30 மார்ச் 2009

எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் தியதி முதல் நாட்டிலுள்ள எந்த ஏடிஎம்மிலும் எவ்வித கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம் என கேள்விப் பட்டிருப்பீர்கள். ஏற்கனவே இதைக் குறித்து ஒரு பதிவும் வந்துள்ளது. என்னுடைய என்னுலகம் வலைப்பூவிலும் நண்பர் ஒருவர் இதைக் குறித்து நீங்கள் ஒரு பதிவு எழுதுங்களேன் என கேட்டிருந்தார்.




இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த ஏற்பாட்டால் நாட்டிலுள்ள மிகப் பெரிய வங்கிகள் பெருத்த லாபம் அடைய வாய்ப்புள்ளது எனவும் நண்பர் ஒருவர் தன்னுடைய பதிவில் எழுதியிருந்தார்.



இது ஓரளவுக்கு உண்மைதான்.



இதை சற்று விரிவாக பார்ப்போம்.



வங்கி ஏடிஎம்களில் இருவகை Transactions (வர்த்தக பரிவர்த்தனைகள், கொடுக்கல், வாங்கல் என சொல்லலாம்) நடைபெறுகின்றன.



1. வழங்குபவர் பரிவர்த்தனை (Issuer Transaction): என்னுடைய வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்கும் ரொக்க பரிவர்த்தனை (Cash Transaction).



2. பெறுபவர் பரிவர்த்தனை (Acquirer Transaction): அதாவது மற்றொரு வங்கியின் வாடிக்கையாளர் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் வந்து பணம் எடுக்கும் ரொக்க பரிவர்த்தனை.



முதல் பரிவர்த்தனையில் என்னுடைய வங்கி ஏடிஎம் உரிமையாளர் வங்கியிடமிருந்து (The Bank which owns the ATM) கடன் பெறுவதற்கு ஒப்பாகும். It indirectly means that my bank borrows money from the Bank which owns the ATM. ஆகவே நான் அந்த வங்கிக்கு இத்தகைய பரிவர்த்தனைக்கு என குறிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.



இரண்டாவது பரிவர்த்தனையில் என்னுடைய வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கி கடன் பெறுகிறது. ஆகவே அந்த வங்கி என்னுடைய வங்கிக்கு குறிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.



இந்த கட்டணம் Inter-change fee என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டணத்தை வங்கிகள் நேரடியாக பெற்று/கொடுத்துக் கொள்வதில்லை. இந்த ஏடிஎம் அட்டைகள் வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் (The Company which manages these transactions through switching system)



இப்போது நாட்டிலுள்ள ஏடிஎம் அட்டைகள் விசா, மாஸ்டர், NFS (National Financial Switch), CashTree என்ற பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.



உதாரணத்திற்கு, என்னுடைய வங்கிக்கு மேலே குறிப்பிட்டுள்ள நான்கு நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தமசெய்துள்ளது. ஆகவே நாங்கள் வழங்கும் கடன் மற்றும் ஏடிஎம் அட்டைகளை இந்த இரண்டு நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளின் ஏடிஎம்களிலும் பயன்படுத்த முடியும். அதுபோன்றே இந்த இரண்டு நிறுவனங்களாலும் நிர்வகிக்கப்படும் கடன் மற்றும் ஏடிஎம் அட்டைகளைக் வழங்கியுள்ள எந்த வங்கியின் வாடிக்கையாளரும் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.



நான் மேலே குறிப்பிட்ட Inter-change feeஐ ஒரு வங்கியிலிருந்து (Issuer Bank) பெற்று மற்றொரு வங்கிக்கு (Acquirer Bank) வழங்கும் பணியை இந்த இரண்டு நிறுவனங்களும் செய்யும். உதாரணத்திற்கு உங்களிடமுள்ள ஏடிஎம் அட்டை விசா முத்திரையைக் கொண்டிருக்குமானால் குறிப்பிட்ட கட்டணத்தை விசா நிறுவனம் உங்களுடைய (Issuer ) வங்கியிடமிருந்து பெற்று தங்களுடைய கமிஷனைக் கழித்துக்கொண்டு (Service Charges) மீதமுள்ள தொகையை என்னுடைய (Acquirer) வங்கிக்கு வழங்கும். அதுபோன்றே மாஸ்டர், NFS போன்ற நிறுவனங்களும் செய்கின்றன.



தற்போது ஒவ்வொரு விசா அட்டையை பயன்படுத்தி எடுக்கப்படும் தொகைக்கும் ரூ.20/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்னுடைய வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படும் பட்சத்தில் என்னுடைய வங்கிக்கு இந்த ரூ.20/-ல் சுமார் ரூ.16/- கிடைக்கும். என்னுடைய வங்கி வாடிக்கையாளர் மற்றொரு வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பட்சத்தில் ஏடிஎம் உரிமையாளர் வங்கிக்கும் இதே தொகை கிடைக்கும்.



இப்போதும் கூட சில ICICI, HDFC போன்ற பெரிய தனியார் வங்கிகள் இந்த கட்டணத்தை தங்களுடைய வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பதில்லை. இதை ஒரு வாடிக்கையாளர்களை கவரும் சேவையாக செய்கின்றன. ஆனால் எதிர்வரும் ஏப்ரல் முதல் தியதியிலிருந்து எங்களைப் போன்ற வங்கிகளூம் கூட இந்த கட்டணத்தை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும்.



ஆனால் இந்த அட்டைகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுமைக்கு உட்படாத நிறுவனங்கள் என்பதால் அவை இப்போது போன்றே கட்டணத்தை வசூலிக்கத்தான் செய்யும். ஆகவே இந்த ஆணை வங்கிகளை மட்டுமே பாதிக்கும்.



