02 டிசம்பர் 2009

வங்கி லாக்கர்களில் திருட்டு

கடந்த சில மாதங்களில் வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகள் களவு போய்விட்டதாக வங்கி வாடிக்கையாளர்களின் புகார்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இன்றும் கூட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே இத்தகைய செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில் இதுவரை நடந்துள்ள மூன்று சம்பவங்களுள் ஒன்றிலும் குற்றவாளிகள் பிடிபடவில்லையென்றும் இதற்கு விசாரணக்கு ஒத்துழைக்க மறுக்கும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளின் அலட்சிய போக்கே முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இத்தகைய திருட்டு நடைபெற வாய்ப்பில்லை என்பதுபோல் வங்கி அதிகாரிகள் நடந்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் வங்கி அதிகாரிகள் இப்படி நடந்துக்கொள்கின்றனர்? இத்தகைய திருட்டில் வங்கி ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ சம்பந்தப்பட வாய்ப்புள்ளதா?

இதைக் குறித்து ஆராய வங்கிகள் வழங்கும் இத்தகைய வசதிகளின் சட்டதிட்டங்களைப் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம் என கருதுகிறேன்.

சாதாரணமாக வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவை வங்கிகள் வழங்கும் பிற சேவைகளான சேமிப்பு கணக்கு (Savings Accounts), வைப்பு நிதி கணக்கு (Fixed or Term Deposit Accounts), கடன் கணக்குகள் (Loan/overdraft accounts) போன்ற சேவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது இந்த மூன்று சேவைகளிலும் ஒரு வாடிக்கையாளர் கடன் வழங்குபவராகவோ (Lender) அல்லது கடன் பெறுபவராகவோ (Borrower) கருதப்படுகிறார். இன்னும் சற்று தெளிவாக கூற வேண்டுமென்றால் தன்னுடைய சேமிப்பை வங்கிகளில் இட்டு வைக்கும் ஒரு வாடிக்கையாளர் (Depositor) வங்கிக்கு வட்டிக்கு கடன் வழங்குகிறார். அதையே வட்டிக்கு கடனாக பெறுகிறார் (Borrower) வேறொரு வாடிக்கையாளர் - ஆக வங்கி-வாடிக்கையாளர் உறவு ஒரு Lender-Borrower உறவு என கருதப்படுகின்றது. இந்த உறவில் வாடிக்கையாளரின் சேமிப்பை கடனாக பெறும் வங்கி வாடிக்கையாளரின் சேமிப்பை அசல் மற்றும் வட்டிக்கு முழு பொறுப்பாகிறார்.


ஆனால் வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவையில் மற்ற வங்கி சேவைகளில் உள்ள அடிப்படை உறவில் உள்ள கடமை (obligation) இல்லை. அதாவது நான் என் வசமுள்ள லாக்கரை சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களுக்கு வாடகைக்கு விடுகிறேன் என்பதான ஒரு உறவு. எப்படியொரு ஒரு வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுகிறாரோ அதுபோன்று. இந்த உறவிலும் ஒரு வாடகைக்கு விடும் ஒரு உரிமையாளர்-வாடகைதாரர் (Lessor-Lessee) உறவு மட்டுமே உள்ளது. வாடிக்கையாளர் வாடகைக்கு எடுக்கும் லாக்கரில் என்ன வைக்கலாம், வைக்கக்கூடாது என்பது வங்கிகள் இதற்கென நிர்ணயித்துள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். சாதாரணமாக Inflammable எனப்படும் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் எவ்வித பொருட்களையும் வைக்கலாகாது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். லாக்கருக்குள் வைக்கப்பட்டிருக்கும் எந்த பொருட்களுக்கும் வங்கி பொறுப்பாகாது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும். லாக்கரை வாடகைக்கும் எடுக்கும் ஒரு வாடிக்கையாளர் இத்தகைய சட்டதிட்டங்களுக்கு ஒப்புக்கொண்டே லாக்கரை வாடகைக்கு எடுப்பதால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு சேதத்திற்கும் கூட வங்கிகள் பொறுப்பாவதில்லை. சேதத்திற்கே பொறுப்பில்லையென்றால் அதிலுள்ளவை காணாமல் போவதற்கு எப்படி வங்கி பொறுப்பாக முடியும்? ஆனால் ஒன்று. லாக்கருக்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கோ அல்லது திருட்டுக்கோ வங்கியோ அல்லது அதன் ஊழியர்களோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகும் பட்சத்தில் வங்கி நிச்சயம் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.

இத்தகைய சம்பவங்களுக்கு எந்தவிதத்தில் வங்கி பொறுப்பாக முடியும் என்று பார்ப்போம்.

சாதாரணமாக வங்கியிலுள்ள லாக்கர் பெட்டகத்தில் அறுபதிலிருந்து எழுபத்தைந்து லாக்கர்கள் இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு மாஸ்டர் சாவியும் ஒவ்வொரு லாக்கருக்கும் பிரத்தியேக சாவிகளும் இருக்கும். மாஸ்டர் சாவி வங்கி கிளை அதிகாரி அல்லது மூத்த அதிகாரியின் வசம் இருக்கும். இதற்கு மாற்று சாவி இருக்கும். ஆனால் அது சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் வைக்கப்படலாகாது. அதே வங்கியின் அருகிலுள்ள வேறொரு கிளையிலோ அல்லது அருகிலுள்ள வேறொரு வங்கியிலோ பாதுகாப்பாக வைக்கப்படிருக்கும். ஆனால் லாக்கர் வாடகைக்கு வழங்கப்படும் சாவிகளுக்கு மாற்று சாவி இருக்காது. அதனால்தான் வாடகைதாரர் தன்னுடைய சாவியை தொலைத்துவிடும் பட்சத்தில் லாக்கர் பெட்டகத்தை தயாரித்து வழங்கிய நிறுவன ஊழியர்களே வந்து லாக்கரை உடைத்து திறக்க வேண்டியிருக்கும். இதை சம்பந்தப்பட்ட வாடகைதாரரின் அனுமதியின்றியோ அல்லது அவர் இல்லாத நேரத்திலோ திறக்க லாக்கர் நிறுவனம் ஒத்துக்கொள்ளாது. இதற்கு செலவாகும் தொகையும்  உடைக்கப்பட்ட பூட்டை மாற்ற தேவையான தொகையும் வாடகைதாரரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதற்கு தேவையான ஷரத்தும் லாக்கர் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆகவே ஒரு லாக்கரை வாடிக்கையாளருக்கு தெரியாமல் வங்கி ஊழியர்கள் திறக்க வாய்ப்பேயில்லை.

ஆனால் வங்கி அதிகாரிகளுக்கு சில பொறுப்புகள் உள்ளன. ஒரு லாக்கர் வாடகைக்கு விடப்படும்போது வாடகைதாரரின் புகைப்பட சான்று உள்ள ஐ.டி கார்ட் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். மேலும் அவருடைய மாதிரி கையொப்பத்தை பெற்று வைத்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் வாடகைதாரரின் புகைப்படத்தையும் வங்கிகள் பெற்று தங்கள்வசம் வைத்திருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் லாக்கரை திறக்க வரும் வாடகைதாரரை இவற்றைக்கொண்டு சரிபார்க்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் லாக்கரை திறக்க வரும் வாடகைதாரர் அதற்கென வங்கி வைத்திருக்கும் நுழைவு சீட்டை நிறப்பி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை தங்கள் வசமுள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் ஒப்பிடுவதுடன் நிற்காமல் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்திலும் வாடகைதாரரின் கையொப்பத்தை பெற வேண்டும். அதில் லாக்கர் திறக்கப்படும் நேரமும் கூட குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் சரிவர கடைபிடிக்காமல் லாக்கரை திறக்க வரும் நபரிடம் அதற்குண்டான சாவி இருந்தாலே போறும் என்கிற சில அதிகாரிகளின் அலட்சியபோக்கே இத்தகைய குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது என்பதையும் மறுக்க முடியாது.

