to say NO' என்கிற தலைப்பில் பல மேலாண்மை ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளதை இணையதளங்களில் காணலாம். ஏனெனில் இது மிக அவசியமான மேலாண்மை தகுதிகளில் ஒன்று என்கின்றனர் பல வெற்றிபெற்ற சாதனையாளர்கள்.

தங்களால் இயலாதவற்றை மிக சாதுரியமாக, நாசூக்காக கேட்பவர் மனம் புண்படாதவாறு கூறக்கூடியவர்களே மேலாண்மை அல்லது அதிகார ஏணியில் மிக உயர்ந்த படியை அல்லது நிலையை எட்டக் கூடியவர்கள் என்றாலும் மிகையாகாது.

அலுவலகத்திலும் வீட்டிலும் ஒரு சுமுகமான சூழலை உருவாக்க இந்த திறமை மிகவும் உதவுகிறது. 'உங்களால நான் கேட்டத வாங்கித்தர முடியலன்னா அப்பவே சொல்லியிருக்கலாமில்ல.. எதுக்கு இத்தன நாள் இழுத்தடிச்சிட்டு இப்ப ஏமாத்தறீங்க?' என்றுதான் பல குடும்பங்களில் வாக்குவாதம் துவங்கும். 'எங்கப்பா முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிருவார் உங்கப்பா மாதிரி இழுத்தடிச்சிட்டு கடைசியில ஏமாத்த மாட்டார்.' இத்தகைய தந்தைகளின் பிள்ளைகளும் வாழ்க்கையில் எது தங்களால் முடியும் எது முடியாது என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்வர். முடியாது என்று கூறுகையில் ஏற்படுகின்ற ஏமாற்றம் ஓரிரு தினங்களில் மறைந்துவிடக் கூடும். மாறாக இன்று கிடைக்கும், நாளை கிடக்கும் என காத்திருத்தலால் ஏற்படும் ஏமாற்றம் அத்தனை எளிதில் மறைவதில்லை.

எட்டிப்பிடிக்க முடியாத வர்த்தக இலக்குகளை (Business Budgets) மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டு அதை எட்ட முடியாமல் தோற்று நின்ற பல கிளை மேலாளர்களை நான் கண்டிருக்கிறேன். அதே சமயம் தங்களால் எட்ட முடியாது என கூறிவிட்டு பிறகு அதை மிகவும் சிரமப்பட்டு எட்டி முடித்து சாதித்த மேலாளர்களையும் நான் கண்டிருக்கிறேன். முன்னவர்களை விடவும் பின்னவர்களுக்கே உயர் அதிகாரிகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பது உறுதி.

தொடரும்..

12 ஜூலை 2010

என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது.

அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?

சாத்தியம்.

ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.

அ) என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!

'நான் மட்டுமே' அல்லது 'என்னால் மட்டுமே' என்பது போன்ற மனப்பாங்குள்ளவர்கள் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் சுமை சுமக்கும் சுமைதாங்கிகளாகவே இறுதிவரையிலும் இருக்கின்றனர். எந்த ஒரு அலுவலையும் அது எத்தனை எளிதானதாக அல்லது சிறிதானதாக இருந்தாலும் தன்னால்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும் என எண்ணுபவர்கள் இவர்கள். தங்களால் இயலாத காரியத்தையும் தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். குறிப்பாக மேற்பார்வையாளர் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களுடைய அலுவல்களை சரிபார்க்கும் பொருப்பை மறந்துவிட்டு அவர்கள் செய்துமுடிக்க வேண்டிய அலுவல்களையும் தங்களாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். விளைவு? தங்களுடைய முதன்மை அலுவலான மேற்பார்வையை (supervisory) சரிவர ஆற்றாமல் உயர் அதிகாரிகளின் ஏச்சுக்கு ஆளாவார்கள். இத்தகைய ஏச்சிலிருந்து தப்பிக்க இரவு நேரம் வெகு நேரம் அலுவலகத்தில் அமர்ந்து தங்களுடைய அலுவல்களை செய்வார்கள். என்னுடைய வங்கி கிளைகள் பலவற்றில் இத்தகைய மேலாளர்களைக் கண்டிருக்கிறேன். அன்றாட அலுவல்களை முடிப்பதிலேயே குறியாயிருக்கும் இவர்களால் தங்களுடைய மேலாளர் முதன்மை பணியான கிளையின் வர்த்தக மேம்பாட்டை கோட்டை விட்டுவிடுவார்கள்.

இத்தகைய மனப்பாங்கிலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல. ஆனால் தங்களால் இயன்றவரை இத்தகைய போக்கிலிருந்து விடுபட முயலவேண்டும். Delegation என்கிற அலுவல்களை அவரவருடைய பதவி அல்லது அந்தஸ்த்திற்கு ஏற்றார்போல் பகிர்ந்தளிக்கும் உத்தியை பயன்படுத்த வேண்டும். இது அலுவலகத்திற்கு மட்டுமல்லாமல் வீட்டிற்கும் பொருந்தும். மனைவி மற்றும் குழந்தைகளால் செய்து முடிக்கக் கூடிய அலுவலை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். இதற்கு முக முக்கியமாக தேவைப்படுவது 'என்னால் செய்து முடிக்க முடிந்த எந்த அலுவலையும் மற்றவர்களாலும் செய்ய முடியும்' என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது. ஒரு அதிகாரியின் வெற்றியே அவருடைய பணியாளர்களையும் அவரைப்போன்றே திறமையுள்ளவராய் மாற்றுவதில்தான் அமைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது வீட்டிற்கும் பொருந்தும். ஒரு குடும்பத் தலைவனின் வெற்றி குடும்பத்திலுள்ள அனைவரையும் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதில்தான் உள்ளது.

இத்தகைய 'என்னால் மட்டுமே முடியும்' என்ற மனப்பான்மையால் ஏற்றுக்கொண்ட அலுவல்களை முடிக்க முடியாமல் அலுவலக வேலைகளை வீட்டுக்கு கொண்டு செல்வதும் அலுவலக நேரத்தில் வீட்டில் முடிக்க முடியாமல் போன அலுவல்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்யும்.

ஆ) நேரத்தின் அவசியத்தை உணர்வது.

அலுவலகங்களில் ஒரு தவறான கருத்து நிலவுவதை கண்டிருக்கிறேன். யார் அலுவலகத்திற்குள் முதலில் நுழைந்து இறுதியில் வெளியேறுகிறாரோ அவர்தான் மிகவும் உண்மையான ஊழியர் (Sincere worker) என்று கருதுவது. இது பல நேரங்களில் உண்மைக்கு நேர்மாறானதாக இருக்கும். ஒரு ஊழியர் தன்னுடைய அலுவல்களில் உண்மையானவராகவோ (sincere) அல்லது தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராகவோ (dedicated) இருப்பதைவிட அதை செய்துமுடிக்க தேவையான திறமை வாய்ந்தவராக (talented) அல்லது தகுதியுள்ளவராக (suitable) இருப்பதுதான் மிகவும் அவசியம். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்து முடிக்கக் கூடிய ஒரு அலுவலை அதிகாலையிலேயே அலுவலகத்திற்குள் நுழைந்து நாள் முழுவதும் அமர்ந்தும் அதை சரிவர செய்து முடிக்கவியலாத 'உண்மையான' ஊழியரை விட குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அளித்த அலுவல்களை குறித்த நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்துவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுபவர் எவ்வளவோ மேல். அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு செல்வதும் அல்லது அலுவலக நேரத்தில் தங்களுடைய சொந்த அலுவல்களை செய்பவர்களும் நேரத்தின் முக்கியத்துவத்தை உணராதவர்களே. 'ஒரு நாளைக்கு முப்பத்தாறு மணி நேரம் இருந்தாக் கூட எனக்கு போறாது போலருக்கு' என்பது இப்போதெல்லாம் ஒரு கவுரவமாக போய்விட்டது.

இதிலிருந்து விடுபடுவதும் உடனடியாக இயலாது என்றாலும் நாளடைவில் விடுபட முயல வேண்டும். ஒரு அலுவலை செய்து முடிக்க அலுவலகத்திலுள்ள திறமைவாய்ந்த சக ஊழியர்கள் எவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனித்து தாங்களும் அதை பின்பற்ற முயல வேண்டும். துவக்கத்தில் சற்று கடினமாக தோன்றினாலும் காலப்போக்கில் அந்த கலை கைவந்துவிடும். துவக்க நாட்களில் அலுவலகத்தில் சற்று கூடுதல் நேரம் அமர்ந்திருக்க வேண்டிவந்தாலும் அலுவலக வேலைகளை அலுவலகத்திலேயே முடித்துவிட்டு செல்ல வேண்டும். அதை விடுத்து மீதமுள்ள அலுவல்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முயலக்கூடாது.

சமீப காலங்களில் சில நிறுவனங்கள், குறிப்பாக கணினித்துறையில், தங்களுடைய மூத்த அலுவலர்களை அவர்களுடைய வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கின்றன. 'I work from my home' என்று கூறிக்கொள்வது ஒரு பெருமையாகக் கூட கருதுகின்றனர் சிலர். ஆனால் காலப் போக்கில் இது தங்களுடைய குடும்ப வாழ்க்கையையே சீர்குலைத்துவிடும் என்பதை இவர்கள் மறந்துபோகின்றனர். காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு மணி வரை என்கிற அலுவலக நேரம் நாளடைவில் மறைந்து இருபத்திநாலு மணி நேரமும் அலுவல் என்றாகிவிடும்போது அதிலிருந்து மீள முடியாமல் திணறுவார்கள். வீடு வீடாக இருக்கும்வரைதான் குடும்பமும் குடும்பமாக இருக்கும் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது.