பெரிய வங்கிகள் அதாவது மிக அதிக அளவில் ஏடிஎம் வைத்துள்ள வங்கிகளுக்கே இந்த புது நியதி சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. அவர்களுடைய Acquirer பரிவர்த்தனைகள் Issuer பரிவர்த்தனைகளை விட பண்மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இப்போதும் கூட எங்களுடைய வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளுடைய ஏடிஎம்மில் பணம் எடுப்பதுதான் அதிகம். கட்டணம் வசூலிக்கப்படும்போதே இந்த நிலை என்றால் எந்த வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம் ஏதும் இல்லை என்கிற நிலை வரும்போது என்னுடைய வங்கி ஏடிஎம்மை தேடி அலைய வேண்டிய தேவை இல்லையே? ஆகவே என்னுடைய வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்டண இழப்பு ஒருபுறம் இருக்க இதனால் வேறு சில பிரச்சினைகள், செலவினங்கள் எங்களைப் போன்ற சிறிய வங்கிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.



உதாரணத்திற்கு சென்னையில் என்னுடைய வங்கி ஏடிஎம்களில் ஒன்று HDFC ஏடிஎம்களில் ஒன்றின் அருகாமையில் உள்ளது. எங்களைப் போன்று பண்மடங்கு வாடிக்கையாளர்களைக் கொண்ட அந்த வங்கியின் ஏடிஎம் முன்பு எப்போதும் நீண்ட வரிசை காத்திருக்கும். குறிப்பாக மாதத்தின் முதல் வாரங்களில். என்னுடைய வங்கியின் ஏடிஎம் பல சமயங்களில் காலியாக இருக்கும். அருகிலுள்ள வங்கியின் ஏடிஎம் காலியாக இருந்தும் வசூலிக்கப்படும் கட்டணத்தை மனதில்கொண்டு வாடிக்கையாளர்கள் கால் கடுக்க தங்கள் ஏடிஎம் முன்பாகவே நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.



ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆணைப்படி ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய கணக்கிலிருந்து எந்த வங்கியின் ஏடிஎம் மூலமாக பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படமட்டாது என்பது தெரிய வரும்போது எந்த வாடிக்கையாளரும் நீண்ட வரிசையில் காத்திருக்க விரும்பமாட்டார் அல்லவா?



இதனால் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மிலும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுக்க வாய்ப்புண்டு. அதாவது என்னுடைய வங்கியின் Acquirer பரிவர்த்தனைகள் பண்மடங்காக வாய்ப்புண்டு. ஆனால் இதன் விளைவாக என்னுடைய வங்கியின் ஏடிஎம்மின் பராமரிப்பு செலவும் அதிகரிக்க வாய்ப்புண்டு. எப்படி? இப்போது என்னுடைய வங்கியின் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமே என்னுடைய வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அதாவது நாளொன்றுக்கு ஐம்பது வாடிக்கையாளர்கள். அவர்கள் கூட்டாக எடுக்கும் தொகை நாளொன்றுக்கு அதிகபட்சம் சுமார் ரூ.5.00 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் சுமார் 15 லட்சம் ரொக்கம் (Cash) வைக்க முடியுமெனில் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தொகையை Replenish (மீண்டும் நிரப்புதல்) செய்தால் போதும். ஆனால் ஏப்ரல் முதல் தியதியிலிருந்து இதே ஏடிஎம்மில் இருந்து மற்ற வங்கியின் வாடிக்கையாளரும் பணம் எடுக்க துவங்கினால் இதே எண்ணிக்கை 200ஐயும் தாண்ட வாய்ப்புண்டு. அந்த சூழலில் தினமும் அல்லாமல் ஒரே நாளில் இருமுறையும் கூட தொகையை நிரப்ப வேண்டியிருக்கும்! இந்த பணியை வேறு நிறுவனங்கள் செய்வதால் (outside agencies) அவர்கள் கூடுதல் Service Charges வசூலிப்பார்கள். இது ஒரு பெரிய தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.



எப்படியோ, வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆணை ஒரு வரப்பிரசாதம்தான்.



************

24 மார்ச் 2009

தேர்தல் களம் - 2 விஜயகாந்தின் முடிவு!

என்னுடைய முந்தைய பதிவுக்குப் பிறகு கேப்டன் தன்னுடைய முடிவை சூசகமாக ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துவிட்டார்.

இங்குள்ள கட்சிகளுடன் அல்லாமல் கடவுளுடன் கூட்டணி அமைத்துள்ளாராம். ஆனாலும் அதை பகிரங்கமாக 26ம் தேதிதான் வெளியிடுவாராம். அதென்ன அந்த தியதில் விசேஷமோ தெரியவில்லை!

அவரைப் பற்றி அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. யானைக்கு பலம் தும்பிக்கையில் என்பதுபோல இவருடைய பலம் நம்பிக்கையில்தான். ஆனால் அதுவே அதீத நம்பிக்கையாகும்போது முட்டாள்தனத்தின் எல்லையைத் தொட்டுவிடுகிறது.

கடந்த சட்டசபை தேர்தல்களில் இவர் பெற்ற வாக்குகள் அஇஅதிமுகவுக்கு கிடைக்கவிருந்த வாக்குகள் என்றும் இவரால்தான் அந்த கட்சி பல தொகுதிகளிலும் தோற்றது என்றன பல நாளிதழ்கள். இப்போதும் அதே போல் நடந்தால் திமுகவுக்கு லாபம். ஆனால் இவருடைய கட்சி மீண்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறப்போவதில்லை என்பது நிச்சயம்.