மேலும் ஒருமுறை வாடகைக்கு விடப்பட்டு காலியாக்கப்படும் லாக்கரின் பூட்டை உடனே கழற்றி இதுவரை வாடகைக்கு விடப்படாத லாக்கரில் பொருத்தி அதனுடைய பூட்டை காலியாக்கப்பட்ட லாக்கரில் பொருத்த வேண்டும் என்ற கடமையும் வங்கிக்கு உண்டு. இதை Interchange of Locks என்பார்கள். ஏனெனில் ஒரு லாக்கரை வாடகைக்கு எடுக்கும் வாடகைதாரர் அந்த சாவிக்கு மாற்று பூட்டு செய்ய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட லாக்கர் காலியாக்கப்பட்டதும் அதன் பூட்டு வேறொரு லாக்கருக்கு மாற்றப்பட்டுவிட்டால் மாற்று சாவியை வைத்திருக்கும் வாடகைதாரரால் அதை தவறாக பயன்படுத்த முடியாது. ஆகவே புதிதாக லாக்கரை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர் அந்த லாக்கர் ஏற்கனவே வாடகைக்கு விடப்படிருந்ததா என்பதை விசாரித்துக்கொண்டு எடுக்க வேண்டும். அப்படி விடப்பட்டிருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பூட்டு மாற்றப்பட்டுள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும். தங்களுடைய லாக்கரின் சாவியை பொறுப்பான முறையில் வாடகைதாரர்கள் பாதுகாத்து வைக்க வேண்டியதும் மிக, மிக அவசியம். என்னுடைய வங்கி அனுபவத்தில் இத்தகைய திருட்டுகளில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களே காரணமாயிருந்ததைக் கண்டிருக்கிறேன். ஆகவே இத்தகைய விசாரனைகளில் வாடகைதாரர்களை தீர விசாரிப்பதும் காவல்துறையினரின் முக்கிய கடமைகளில் ஒன்று.

ஆனால் லாக்கர்கள் வாடகைக்கு விடப்படுவதற்கு முன் அவற்றிற்குண்டான சாவிகள் வங்கி வசம்தானே இருந்தன அப்போது வங்கி அதிகாரிகளே மாற்று சாவிகள் செய்து வைத்திருக்க முடியாதா என்றெல்லாம் வாதிட்டால் அது நடைமுறைக்கு அப்பாற்பட்டது என்றுதான் கூறுவேன். என்னுடைய முப்பதாண்டு வங்கி அனுபவத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை.

இதை வங்கி அதிகாரிகள் சார்பாக எழுதவில்லை. என்னுடைய அனுபவத்திலிருந்து மட்டுமே எழுதுகிறேன்.

19 நவம்பர் 2009

வங்கி வட்டி விகிதமும் கிளை திறப்பு விழாக்களும்!

இப்போதெல்லாம் வங்கிகள் ஒரே நாளில் நூற்றுக் கணக்கில் கிளைகளை துவங்குவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த மாதம் கேரளாவைச் சார்ந்த ஒரு தனியார் வங்கி. இன்று கர்நாடகாவைச் சார்ந்த ஒரு பொதுத்துறை வங்கி. இதற்கு பல முக்கிய பத்திரிகைகளில் முழுபக்க விளம்பரங்கள்.

நாட்டின் பொருளாதாரம் தேக்கநிலையைக் கடந்தபாடில்லை. இதற்கு முக்கிய காரணமாக வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை குறைக்காததும் ஒரு காரணம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். விற்பனை அதன் விளைவாக கிடைக்கும் லாப விகிதம் சரிந்து வரும் இன்றைய சூழலில் வங்கிகள் வசூலிக்கும் அதிக வட்டி விகிதம் வங்கிக் கடன் பெற்று வர்த்தகம் மற்றும் தொழில் துவங்கவோ அல்லது விரிவுபடுத்தவோ கருதும் தங்களைப் போன்றவர்களை தயங்க வைக்கிறது என்கின்றனர் பெரும்பாலான வர்த்தக மற்றும் தொழிலதிபர்கள்.

இன்றைய ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் தன்னுடைய தலையங்கத்தில் வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதம் சரிய வேண்டுமென்றால் சேமிப்பாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதமும் கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்கின்றது!

இது கடன் பெறுபவர்களின் கோணத்திலிருந்து பார்த்தால் நியாயமானதாக தோன்றலாம். ஆனால் சேமிப்பாளர்களின் குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்று வங்கிகள் வழங்கும் வட்டி ஒன்றையே நம்பியிருப்பவர்களுடைய கோணத்திலிருந்து பார்த்தால்?

மேலும் சேமிப்பாளர்கள் வங்கியில் இடும் தொகையிலிருந்துதானே வர்த்தகர்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது? சேமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைக் குறைத்தால் வங்கியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையும். அதன் விளைவாக வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் குறையாதா?

கடந்த இரண்டாண்டுகளாகவே வங்கிகள் சேமிப்பாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் குறைந்து, குறைந்து இப்போது பத்து வருட வைப்பு தொகைக்கே அதிகபட்சமாக 7% வட்டி (9% ஆக இருந்தது) வழங்கப்படுகிறது.

சேமிப்பாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை குறைத்தால்தான் கடன் வட்டி விகிதத்தை குறைக்க முடியும் என்கின்றன வங்கிகள். ஆனால் வங்கிகள் தங்களுடைய லாப விகிதத்தைக் குறைத்தாலும் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும். அதாவது வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் மற்றும் வசூலிக்கும் வட்டி விகிதம் ஆகிய இரண்டு விகிதங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை (difference or spread) சற்று குறைத்துக்கொண்டாலே இதை சாதிக்க முடியும். ஆனால் பெரும்பாலான வங்கிகள் இதற்கு தயாராக இல்லை. இதில் தனியார் வங்கிகள் மட்டுமல்ல பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர்த்து பல பொதுத்துறை வங்கிகளும் அடங்கும்.

இதற்கு இவர்கள் கூறும் காரணம் அன்றாடம் அதிகரித்து வரும் நிர்வாக சிலவுகள். வங்கிகளின் நிர்வாக செலவுகளில் கணிசமான விழுக்காடு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் என்றாலும் கடந்த சில வருடங்களில் வங்கிகளுக்கிடையில் நிலவும் கடுமையான போட்டியின் விளைவாக ஏற்படும் விளம்பர சிலவுகளும் தேவைக்கு அதிகமாக கிளைகளை துவங்குவதும் முக்கிய காரணங்கள். நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்துள்ள இன்றைய சூழலில் அளவுக்கதிகமான கிளைகளை வங்கிகள் திறப்பது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்பது விளங்கவில்லை. எழுபதுகளின் Expansion நிலையிலிருந்த வங்கித்துறைக்கு இன்றைய தேவை Consolidationதான் என்று பாரதப்பிரதமரே பலமுறை வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கில் கிளைகளை துவங்கி தங்களுடைய நிர்வாக சிலவுகளை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வது ஒருவகையில் மூடத்தனம் என்றே தோன்றுகிறது.

நான் குறிப்பிட்ட கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த பொதுத்துறை வங்கி தங்களுடைய 104 வது வருட விழாவை சிறப்பிக்க இன்று 104 கிளைகளை திறக்கிறது! இதுவே அவர்களுடைய ஐந்நூறாவது வருட விழாவாக இருந்தால் ஒருவேளை 500 கிளைகளை திறந்திருக்குமோ என்னவோ. தங்களுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்த எத்தனை கிளைகள் தேவையோ அத்தனை கிளைகளை மட்டும் துவங்குவதை விட்டுவிட்டு தங்களுடைய வயதையொட்டி கிளைகளை துவங்கும் வங்கி தலைமையை என்னவென்று அழைப்பது.

இதற்கு தலைமை தாங்குவது நாட்டின் நிதித்துறை அமைச்சர்!

18 ஆகஸ்ட் 2009

சகிப்புத்தன்மை

family

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த செய்தியின் நகல் மேலே.

செய்தியுடன் வெளியாகியுள்ள புகைப்படத்தைப் பார்த்தால் அந்த குடும்பத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த மனத்தாங்கல்கள் ஏதாவது தெரிகின்றனவா?

Handsom couple with a beautiful child என்பார்களே அதுபோன்ற அழகான் குடும்பம்!

ஆனால் அந்த படித்த இளைஞர் தன் இளம் மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?

அல்லது அந்த படித்த, அழகான இளம் பெண் அத்தகைய கொடூர செயலுக்கு தன் கணவனை தன்னுடைய செய்கையால் இட்டுச் சென்றார் என்பதை நம்ப முடிகிறதா?

இந்த விபரீதத்திற்கு பின்னணி என்ன?

மனைவிக்கு தன் மாமனார், மாமியார் என்ற கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பமில்லை. தன்னுடைய கணவன், குழந்தையுடன் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்.  ஆனால் கணவனுக்கு இதில் விருப்பமில்லை.

இன்று நேற்றல்ல காலங்காலமாகவே இந்த பிரச்சினை குடும்பங்களில் இருந்துக்கொண்டுதான் வருகின்றது.

கூட்டுக் குடும்பம் என்கிற சொல்லே வழக்கில் இல்லாமல் போய்விடக்கூடிய காலம் வெகு விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது.

இதற்கு என்ன காரணம்? ஏன் பெண்கள் திருமணமான உடனே தங்கள் கணவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்து சென்றுவிட வேண்டும் என்ற நினைக்கின்றனர்?