தொடரும்..

09 ஜூலை 2010

வீடும் அலுவலகமும் 2

இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?

தொடரும்..

1. அலுவலகம் - வீடு எல்லைகளை வரையறுத்துக்கொள்தல்

சமீப காலங்களில் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியின் காரணமாக வீடு, அலுவலகம் என்கிற பாகுபாடில்லாமல் போய்விட்டது என்றால் மிகையல்ல. முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுவிட்டால் அடுத்த வேலை நாள் அன்று அலுவலகம் திரும்பும்வரை அலுவலக விஷயங்களுக்காக நம்மை தொடர்புகொள்ள வழியில்லாமல் இருந்தது. இது ஒரு வகையில் சிலருக்கு, குறிப்பாக அதிகாரிகளுக்கு, குறையாக இருந்தாலும் அதிகாரத்திற்குட்பட்ட பலருக்கும் இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.

ஆனால் கைத்தொலைபேசி புழக்கத்திற்கு வந்த நாளிலிருந்து அலுவலக நேரம் என்பதே நம்மில் பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. ஏன் அலுவலக நாட்கள், விடுமுறை நாட்கள் என்ற பாகுபாடுகூட இல்லாமல் போய்விட்டது என்றாலும் மிகையல்ல.

இந்த சூழலில் அலுவலகம், வீடு என்று தீர்க்கமான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள் என்பது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக தோன்றலாம். நாம் வாசிக்கின்ற பல மேலாண்மை தத்துவங்கள் தொலைதொடர்பு தொழில்நுட்பம் இன்றைய அளவுக்கு வளர்ச்சிபெறாத சூழல்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஆகவே அத்தகைய தத்துவங்கள் காலாவதியாகிப்போன வெற்று போதனைகளே!

கைத்தொலைபேசியை அணைத்து செயலிழக்க செய்துவிட்டால் போதாதா என்றால் அழைத்தவர் ஒருவேளை நம்முடைய உயர் அதிகாரியாய் இருந்து அவர் அழைத்த நோக்கம் தலைபோகிற அவசரமாக இருந்துவிட்டால் என்னாவது என்கிற அச்சத்தாலேயே ஏற்படுகிற மன அழுத்தம் முந்தைய மன அழுத்தத்தை விட அபாயகரமானது. இதற்கு மாற்றாக கைத்தொலைபேசியை நிசப்தநிலையில் (Silent Mode) வைத்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை என்று எண்ணுபவர்களும் உண்டு. அழைத்தவர் யார் என்பதை அறிந்துக்கொண்டு தேவைப்பட்டால் எடுத்து பதிலளிப்பது, இல்லையென்றால் தவிர்த்துவிடலாமே. இதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. நம்மை அழைத்தவர் நமக்கு அறிமுகமான அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே! அது மட்டும் போதாதே, அவருடைய தொலைபேசி எண்ணும் நம்முடைய கைத்தொலைபேசி எண் பட்டியலில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டுமே!

ஆக எல்லைகளை வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.

எனக்கு மிகவும் நெருக்கமான அலுவலக நண்பர் வீட்டிலேயே அலுவலக கோப்புகளை மனைவி மற்றும் குழந்தைகளுடைய இடையூறு இல்லாமல் பார்வையிட அதற்கென ஒரு அறையையே ஒதுக்கியிருப்பார். அலுவலகத்திலிருந்து சரியாக ஏழு மணிக்கு கைப்பெட்டியுடன் கிளம்பும் அவரை அவருடைய சக அதிகாரிகள் பொறாமையுடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் அவருடைய கைப்பெட்டியில் அன்றைய கோப்புகள் இருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

இன்னொரு நண்பர் காலை எட்டு மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இரவு பத்து மணிக்கு மேல்தான் புறப்படுவார். காலை பத்து மணிக்குக் கூட வரமுடியாமல் ஆனால் மாலை ஏழு மணிக்குள்ளாக புறப்பட எண்ணும் என்னைப் போன்றவர்களுக்கு எங்களுடைய இலாக்கா அதிகாரியின் மண்டையிடியை பெற்றுத் தருவதில் அவருக்கு அப்படியொரு ஆனந்தம். பிறகுதான் தெரிந்தது அவருடைய குடும்பப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் அலுவலகத்தை தஞ்சம் அடைகிறார் என்கிற விஷயம். Escapism எனப்படும் இத்தகைய அணுகுமுறையும் எல்லைகளை வரையறுத்துக்கொள்ள இயலாமையின் வெளிப்பாடுதான்.

வேறு சிலர் வீட்டுப் பிரச்சினைகளை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நண்பர்கள் அனைவரிடமும் அதையே நாள் முழுவதும் கூறி சுயபச்சாதாபத்தை தேடிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் இத்தகைய புலம்பல்களால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதிகபட்சம் அலுவலக நண்பர்களின் அன்றைய அலுவல்கள் பாதிக்கப்படலாம். ஆனால் அவருடைய பிரச்சினைகளுக்காக யாரும் பெரிதாக கவலைப்பட்டு தங்களுடைய மனநிம்மதியை கெடுத்துக்கொள்ள போவதில்லை.

இன்னும் சிலர் அலுவலக தோல்விகளை வீட்டுக்குள் கொண்டு சென்று குடும்பத்திலுள்ள அனைவரையும் குறை கூறுவார்கள். இத்தகையோருடைய மனப்பாங்கு அவர்களை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரையும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை இவர்கள் உணர்வதில்லை.

இத்தகையவர்களுக்குத்தான் இந்த 'எல்லைகள் வரையறுத்துக்கொள்க' என்கிற அறிவுரை பொருந்தும்!

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது.

அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?

சாத்தியம்.

ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.

தொடரும்..

08 ஜூலை 2010

வீடும் அலுவலகமும் 1

கடந்த வாரம் நான் எழுதிய 'பணியிலிருந்து ஓய்வு - சுயதயாரிப்பு' தொடரை வாசித்த நண்பர் ஒருவர் உங்களுடைய அனுபவத்திலிருந்து பணியிலிருப்பவர்கள் அலுவலக பளுவையும் குடும்ப பளுவையும் ஒருசேர எப்படி சுமப்பது அல்லது சமாளிப்பது என்பதைப் பற்றியும் எழுதுங்களேன் என்று மின்னஞ்சல் வழியாக கேட்டுக்கொண்டார்.

அதன் விளைவே இத்தொடர்.

என்னுடைய நண்பர் 'பளு' என குறிப்பிட்டது பொறுப்புகளின் (Responsibilities arising out of Positions) விளைவாக ஏற்படுகின்ற சுமை (Burdens or Obligations) என்று கருதுகிறேன்.

நான் 'பொறுப்புகள்' என குறிப்பிடுகையில் எல்லா பதவி நிலைகளையும் ஒருமித்து குறிப்பிடவே 'Authority' என்று கூறாமல் 'Positions' என்று கூறியுள்ளேன். கடமைகள் சுமைகளாக தோன்றுவது அதிகார நிலையிலுள்ளவர்களுக்கு (Authorities) மட்டுமல்லாமல் அதிகாரத்திற்குட்படும் அடிமட்ட ஊழியர்களுக்கும் கூட அவரவர்களுடைய நிலைகளுக்குட்பட்ட சுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை மறுக்கவியலாது. ஆகவே 'சுமை'யின் பாரத்தை அனைவருமே ஏதாவது ஒரு காலத்தில் உணரவே செய்கின்றனர்.

குடும்பங்களிலும் அப்படித்தான். தலைவர் எனப்படும் கணவன் மட்டுமேதான் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்றில்லை. அவருடைய அதிகாரத்திற்கு ஆளாகும் மனைவி மற்றும் குழந்தைகளும் கூட மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர்.

'டென்ஷன்' என்ற ஆங்கில சொல்லை 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என எதிர்மறைப் பொருள்பட (Negative sense) பல தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனக்கென்னவோ 'டென்ஷன்' என்றால் 'மனப் பதட்டம்' என்பதே பொருத்தமாக இருக்கும் என படுகின்றது. 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என குறிப்பிடுகையில் Positive Anxiety எனப்படும் 'நேர்மறை மனப்பதட்டம்' என்கிற மனநிலை வெளிவருவதில்லை. அதாவது நல்ல அலுவல் ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில், வெற்றிகரமாக முடித்தாக வேண்டுமே என்கின்ற ஒரு மனநிலையைத்தான் 'நேர்மறை மனப் பதட்டம்' என குறிப்பிடுகிறேன்.

உதாரணமாக என்னுடைய மகளின் திருமணத்தை நிச்சயித்த தியதியிலிருந்து ஒருவாரத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். 'இதை நான் எப்படி செய்து முடிக்கப் போகிறேன்' என்று என் மனதுக்குள் ஒருவிதமான பதற்றம் ஏற்படுகிறதே அதுவும் ஒருவகையில் 'டென்ஷன்' தான். அல்லது அடுத்து வருகின்ற தேர்வுக்காக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் டென்ஷன். இவை நல்ல விஷயங்களுக்காக ஏற்படுகின்ற பதற்றம்.