பன்ருட்டியார் போன்ற அனுபவம் மிக்க தலைவர்கள் அவருடன் இருந்தும் அவரால் இப்படியொரு முடிவை எப்படி எடுக்க முடிந்தது என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அடுத்தது பாமக.

விஜயகாந்தின் முடிவு அவரை திமுக கூட்டணிக்கு திருப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திமுக கூட்டணியில் இணைந்தால் கூட்டணிக்கு லாபமோ இல்லையோ அவருடைய கட்சிக்கு நிச்சயம் லாபமாகத்தான் இருக்கும். தங்கபாலு என்னதான் பாமக இப்போதும் எங்கள் கூட்டணியில்தான் என்றாலும் மருத்துவர் ஐயா இப்போது விரும்புவதெல்லாம் மு.கவிடமிருந்து பேருக்கு ஒரு அழைப்பு. ஆனால் அவர் விடுவதாக தெரியவில்லை.

கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றி விவரங்கள் கீழே:




பாமக திமுக கூட்டணியில் தொடர்வதை அஇஅதிமுக விரும்பவில்லை என்றாலும் மேடமும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள தயங்குகிறார். கேப்டனுக்கு செல்லும் வாக்குகளை பாமகவுக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் சில தொகுதிகளிலாவது சரிகட்ட முடியும். ஆனால் அதை வெளிப்படையாக கூறினால் மருத்துவர் தன் சுயரூபத்தை காட்டுவாரோ என்கிற அச்சம். இதே அச்சத்தில்தான் மு.கவும்.

'இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா' என்ற கவுண்டமனியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

21 மார்ச் 2009

தேர்தல் களம் 1 -கூட்டணி சர்க்கஸ்

நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் தியதிகள் அறிவிக்கப்பட்டு இரு வாரங்கள் ஆகியும் எந்த அரசியல் கட்சியாலும் தங்களுடைய முழு வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிட முடியவில்லை.

எந்த கட்சியாலும் - தேசிய அளவிலும் சரி மாநிலங்கள் அளவிலும் சரி - தனித்து முடிவெடுக்க முடியாத சூழல் நிலுவுவதே இதற்கு முக்கிய காரணம்..

தேசிய கட்சிகளுள் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் இன்று பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் தயவை நாடி நிற்க வேண்டுய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவும் இதே நிலையில்தான்.

கூட்டணி அரசியல்.



கூட்டணி யுக்தி முதன் முதலாக 1977ல் அதாவது இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலை 2 (Emergency) முடிவுக்கு வந்தவுடன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்குடன் எதிர்க்கடசிகள் ஜனதா கட்சியை தோற்றுவித்து மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து தோன்றியது எனலாம். ஆனால் உட்கட்சி பூசலால் துவக்க முதலே அதாவது பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதிலிருந்து ஏற்பட்ட குழப்பம் இரண்டே ஆண்டுகளில் சரண்சிங் அவர்களின் கைங்கரியத்தால் கவிழ்ந்தது.

அதன்பிறகு 1991ல் நரசிம்மராவ் தலைமையில் அமைக்கப்பட்ட சிறுபான்மை காங்கிரஸ் கூட்டணி அரசு 1998ல் பிஜேபி தலைமையில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் அல்லாத அரசுகள் மட்டுமே தொடர்ந்து ஐந்தாண்டு காலம் ஆட்சி அமைக்க முடிந்தன.

கடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடிந்தாலும் அது பல மாநில கட்சிகளின் தயவால் மட்டுமே சாத்தியமானது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 145 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த லல்லுவிலிருந்து (24 இடங்கள்), கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஷிபு சோரன் (5 இடங்கள்) வரை அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டியிருந்த பரிதாப சூழலில் இருந்ததை மறக்கமுடியாது, போறாததற்கு குறை சொல்லியே அரசியல் நடத்தும் இடது சாரி கட்சிகள் வேறு. நம்முடைய திமுக,பாமக கட்சிகள் குறிப்பாக ஐயாவின் புதல்வர் பிரதமருக்கு அவ்வப்போது கொடுத்து வந்த குடைச்சலை மறக்க முடியுமா?

ஐந்தாண்டு காலம் இவர்களை கட்டி மேய்த்ததே காங்கிரசுக்கு கிடைத்த குறிப்பாக சொந்த கட்சியிலும் செல்வாக்கில்லாத பிரதமருக்கு பெரிய வெற்றி என்றால் மிகையாகாது. ஆனால் இப்போது அதே காங்கிரஸ் பீஹாரிலும் உ.பியிலும் ஜார்கண்ட்டிலும் படும் அவமானத்தைப் பார்த்தால் இனியும் இந்த கேடுகெட்ட கூட்டணி முறைக்கு காங்கிரஸ் இறங்கி வர வேண்டுமா என்றே கேட்க தோன்றுகிறது.

தமிழகத்துக்கு வருவோம்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியிலும் சிக்கல்கள். கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த இடது சாரிகள் மற்றும் மதிமுக இப்போது எதிர் அணியில். பாமக எங்கு சேர்ந்தால் வெற்றி என்பதைக் கணிக்க முடியாமல் திண்டாடுகிறது. சில மாதங்கள் முன்புவரை தனித்தே நிற்பேன் என மார்தட்டி வந்த கேப்டனுக்கு திடீர் என ஒரு தடுமாற்றம். விடுதலை சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து வெளியேற்ற கலைஞர் தயாராயில்லை. இதில் காங்கிரசுக்கு வருத்தம். காங்கிரசுக்கு கேப்டன் வேண்டும் ஆனால் ஐயா வேண்டாம். அம்மாவுக்கு ஐயா வேண்டும். ஆனால் அவராக அழைக்க மாட்டார். கலைஞருக்கு கேப்டனும் வேண்டும், ஐயாவும் வேண்டும். ஆனால் பகிரங்கமாக அழைப்பு விடுக்க மாட்டார்.