ஓரிரண்டு குடும்பங்களில் என்றால் அந்த குடும்பத்திலுள்ள முதியவர்களால்தான் பிரச்சினை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் இதுதான் இன்றைய பிரதான பிரச்சினை.

இதற்கு மூல காரணம் சகிப்புத்தன்மை இல்லாமைதான் என்று கருதுகிறேன்.

பிறருடைய எண்ணங்களை, உணர்வுகளை மதிக்க மறுப்பது. நான் நினைப்பது நடந்தே தீரவேண்டும் என்கிற ஒருவித மூர்க்கத்தனம்.

இத்தகைய குணம் வயது வித்தியாசமில்லாமல் அனைத்து தலைமுறையினரிடமும் இருப்பதால்தான் இத்தகைய விபரீதங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

தாய்க்கு மகன் மீதுள்ள அளவுகடந்த பாசம் மகனை ஒருவிதத்தில் அடிமையாகவே மாற்றிவிடுவதை காண்கிறோம். தன் மகன் தனக்குத்தான் என்ற நிலையில் தாயும் தன் கணவன் தனக்குத்தான் என்ற நிலையில் மனைவியும் பிடிவாதமாக இருப்பதும் ஒரு காரணம்.

Possessiveness borne out of love என்பார்களே அதுபோன்ற ஒருவித வெறித்தனமான அன்புதான் தனக்கு பிடித்த ஒருவரை வேறு எவருக்கும் விட்டுக்கொடுக்க முடியாத இயல்பை நம்மிடத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் உருவாக்குகிறது.

மேலும் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளவும் நம்மில் பலரும் முயல்வதில்லை.

சகிப்புத்தன்மை என்பது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் நாம் மறந்துபோகிறோம். பல குடும்பங்களில் முதியவர்கள் சொல்படித்தான் இளையவர்கள் நடக்க வேண்டும் என்கிற எழுதா சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்துவதையும் கண்டிருக்கிறேன்.

மேலே குறிப்பிட்டுள்ள குடும்பத்தில் மருமகளுடைய உணர்வை மாமியாரும், மாமனாரும் புரிந்துக்கொண்டு அவளுடைய விருப்பத்திற்கு இணங்கியிருந்தாலோ . அல்லது மாமனார், மாமியார் ஆகியோரும் என் குடும்பத்தினர்தான் என்று மருமகள் புரிந்துக்கொண்டிருந்தாலோ இத்தகைய விபரீதத்தை தவிர்த்திருக்கலாம்.

இப்போதைய நிலை என்ன? மனைவி இனி திரும்பி வரப் போவதில்லை. கணவன் சிறையில், குழந்தை அனாதை!

என்ன கொடுமை!

09 ஜூலை 2009

ரொம்ப நாளாச்சு ....

சுமார் மூன்று வருடங்களாக இழுத்தடித்த கணினி மயமாக்கல் பயணம் (ப்ராஜக்ட்) ஒருவழியாக கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது, வெற்றிகரமாக.

என்னுடைய வங்கியின் அனைத்துக் கிளைகளும் வலையிணைப்பின் கீழ் (Wide Area Network) கொண்டுவரப்பட்டு ஒரே மென்பொருளை பயன்படுத்தும் வகையில் (Core Banking Solution) இணைக்கப்பட்டன.

இந்த மூன்றாண்டுகளில்தான் எத்தனை ஏமாற்றங்கள், காலதாமதங்கள், விவாதங்கள், மனத்தாங்கல்கள்... நண்பர்களை சம்பாதித்தேனோ இல்லையோ நிறைய விரோதங்களை ஏற்படுத்திக்கொண்டேன்.

ஆனால் இந்த எல்லாவற்றினூடே முடியாது என்று பலரும் கூறியதை சாதித்துவிட்டோம் என்கிற ஒரு கர்வம் நிறைந்த மனநிறைவு....

இதை வெற்றிகரமாக செயலாற்றி முடிக்க என்னுடன் உழைத்த இளம் பொறியாளர்கள் கொண்ட அந்த அணியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

கடந்த ஓராண்டுகாலமாக சனி, ஞாயிறு, பொது விடுமுறை நாட்கள், பண்டிகை என்று எந்த ஓய்வும் இல்லாமல் ஒழிவும் இல்லாமல் அலுவலகமே கதி என்று கிடந்த அந்த இளைஞர்களை என்ன சொல்லி பாராட்டுவது. அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்?

இது முழுக்க முழுக்க ஐ.டி நிறுவனமாயிருந்தால் இந்த பாராட்டுக்குறிய சாதனைக்கு கணிசமான ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். ஆனால் கங்கிராட்ஸ் என்ற ஒரு வார்த்தையைத் தவிர, ஐந்து நட்சத்திர உணவகத்தில் ஒருவேளை உணவைத் தவிர வேறொன்றும் என்னால் பரிசாக தரமுடியவில்லை.

இதுமட்டுமே என்னால் முடியும் என்பதையும் அந்த இளைஞர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பது ஒரு சிறிய ஆறுதல்.

நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு இதை முடித்துவிட முடியுமா என்று பல நாட்கள் மாய்ந்து போயிருக்கிறேன். பல இரவுகளில் உறக்கத்தை இழந்திருக்கிறேன். பல உயர் அதிகாரிகளின் முன்பு பதிலளிக்க முடியாமல் நின்றிருக்கிறேன். பல ஏச்சுகளை, பேச்சுகளை கேட்டிருக்கிறேன்...

ஆனால் என்னுடைய மிக ஆழமான இறைபக்தி, என்னுடைய இளைஞர் அணியின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை இவை மட்டுமே இதை முடித்து தந்திருக்கிறது என்றால் மிகையல்ல...

இதோ, இனியும் ஆறே மாதங்கள். அறுபது வயதில்தான் வாழ்க்கையே துவங்குகிறது என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...

எனக்கும் மிகவும் மன ஆறுதலை அளிக்கும் என்னுடைய எழுத்து பயணத்தை மீண்டும் துவக்க முடியும் என்ற மகிழ்ச்சியில்....

எதிர்வரும் மாதங்களில் அடிக்கடி எழுத முடியாமல் போனாலும் பின்னூட்டங்கள் இட்டு வலையுலக தொடர்பை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன்...

மீண்டும்... டிபிஆர்.

07 மே 2009

காங்கிரசுக்கு மாற்று இருக்கிறதா?

கடந்த சில நாட்களாக பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சோனியாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதைப் பற்றி பலவிதமாக எழுதி வருகின்றனர்.

சோனியா தனக்கு எதிராக நடைபெறவிருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாததாலோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க நினைத்தோ  இந்த பயணத்தைத் தவிர்த்திருக்கலாம்.  இதற்கு தன் உயிர் மீதான பயம் என்றோ அல்லது அவருடைய இந்த தவிர்ப்பு தமிழ் ஈழ போராளிகளுக்கு வெற்றி என்றோ கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகிறேன்.

ஐநா, அமெரிக்கா உட்பட பல வல்லரசுகளுடைய வேண்டுகோளையெல்லாம் புறக்கணித்த இலங்கை அரசு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் என்று வாதிடுவதும் கூட சிறுபிள்ளைத்தனம் என்றே கூறுவேன்.

போர் நிறுத்தம் வேண்டாம் ஆனால் ஆயுதங்களையாவது வழங்காமல் இருந்திருக்கலாமே என்று வாதிடுபவர்களுக்கு.  நாம் ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திவிட்டால் மட்டுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை நிறுத்திவிடப் போவதில்லை.

இந்தியா ஆயுதங்களை வழங்க மறுத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சைனா, இஸ்ரவேல் போன்ற நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

இதில் வேறொரு கோணமும் உள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா,பாகிஸ்தான் ஏன் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விரோத கண்கொண்டே பார்த்து வருகின்றன. இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.

ராஜபக்ஷே மட்டுமல்ல இதற்கு முன்பு பதவியிலிருந்த அனனத்து ஜனாதிபதிகளுமே விடுதலைப் புலிகளள அழித்துவிடுவதில் குறியாகவே இருந்தனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முயற்சியில் ராஜபக்ஷே சற்று அதிக முனைப்பாகவே இருக்கிறார் என்பதுடன் விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள்ளேயே பிரிவினைகளும், பூசல்களும் ஏற்பட்டுள்ளதும் அவர்களின் தொடர் தோல்விக்கு ஒரு காரணம்.