இத்தகைய பதட்டத்தை 'மன இறுக்கம்' என குறிப்பிட முடியாது. இதை 'Positive Tension or Anxiety' என கூறலாம்.

இத்தகைய 'நேர்மறை மனப் பதட்டம்' அவசியமானதும் கூட. நம்முடைய அன்றாட அலுவல்களை சரிவர செய்து முடிக்க - அது அலுவலகமானாலும் வீடானாலும் - இந்த மனநிலை ஒரு உந்துகோலாக நிச்சயம் அமைகிறது. எவ்வித மனப்பதட்டத்திற்கும் உள்ளாகாமல் ஒரு மனிதனால் எதிலும் வெற்றிபெற முடியாது.

'எதிர்மறை மனப் பதட்டம்' அதாவது தேவையற்ற அச்சங்களால் ஏற்படும் மன சஞ்சலங்களைத்தான் 'மன இறுக்கம்' அல்லது 'மன அழுத்தம்' என கூறலாம். இந்த மன சஞ்சலங்கள்தான் பல சமயங்களிலும் நம்மை எவ்வித முடிவுக்கும் வர முடியாமல் அலைக்கழிக்கின்றன. தேவையற்ற பரபரப்பை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. இத்தகைய சஞ்சலங்கள் நம்முடைய உள்ளத்துக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் கேடு விளைவிக்கின்றன. பசியின்மை, உறக்கமின்மை, உற்சாகமின்மை இவை அனைத்திற்குமே இத்தகைய சஞ்சலங்கள்தான் காரணம் என்றால் மிகையல்ல.

பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய மன இறுக்கத்தை எப்படி கையாள்வது என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்துக்கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதே இத்தொடரின் நோக்கம். அத்துடன் நான் என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக சில ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த நூலகத்தில் இருந்த பல மேலாண்மை புத்தகங்களை படித்து வகுப்புகள் எடுக்க நான் குறித்து வைத்திருந்தவற்றையும் கையாளலாம் என்று எண்ணியுள்ளேன்.

'மன இறுக்கம்' என்பது ஒரு அலுவலை சரிவர செய்துமுடிக்க வேண்டுமே என்கிற நேர்மறை மனப் பதட்டத்தை கடந்து அந்த அலுவலை சரிவர முடிக்காமல் போய்விடப் போகிறது அல்லது அதை என்னால் நிச்சயம் சரிவர செய்ய முடியாது என்கிற எதிர்மறை மனசஞ்சலத்திற்கு ஆட்பட்ட மனநிலை என்றும் கூறலாம்.

தோல்வியை சந்திக்க தயாராக இல்லாத மனநிலையைக் கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய மனநிலைக்கு ஆளாகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையானாலும் அலுவலக வாழ்க்கையானாலும் தோல்விகள் நிச்சயம். தோல்விகளை சந்திக்காத மனிதர்களே இல்லை. தோல்விகள் மிகவும் சகஜம். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். இதை உணர்ந்துக்கொள்ளாமல் நான் வெற்றிபெற்றுத்தான் தீருவேன், என்னுடைய அகராதியில் தோல்வி என்ற வார்த்தையே இல்லை என்ற தேவையற்ற தீர்மானங்களை உள்ளத்தில் உரம் இட்டு வளர்ப்பவர்களே மன இறுக்கத்திற்குள்ளாகின்றனர்.

இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?

தொடரும்..

30 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு நிறைவுப் பகுதி

நடுத்தர குடும்பத்திலுள்ளவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு ஓரளவுக்காகிலும் வசதியுடன் வாழ தங்களுடைய பணிக்காலத்தில் சில வசதிகளை தியாகம் செய்துதான் ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளார்கள் என்பதை மறுக்கவியலாது. இன்றைய நாளுக்கு மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள் பலரும் பொருளாதார அடிமட்டம் அல்லது உச்சாணியிலுள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். சாலையோரத்தில் வசிப்பவனால் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும் ஆனால் நடுத்தர மக்கள் அப்படியல்ல. அதுவும் சமுதாயத்தில் ஓரளவுக்கு மதிக்கத்தக்க அந்தஸ்த்துடன் வாழ்ந்து பழகிப்போனவர்கள் அதே அந்தஸ்த்துடன் இறுதிவரை வாழவே விரும்புவர். இதற்கு மிகவும் அத்தியாவசியமானது பொருளாதார சுதந்திரம். இத்தகைய சுதந்திரத்தை முதிர்ந்த வயதிலும் அளிக்கக் கூடியது சேமிப்பு மட்டுமே.


ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் சேமிக்க தேவையில்லை என்கிற மனப்பாண்மை சிலரிடம் இருப்பதை கண்டிருக்கிறேன். அவர்களை நன்றாக படிக்க வைத்து ஒரு வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் நம்முடைய முதிர்ந்த வயதில் அவர்கள் நம்மை கவனித்துக்கொள்வார்கள் என்பது போன்ற எண்ணம் இவர்களுக்கு. இத்தகைய எண்ணம் சரியா, தவறா என்பது போன்ற வாதத்தில் இறங்குவதை விட அது விரும்பத்தக்க ஒன்றா என்று சிந்திப்பது நல்லது என கருதுகிறேன்.

பொருளாதார சுதந்திரமின்மைதான் முதியவர் பெரும்பாலோரின் மனக்கவலைகளுக்கு அடிப்படைக் காரணம் என்கின்றனர் சமூக ஆய்வாளர்கள். அதாவது முதிர்ந்த வயதில் தங்களுடைய வசதிகளுக்கு பிறரை, குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளை சார்ந்திருப்பவர்களுக்குத்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆகவே பெற்றது ஆணாலும் பெண்ணானாலும் பெற்றவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு எதிர்கால வாழ்வுக்கு சேமித்து வைப்பது மிகவும் அவசியம்.

சேமிப்பு என்றால் தற்போதைய வசதிகளை நிறைவேற்றிக்கொண்ட பிறகு மீதமுள்ள தொகையை சேமிப்பது என்றுதான் நம்மில் பலரும் கருதுகிறோம். இதில் தவறேதும் இல்லை. எதிர்காலத்தில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காக இன்றைய அடிப்படை தேவைகளையும் தியாகம் செய்வதில் அர்த்தம் இல்லை. நாளை, நாளை என்கிற எண்ணத்துடன் என்றுமே வாழாமல் இருப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்?

அதே சமயம் இன்றைய அடிப்படை தேவை என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதா என்றும் கேட்கலாம். எனக்கு அடிப்படை தேவையாக நான் கருதுவது வேறு சிலருக்கு ஆடம்பரமாக தென்படலாம். இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு இவை மூன்றும் இருந்தால் போதும் என கருதுபவர்களும் உண்டு. இருக்க இடம் என்றால் குறைந்தபட்சம் இரண்டு படுக்கையறைகள் இருக்க வேண்டும், உடுத்த உடையென்றால் குறைந்தபட்சம் ஐம்பது ஜோடிகள் வேண்டும், உணவு என்றால் தினமும் விருந்து சாப்பாடு வேண்டும் வார இறுதி நாட்களில் வெளியில் சாட், தந்தூரி வகையறா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கருதுபவர்களும் உண்டு. அதுபோலவே போக்குவரத்திற்கு தங்கள் வாழ்நாளெல்லாம் பொதுத்துறை பேருந்துகளை மட்டுமே சார்ந்திருப்பவர்களும் உண்டு, குறைந்தபட்சம் மொப்பெட்டாவது இருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆக அவரவர் தகுதிக்கேற்ப வாழ்க்கைத்தரமும், தேவைகளும் மாறுபடுகின்றன.

சேமிப்பும் அப்படித்தான். அவரவர் வாழ்க்கைத்தரத்தைப் பொருத்தே சேமிப்பும் அமைகின்றன. சேமிப்பின் அளவு வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் சேமிப்பு என்பது அனைவருக்கும் தேவை.

சேமிப்பு எவ்வளவு முக்கியமோ அதை எப்படி முதலீடு செய்வது என்பதை தெரிந்துக்கொள்வது அதைவிட முக்கியம். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்துள்ள நம்மில் பலரும் அவற்றை முதலீடு செய்வதில்தான் தோற்றுப்போகிறோம். சமீப காலங்களில் சரியாக ஆலோசிக்காமல் முதலீடு செய்துவிட்டு ஏமாந்து நிற்பவர்களைப் பற்றிய செய்திகள் வராத நாள் இல்லையே. இத்தகையோருள் பலர் அடிப்படை வசதிகளையும் தியாகம் செய்து சேமித்தவர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. படிக்காதவர்கள்தான் என்றில்லாமல் சில அரசுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சென்னையில் மிகவும் பிரபலமாகியிருந்த RBF நிறுவனத்திடம் தங்களுடைய சேமிப்பு அனைத்தையும் இழந்து நின்றதை படித்தோமே.