இப்படி ஈகோவில் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.

இதற்கு என்னதான் முடிவு? எப்போதுதான் இவர்கள் முடிவுக்கு வருவார்கள்?

சரி. இவர்கள் எத்தகைய முடிவுக்கு வரவேண்டும்?

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து எதிர்வரும் தேர்தலை கணிப்பது மிகவும் கடினம். கடந்த தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 இடங்கள் மற்றும் புதுவையிலுள்ள ஒரு இடம் ஆக 40 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அது மேடத்திற்கு எதிராக ஏற்பட்ட அலைதான் முக்கிய காரணம். ஆனால் இந்த தேர்தலில் அப்படியேதும் அலையடிப்பதாக தெரியவில்லை.

கலைஞரின் ஆட்சியில் ஏற்பட்ட சில தவறுகளாலும் அவருடைய குடும்ப அரசியல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெறுப்பாலும் அவருடைய கட்சியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் தொகுதி பங்கீட்டிலும் வேட்பாளரை தெரிவு செய்வதிலுமே தெளிவு இல்லாத சூழலில் போட்டியிடும் அனைத்து இடங்களையும் கைப்பற்றுவது என்பது நடவாத விஷயம். மேலும் கேப்டனும் தனித்து நின்று பாமகவும் மேடத்துடன் இணைந்துவிட்டால் திமுக கூட்டணிக்கு 50 விழுக்காடு இடங்களில் வெற்றிகிடைத்தாலே அதிகபட்சம்தான்.

ஆகவே கலைஞர் சுயகவுரவத்தை விட்டுவிட்டு கேப்டனுக்கு முக்கியத்துவம் அளித்து கூட்டணிக்கு அழைக்க வேண்டும். இரண்டாவது, காங்கிரசுடன் சுமுகமான முறையில் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் மதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு அளித்த எட்டு தொகுதிகளையும் கேப்டனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். பாமக அவர்களாக வந்தால் தயங்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் வராத பட்சத்தில் திமுகவும் காங்கிரசும் அவர்களுடைய தொகுதிகளை சமமாக பகிர்ந்துக்கொள்ளலாம்.

கேப்டனும் தன்னால் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு திமுகவின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய நோக்கம் அடுத்த சட்டமன்ற தேர்தல்தான் என்றால் வெற்றிவாய்ப்புள்ள திமுக கூட்டணியில் இப்போது இணைவதில் தவறில்லை. இல்லையெனில் வாக்குகளை பிரித்து 'அம்மா'வை வெற்றிபெற செய்துவிட்ட பழிக்கு அவர் ஆளாக வேண்டிவரும். 'அம்மா' இம்முறை வெற்றிபெற்றுவிட்டால் கேப்டன் அடுத்த சட்டமன்ற தேர்தலை மறந்துவிடவேண்டியதுதான்.

**********

19 மார்ச் 2009

வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதில் தாமதம்!

மேற்கூறிய தலைப்பில் என்வழி எழுதிய பதிவுக்கு ஒரு வங்கி அதிகாரி என்ற முறையில் சில உண்மைகளை எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

இன்றைய சூழலில் நாட்டிலுள்ள பல வங்கிகளும், அவை அரசு வங்கிகளாயினும், தனியார் வங்கிகளாயினும் சரி, வீட்டுக்கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன என்பது உண்மைதான்.

அதற்கு பல காரணங்கள் உள்ளன.

அமெரிக்காவில் லீமென் ப்ரதர்ஸ் மற்றும் பல பெரிய சர்வதேச வங்கிகள், நிதிநிறுவனங்கள் ஆகியவற்றின் சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இந்தியாவையும் பாதித்துள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை.

இது நாட்டிலுள்ள அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதை
 நாம் கண்கூடாக காண்கிறோம். அதில் கட்டுமானத் துறையும் ஒன்று. இன்று நாட்டில் மிகப்பெரிய அளவில் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களும் நிதிபற்றாக்குறை காரணமாக முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக வீடு கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடந்த இரு வருடங்களில் பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் துவங்கிய பெரும்பாலான கட்டுமானப்பணிகள் பலவும் நிறைவுபெறாமல் நின்று போயுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மெட்ரோ நகரங்கள் எனப்படும் மும்பை, கொல்கொத்தா, தில்லி, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களிலும் இதே அவல நிலைதான். இத்தகைய கட்டுமானப்பணிகளில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களைக் காட்டிலும் பலமடங்கு தொகையை முடக்கிவிட்டு திணறிக்கொண்டிருக்கின்றன வங்கிகள். இவற்றில் முடக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான கடன் தொகை வாராக் கடனாகிவிடக் கூடிய சூழல் இப்போது. வருகின்ற 31.3.09க்குள் இக்கடன்களை சீர்திருத்தி அமைக்க முடியாத சூழல் ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட வங்கிகள் பலவற்றின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் பரிதாபமாக இருக்கும்!