எந்த ஒரு போராட்டத்திற்கும் முடிவு என்று ஒன்று உண்டு. அதை பிரபாகரன் உணராததுதான் அவருடைய இன்றைய இழி நிலைக்கு காரணம். தனி ஈழம் என்பது ஒரு நிறைவேற இயலா கனவு என்பதை உணர்ந்து ஒரு ஃபெடரல் ஆளுமைக்கு தன்னை தயார் செய்துக்கொண்டு அந்த கோணத்தில் தமிழர்களின் சம உரிமைக்கு அவர் பாடுபட முனனந்திருக்கலாம். அந்த அமைப்பைச் சார்ந்த பல தலைவர்களுடைய அறிவுரையையும் புறக்கணித்ததோடல்லாமல் தன்னுடைய கருத்தைச் சார்ந்திராதவர் அனைவருமே தன்னுடைய அமைப்புக்கு எதிரிகள் என நினைத்து அவர் படுகொலை செய்த தமிழின தலைவர்கள் எத்தனை பேர். அவர்களுள் ஒருவரான பத்மநாபாவை சென்னைக் குடியிருப்புகளுள் ஒன்றில் புகுந்து ஈனத்தனமாக தாக்கியதை அதே பகுதியில் வசித்ததால் நேரில் கண்டவன் நான்.

அதையும் கடந்து என்னுடைய பிரதமர் ஒருவரை திட்டமிட்டு ஒரு பெண்ணை பயன்படுத்தி படுகொலை செய்தவர் அவர். அத்தகையவரை நண்பர் என்றும் அவர் போராளியல்ல என்றும் நம் நாட்டு தலைவர்கள் சொல்லித்திரிவது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட.

இன்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு மத்திய அரசு எந்த விதத்தில் பொறுப்பாகிறது என்பதும் விளங்கவில்லை. விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேன் என்ற முனைப்புடன் இலங்கை அரசு போரை துவக்கியது. விடுதலைப் புலிகள் வசம் இல்லாத கனரக ஆயுதங்களே இல்லையென்னும் அளவுக்கு அது பலம் வாய்ந்திருந்தது. தரையிலும்,கடலிலும், வானிலும் ஒரு நாட்டின் படைக்கு இணையாக போரிட பலம் பெற்றிருந்த ஒரு அமைப்பை அழிக்க நினைத்த அரசு அதே அளவுக்கு போரிடத்தானே வேண்டும். விடுதலைப் புலிகளைப் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து போராட்டத்தைத் துவக்கினால் நம்முடைய மத்திய அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா என்ன?

சில மாதங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் கூறியதுபோன்று போர் என்று வந்தால் மக்கள் மரிக்கத்தானே வேண்டும்?

இலங்கை தமிழர்களுக்கு பிரதிநிதி என தங்களை முன்நிறுத்தும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது என்று இலங்கை அரசு மட்டுமல்லாமல் ஐ.நா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டினவே? அதை சிறிதும் பொருட்படுத்தாமல் உயிருக்கு பயந்து தப்பிக்க நினைத்த மக்களை தடுத்தும் நிறுத்தும் விதமாக மண் சுவர்களை எழுப்பியது யார்? இலங்கை அரசா? அல்லது அதையும் மீறி மக்கள் தப்பித்துவிடக் கூடாதே என்று கடலோரங்களிலும் கன்னிவெடிகளள புதைத்து வைத்தது யார்? அதையும் மீறி பாதுகாப்பு பகுதியை நோக்கி ஓடிய மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதாக தப்பித்து வந்த தமிழர்களே கூறுகிறார்களே அது பொய்யா?

இலங்கை தமிழர்களள காப்பாற்ற நினைக்கும் நம்முடைய தமிழக தலைவர்கள் வேண்டுமானால் பிரபாகரனுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தாதீர்கள் என்று கூறட்டுமே.

அதை விட்டு விட்டு சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதில் என்ன பயன்? 

சரி. இன்றைய பதிவின் தலைப்புக்கு வருவோம்.

மத்திய அரசில் காங்கிரஸ் வேண்டாம் என்றால் மாற்றாக எந்த கட்சிக்கு வாக்களிப்பது? பிஜேபிக்கா?

நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என நினைப்பதே இலங்கைவாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காகத்தானே. மத்திய அரசு இதில் நாம் விரும்பும் வகையில் பணியாற்ற வேண்டுமென்றால் பிஜேபி அமைக்கும் அரசில் தமிழகத்தைச் சார்ந்த ஒரு பலம் வாய்ந்த கட்சி அதில் பங்குபெற வேண்டும். ஆனால் பிஜேபி தமிழகத்தில் கூட்டு சேர்ந்திருப்பது யாருடன்? ஒரு முன்னாள் கதாநாயகன், மற்றொருவர் முன்னாள் வில்லன், இன்னாள் கதாநாயகன். 

தேர்தலுக்குப் பிறகு ஒரு தனிப்பெரும் கட்சியாக பிஜேபி வரும் சூழலில் நம்முடைய செல்வியும் (ஏன் மருத்துவரும் கூட) அவர்களுடன் சேருவார் என்றே வைத்துக்கொள்வோம்.

செல்வியின் தமிழ் ஈழ நிலைப்பாடு அப்படியே இருக்கும் என்று கருதுகிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. அவருடைய சமீபத்திய நிலைப்பாடு தேர்தல் தந்திரம் மட்டுமே. அவருடைய ஒரேயொரு குறிக்கோள் தன்னுடைய பரம எதிரியான முகவை வீழ்த்துவது. அதன் முன்னால் மற்றதெல்லாம் வெறும் தூசு!

ஆகவேதான் சொல்கிறேன் காங்கிரசுக்கு மாற்று தற்போது இல்லை.

********

06 மே 2009

என்னுடைய ஓட்டு யாருக்கு, ஏன்?

என்னுடைய ஓட்டு இருக்கட்டும். நம் அனைவருடைய ஓட்டும் யாருக்கு என்று சிந்திப்போமே.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தமிழகம் என்றில்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் அடுத்த ஐந்தாண்டு கால தலைவிதியை நிர்ணயிக்கப் போகிற தேர்தல்.

இந்த தேர்தலில் எந்த பிரச்சினைகள் முக்கியம்?

1. ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி.

2. நாட்டின் பாதுகாப்பு. அதாவது நம்மைச் சுற்றியுள்ள தெரிந்த மற்றும் தெரியாத பகைவர்களிடமிருந்து (நாடுகள், போராளி அமைப்புகள்)  நமக்கு பாதுகாப்பு.

3. உள்நாட்டு பாதுகாப்பு. அதாவது நமக்குள்ளேயே புல்லுருவிகளாக இருந்து நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அமைப்புகளிடமிருந்து பாதுகாப்பு. இதற்கு முக்கிய தேவை மத நல்லிணக்கம். சாதீய சாயமில்லாத நடுநிலையான சூழல்.

4. கடந்த ஐந்தாண்டுகளில் துவங்கப்பட்டு இன்றும் நிறைவுபெறாமல் நிற்கும் சேதுசமுத்திர திட்டம் போன்ற ஒட்டுமொத்த நாட்டுக்கும் நலமளிக்கக் கூடிய திட்டங்கள் நிறைவேறுதல்.

இவை மட்டுமே நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் நம்முடைய தலையாய தேவைகளாயிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

சமீப காலமாக சிலரால் முன்நிறுத்தப்படும் பிரச்சினைகள், பிரச்சினைகள்தான் என்றாலும் அவை இந்த பொதுத்தேர்தலுக்கு பொருத்தமில்லாதவை.

முதன்முதலாக இலங்கைத் தமிழர்களின் அவலநிலை.

உணர்ச்சிவசப்படாமல், அதாவது நான் ஒரு தமிழன் என்ற நிலையைக் கடந்து இந்தியன் என்ற நிலையில் இந்த பிரச்சினையை அணுகும்போது இப்போதைய மத்திய அரசுக்கு எதிராக நான் வாக்களிக்க ஒரு முக்கிய காரணமாக இது தென்படவில்லை.

அப்படியே அது இருந்தாலும் அதை தகுந்த முறையில் கையாளும் திறன் இப்போது மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களிடம்தான் உள்ளது. பலரும் நினைப்பதுபோன்று பாஜக ஆட்சி வருமானால் இப்போதைய நிலையைவிடவும் மோசமடையவே வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் தமிழ் ஈழம், தமிழர்களுக்கு சம உரிமை என வாய் கிழிய பேசும் கட்சித்தலைவர்கள் வெற்றிபெற்றாலும் மத்தியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் கட்சியுடன் (அது காங்கிரசாகவே இருந்தாலும்) இணைந்து தங்களுடைய கட்சிக்கு எத்தனை அமைச்சகங்களைக் கைப்பற்றி அடுத்த தேர்தலுக்குள் எத்தனை கோடிகளை சுருட்டலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்களே தவிர பல இளம் பதிவாளர்களும் கருதுவதுபோல் தமிழ் ஈழம் உருவாக்க உதவிபுரியும் கட்சிக்கு மட்டுமே ஆதரவளிப்போம் என முன்வரமாட்டார்கள். மருத்துவரையும், கேப்டனையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அடுத்து கலைஞரின் ஆட்சித்திறன்.