திரும்பும் இடமெல்லாம் வங்கிகள் நூற்றுக்கணக்கில் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஏன் பொதுமக்கள் இன்றும் இத்தகைய நிறுவனங்களை நம்பி ஏமாந்துபோகின்றனர்? கேட்டால் அரசுத்துறை வங்கிகள் மிகக் குறைந்த விகிதத்திலேயே வட்டி வழங்குகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆரம்பநிலை பொருளாதார பாடம் என்ன சொல்கிறது? வட்டி என்பது சேமிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (incentive). அதாவது சேமிப்பே இல்லாத பொருளாதார சந்தையில் சேமிப்பை தூண்ட அளிக்கப்படும் ஊக்கத்தொகைதான் வட்டி. சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையின் விகிதமும் குறையத்தான் செய்யும். சந்தைக்கு வரும் பொருட்களின் அளவைப் பொருத்துத்தானே அதன் விலையும் அமைகிறது? சரக்கு பற்றாக்குறையாக இருக்கும் காலங்களில் அதன் விலை உயர்வதும் சரக்கு அபிரிதமாக இருக்கும் காலங்களில் அதன் விலை சரிவதும் இயற்கைதானே! Disposable income எனப்படும் தேவைக்கு அதிகமான ஊதியம் அதிக மக்களின் கைவசம் இருக்கும் இன்றைய சூழலில் சேமிப்புக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறையவே வாய்ப்புள்ளது. ஆகவே சேமிப்பிற்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதம் குறைந்து வரும் இன்றைய சூழலில் நம்முடைய அனைத்து சேமிப்பையும் வைப்புநிதிகளில் வைப்பதில் பலனில்லை.

வைப்பு நிதிகளை விட்டால் முதலீடு செய்ய மிகவும் சிறந்ததாக தற்போது கருதப்படும் முதலீடு தங்கம். அதற்கடுத்தபடியாக கருதப்படுவது அசையாசொத்து எனப்படும் வீட்டு மனைகள் (Plots), குடியிருப்பு (Flats). அதற்கடுத்து பங்குகள் (Share Market).


1. தங்கம்

எனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கு குறிப்பிடலாம் என்று கருதுகிறேன். 2004ம் வருடம். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவரிடம் ரூ.1.00 லட்சம் இருந்தது. அதை எதில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை கேட்க என்னை அணுகினார். 'Gold coins வாங்கிருங்கன்னு சொல்றாங்க எங்க வீட்டுல.' என்றார். நான் அப்போதுதான் என்னுடைய மூத்த மகளுக்கு திருமணத்தை முடித்திருந்தேன். ஆகவே சுமார் இரண்டாண்டுகளாகவே தங்க நகைகளை வாங்கிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் தங்க நகைகளை வாங்கிவிட்டு வந்த அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 வரை விழும், சில தினங்களுக்கு ரூ.20, ரூ.25 ஏறும். இப்படியேதான் இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறை தங்கம் வாங்கி முடித்ததும் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. ஆகவே நான் 'தங்கத்துல முழுசையும் போடாமல் பாதிய NSCல போடுங்க' என்றேன். முதலீட்டுக்கு 6.5% வருடத்திற்கு கிடைக்கும். அத்துடன் முதலாண்டில் முதலீட்டில் 20% வருமானவரி ரிபேட்டும் கிடைக்குமே என்றேன். NSC யில் ஆறாண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஆறாண்டுகளுக்கு பிறகு ரூ.1.00 லட்ச முதலீடு 1.60 லட்சமாக கிடைக்கும். அத்துடன் முதலாண்டில் கிடைக்கும் 20% ரிபேட்டையும் சேர்த்தால் ரூ.1.00 லட்சம் முதலீட்டிற்கு ரூ.80,000/- கூடுதலாககிடைக்கும் தங்கத்தில் இந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது என்று கணக்கிட்டு மொத்த தொகையையும் NSCயில் முதலீடு செய்தார் அவர். அன்று தங்கம் கிராமுக்கு ரூ.585/- முந்தைய இரண்டு ஆண்டுகளில் சுமார் 20% - 25% அளவுக்கே வளர்ச்சியடைந்திருந்த அதன் மதிப்பு அடுத்த ஆறு ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்து சுமார் 3 1/2 மடங்கு உயர்ந்து இன்று ரூ.1750/- ஆக நிற்கிறது. என்னுடைய நண்பர் அவருடைய மனைவியின் ஆலோசனைப்படி தன்னுடைய ரூ.1.00 லட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று அவருடைய முதலீடு ரூ.3.50 லட்சமாக வளர்ந்திருக்கும்! அவருடைய NSC இந்த வருடம் செப்டம்பர் மாதம் ரூ.1.60 லட்சமாக திருப்பிக் கிடைக்கும்! தங்கத்துடன் ஒப்பிட்டால் சுமார் ரூ.1.90 லட்சம் இழப்பு. அடுத்த இரண்டாண்டுகளில் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று சென்றுவிட்டார். ஆனாலும் வருகின்ற செப்டம்பர் மாதம் அவருடைய முதலீடு திருப்பிக் கிடைக்கும்போது என்னை கலந்தாலோசித்தது எத்தனை முட்டாள்தனம் என்று நினைத்துப்பார்ப்பார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 30லிருந்து 35 விழுக்காடு உயர்ந்திருப்பது தங்கத்தின் விலைதான் என்பதில் ஐயமேதும் இல்லை. ஆனால் முதலீடு செய்த தொகையை திருப்பி எடுக்க வேண்டும் என்று கருதுபவர்கள் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதில் பயனில்லை. முதலீட்டிற்கு தங்க காசுகள்தான் சிறந்தவை. இதில் கவனிக்க வேண்டியது. தங்கத்தை வாங்கியபோது கிடைத்த பில்லையும் விற்கும்போது கிடைத்த ரசீதையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு சூழலில் வருமான வரி பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் இவை நிச்சயம் தேவைப்படும். மேலும் எந்த கடையில் வாங்குகிறோமோ அதே கடையில் அதை விற்பதுதான் நல்லது.



2. வீட்டு மனைகள்

தங்கத்தை அடுத்து வீட்டு மனைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் இதன் மதிப்பு வளர்ச்சியடைவது பெரும்பாலும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்தே அமைகிறது. 1985ம் வருடம் நான் தூத்துக்குடி கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது என்னுடைய உறவினர் ஒருவர் தூத்துக்குடியில் ஒரு தாக்கு எனப்படும் 2400 ச.அடி வீட்டு மனை ஒன்றை ரூ.20,000/- க்கு வாங்கினார். அதை தன்னுடைய மகளுடைய திருமணத்திற்கென்று 2003ம் வருடம் விற்க நினைத்தபோது அதன் மதிப்பு ரூ.5.00 லட்சமாக உயர்ந்திருந்தது. ஆனால் அவர் நிலத்தை வாங்கிய அதே வருடம் என்னுடைய அலுவலக நண்பர்கள் சிலர் கூட்டாக சென்னையை அடுத்துள்ள சோளிங்கநல்லூர் கிராமத்தில் ஒரு கிரவுண்ட் ரூ.50,000/- என்று பத்து கிரவுண்ட் (24000 ச.அடி) விளைநிலத்தை வாங்கினர். அதன் மதிப்பு எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து சமீபத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு கிரவுண்ட் நிலத்தை ரூ.25 லட்சத்திற்கு விற்றதாக கேள்வி. நான் 1980ல் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்திருந்தபோது அப்போது பிரபலமாகியிருந்த ஆலாக்ரிட்டி (Alacrity) நிறுவனம் 800 ச.அடி அளவுள்ள குடியிருப்புகளை சுமார் ரூ.2.00 லட்சம் வீதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இன்று அந்த வட்டாரத்தில் ச.அடி ரூ.8,000/-ல் இருந்து ரூ.10,000/-! ஆகவே என்ன விலைக்கு வாங்குகிறோம் என்பதை விட அது எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை கவனித்து வாங்குவது மிகவும் முக்கியம்.

ஆனால் அசையா சொத்துகளில் செய்த முதலீட்டை அத்தனை எளிதில் திருப்பி எடுக்க முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தேவையற்ற வில்லங்கத்தில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு.


3. பங்குகள்

இவற்றில் முதலீடு செய்ய மிகுந்த அனுபவம் தேவை. குறுகிய காலத்தில் பெரும் அளவுக்கு லாபம் அடையவும் இயலும் நம்முடைய சேமிப்பு அனைத்தையுமே இழந்துவிடவும் முடியும். ஆனால் இதை முழுவதுமாக ஒதுக்கிவிடுவதும் புத்திசாலித்தனமல்ல.

ஆகவே இந்த மூன்று முதலீட்டு வாய்ப்புகளையும் சரியான விகிதத்தில் பயன்படுத்திக்கொண்டால் அதிக லாபம் கிடைக்கவில்லையென்றாலும் பெரு நஷ்டத்தை தவிர்க்க வாய்ப்புண்டு:

* தங்கத்தில் முதலீடு செய்ய பெருந்தொகை தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடிந்ததை கொண்டே தங்க காசுகளை கிராம் கணக்கில் வாங்கிவிட முடியும். ஆகவே நம்முடைய மாத சேமிப்பில் அதிகபட்சமாக 50% இதற்கென ஒதுக்கலாம். மாதம் ஒரு கிராம் வீதம் வாங்கினாலும் முப்பது வருடங்களில் 360 கிராம் வாங்கிவிட முடியுமே?