கடந்த இரு ஆண்டுகளாகவே தொழில்துறை எதிர்பார்த்த அளவு செயல்படாததால் அவற்றிற்கு கடன் வழங்குவதில் தயக்கம் காட்டி வந்த வங்கிகள் தங்களிடமிருந்த உபரி தொகையில் பெரும் விகிதத்தை வீட்டு கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருந்தது. ஆனால் இப்போது அந்தத் துறையும் முடங்கிப் போய் தாங்கள் இதுவரை வழங்கியுள்ள கடனையே வசூலிக்க முடியாத சூழலில் மேலும் புதிய கடன்களை வழங்குவதில் தயக்கம் காட்டுவது இயற்கைதானே.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தங்களுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் நிதியமைச்சர் அரசு வங்கிகளை நிர்பந்தித்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வைத்தாலும் வங்கி அதிகாரிகள் புதிய கடன் வழங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கும் காரணம் உண்டு. இப்போது குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தை தொடர்ந்து அதே நிலையில் கடைபிடிப்பது என்பது சாத்தியமல்ல. பொதுத்தேர்தல் நடந்து முடியும் வரை வேண்டுமானால் அரசு வங்கிகள் இதை தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் அதன் பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வட்டி விகிதம் நிச்சயம் உயரும்.

கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மட்டுமே காரணமில்லை என்பதும் உண்மை. இத்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணம். இப்போதெல்லாம் பல நிறுவனங்களும் தங்களுடைய நிதிநிலைமைக்கு ஏற்றாற்போல் ஓரிரு Projectஉகளுடன் திருப்தியடைவதில்லை. வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறதே என்ற நினைப்பில் ஒரே நேரத்தில் ஐந்தாறு இடங்களில் கட்டுமான வேலைகளை துவங்கிவிட்டு, பிறகு கடனும் கிடைக்காமல் குடியிருப்புகளை விற்கவும் முடியாமல் திட்டங்களை கைவிடுவது அல்லது காலந்தாழ்த்துவது. இதுதான் இன்றைய தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.

I.T. துறை கொடிகட்டிப் பறந்த காலத்தில் எத்தனை குடியிருப்புகளைக் கொண்ட திட்டமானாலும் அனைத்து குடியிருப்புகளையும் விற்று நுகர்வோருடைய முன்தொகயில் திட்டங்களை நிறைவுசெய்து வந்த பல நிறுவனங்கள் இப்போது மொத்த குடியிருப்புகளில் பத்து விழுக்காடு குடியிருப்புகளையும் விற்க முடியாமல் திண்டாடுகின்றன. ஒன்று அல்லது இரண்டும் திட்டங்கள் போதும் என்ற முடிவுடன் இயங்கும் நிறுவனங்களால் மட்டுமே இன்றைய சூழலில் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் எந்த சூழலிலும் கணிசமான தொகையை கையிருப்பாக வைத்திருக்கும் நிறுவனங்களால் மட்டுமே வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்காத சூழலிலும் தொடர்ந்து இயங்கி வர முடிகிறது.

ஆகவே சொந்த வீடு ஒன்றை வாங்குவதே தங்களுடைய நெடுநாள் கனவு என கருதுபவர்களுக்கு நான் கூற விழைவது.

1. வங்கிக் கடன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்களுடைய சேமிப்பிலிருந்தோ அல்லது நகைகளை அடகு வைத்தோ அல்லது குறுகிய கால கடன்களை வங்கிகளல்லாத நிதிநிறுவங்களிலிருந்து பெற்றோ வீட்டு மனைகளை வாங்க முயலாதீர்கள். அடுத்த ஆறு மாத காலத்தில் வங்கிகள் கடன் வழங்கும் சூழலில் பெரிதாக மாற்றம் ஏதும் வரப்போவதில்லை.

2. புதிதாக துவக்கப்பட்டும் கட்டுமான திட்டங்களில் குடியிருப்புகளை முன்தொகை கொடுத்து (அது எத்தனை சிறிய தொகையாயிருந்தாலும்) முன்பதிவு செய்யாதீர்கள். அடுத்த ஓராண்டு காலத்திற்கு அந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற வாய்ப்பில்லை.

3. கடந்த ஆறு மாதகாலத்தில் துவக்கப்பட்ட கட்டுமான திட்டங்களில் முன்பதிவு செய்திருந்தால் அதில் மேலும் தொகையை முடக்காதீர்கள்.

4. வங்கிக்கடன் எளிதில் கிடைத்தாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு வீட்டுக் கடன் பெறுவது புத்திசாலித்தனமல்ல! அதுவும் Floating Rate கடன்களை கண்டிப்பாக வாங்கலாகாது!

'சந்தோஷமாக கடன் வாங்குங்க' என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய நானே இதை சொல்வது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதுதான் இன்றைய நிலை.

வீடுகட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடைய வருமானத்தில் ஒரு பெரும் விழுக்காட்டை முடக்கிவிட்டு திகைக்கும் நண்பர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால் இந்த எச்சரிக்கை!

***********

18 மார்ச் 2009

தேர்தல் கலாட்டா - 3

கலைஞர் காட்டுல மழை!

கோபாலபுரம் வீடு.

கலைஞரின் சக்கர நாற்காலியை சுற்றிலும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.

ஆற்காட்டார்: எப்படி தலைவரே திடீர்னு ரெண்டு பேரும் மனச மாத்திக்கிட்டாங்க?

மு.க.: (பதிலளிக்காமல் புன்னகையுடன் தன் வலது கை மாறனை பார்க்கிறார்) எல்லாம் உன் ப்ளான் தான?

(மாறன் பதிலளிக்காமல் ஒரு மர்ம புன்னகையை உதிர்க்க விஷயம் தெரிந்த ஸ்டாலினைத் தவிர மற்றவர்கள் கலைஞரை குழப்பத்துடன் பார்க்கின்றனர்.)