அதை முடிவு செய்ய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஜெ அவர்கள் வேண்டுமானால் இதையே சொல்லிக்கொண்டு ஊர், ஊராக ஹெலிகாப்டரில் சுற்றட்டும். மருத்துவர் கூறுவதையெல்லாம் தண்ணீரில் கரைத்துவிடலாம். கேப்டன் இந்த தேர்தலைப் பொருத்தவரை ஒரு பொருட்டே அல்ல.

ஆக இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலையையும், கலைஞரின் தவறுகளையும் தள்ளிவையுங்கள்.

இப்போது சொல்லுங்கள்? யாருக்கு நம்முடைய ஓட்டு?

என்னைப் பொருத்தவரை நாட்டின் பொருளாதார நிலை உலகிலுள்ள மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக நன்றாகவே உள்ளது. நாட்டின் வெளி மற்றும் உள் பாதுகாப்பும் மோசமாக இல்லை. முக்கியமாக பாஜக ஆளும் ஒருசில மாநிலங்களைத் தவிர்த்தால் மத நல்லிணக்கம் நன்றாகவே உள்ளது. சாதீய போராட்டங்களும் வெகுவாகவே குறைந்துள்ளன.

ஆகவே என்னுடைய ஓட்டு நிச்சயம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குத்தான்.

இதை விடுத்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று இளைய தலைமுறை தீர்மானித்து வாக்களிக்குமானால் மத்தியில் இன்று தமிழகத்திற்கு இருக்கும் பங்கு குறையும். தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை குறையும்.  தமிழகத்திற்கு கிடைக்கவிருக்கும் நலத்திட்டங்கள் குறையும். முதலீடுகள் குறையும். சேது சமுத்திரம் மட்டுமல்ல ஹொகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கு வேண்டுமெனில் முதலில் தமிழகம் வலுப்பெற வேண்டும். தமிழகத்தை ஆளும் கட்சி மத்தியில் ஆளும் கூட்டணியில் மிக முக்கியமான, பலம் வாய்ந்த அங்கத்தினராக இருக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள்.

இன்றைய சூழலில் அது திமுகதான்.

05 மே 2009

பொதுத் தேர்தல் – பழைய நினைவுகள்!

 

வருகிற 13ம் தேதி தமிழகத்தில் பொதுத் தேர்தலாம்!!

சொன்னால்தான் தெரிகிறது.

கலைஞர், சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் மட்டும் இல்லையென்றால் தேர்தல் நடப்பதே பலருக்கும் நினைவில்லாமல் போயிருக்கும்.

இப்படியொரு மந்தமான தேர்தலைப் பார்க்கும்போது அந்தக்கால நினைவுகள் என்னையும் மீறி எழுகின்றன.

அப்போதெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடந்து முடியும்வரை சாலையெல்லாம் கட்சி தோரணங்கள், தட்டிகள்,வளைவுகள் என சென்னையே விழாக்கோலம் பூண்டிருக்கும். சாலையோர சுவர்களில் ஓவியர்கள் அரசியல் தலைவர்களின் உருவங்களை வரைவதை பார்த்துக்கொண்டிருந்தாலே பொழுது போவதே தெரியாது.

பெருந்தலைவர் காமராஜ், ராஜாஜி,பக்தவத்சலம்,அண்ணா போன்ற தலைவர்களின் உருவப்படத்திற்கு பின்னால் சாயத்தைத் தடவி அதை அப்படியே சுவரில் வைத்து அவுட்லைனை முதலில் வரைந்து பிறகு சிறிது, சிறிதாக வண்ணங்களால் உயிர்க்கொடுப்பதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம். சில கைதேர்ந்த கையில் ஒரு சிறிய புகைப்படத்தை கையில் பிடித்துக்கொண்டு நேரடியாக சுவரில் வரைவதும் உண்டு.

தினமும் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் என்னைப் போன்ற மாணவர்களுக்கு இதை பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு.

அதையடுத்து நள்ளிரவுவரை நடைபெறும் பிரசாரக் கூட்டங்கள்.

மணிக்கணக்கில் பேசும் கட்சித் தலைவர்கள் அப்போது சொற்பம்தான் என்றாலும் ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பும் நடைபெற்ற வில்லுப்பாட்டும் தெருக்கூத்தும் கட்சி பேதம் இல்லாமல் அனைவரையும் கவர்ந்திழுப்பதுண்டு.

பிறகு தமிழகத்தில் பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக மற்றும் அதன் தலைவர் அண்ணா அவர்களை தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒரு மாற்றாக முன் நிறுத்தியது.

அதுவரை சுவாரஸ்யமில்லாமல் இருந்த பிரசாரக் கூட்டங்கள் அண்ணா, நாஞ்சிலார்,ஈவிகே சம்பத் போன்றவர்களின் கவிதை நடையில் சரளமான அதே சமயம் நகைச்சுவை மிகுந்த மேடைப் பேச்சு பாமர மக்களையும் கவர்ந்திழுக்க துவங்கின.

தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டங்கள் வழியாக மட்டுமில்லாமல் வீட்டு கதவுகளையும் தட்ட துவங்கியது 1980களுக்கு பிறகுதான்.

புரட்சித்தலைவர் முதல்வராக தமிழகத்தைக் கைப்பற்றிய 1980 சட்டமன்ற தேர்தல் தேர்தல்தான் வாக்காளர் என்ற முறையில் என்னுடைய முதல் தேர்தல்.

அப்போதெல்லாம் வீட்டிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தையும் வாகனம் வைத்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்வார்கள். அதாவது ஓட்டுப் போட செல்லும்போது. திரும்பி வரும்போது ஒருவரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். நடராசா சர்வீஸ்தான். . ஆனாலும் அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று கட்சியைச் சார்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை கொண்டு வந்து ஐயா வாங்க, அம்மா வாங்க என அழைக்கும்போது… ஓட்டுரிமைக்கு இருந்த மதிப்பு அப்போதுதான் தெரிந்தது!

ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த பட்ச வாக்கு விகிதம் எழுபது விழுக்காட்டைத் தாண்டிவிடும். தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் அந்தந்த தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்களின் பிரதிநிதியாகவே கருதப்பட்டார்.

சேஷன் தேர்தல் கமிஷனராக வந்தாலும் வந்தார். ஏதோ அதுவரை நடந்த தேர்தல்கள் எல்லாமே தவறு என்பதுபோலவும் இந்திய தேர்தல் நடைமுறையை தூய்மைப்படுத்த தன்னைத்தான்  கடவுள் படைத்தார் என்பதுபோலவும் தனக்குத்தானே கற்பித்துக்கொண்டு பொதுத்தேர்தலையே ஒரு சுவாரஸ்யமில்லாமல் ஆக்கிவிட்டார். அவர் எத்தனை பெரிய ‘யோக்கியர்’ என்பது பிறகுதானே தெரிந்தது!

Model Code of Conduct என்ற பெயரில் தேவையில்லாத சட்டதிட்டங்கள் தேர்தலை ஒரு சுவாரஸ்யமில்லாததாக ஆக்கிவிட்டன என்றுதான் சொல்வேன்.

இதனால்தானோ இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று கட்ட தேர்தல்களிலும் ஓட்டு விகிதம் ஐம்பதிலிருந்து அறுபது விழுக்காட்டுக்குள்ளாகவே உள்ளது.  ஒரு தொகுதியில் நூறு வாக்காளர்கள் என்றால் அதில் ஐம்பது வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். அதில் முப்பது வாக்குகள் பெற்றவர் வெற்றிபெறுகிறார்! அதாவது மொத்த வாக்காளர்களில் எழுபது பேர் அவரை தெரிவு செய்யவில்லை என்றுதானே பொருள்? அவரை எப்படி மக்களின் பிரதிநிதி என அழைப்பது?

எந்த தேர்தலிலும் இந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பது என்று முன்கூட்டியே முடிவு செய்துவிடும் என்னைப் போன்ற வாக்காளர்கள் யாருடைய அல்லது எவ்வித தூண்டுதலும்  இல்லாமலே வாக்களித்துவிடுவர். ஆனால் தேர்தலில் வாக்களிக்கவே வேண்டுமா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் அல்லது விருப்பமில்லாமல் இருப்பவர்களை ஒரு முடிவெடுக்கு வர துணை செய்வது கட்சி விளம்பரங்களும், பிரசார கூட்டங்களும்தான் என்றால் தவறில்லை.