* அசையா சொத்து எனப்படும் வீட்டு மனை, குடியிருப்பில் கையிருப்புடன் வங்கி கடனையும் சேர்த்து முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். இருபது வருடங்கள் என நீண்ட கால கடனாக இருக்கும் பட்சத்தில் மாதா மாதம் கடனை அடைக்க பெருமளவு தொகை தேவைப்படாது. அத்துடன் கடனுக்குண்டான வட்டிக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கிறது. அசையா சொத்துக்களில் முதலீடு செய்ய எண்ணுபவர்கள் தங்களுடைய இளம் வயதிலேயே (30லிருந்து 40 வயதுக்குள்) அதை முடிவு செய்துவிடுவது நல்லது. அப்போதுதான் கடனுக்குண்டான தவணை அவர்களுடைய நிகர வருமானத்தில் 50%க்கு மேல் போகாமல் இருக்கும்.

* முதலிரண்டு வகை முதலீட்டுக்கு தேவையான தொகையை ஒதுக்கிய பிறகு மீதம் இருக்கும் தொகையை, குறிப்பாக ஒவ்வொரு வருடம் கிடைக்கக் கூடிய போனஸ் அல்லது ஓவர் டைம் வருமானத்தை பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் பங்கு சந்தையில் விலைக்கு வரும் பங்குகளை வாங்காமல் ப்ளூ சிப் நிறுவனங்கள் எனப்படும் சிறந்த நிறுவனங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தும் பப்ளிக் இஷ்யூக்களில் விண்ணப்பித்து வாங்கலாம். குறுகிய காலத்தில் இத்தகைய பங்குகளின் விலையில் அபிரிதமான ஏற்றம் ஏற்படவில்லையென்றாலும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் வழங்கும் டிவிடெண்ட் தொகை நிரந்தர வருமானமாக கிடைக்க வாய்ப்புண்டு.

பொருளாதார சுதந்திரமும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடைய ஆதரவும் இருக்கும்பட்சத்தில் முதிர்ந்த வயதிலும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும் என்பதில் ஐயமில்லை.



நிறைவுபெறுகிறது.

முந்தைய பதிவுகள்

பதிவு 1 பதிவு 2 பதிவு 3 பதிவு 4 பதிவு 5 பதிவு 6 பதிவு 7 பதிவு 8

28 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 8

பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் தங்களை எவ்வளவுதான் உணர்வுபூர்வமாக தயாரித்துக்கொண்டாலும் அவர்கள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லாதிருக்கும் பட்சத்தில் மனநிம்மதியுடன் மீதமுள்ள நாட்களை செலவழிக்க வாய்ப்பில்லை.

'தாயும் பிள்ளைன்னாலும் வாயும் வயிறும் வேறு' என்கிற காலம் இது!

ஆகவே தங்களுடைய ஓய்வு காலத்திலும் அப்போதுள்ள வாழ்க்கைத்தரம் சற்றும் குறையாமல் தொடர்ந்து இருக்க பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு வெகு காலம் முன்பே முன்யோசனையுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்குவது மிகவும் அவசியம். எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது அவரவர் ஊதிய அளவு மற்றும் அப்போதைய குடும்ப செலவு ஆகியவற்றை பொருத்தது.

உதாரணத்திற்கு, நால்வர் அடங்கிய (கணவன்+மனைவி+இரு குழந்தைகள்) நடுத்தர குடும்பத்தில் உள்ள நாற்பது வயதுள்ள ஒருவருடைய தற்போதைய மாத செலவுகள் (வாடகையுடன் சேர்த்து) ரூ.25,000/- என்று வைத்துக்கொள்வோம். அவர் அறுபது வயதில் ஓய்வு பெறும்போது தற்போதைய வாழ்க்கைதரத்தை தொடர்வதற்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- வேண்டியிருக்கும் என்கிறது தனியார் நிறுவன இணையதளத்திலுள்ள ஒரு மதிப்பீடு. அதாவது ரூ.60,000/- மாதம் ஓய்வூதியமாக (அல்லது வருமானமாக) பெறுவதற்கு இப்போதிருந்தே அதற்கெனவே மாதம் ரூ.20,000/- ப்ரிமியமாக செலுத்த வேண்டுமாம்! அதற்கு தற்போதைய மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.45,000/- ஆக இருந்தால்தான் இது சாத்தியமாகும். இது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி!

நான் இத்தகைய திட்டங்களில் ஒன்றில் பத்துவருடங்களுக்கு முன்பு இணைந்து வருடத்திற்கு ரூ.10000/- செலுத்தி வந்தேன் (அப்போது அதுதான் அதிகபட்ச ப்ரிமியம் தொகையாக இருந்தது. ஆனால் இப்போது அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை) இந்த வருடத்திலிருந்து மாதம் ரூ.3000/- ஓய்வூதியம் எனக்கு கிடைக்கும். இதன் அடிப்படையில் பார்த்தால் ரூ.60000/- ஓய்வூதியமாக கிடைக்க வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.2.00 லட்சம் ப்ரிமியமாக செலுத்த வேண்டும். இளம் வயதிலிருந்தே இத்தகைய திட்டங்கள் ஒன்றில் முதலீடு செய்தால் அதற்கேற்ற வகையில் செலுத்த வேண்டிய ப்ரிமியம் குறைய வாய்ப்புள்ளது.

இதுதான் இன்று சந்தையிலுள்ள பல ஓய்வூதிய திட்டங்களின் நிலை.

மேலும் இன்று ஓய்வூதிய திட்டங்களை வழங்கும் பல நிறுவனங்கள் இந்த துறையில் தொடர்ந்து நீடிப்பார்களா என்பதையும் நிச்சயமாக வரையறுக்க முடிவதில்லை. இதே துறையில் சந்தையில் பல ஆண்டுகளாக வணிகம் செய்துவரும் எல்.ஐ.சி அளிக்கும் திட்டங்கள் மற்ற வங்கிகள், நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் லாபகரமானதாக தென்படவில்லையெனினும் மிகவும் பாதுகாப்பானவை என்பது மட்டும் உறுதி.

எல்.ஐ.சி வழங்கும் திட்டங்களைப் பற்றி அறிந்துக்கொள்ள இங்கு
செல்லவும். இத்திட்டங்களில் New Jeevan Suraksha I திட்டம் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்தது என கருதுகிறேன். இத்திட்டத்தில் செலுத்தப்படும் ப்ரிமியம் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை வரையிலும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன முகவர்களுடன் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அடுத்து இந்திய முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் திட்டங்களைக் கூறலாம். இவையும் மற்ற வங்கிகள் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான விகித ஓய்வூதியம் வழங்குகின்றன என்றாலும் இவை பாதுகாப்பானவை. இவர்களுடைய பல திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு செல்லவும். இவற்றுள் SBI-Lifelong Pension Plus திட்டம் நல்ல திட்டமாக தென்படுகிறது. திட்டத்தின் முழு விவரங்களையும் தெரிந்துக்கொண்டு முதலீடு செய்யலாம்.

இத்தகைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஓய்வூதியம் அளிக்கக் கூடிய பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மிகவும் லாபகரமானது. ஆனால் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முந்தைய பத்து மாதங்களில் அவர்கள் ஈட்டிய சராசரி அடிப்படை வருமானத்தில் ஐம்பது விழுக்காடு மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கிறது. ஆகவே இந்த ஊதியத்தில் வாழ்க்கைத்தரத்தை அப்போதைய நிலையில் தொடர்வது என்பது சாத்தியமில்லாத விஷயம்.

ஆகவே பணியிலிருந்து சேர்ந்த நாளிலிருந்தே ஓய்வுகாலத்தைப் பற்றி சிந்தித்து அதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பது என்பது அத்தியாவசியமாகிறது.

எவ்வாறெல்லாம் சேமிக்கலாம், எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்?

தொடரும்..

25 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 7

நேற்றைய பதிவின் எதிரொலியாக எனக்கு ஒரு தனிமடல் மின்னஞ்சல் வழியாக வந்தது. பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் அதன் சாராம்சத்தையும் அதற்குண்டான என்னுடைய பதிலையும் இங்கு கூறுகிறேன்.

மடலில் கூறியிருந்தது: 'உங்களுடைய பதிவின் நோக்கம் முழுவதும் ஏதோ பெண்கள்தான் ஓய்வுபெற்ற ஆண்களை சிரமத்திற்குள்ளாக்குவதுபோல் தொனிக்கிறது. ஆனால் உண்மையில் நடப்பது அதற்கு நேர் எதிர். தங்களை யாரும் பொருட்படுத்துவதில்லை என தாங்களாகவே கற்பனை செய்துக்கொண்டு தங்களுடைய சுடுசொற்கள் மூலம் குடும்பத்திலுள்ள அனைவரையும் மன அழுத்தத்திற்குள்ளாக்குவது பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்கள்தான்.'

என்னுடைய பதில்: என்னுடைய பதிவின் எந்த இடத்திலும் பெண்கள்தான் ஆண்களின் மன அழுத்தத்திற்கு காரணம் என எழுதியாக நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி என்றுதான் எழுதினேனே தவிர இதற்கு யார் காரணம் என்று எழுதவில்லை என்றே கருதுகிறேன். இருப்பினும் அப்படியொரு எண்ணத்தை என்னுடைய எழுத்து ஏற்படுத்தியிருக்குமானால் அதற்கு வருந்துகிறேன்.
இனி ஓய்வுபெற்றவர்கள் தங்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட மேலும் சில யோசனைகள்...