அன்பழகன்: என்ன தலைவரே சொல்றீங்க?

மாறன்: அது ஒன்னுமில்லை சார். தலைவர் சஜஸ்ட் பண்ணாமாதிரி நேத்து ரெண்டு, மூனு ஃபோன் கால் பண்ணேன். அதனோட பலந்தான் இதுன்னு நினைக்கேன். ஷ்யூரா சொல்ல முடியாது.

ஆற்: டாக்டர் ஐயாகிட்டருந்து இத எதிர்பார்த்ததுதான். ஆனா கேப்டனோட ஸ்டாண்ட்தான் புதுரா இருக்கு.

கலைஞர் (புன்னகையுடன் மாறனை நோக்கி கண்சாடை செய்கிறார்): யார், யார எப்படி டீல் பண்ணணுங்கற வித்தைய இந்த காலத்து பசங்கதான் நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க. நம்மள மாதிரி ஆளுங்கதான் கவுரத்த புடிச்சிக்கிட்டு தொங்கறோம். (மாறனை பார்க்கிறா) என்னப்பா நா சொல்றது சரிதானே?

மாறன்: தெரியலைய்யா, ஏதோ எல்லா இடத்துலயும் நண்பர்கள் இருக்கறதால ஈசியா முடிஞ்சிருச்சி...

(ஆற்காட்டார் பொறாமையுடன் மாறனைப் பார்க்கிறார். 'இந்த பயல ஒழிச்சிக் கட்டலாம்னு பாத்தா முடியமாட்டேங்குதே. மறுபடியும், மறுபடியும் மொளச்சி வந்துர்றானே. ஊர்ல இருக்கற கம்பெனிங்களையெல்லாம் இங்க கூட்டி வந்து பவர் ப்ராப்ளத்த உண்டாக்கி நம்ம தலையையே உருட்ட பார்த்தான். இப்ப ஊர்ல இருக்கற ஆளுங்களையெல்லாம் கூட்டணியில கொண்டுவந்து... புதுசா என்ன ப்ராப்ளத்த கொண்டு வரப்போறானோ...')

பேராசிரியர்: (மாறனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பிடிக்கவில்லை என்றாலும் அதை வெளிக்காட்டாமல்) இவங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தர, ஒருத்தர கட்டோட பிடிக்காதே எப்படி தலைவரே இவங்கள வச்சிக்கிட்டு பிரச்சாரம் பண்றது?

ஆற்காட்டார்: பேராசிரியர் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. சீட் அலாட்மெண்ட்டுலயும் பிரச்சினை பண்ணுவாங்க. நாற்பது இடத்தையும் புடிச்சிருவோம்னுல்ல கேப்டன் சொல்லிக்கிட்டிருந்தாரு நேத்து வரைக்கும்...

கலைஞர்: (புன்னகை மாறாமல் ஆற்காட்டாரைப் பார்க்கிறார்) உன் சங்கடம் புரியுதுய்யா. ஒன் கோட்டாவுல கைய வச்சிருவேனோன்னுதான பயம்? பயப்படாதே. போன தரம் வைகோவுக்கும் கம்யூனிஸ்டுங்களுக்கும் நாலு, நாலு குடுத்தோம். டாக்டர் ஐயாவுக்கு அஞ்சி. மொத்தம் பதிமூனு. அதுல பாதிய நாம எடுத்துக்குவோம். மீதிய புதுசா வந்தவங்களுக்குன்னு வச்சிருவோம். இருந்தாலும் நானா போயி டாக்டர் ஐயாகிட்ட பேசப் போறதில்லை. கேப்டன் கிட்டயும் அப்படித்தான். ரெண்டு, மூனு நாளைக்கி நா ஒன்னுமே ரியாக்ட் பண்ணப் போறதில்லை. மேலுக்கு சரியில்லைன்னு எல்லா ப்ரோக்ராமையும் கேன்சல் பண்ணிற சொல்லிட்டேன். தங்கபாலுவே இத டீல் பண்ணிக்கட்டும். (மாறனைப் பார்த்தவாறு) இதுவும் இவன் சொன்னதுதான்.

(ஆற்காட்டாருக்கு உள்ளூர கொதிக்கிறது. இருந்தும் வாய்மூடி மவுனியாக அமர்ந்திருந்தார். இந்த முடிவில் தளபதிக்கும் உடன்பாடுதான் என்றாலும் இந்த விஷயத்தில் தலைவர் மாறனை முழுவதுமாக சார்ந்திருப்பதில் சற்று மனவருத்தம் இருந்ததை அவர் தலைவரைப் பார்த்த பார்வையிலிருந்தே தெரிகிறது. பேராசிரியர் லேசான புன்னகையுடன் அமர்ந்திருந்தார் எப்போதும் போல. )

தொடரும்..

லோக்சபாவில் அத்வானியின் தீர்க்கதரிசனம்!

கடந்த ஆண்டு மே மாதம் 5ம் நாள் எதிர்கட்சித் தலைவர் அத்வானி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாடுகையில் ஆளுங்கட்சி தலைவ ப்ரனாப் அவர்களை 'மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே' என தவறாக அழைத்துவிட்டு தன்னை திருத்திக்கொள்ள முயல்கையில் நகைச்சுவை குறுக்கீடுகளுக்கு பெயர்போன சபாநாயகர் குறுக்கிட்டு 'திரு அத்வானி அவர்கள் ஆளுங்கட்சித் தலைவராக வரப்போவதை சூசகமாக தெரிவிக்கிறார் போலிருக்கிறது' என வேடிக்கையாக சொல்ல சபையே சிரிப்பொலியால் அதிர்ந்ததாம்! அது தீர்க்கதரிசனமாக மாறாமல் இருந்தால் சரி!!