அப்போதெல்லாம் சுவர் விளம்பரங்கள், சாலை முழுவதும் அலங்கரிக்கும் கட்சி தோரணங்கள் நீங்கலாக தேர்தலுக்கு முந்தைய தினத்தன்று  வீடு, வீடாக வாக்கு சீட்டு மாதிரிகளை கட்சித் தொண்டர்கள் வினியோகம் செய்து வாக்காளர்கள் எந்த ஓட்டுச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக சொல்வதுண்டு. தொண்டர்கள் வினியோகிக்கும் ஓட்டுச் சீட்டை காட்டினாலே சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிப்பார்கள். வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ எதுவும் தேவையிருக்கவில்லை.

ஆனால் இப்போது? தேர்தல் தினத்தன்று நம்முடைய பெயர் எந்த சாவடியில் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளவே மணிக்கணக்காகிறது! யார் பொறுமையுடன் தேடிப்பிடித்து வாக்களிப்பது என்று நினைப்பவர்கள்தான் அதிகம் பேர். ஆகவே இந்த தேர்தலிலும் வாக்கு விகிதம் ஐம்பது விழுக்காட்டைத் தாண்டினால் ஆச்சரியம்தான்!

சரி. இந்த தேர்தலில் என்னுடைய ஓட்டு யாருக்கு? ஏன்?

அடுத்த பதிவில் கூறுகிறேன்.

30 மார்ச் 2009

எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் தியதி முதல் நாட்டிலுள்ள எந்த ஏடிஎம்மிலும் எவ்வித கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம் என கேள்விப் பட்டிருப்பீர்கள். ஏற்கனவே இதைக் குறித்து ஒரு பதிவும் வந்துள்ளது. என்னுடைய என்னுலகம் வலைப்பூவிலும் நண்பர் ஒருவர் இதைக் குறித்து நீங்கள் ஒரு பதிவு எழுதுங்களேன் என கேட்டிருந்தார்.




இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த ஏற்பாட்டால் நாட்டிலுள்ள மிகப் பெரிய வங்கிகள் பெருத்த லாபம் அடைய வாய்ப்புள்ளது எனவும் நண்பர் ஒருவர் தன்னுடைய பதிவில் எழுதியிருந்தார்.



இது ஓரளவுக்கு உண்மைதான்.



இதை சற்று விரிவாக பார்ப்போம்.



வங்கி ஏடிஎம்களில் இருவகை Transactions (வர்த்தக பரிவர்த்தனைகள், கொடுக்கல், வாங்கல் என சொல்லலாம்) நடைபெறுகின்றன.



1. வழங்குபவர் பரிவர்த்தனை (Issuer Transaction): என்னுடைய வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்கும் ரொக்க பரிவர்த்தனை (Cash Transaction).



2. பெறுபவர் பரிவர்த்தனை (Acquirer Transaction): அதாவது மற்றொரு வங்கியின் வாடிக்கையாளர் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் வந்து பணம் எடுக்கும் ரொக்க பரிவர்த்தனை.



முதல் பரிவர்த்தனையில் என்னுடைய வங்கி ஏடிஎம் உரிமையாளர் வங்கியிடமிருந்து (The Bank which owns the ATM) கடன் பெறுவதற்கு ஒப்பாகும். It indirectly means that my bank borrows money from the Bank which owns the ATM. ஆகவே நான் அந்த வங்கிக்கு இத்தகைய பரிவர்த்தனைக்கு என குறிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.



இரண்டாவது பரிவர்த்தனையில் என்னுடைய வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கி கடன் பெறுகிறது. ஆகவே அந்த வங்கி என்னுடைய வங்கிக்கு குறிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.



இந்த கட்டணம் Inter-change fee என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டணத்தை வங்கிகள் நேரடியாக பெற்று/கொடுத்துக் கொள்வதில்லை. இந்த ஏடிஎம் அட்டைகள் வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் (The Company which manages these transactions through switching system)



இப்போது நாட்டிலுள்ள ஏடிஎம் அட்டைகள் விசா, மாஸ்டர், NFS (National Financial Switch), CashTree என்ற பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.



உதாரணத்திற்கு, என்னுடைய வங்கிக்கு மேலே குறிப்பிட்டுள்ள நான்கு நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தமசெய்துள்ளது. ஆகவே நாங்கள் வழங்கும் கடன் மற்றும் ஏடிஎம் அட்டைகளை இந்த இரண்டு நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளின் ஏடிஎம்களிலும் பயன்படுத்த முடியும். அதுபோன்றே இந்த இரண்டு நிறுவனங்களாலும் நிர்வகிக்கப்படும் கடன் மற்றும் ஏடிஎம் அட்டைகளைக் வழங்கியுள்ள எந்த வங்கியின் வாடிக்கையாளரும் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.



நான் மேலே குறிப்பிட்ட Inter-change feeஐ ஒரு வங்கியிலிருந்து (Issuer Bank) பெற்று மற்றொரு வங்கிக்கு (Acquirer Bank) வழங்கும் பணியை இந்த இரண்டு நிறுவனங்களும் செய்யும். உதாரணத்திற்கு உங்களிடமுள்ள ஏடிஎம் அட்டை விசா முத்திரையைக் கொண்டிருக்குமானால் குறிப்பிட்ட கட்டணத்தை விசா நிறுவனம் உங்களுடைய (Issuer ) வங்கியிடமிருந்து பெற்று தங்களுடைய கமிஷனைக் கழித்துக்கொண்டு (Service Charges) மீதமுள்ள தொகையை என்னுடைய (Acquirer) வங்கிக்கு வழங்கும். அதுபோன்றே மாஸ்டர், NFS போன்ற நிறுவனங்களும் செய்கின்றன.



தற்போது ஒவ்வொரு விசா அட்டையை பயன்படுத்தி எடுக்கப்படும் தொகைக்கும் ரூ.20/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்னுடைய வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படும் பட்சத்தில் என்னுடைய வங்கிக்கு இந்த ரூ.20/-ல் சுமார் ரூ.16/- கிடைக்கும். என்னுடைய வங்கி வாடிக்கையாளர் மற்றொரு வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பட்சத்தில் ஏடிஎம் உரிமையாளர் வங்கிக்கும் இதே தொகை கிடைக்கும்.



இப்போதும் கூட சில ICICI, HDFC போன்ற பெரிய தனியார் வங்கிகள் இந்த கட்டணத்தை தங்களுடைய வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பதில்லை. இதை ஒரு வாடிக்கையாளர்களை கவரும் சேவையாக செய்கின்றன. ஆனால் எதிர்வரும் ஏப்ரல் முதல் தியதியிலிருந்து எங்களைப் போன்ற வங்கிகளூம் கூட இந்த கட்டணத்தை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும்.



ஆனால் இந்த அட்டைகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுமைக்கு உட்படாத நிறுவனங்கள் என்பதால் அவை இப்போது போன்றே கட்டணத்தை வசூலிக்கத்தான் செய்யும். ஆகவே இந்த ஆணை வங்கிகளை மட்டுமே பாதிக்கும்.



பெரிய வங்கிகள் அதாவது மிக அதிக அளவில் ஏடிஎம் வைத்துள்ள வங்கிகளுக்கே இந்த புது நியதி சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. அவர்களுடைய Acquirer பரிவர்த்தனைகள் Issuer பரிவர்த்தனைகளை விட பண்மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இப்போதும் கூட எங்களுடைய வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளுடைய ஏடிஎம்மில் பணம் எடுப்பதுதான் அதிகம். கட்டணம் வசூலிக்கப்படும்போதே இந்த நிலை என்றால் எந்த வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம் ஏதும் இல்லை என்கிற நிலை வரும்போது என்னுடைய வங்கி ஏடிஎம்மை தேடி அலைய வேண்டிய தேவை இல்லையே? ஆகவே என்னுடைய வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்டண இழப்பு ஒருபுறம் இருக்க இதனால் வேறு சில பிரச்சினைகள், செலவினங்கள் எங்களைப் போன்ற சிறிய வங்கிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.



உதாரணத்திற்கு சென்னையில் என்னுடைய வங்கி ஏடிஎம்களில் ஒன்று HDFC ஏடிஎம்களில் ஒன்றின் அருகாமையில் உள்ளது. எங்களைப் போன்று பண்மடங்கு வாடிக்கையாளர்களைக் கொண்ட அந்த வங்கியின் ஏடிஎம் முன்பு எப்போதும் நீண்ட வரிசை காத்திருக்கும். குறிப்பாக மாதத்தின் முதல் வாரங்களில். என்னுடைய வங்கியின் ஏடிஎம் பல சமயங்களில் காலியாக இருக்கும். அருகிலுள்ள வங்கியின் ஏடிஎம் காலியாக இருந்தும் வசூலிக்கப்படும் கட்டணத்தை மனதில்கொண்டு வாடிக்கையாளர்கள் கால் கடுக்க தங்கள் ஏடிஎம் முன்பாகவே நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.



ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆணைப்படி ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய கணக்கிலிருந்து எந்த வங்கியின் ஏடிஎம் மூலமாக பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படமட்டாது என்பது தெரிய வரும்போது எந்த வாடிக்கையாளரும் நீண்ட வரிசையில் காத்திருக்க விரும்பமாட்டார் அல்லவா?



இதனால் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மிலும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுக்க வாய்ப்புண்டு. அதாவது என்னுடைய வங்கியின் Acquirer பரிவர்த்தனைகள் பண்மடங்காக வாய்ப்புண்டு. ஆனால் இதன் விளைவாக என்னுடைய வங்கியின் ஏடிஎம்மின் பராமரிப்பு செலவும் அதிகரிக்க வாய்ப்புண்டு. எப்படி? இப்போது என்னுடைய வங்கியின் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமே என்னுடைய வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அதாவது நாளொன்றுக்கு ஐம்பது வாடிக்கையாளர்கள். அவர்கள் கூட்டாக எடுக்கும் தொகை நாளொன்றுக்கு அதிகபட்சம் சுமார் ரூ.5.00 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் சுமார் 15 லட்சம் ரொக்கம் (Cash) வைக்க முடியுமெனில் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தொகையை Replenish (மீண்டும் நிரப்புதல்) செய்தால் போதும். ஆனால் ஏப்ரல் முதல் தியதியிலிருந்து இதே ஏடிஎம்மில் இருந்து மற்ற வங்கியின் வாடிக்கையாளரும் பணம் எடுக்க துவங்கினால் இதே எண்ணிக்கை 200ஐயும் தாண்ட வாய்ப்புண்டு. அந்த சூழலில் தினமும் அல்லாமல் ஒரே நாளில் இருமுறையும் கூட தொகையை நிரப்ப வேண்டியிருக்கும்! இந்த பணியை வேறு நிறுவனங்கள் செய்வதால் (outside agencies) அவர்கள் கூடுதல் Service Charges வசூலிப்பார்கள். இது ஒரு பெரிய தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.



எப்படியோ, வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆணை ஒரு வரப்பிரசாதம்தான்.



************

24 மார்ச் 2009

தேர்தல் களம் - 2 விஜயகாந்தின் முடிவு!

என்னுடைய முந்தைய பதிவுக்குப் பிறகு கேப்டன் தன்னுடைய முடிவை சூசகமாக ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துவிட்டார்.

இங்குள்ள கட்சிகளுடன் அல்லாமல் கடவுளுடன் கூட்டணி அமைத்துள்ளாராம். ஆனாலும் அதை பகிரங்கமாக 26ம் தேதிதான் வெளியிடுவாராம். அதென்ன அந்த தியதில் விசேஷமோ தெரியவில்லை!

அவரைப் பற்றி அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. யானைக்கு பலம் தும்பிக்கையில் என்பதுபோல இவருடைய பலம் நம்பிக்கையில்தான். ஆனால் அதுவே அதீத நம்பிக்கையாகும்போது முட்டாள்தனத்தின் எல்லையைத் தொட்டுவிடுகிறது.

கடந்த சட்டசபை தேர்தல்களில் இவர் பெற்ற வாக்குகள் அஇஅதிமுகவுக்கு கிடைக்கவிருந்த வாக்குகள் என்றும் இவரால்தான் அந்த கட்சி பல தொகுதிகளிலும் தோற்றது என்றன பல நாளிதழ்கள். இப்போதும் அதே போல் நடந்தால் திமுகவுக்கு லாபம். ஆனால் இவருடைய கட்சி மீண்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறப்போவதில்லை என்பது நிச்சயம்.

பன்ருட்டியார் போன்ற அனுபவம் மிக்க தலைவர்கள் அவருடன் இருந்தும் அவரால் இப்படியொரு முடிவை எப்படி எடுக்க முடிந்தது என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அடுத்தது பாமக.

விஜயகாந்தின் முடிவு அவரை திமுக கூட்டணிக்கு திருப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திமுக கூட்டணியில் இணைந்தால் கூட்டணிக்கு லாபமோ இல்லையோ அவருடைய கட்சிக்கு நிச்சயம் லாபமாகத்தான் இருக்கும். தங்கபாலு என்னதான் பாமக இப்போதும் எங்கள் கூட்டணியில்தான் என்றாலும் மருத்துவர் ஐயா இப்போது விரும்புவதெல்லாம் மு.கவிடமிருந்து பேருக்கு ஒரு அழைப்பு. ஆனால் அவர் விடுவதாக தெரியவில்லை.

கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றி விவரங்கள் கீழே:




பாமக திமுக கூட்டணியில் தொடர்வதை அஇஅதிமுக விரும்பவில்லை என்றாலும் மேடமும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள தயங்குகிறார். கேப்டனுக்கு செல்லும் வாக்குகளை பாமகவுக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் சில தொகுதிகளிலாவது சரிகட்ட முடியும். ஆனால் அதை வெளிப்படையாக கூறினால் மருத்துவர் தன் சுயரூபத்தை காட்டுவாரோ என்கிற அச்சம். இதே அச்சத்தில்தான் மு.கவும்.

'இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா' என்ற கவுண்டமனியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

21 மார்ச் 2009

தேர்தல் களம் 1 -கூட்டணி சர்க்கஸ்

நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் தியதிகள் அறிவிக்கப்பட்டு இரு வாரங்கள் ஆகியும் எந்த அரசியல் கட்சியாலும் தங்களுடைய முழு வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிட முடியவில்லை.

எந்த கட்சியாலும் - தேசிய அளவிலும் சரி மாநிலங்கள் அளவிலும் சரி - தனித்து முடிவெடுக்க முடியாத சூழல் நிலுவுவதே இதற்கு முக்கிய காரணம்..

தேசிய கட்சிகளுள் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் இன்று பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் தயவை நாடி நிற்க வேண்டுய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவும் இதே நிலையில்தான்.

கூட்டணி அரசியல்.



கூட்டணி யுக்தி முதன் முதலாக 1977ல் அதாவது இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலை 2 (Emergency) முடிவுக்கு வந்தவுடன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்குடன் எதிர்க்கடசிகள் ஜனதா கட்சியை தோற்றுவித்து மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து தோன்றியது எனலாம். ஆனால் உட்கட்சி பூசலால் துவக்க முதலே அதாவது பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதிலிருந்து ஏற்பட்ட குழப்பம் இரண்டே ஆண்டுகளில் சரண்சிங் அவர்களின் கைங்கரியத்தால் கவிழ்ந்தது.

அதன்பிறகு 1991ல் நரசிம்மராவ் தலைமையில் அமைக்கப்பட்ட சிறுபான்மை காங்கிரஸ் கூட்டணி அரசு 1998ல் பிஜேபி தலைமையில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் அல்லாத அரசுகள் மட்டுமே தொடர்ந்து ஐந்தாண்டு காலம் ஆட்சி அமைக்க முடிந்தன.

கடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடிந்தாலும் அது பல மாநில கட்சிகளின் தயவால் மட்டுமே சாத்தியமானது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 145 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த லல்லுவிலிருந்து (24 இடங்கள்), கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஷிபு சோரன் (5 இடங்கள்) வரை அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டியிருந்த பரிதாப சூழலில் இருந்ததை மறக்கமுடியாது, போறாததற்கு குறை சொல்லியே அரசியல் நடத்தும் இடது சாரி கட்சிகள் வேறு. நம்முடைய திமுக,பாமக கட்சிகள் குறிப்பாக ஐயாவின் புதல்வர் பிரதமருக்கு அவ்வப்போது கொடுத்து வந்த குடைச்சலை மறக்க முடியுமா?

ஐந்தாண்டு காலம் இவர்களை கட்டி மேய்த்ததே காங்கிரசுக்கு கிடைத்த குறிப்பாக சொந்த கட்சியிலும் செல்வாக்கில்லாத பிரதமருக்கு பெரிய வெற்றி என்றால் மிகையாகாது. ஆனால் இப்போது அதே காங்கிரஸ் பீஹாரிலும் உ.பியிலும் ஜார்கண்ட்டிலும் படும் அவமானத்தைப் பார்த்தால் இனியும் இந்த கேடுகெட்ட கூட்டணி முறைக்கு காங்கிரஸ் இறங்கி வர வேண்டுமா என்றே கேட்க தோன்றுகிறது.