8. பேரக் குழந்தைகளை பராமரித்தல்: வயதான காலத்தில் ஆண்களை மீண்டும் ஒரு தந்தையின் நிலைக்கு உயர்த்த உதவுவது பேரக் குழந்தைகள் என்றால் மிகையாகாது. இளம் வயதில் ஆண்களில் பலராலும் தங்களுடைய குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை. இந்த குற்ற உணர்வு பல ஆண்களிடம் உண்டு, என்னையும் சேர்த்து. இளம் வயதில் பல ஆண்கள் தங்களுடைய உத்தியோக அந்தஸ்த்தையே மிகவும் முக்கியமானதாக கருதுகின்றனர். அலுவலகத்தில் கிடைக்கும் பதவி உயர்வு அளிக்கின்ற அற்ப மகிழ்ச்சியே அவர்களுக்கு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொன்றாக தோன்றுகிறது. அலுவலக பதவிகளின் பின்னால் ஓடிக் களைத்து திரும்பிப் பார்க்கும்போது அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகியிருப்பதையும் 'உன்னுடைய உதவி இனி எங்களுக்கு தேவையில்லை' என்கிற மனப்பான்மையுடன் தங்களை நோக்குவதையும் உணரமுடிகிறது. 'When I was desperately in need of your emotional support, you had not time for me Dad.' என்று என்னுடைய நண்பருடைய மகன் ஒருவர் எனக்கு முன்னாலேயே என்னுடைய தந்தையை கேட்டதை இத்தனை வருடங்கள் கழித்தும் என்னால் மறக்க முடியவில்லை. ஒரு ஆணால் தன்னுடைய அலுவலகத்தில் எந்த அளவுக்கு உயர முடியுமோ அந்த அளவுக்கு உயர்ந்தவர் என்னுடைய நண்பர். ஆனால் அவருடைய ஒரே மகன் கல்லூரியை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். 'ஏன் இப்படி செய்துவிட்டாய் மகனே?' என்று வேதனையுடன் என் நண்பர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில்தான் இது. உண்மைதான். என்னால் என்னுடைய இளம் வயதில் என்னுடைய அலுவலக பணியின் நிமித்தம் இரு மகள்களையும் விட்டு எட்டு வருட காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. வாரம் ஒருமுறை அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது கூட அவர்களுடைய படிப்பை குறித்து மட்டுமே நான் பேசுவதாகவும் அவர்களைப் பற்றி, அவர்களுடைய பிற தேவைகளைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ள நான் முயல்வதில்லை என்பார் என் மனைவி! பல ஆண்களும் இப்படித்தான். ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து தங்களுடைய குழந்தைகளுக்கு தங்களால் என்னவெல்லாம் செய்துதர முடியுமோ என்றுதான் சிந்திக்கின்றார்களே தவிர அவர்களுக்கு தங்களுடைய அருகாமை தேவைப்படுகிறதா என்பதைப்பற்றி சிந்திப்பதே இல்லை. பல குடும்பங்களில் குழந்தைகள் தங்களுடைய தாயை மட்டுமே சார்ந்திருப்பதன் காரணமும் இதுதான். முதிர்ந்த காலத்தில் தந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்க குழந்தைகள் முன்வராததற்கும் இதுதான் காரணம் என்கின்றனர் பல உளநல மருத்துவர்கள். இளம் வயதில் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்வால் அவதியுறும் பல ஆண்களுக்கும் அதிலிருந்து விடுபட இறைவன் அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புதான் பேரக் குழந்தைகள். தங்களுடைய குழந்தைகளுக்கு செய்ய இயலாமல்போன சேவைகளை பேரக்குழந்தைகளுக்கு செய்வதன் மூலம் மனதளவில் தங்களை விட்டு பிரிந்திருக்கும் மகன், மகளையும் கூட மீண்டும் தங்கள் வசம் ஈர்த்துக்கொள்ள முடியும் என்பதும் உண்மை.

9. செல்ல பிராணிகள்: நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை பேணுவதும் ஒரு நல்ல பொழுதுபோக்கு. குறிப்பாக பணியிலிருந்து ஒய்வுபெற்ற பின் வீட்டில் தனித்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுபவர்களுக்கு செல்லபிராணிகள் ஒரு நல்ல துணையாகவும் உள்ளன. பிராணிகள்தானே என கருதாமல் அவைகளை தங்களுடைய குழந்தைகள் போன்றே கருதுபவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். தங்களுடைய தனிமையின் பாரத்தை குறைக்க செல்ல பிராணிகள் மிகவும் உதவுகின்றன என்கின்றனர் இவர்கள். அலங்கார மீன் வளர்ப்பிலும் ஈடுபடலாம். ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கும் மீன்களை பார்த்துக்கொண்டிருப்பதும் மன அழுத்தத்தை குறைக்க வெகுவாக உதவுகின்றது என்கின்றன ஆய்வுகள்! இப்போதெல்லாம் குறிப்பிட்ட கட்டணத்திற்கு மாதம் ஒருமுறை நம் வீட்டுக்கே வந்து மீன் தொட்டியை கழுவி சுத்தம் செய்து, நீரை மாற்றவும் செய்கின்றனர். வாரம் ஒருமுறையோ அல்லது நமக்கு வேண்டும்போதெல்லாம் நம் வீட்டிற்கே வந்து செல்ல பிராணிகளை சுத்தம் செய்யவும் அவற்றை நம்முடைய தேவைகளுக்கேற்றவாறு பயிற்றுவிக்கவும் வாடகை ஏஜன்சிகள் பல உள்ளன.

10. பொதுசேவையில் ஈடுபடுதல்: பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள்தான் பொதுசேவையில் ஈடுபட வேண்டும் என்றில்லை. இன்று கணினி துறையில் பணியாற்றும் பல இளைஞர்கள் வார இறுதிகளில் பொதுசேவையில் ஈடுபடுவது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அவர்களால் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் மட்டுமே ஈடுபடுகிற விஷயத்தில் ஓய்வுபெற்றவர்கள் முழுநேர அல்லது பகுதிநேர அலுவலாக ஈடுபடுவதால் நேரமும் பயனுள்ள வகையில் செலவாகிறது மனதுக்கு நிறைவும் அமைதியும் கிடைக்கிறது. பொது சேவையை பெரிய அளவில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய வீட்டுக்கருகாமையிலுள்ள ரிஜிஸ்திரார் அலுவலகத்திற்கு சென்று அங்கு வருகிறவர்களுக்கு அரசாங்க படிவங்களை இலவசமாக நிறப்பித் தருவார். அரசு இலாக்காவிலிருந்து ஓய்வுபெற்ற வேறொரு நண்பர் வீட்டிலிருந்தவாறே அரசு இலாக்காக்களிலிருந்து கிடைக்கக் கூடிய பல்வேறு மான்யங்களை எவ்வாறு பெறுவது என்பதற்கு ஆலோசனை வழங்குவார், அதாவது எவ்வித கட்டணமும் இல்லாமல். இவ்வாறு எத்தனையோ வகையில் அவரவர்க்கு இயன்ற அளவுக்கு தினமும் ஒரு மணி நேரத்தையாவது இதற்கு ஒதுக்கலாம்.

இவ்வாறு தங்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட பல வழிகள் உள்ளன.

பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் அந்த மாறுபட்ட சூழலை சந்திக்க தங்களை எவ்வாறு உணர்வுபூர்வமாக தயாரித்துக்கொள்வது என்பதை பார்த்தோம்.

ஆனால் இத்தகைய தம்பதியர்களிடையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளின் மூலகாரணமே பொருளாதார ஸ்திரமின்மைதான். நேற்றுவரை மாதம் முதல் தேதியானால் முழு ஊதியம் வந்துக்கொண்டிருந்தபோதே பற்றாக்குறை பட்டியலை வாசித்துக்கொண்டிருந்த மனைவியை எப்படி சமாளிப்பது என்பதும் மிகவும் முக்கியமான பிரச்சினைதானே?

Organised Sector எனப்படும் அரசு மற்றும் அரசு சார பொது/தனியார் துறை நிறுவனங்களிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்...



தொடரும்...

24 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 6

மன அமைதிக்கு இசைக்கு நிகரான மருந்து வேறெதுவும் இல்லையென்றாலும் வெறுமனே இசையை கேட்டுக்கொண்டு அமர்வதும் அத்தனை எளிதல்ல. செவிகள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்க மனம் அதன் போக்கில் வலம் வர ஆரம்பிக்கும். அதுவும் கடந்த காலத்தில் நாம் அடைந்த தோல்விகளையே நினைவுக்கு கொண்டு வந்து சஞ்சலமடையச் செய்யும். இதுவும் இயற்கைதான். அலைபாயும் மனதை கட்டுப்படுத்த நினைப்பதில் அர்த்தமில்லை. யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கூட துவக்கத்தில் அலைபாயும் மனதை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் என்றுதான் கூறுகின்றனர். கண்களை மூடி மனதை ஒருநிலை படுத்துவது என்பது யோகாவில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே சாத்தியமாகிற ஒரு அதிசயம்!