17 மார்ச் 2009

தேர்தல் கலாட்டா - 2

ஐயாவின் மன(தடு)மாற்றம்.



அன்றைய தினத்தாளில் வெளியாகியிருந்த கேப்டனின் பேட்டி ஐயாவின் மேசையில் விரிந்து கிடக்கிறது. அருகில் புதல்வர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள்.

ஐயாவின் புதல்வர் (கோபத்துடன்): இத எதிர்பார்த்துத்தான் இப்ப இருக்கற கூட்டணியிலயே இருக்கலாம்னு நா சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க கேட்டாத்தான?

ஐயா: இவன் இப்படியொரு முடிவுக்கு வருவான்னு யார்யா எதிர்பார்த்தா? கூத்தாடி பயலுக பண்ற கூத்த தாங்க முடியல. இவன் என்னமோ இலங்கை தமிழர்களுக்காக எலக்ஷனையே பாய்க்காட் பண்ணணும்னு சொல்லிக்கிட்டிருந்தான். இப்ப எதுக்கு பல்ட்டி அடிக்கான்?

க.நிர் (தயக்கத்துடன்): எல்லாம் காசுக்காத்தான்யா.

புதல்வர் (எரிச்சலுடன்): என்ன சொல்றீங்க? நாம மட்டும் என்ன?

க.நிர்:அதில்ல தம்பி.. அந்த பயலுக்கு எப்படியும் ஒரு சீட்டும் கிடைக்க போறதில்ல. இருந்தாலும் போன அசெம்ப்ளி எலக்ஷன்ல கொஞ்சம் ஜாஸ்தி பர்சண்டேஜ் ஓட் கிடைச்சிருச்சில்ல? அத வச்சி பேரம் பேசி மத்தியிலருக்கற அம்மா கிட்டருந்த ஒரு நூறு ருபாய கறந்துரலாம்னுதான். அடுத்த அசெம்ப்ளி எலக்ஷனுக்கு யூஸ் பண்ணிக்கிறலாம்லே. அதான்.

புதல்வர்: (எரிச்சலுடன்) என்னது நூறு ரூபாயா? என்னங்க சொல்றீங்க?

க.நிர் (தனக்குள்... ஆமா பால் குடிக்கற புள்ள.. ஒன்னும் தெரியாது!): அதான் தம்பி பெரீய நூறு, ஏழு சைபர்.

(ஐயா சிரிக்கிறார். புதல்வர் எரிந்து விழுகிறார்) அதை கோடின்னுதான் சொல்லுமேய்யா. இங்கன யார் இருக்கா?

க.நிர். (சுற்றிலும் பார்க்கிறார்): சொல்ல முடியாது தம்பி. அந்த மதுரக்கார தம்பி ஆளுங்க எங்கனயாச்சும் மைக்க வச்சிருந்தாலும் வச்சிருப்பாய்ங்க.

(ஐயா வாய்விட்டு சிரிக்கிறார்) சரியான ஆளுய்யா நீ. நா எதையாச்சிம் குத்தம் சொல்லணுமேன்னு சொன்னத போயி நம்பிக்கிட்டு. நம்ம கோட்டைக்குள்ள எவனாச்சும் நுழைஞ்சிர முடியுமா என்ன? (சீரியசாகிறார். தன் புதல்வரைப் பார்த்து) இப்ப சொல்லுய்யா. நீ என்னதான் சொல்ல வரே.

புதல்வர்.: இங்க பாருங்கய்யா. மத்தியில சோனியா மேடம் ஆட்சிதான். அப்படித்தான் ராவுலருந்து (RAW) ஆரம்பிச்சி சிபிஐ ஏன் எஃப்.பி.ஐ வரைக்கும் சொல்றாய்ங்க. எனக்கு இன்னும் அஞ்சி வருசம் மினிஸ்ட்ரியில இருக்கணும். நா செய்ய வேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கு. அதனால இங்க இருக்கற மேடத்தோட சேரலாம்ங்கற என்னத்த விட்டுருங்க.

ஐயா தன் கட்சி நிர்வாகிகளூள் மூத்தவரைப் (சுருட்டை முடி கரு,கரு நிறம்)பார்க்கிறார். அவரும் தலையை அசைக்கிறார்.)

ஐயா: சரிய்யா. நீ சொல்றது சரின்னே வச்சிக்குவம். இப்ப கலைஞர் இருக்கற மூடுல நாமளாத்தான் போவேண்டியிருக்கும். அது நல்லாருக்குமா?

புதல்வர் (எரிச்சலுடன்): ஏன் போனா என்ன? புள்ளைங்களுக்காக இத கூட நீங்க செய்யக் கூடாதா?

ஐயா: அது எப்படிய்யா? அஞ்சாறு மாசமா அவர போட்டு கொட, கொடன்னு கொடஞ்சிட்டு.. இப்ப எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு போயி நிப்பேன்.

புதல்வர்: அதான் கலைஞர ஆஸ்பத்திரியில போயி பாத்தீங்கல்லே? அப்பவே சூசகமா சொல்லிட்டு வந்துருக்காம்லே?

(ஐயா சங்கடத்துடன் தன் நிர்வாகியை பார்க்கிறார். இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்ற தோரனையில்.. சிறிது நேரம் ச்ங்கடத்துடனான மவுனம் அந்த அறையில்..)

புதல்வர்: அப்ப ஒன்னு பண்ணுங்க.

ஐயா (ஆர்வத்துடன்): சொல்லுய்யா.

புதல்வர்: எலக்ஷன் கோலிஷன் டிசைட் பண்றதுக்கு ஒரு கமிட்டி போடுங்க, என் தலைமையில நா சொல்ற ஆளுங்க வச்சி... நா போயி கலைஞர பாத்து பேசறேன். (சுருட்டை முடிக்காரரை காட்டி) இவர்லாம் கூட வரணும்னு இல்லை. என் ஆளுங்கள கூட்டிக்கிட்டு போறேன்.

ஐயா (சோகத்துடன்): அதாவது என்னைய ஒதுங்கிக்கன்னு சொல்றே? அதானய்யா.. அத தெளிவாத்தான் சொல்லிறேன்.

புதல்வர்: அத நீங்களே புரிஞ்சிக்கிட்டா சரி.

க.நிர்: தம்பி நீங்க இப்படி பேசறது நல்லால்லை. ஒங்களுக்குன்னு ஒரு எதிர்காலத்த உண்டாக்கி குடுத்தவரே ஐயாதான்.

புதல்வர் (எழுந்து நிற்கிறார்): எனக்கு ஒங்க அட்வைஸ்லாம் தேவையில்லீங்க. எனக்கு மினிஸ்ட்ரியில செஞ்சி முடிக்கறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. ஒலகம் முழுசும் சிகரெட், ட்ரிங்க்ஸ் எல்லாத்தையும் ஒழிக்கணும். இன்னும் இதுமாதிரி ஐடியா நிறைய இருக்கு. எனக்கு அதான் முக்கியம். ஒன்னுத்துக்கும் ஒதவாத ஒங்க ஈகோ இல்லை. இது எங்க ஜெனரேஷன் டைம். அது மட்டுமில்ல. நா இப்ப சொல்றத சரியா கேட்டுக்குங்க. இப்ப எங்கூட மினிஸ்ட்ரியில இருக்கற யாருக்கும் மறுபடியும் சீட் குடுக்கக் கூடாது. நா யாருக்கும் சொல்றனோ அவங்களுக்குத்தான். சரியா இங்க்லீஷ் கூட பேசத்தெரியாதவன்லாம் செண்ட்ரல் கேபினட்ல கொண்டு ஒக்கார வச்சிட்டு, அவன்களால என் மானமே போவுது. தமிழ், தமிழ்னு இங்க வேணும்னா பேசிக்கிருங்க.. பார்லிமெண்ட் வரைக்கும் கொண்டு வந்து கேவலப்படுத்தாதீங்க. (ஐயாவின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறுகிறார்.)

க.நிர்: என்னய்யா இது இப்படி பேசிட்டு போகுது தம்பி.. நீங்களும் பதில் பேசாம இருக்கீங்க?

ஐயா (எரிச்சலுடன்): அட நீ வேறய்யா... என்னைய என்ன பண்ண சொல்றே? எல்லாம் வீட்டுலயும் நடக்குறதுதான? சரி, சரி அத விடு. இவன் எதையாச்சும் ப்ரசுக்கு அனுப்பறதுக்குள்ள நாமளும் எதையாச்சும் செஞ்சிரணும். இல்லன்னா இவனே ஒரு உட்கட்சி விரிசல உருவாக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

க.நிர் (தயக்கத்துடன்): நா வேணும்னா ஸ்டாலின பாத்து பேசிட்டு வரட்டுமா?

ஐயா (அவசரமாக): வேணாம்.. நாமளே நேரா போனா இப்ப இருக்கற சீட்டு கூட கிடைக்காம போயிரும். இந்த லட்சணத்துல இந்த கூத்தாடி பய வேற கெடந்து துள்றான்.

க.நிர்: அதனாலத்தான்யா சொல்றன். இவனும் கூட்டு சேந்துக்கிட்டு நம்ம சீட்ட பங்கு போட்டுக்கிட்டான்னா...

ஐயா (யோசனையுடன்) அதுவும் சரிதான். ஆனா நேரடியா போனாலும் நம்ம கவுரவம் போயிரும்...

க.நிர் (சுருட்டை முடிக்காரர் அல்ல) தனக்குள் 'ஆமா இப்ப மட்டும் என்னத்த வாழுதாம்.'

ஐயா (ஒரு முடிவுடன்): சாயந்தரம் ப்ரெஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அப்படியே நமக்கு வேண்டிய ரிப்போர்ட்டர்ங்கக் கிட்ட ஏடாகூடமா எதையும் கேட்டு வைக்காதீங்கன்னு சொல்லி வைங்க. நா ஜெனரலா எப்பவும் பேசறா மாதிரி பேசி வைக்கிறேன். நீங்க இப்போதைய கூட்டணியே வரும் பொதுத்தேர்தலிலும் தொடரும்னு பொதுவா சொல்லி வைங்க... கலைஞர் எப்படி ரியாக்ட் பண்றார்னு பாத்துட்டு மேக்கொண்டு என்ன செய்யலாம்னு பாப்பம். என்ன சொல்றீங்க? (சுருட்டை முடிக்காரர் தலையை அசைத்துவிட்டு தன் சகாக்களுடன் வெளியேறுகிறார்)

அடுத்த நாள் காலை தினத்தாளில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கலைஞர் தலைமியிலான கூட்டணியில் தொடர்ந்து பா.ம.க. பணியாற்றும் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அவர்கள் கூறியதாக செய்தி வருகிறது!

குறிப்பு: இதில் வரும் அனைத்தும் என் கற்பனையே. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.
**


தொடரும்..