4. பத்திரிகை, புத்தகங்கள் வாசித்தல்: ஆகவே மனதுக்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கையிலேயே கையில் ஒரு புத்தகமோ அல்லது வார சஞ்சிகையோ இருந்துவிட்டால் கட்டுக்கடங்காமல் அலைபாயும் மனதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். பணியில் இருந்த காலத்தில் அலுவலக பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் ஆழ்ந்துபோயிருப்பவர்களால் இசையை ரசிப்பதிலோ புத்தகம் வாசிப்பதிலோ நேரத்தை செலவழிக்க விருப்பம் இருந்தும் இயலாமல் போயிருக்கலாம். இவ்விரு இன்பத்தையும் ஒருசேர அனுபவிக்க கைகூடி வரும் காலத்தில் அதை அனுபவிக்க தடையேதும் இல்லையே. இந்த இசையைத்தான் கேட்க வேண்டும் இந்த புத்தகத்தைத்தான் அல்லது சஞ்சிகையைத்தான் வாசிக்க வேண்டும் என்றில்லை. பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் நான் செய்த முதல் வேலை சென்னையிலுள்ள ராஜ் வீடியோ விஷன் கடைக்கு சென்று பழைய பாடல்கள் மற்றும் கர்நாடக வாத்திய இசை ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளை வாங்கியதுதான். ஏனெனில் அங்குதான் பழைய சினிமா பாடல்கள் இப்போதும் கிடைக்கின்றன. அங்கிருந்து சென்னை திருவல்லிக்கேணி, சூளைமேடு, பழைய மூர்மார்க்கெட் பகுதிகளில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் ஏறி இறங்கி ஆங்கில நாவல்களை வாங்கினேன். 1980 மற்றும் 90களில் வெளிவந்த புத்தகங்கள் பலவும் இத்தகைய கடைகளில் பாதி விலைக்கு கிடைக்கின்றன. குமாஸ்தா மற்றும் கடைநிலை அதிகாரியாக பணியாற்றிய காலங்களில் எனக்கிருந்த ஆங்கில நாவல்கள் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள மட்டுமல்லாமல் பெருமளவு நேரத்தை செலவழிக்கவும் இவை எனக்கு இப்போது மிகவும் உதவுகின்றன. ஆனால் அந்த வயதில் ஒரே நாளில் முழுமூச்சாக, சில சமயங்களில் நள்ளிரவு வரை அமர்ந்து, ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிடுவேன். இப்போது அது சாத்தியமில்லை. சிறு, சிறு எழுத்துக்களை தொடர்ந்து படிக்க முடிவதில்லை என்பதால் தினம் காலையிலும் மாலையிலும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தை இதற்கென ஒதுக்குகிறேன்.



5. வீட்டிற்குள் ஆடக் கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுவது: இசையுடன் இணைத்து ரசிக்கக் கூடிய மற்றொரு பொழுதுபோக்கு Indoor Games எனப்படும் உள்ளரங்கவிளையாட்டுகள். இவற்றுள் பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களால் எளிதில் கற்றுக்கொண்டு விளையாடக் கூடிய விளையாட்டு சதுரங்கம். எனக்கு தெரிந்த வரை இதற்கு மட்டுமே நம்முடன் விளையாட வேறொருவர் வேண்டும் என்பதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்தவாறே இருவருடைய காய்களையும் நகர்த்தி விளையாட முடியும். நேரம் செல்வதே தெரியாமல் மணிக்கணக்கில் விளையாட முடிகிறது! இதில் நாட்டமில்லாதவர்கள் கேரம், சீட்டுக்கட்டு, ஏன் இந்திய சதுரங்கம் எனப்படும் பரமபதம் போன்ற விளையாட்டுகளிலும் நேரத்தை செலவழிக்கலாம். இதை படிப்பவர்களில் சிலர் என்ன இது சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறதே என நினைக்கலாம். 'When you become old you should return to your childhood stage' என்று எப்போதோ படித்த ஆங்கில வாக்கியம் நினைவுக்கு வருகிறது. உண்மைதான். வயதானவர்களும் குழந்தைகள்போல்தான் என்று நம் வீடுகளில் கூறுவதில்லையா? நாம் மாணவ பருவத்தில் எதையெல்லாம் செய்து நேரத்தை போக்கினோமோ முதிர்ந்த வயதிலும் அதே நிலைக்கு திரும்பிச் செல்லக் கூடியவர்களால் மட்டுமே எவ்வித மன அழுத்தத்திற்கும் உள்ளாகமல் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதில் இணைந்து ஈடுபடக் கூடிய மனப்பாங்கு கணவர்-மனைவி இருவருக்குமே இருக்குமானால் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் அமையக்கூடிய காலத்தை இனிமையானதொரு காலமாக செலவழிக்க மிகவும் ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



6. வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுவது: இதற்கு 'தான்' என்கிற அதிகார ஆடைகளை அல்லது வேஷங்களை களைந்து 'நாம்' என்கிற நிஜத்துக்கு இறங்குவது மிகவும் முக்கியம். 'ஆம்பிளைக்கு அடுக்களையில என்ன வேலை?' இது அந்தக் காலம். 'ஆம்பிளைக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?' இது இந்த காலம். சில தினங்களுக்கு முன்பு இந்து தினத்தாளில் வெளியான ஆங்கிலக் கட்டுரை ஒன்று இந்த தொனியை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பணியில் இருக்கும் இளம் கணவர்களும் கூட வீட்டு வேலைகளில் குறிப்பாக சமையலறையில் சம பங்கை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்கிறார் கட்டுரை ஆசிரியை. 'If the wife is attending to her baby the husband should not hesitate to stir the sambar!' என்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் 'husband should stir the boiling Sambar on the stove when the wife is attending a telephone call!' என்கிறது கட்டுரை. அதாவது மனைவி தன் தோழியுடன் தொலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் வேளையிலும் கணவர் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரை கிளறிவிடவேண்டுமாம்! இளம் கணவருக்கே இந்த நிலையென்றால் எந்த வேலையுமில்லாமல் அமர்ந்திருக்கும் ரிட்டையர்ட் ஆன கணவர் என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்! ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மனைவியும் பணிக்கு சென்று கணவருக்கு இணையாக ஊதியம் ஈட்டும் காலக்கட்டத்தில் இப்படி மனைவி கருதுவதில் தவறேதும் இல்லையென்றே தோன்றுகிறது. இந்த கட்டுரையின் இறுதி வாக்கியம்தான் முத்தாய்ப்பாக அமைகிறது. இளம் கணவர் ஒருவர் இவ்வாறு புலம்புகிறாராம். 'I was taught to be a good son, good father etc. but never a good husband!' ஒரு நல்ல கணவனாக இருக்க எப்படி பயிற்றுவிப்பது அல்லது யார் பயிற்றுவிப்பது? எனக்கென்னவோ நல்ல மகனாக இருக்க முடிந்த எந்த ஒரு ஆணாலும் ஒரு நல்ல கணவனாகவும் இருக்க முடியும் என்றே தோன்றுகிறது. தன்னுடைய தாயை நேசிக்கும் ஒரு ஆனால் மட்டுமே தன்னுடைய மனைவியையும் உண்மையாக நேசிக்க முடியும். மனைவிக்கு உதவுவதில் இளம் வயதிலிருந்தே மனதளவில் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு ஆணால் மட்டுமே தன்னுடைய முதிர்ந்த வயதிலும் எவ்வித பந்தாவும் இல்லாமல் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ முடியும் என்பதும் உண்மை. வீட்டு வேலைகளில் ஈடுபடுதால் ஓய்வு நேரத்தை பயனுடன் செலவழிக்க முடிகிறது என்பதுடன் நம்மை ஒரு இடைஞ்சலாக கருதுகிற மனைவியை அந்த எண்ணத்திலிருந்து மாற்றவும் முடிகிறதே என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
 
தொடரும்..

22 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 5

பணியிலிருந்து ஓய்வுபெறும் ஆண்களை வீட்டிலிருக்கும் மனைவியின் மற்றும் பணிக்கு செல்லும் மனைவியின் கணவர் என இருவிதமாக பிரிக்கலாம் என்று கூறினேன். இதற்கு காரணம் வீட்டிலிருக்கும் காலத்தை எவ்வித மன உளைச்சல்களும் இல்லாமல் செலவழிக்க உணர்வுபூர்வமாக தங்களை தயாரித்துக்கொள்ள வேண்டிய முறைகளிலும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

இவர்கள் இருவருள் வீட்டிலிருக்கும் மனைவியின் கணவருக்குத்தான் அதிக மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இத்தகையோர் அத்தகைய சூழலை தவிர்க்க தங்களை முன்கூட்டியே தயாரித்துக்கொள்ள வேண்டியது மிக, மிக அவசியம்!


இவர்களிலும் இருசாரார் உண்டு. அதிகம் பேசாத மனைவி மற்றும் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் மனைவி! இவர்களுள் பின்னவரை மனைவியாக கொண்டவர்க்குத்தான் அதிகம் முன் தயாரிப்பு தேவையாம்!

கணவரும் அதிகம் பேசும் சுபாவம் உடையவர் என்றால் அதிகம் பிரச்சினை எழ வாய்ப்பில்லையாம். மாறாக தான் உண்டு, தன் வேலையுண்டு என அமைதியான சுபாவம் உடைய கணவர் என்றால் அவருடைய மனைவியும் அதிகம் பேசாத கூச்ச சுபாவம் உடையவர் மனைவியாக இருந்துவிட்டால் பிழைத்தார். இல்லையென்றால்.....

மனைவி அமைவதென்றால் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள்!

மேலை நாடுகளில் சமீப காலங்களில் விவாகரத்து செய்யும் தம்பதிகளில் நாற்பது விழுக்காட்டிற்கு மேல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற தம்பதியர்கள்தாம் என கூறுகின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஏனாம்?

கணவன் இல்லாத சூழலில் சுதந்திரமாக நாள் முழுவதும் பொழுதை போக்கிய பெண்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற கணவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை முடக்குவதாக கருதுகின்றனராம். ஆகவே தங்களுடைய அமைதிக்கு பங்கம் விளைந்துவிட்டதாக கருதும் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனித்து வாழவே
விரும்புகின்றனர்.

ஆண்களோ ஓயாமல் பேசும் மனைவியரால் தங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்ற வாதத்தை முன்வைத்து விவாகரத்து கோருகின்றனராம். 'அதிகம் பேசும் மனைவி ஒழுகும் கூரைக்கு சமம்' என்று பைபிளே கூறுகிறது! ஒழுகும் கூரையின் அடியில் எப்படி நிம்மதியாக வாழ்வது?

ஆகவே பணியிலிருந்து ஓய்வுபெறுபவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரும் குறிப்பாக அவர்களுடைய வாழ்க்கை துணைவர்களும் (அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) தங்களை தயாரித்துக்கொள்வது அவசியமாகிறது.

இந்திய நடுத்தர வர்க்கத்தினரைப் பொருத்தவரை பொருளாதார பிரச்சினைகளை விடவும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளே இத்தகையோருடைய இல்லற வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. ஏனெனில் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் அரசுதுறை அல்லது அரசைச் சார்ந்த (மான்யம் பெறுகிற) துறைகளில் பணியாற்றுவதால் ஓய்வூதியம் கிடைத்துவிடுகிறது. மேலும் பெரும்பாலான தம்பதியர் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பே தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடுவதால் எஞ்சி நிற்கும் கணவன் - மனைவி என்ற இருநபர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் போதுமானதாகவே கருதப்படுகிறது.
ஓய்வூதியத்திற்கு தகுதியில்லாதவர்களுக்கும் - அதாவது அரசுத்துறை இலாக்கா,நிறுவனங்களைச் சாராதவர்கள் - ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெற சமீபகாலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டங்கள் கைகொடுக்கின்றன. இவற்றைப் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்.

ஆகவே பொருளாதார ரீதியான பிரச்சினைகளை தவிர்த்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துக்கொள்வதுதான் மிக அவசியம்.

முதலில் பணிக்கு செல்லாத மனைவியருடன் ஓய்வு காலத்தை எப்படி பிரச்சினைகள் இல்லாமல் அல்லது முடிந்த அளவுக்கு தவிர்த்து வாழ்வது என்பதை பார்க்கலாம்.

1. கணவன் தன்னுடைய பழைய அந்தஸ்த்திலிருந்து இறங்கிவருவது: பணியிலிருந்த காலத்தில் அலுவலகத்தில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்த முடியுமோ அவ்வளவு ஆதிக்கத்தை வீட்டிலும் செலுத்திவந்த ஆண்கள் ஓய்வுக்குப் பிறகு தங்களுடைய முந்தைய அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும். அதிகாரம் இல்லாதம் ஆதிக்கம் எத்தனை நாளுக்குத்தான் செல்லும்?

2. காலை நேர முன்னுரிமை: காலையில் எழுந்து காப்பி குடிப்பதிலிருந்து, தினத்தாள் படிப்பது, குளிப்பது என எல்லாவற்றிலும் தனக்குத்தான் முதல் உரிமை என்ற எண்ணத்தை விட்டுவிட்டு பணிக்கு செல்லும் மகன், மகள், மருமகள் ஆகியவர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டுக்கொடுக்க முன்வரலாம். காலையில் ஆறு மணிக்கே எழுந்துவிடும் பழக்கத்தை முடிந்தால் (அதாவது தனி படுக்கையறை வசதி உள்ளவர்கள்) சற்று தள்ளிப் போடலாம். அது இயலாத பட்சத்தில் மனைவியை தாஜா செய்து (அதிகாரம் செல்லாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஒரு கப் காப்பி வாங்கி குடித்துவிட்டு (என்னைப் போன்று சமையல் தெரிந்த பெரிசுகள் உறங்கும் மனைவியை எழுப்ப தேவையில்லை. தாங்களாகவே காப்பி தயாரித்துக் கொள்வது நல்லது!) வாக்கிங் செல்லலாம். வாக்கிங் செல்லும்போது கவனிக்க வேண்டியது. அதுவரை உடல் எடையை குறைக்க வேக வேகமாக நடந்திருக்கலாம். ஆனால் இப்போதைய தேவை நேரத்தை கடத்துவது. ஆகவே காலாற நடப்பதுதான் முக்கியம். வேக வேகமாக நடந்த காலத்தில் எதிரில் வருபவர்களுக்கு காலை வணக்கம் சொல்லக் கூட நேரம் இருந்திருக்காது. ஆனால் இப்போது நேரம் மிக அதிக அளவில் கையிலிருப்பதால் உங்களை கண்டுக்கொள்ளாமல் செல்பவரையும் தடுத்து நிறுத்தி காலை வணக்கம் சொல்லலாம். சுய அறிமுகம் செய்துக்கொள்ளலாம். அவரும் ஓய்வு பெற்றவர் என்றால் சாவகாசமாக நின்று அங்கலாய்ப்புகளை பகிர்ந்துக்கொள்ளலாம். நீங்கள் வீடு திரும்புவதற்குள் உங்களுடைய குடும்பத்தினர் தங்களுடைய தேவைகளை அநேகமாக பூர்த்திசெய்துக்கொண்டிருப்பார்கள். சலவை செய்ததுபோல் crisp ஆக இருக்கும் தினத்தாளை படித்துத்தான் பழக்கம். குடும்பத்திலுள்ளவர்களால் படித்து குதறப்பட்டு தொய்ந்துபோய் சிதறிக்கிடக்கும் தினத்தாளை எடுத்து முடிந்த அளவுக்கு நீவி சரிசெய்து படிக்கலாம். இதிலேயே குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். அதன் பிறகு குளியலறை காலியாக இருந்தால் குளித்துவிட்டு காலை உணவு மேசையில் ரெடியாக இருக்கும் பட்சத்தில்... இல்லையென்றால் 'உங்களுக்கு இப்ப என்ன அவசரம்.. வேலைக்குப் போறவங்க முதல்ல சாப்டுக்கட்டும்' என்கிற ஓசை வரும். வெளியில் கேட்காதவாறு பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும் சென்று படித்த தினத்தாளையே படிக்கலாம். இவை யாவும் துவக்கத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் சரியாகிவிடும்.

2. இசையை ரசிப்பது: பரபரப்பாக இருந்த காலத்தில் இசையை ரசிப்பதற்குக் கூட பொறுமை இருந்திருக்காது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் ஆனால் அதே சமயம் எவ்வித மன உளைச்சலுக்கும் ஆளாகமல் அமைதியாக இருக்க உதவும் அருமருந்து இசை! இசைய ரசிப்பதற்கு பெரிதாக ஞானம் எதுவும் தேவையில்லை. அது சாஸ்த்ரீக இசையாயிருந்தாலும் சரி, நாட்டுப்புற பாடல்களாக ஏன் திரை இசையாக இருந்தாலும் சரி... கேட்பதற்கு செவித்திறனும் ரசிப்பதற்கு ஆர்வமும் இருந்தாலே போதும். ஓய்வு பெற்றவர்களுடைய தேவை மன அமைதி, நேரம் கடத்துவது. அதற்கு இசையை விட்டால் சிறந்த மாற்று இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இதில் ஒரேயொரு சிக்கல். உங்களுடன் வீட்டில் இருப்பவர்களுடைய விருப்பு, வெறுப்பு. குறிப்பாக உங்களுடைய மனைவி. உங்களுடைய செவிகளில் தேனாக ஒழுகும் குன்னக்குடியின் வயலின் இசையும் கூட உங்களுடைய மனைவியின் காதில் நாராசமாக விழலாம். அல்லது அவருக்கு மிகவும் பிடித்த வாய்ப்பாட்டு கூட உங்களுடைய செவிகளில் அர்த்தமில்லாத ஓசையாக விழலாம். உங்களுடைய விருப்பத்திற்கு அவர்களை கொண்டு வர முடியாமல் போகும் பட்சத்தில் அவர்களுடைய விருப்பத்திற்கு உங்களை தயார் செய்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. வேறு வழியில்லாமல் நீங்கள் கேட்க துவங்கும் இசையும் கூட நாளடைவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இசையாகிப் போக வாய்ப்புண்டு. மனமிருந்தால் மார்க்கமுண்டே!



தொடரும்..