தமிழகத்துக்கு வருவோம்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியிலும் சிக்கல்கள். கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த இடது சாரிகள் மற்றும் மதிமுக இப்போது எதிர் அணியில். பாமக எங்கு சேர்ந்தால் வெற்றி என்பதைக் கணிக்க முடியாமல் திண்டாடுகிறது. சில மாதங்கள் முன்புவரை தனித்தே நிற்பேன் என மார்தட்டி வந்த கேப்டனுக்கு திடீர் என ஒரு தடுமாற்றம். விடுதலை சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து வெளியேற்ற கலைஞர் தயாராயில்லை. இதில் காங்கிரசுக்கு வருத்தம். காங்கிரசுக்கு கேப்டன் வேண்டும் ஆனால் ஐயா வேண்டாம். அம்மாவுக்கு ஐயா வேண்டும். ஆனால் அவராக அழைக்க மாட்டார். கலைஞருக்கு கேப்டனும் வேண்டும், ஐயாவும் வேண்டும். ஆனால் பகிரங்கமாக அழைப்பு விடுக்க மாட்டார்.

இப்படி ஈகோவில் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.

இதற்கு என்னதான் முடிவு? எப்போதுதான் இவர்கள் முடிவுக்கு வருவார்கள்?

சரி. இவர்கள் எத்தகைய முடிவுக்கு வரவேண்டும்?

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து எதிர்வரும் தேர்தலை கணிப்பது மிகவும் கடினம். கடந்த தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 இடங்கள் மற்றும் புதுவையிலுள்ள ஒரு இடம் ஆக 40 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அது மேடத்திற்கு எதிராக ஏற்பட்ட அலைதான் முக்கிய காரணம். ஆனால் இந்த தேர்தலில் அப்படியேதும் அலையடிப்பதாக தெரியவில்லை.

கலைஞரின் ஆட்சியில் ஏற்பட்ட சில தவறுகளாலும் அவருடைய குடும்ப அரசியல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெறுப்பாலும் அவருடைய கட்சியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் தொகுதி பங்கீட்டிலும் வேட்பாளரை தெரிவு செய்வதிலுமே தெளிவு இல்லாத சூழலில் போட்டியிடும் அனைத்து இடங்களையும் கைப்பற்றுவது என்பது நடவாத விஷயம். மேலும் கேப்டனும் தனித்து நின்று பாமகவும் மேடத்துடன் இணைந்துவிட்டால் திமுக கூட்டணிக்கு 50 விழுக்காடு இடங்களில் வெற்றிகிடைத்தாலே அதிகபட்சம்தான்.

ஆகவே கலைஞர் சுயகவுரவத்தை விட்டுவிட்டு கேப்டனுக்கு முக்கியத்துவம் அளித்து கூட்டணிக்கு அழைக்க வேண்டும். இரண்டாவது, காங்கிரசுடன் சுமுகமான முறையில் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் மதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு அளித்த எட்டு தொகுதிகளையும் கேப்டனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். பாமக அவர்களாக வந்தால் தயங்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் வராத பட்சத்தில் திமுகவும் காங்கிரசும் அவர்களுடைய தொகுதிகளை சமமாக பகிர்ந்துக்கொள்ளலாம்.

கேப்டனும் தன்னால் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு திமுகவின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய நோக்கம் அடுத்த சட்டமன்ற தேர்தல்தான் என்றால் வெற்றிவாய்ப்புள்ள திமுக கூட்டணியில் இப்போது இணைவதில் தவறில்லை. இல்லையெனில் வாக்குகளை பிரித்து 'அம்மா'வை வெற்றிபெற செய்துவிட்ட பழிக்கு அவர் ஆளாக வேண்டிவரும். 'அம்மா' இம்முறை வெற்றிபெற்றுவிட்டால் கேப்டன் அடுத்த சட்டமன்ற தேர்தலை மறந்துவிடவேண்டியதுதான்.

**********

19 மார்ச் 2009

வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதில் தாமதம்!

மேற்கூறிய தலைப்பில் என்வழி எழுதிய பதிவுக்கு ஒரு வங்கி அதிகாரி என்ற முறையில் சில உண்மைகளை எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

இன்றைய சூழலில் நாட்டிலுள்ள பல வங்கிகளும், அவை அரசு வங்கிகளாயினும், தனியார் வங்கிகளாயினும் சரி, வீட்டுக்கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன என்பது உண்மைதான்.

அதற்கு பல காரணங்கள் உள்ளன.

அமெரிக்காவில் லீமென் ப்ரதர்ஸ் மற்றும் பல பெரிய சர்வதேச வங்கிகள், நிதிநிறுவனங்கள் ஆகியவற்றின் சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இந்தியாவையும் பாதித்துள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை.

இது நாட்டிலுள்ள அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதை
 நாம் கண்கூடாக காண்கிறோம். அதில் கட்டுமானத் துறையும் ஒன்று. இன்று நாட்டில் மிகப்பெரிய அளவில் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களும் நிதிபற்றாக்குறை காரணமாக முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக வீடு கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடந்த இரு வருடங்களில் பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் துவங்கிய பெரும்பாலான கட்டுமானப்பணிகள் பலவும் நிறைவுபெறாமல் நின்று போயுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மெட்ரோ நகரங்கள் எனப்படும் மும்பை, கொல்கொத்தா, தில்லி, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களிலும் இதே அவல நிலைதான். இத்தகைய கட்டுமானப்பணிகளில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களைக் காட்டிலும் பலமடங்கு தொகையை முடக்கிவிட்டு திணறிக்கொண்டிருக்கின்றன வங்கிகள். இவற்றில் முடக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான கடன் தொகை வாராக் கடனாகிவிடக் கூடிய சூழல் இப்போது. வருகின்ற 31.3.09க்குள் இக்கடன்களை சீர்திருத்தி அமைக்க முடியாத சூழல் ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட வங்கிகள் பலவற்றின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் பரிதாபமாக இருக்கும்!

கடந்த இரு ஆண்டுகளாகவே தொழில்துறை எதிர்பார்த்த அளவு செயல்படாததால் அவற்றிற்கு கடன் வழங்குவதில் தயக்கம் காட்டி வந்த வங்கிகள் தங்களிடமிருந்த உபரி தொகையில் பெரும் விகிதத்தை வீட்டு கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருந்தது. ஆனால் இப்போது அந்தத் துறையும் முடங்கிப் போய் தாங்கள் இதுவரை வழங்கியுள்ள கடனையே வசூலிக்க முடியாத சூழலில் மேலும் புதிய கடன்களை வழங்குவதில் தயக்கம் காட்டுவது இயற்கைதானே.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தங்களுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் நிதியமைச்சர் அரசு வங்கிகளை நிர்பந்தித்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வைத்தாலும் வங்கி அதிகாரிகள் புதிய கடன் வழங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கும் காரணம் உண்டு. இப்போது குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தை தொடர்ந்து அதே நிலையில் கடைபிடிப்பது என்பது சாத்தியமல்ல. பொதுத்தேர்தல் நடந்து முடியும் வரை வேண்டுமானால் அரசு வங்கிகள் இதை தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் அதன் பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வட்டி விகிதம் நிச்சயம் உயரும்.

கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மட்டுமே காரணமில்லை என்பதும் உண்மை. இத்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணம். இப்போதெல்லாம் பல நிறுவனங்களும் தங்களுடைய நிதிநிலைமைக்கு ஏற்றாற்போல் ஓரிரு Projectஉகளுடன் திருப்தியடைவதில்லை. வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறதே என்ற நினைப்பில் ஒரே நேரத்தில் ஐந்தாறு இடங்களில் கட்டுமான வேலைகளை துவங்கிவிட்டு, பிறகு கடனும் கிடைக்காமல் குடியிருப்புகளை விற்கவும் முடியாமல் திட்டங்களை கைவிடுவது அல்லது காலந்தாழ்த்துவது. இதுதான் இன்றைய தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.

I.T. துறை கொடிகட்டிப் பறந்த காலத்தில் எத்தனை குடியிருப்புகளைக் கொண்ட திட்டமானாலும் அனைத்து குடியிருப்புகளையும் விற்று நுகர்வோருடைய முன்தொகயில் திட்டங்களை நிறைவுசெய்து வந்த பல நிறுவனங்கள் இப்போது மொத்த குடியிருப்புகளில் பத்து விழுக்காடு குடியிருப்புகளையும் விற்க முடியாமல் திண்டாடுகின்றன. ஒன்று அல்லது இரண்டும் திட்டங்கள் போதும் என்ற முடிவுடன் இயங்கும் நிறுவனங்களால் மட்டுமே இன்றைய சூழலில் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் எந்த சூழலிலும் கணிசமான தொகையை கையிருப்பாக வைத்திருக்கும் நிறுவனங்களால் மட்டுமே வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்காத சூழலிலும் தொடர்ந்து இயங்கி வர முடிகிறது.

ஆகவே சொந்த வீடு ஒன்றை வாங்குவதே தங்களுடைய நெடுநாள் கனவு என கருதுபவர்களுக்கு நான் கூற விழைவது.

1. வங்கிக் கடன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்களுடைய சேமிப்பிலிருந்தோ அல்லது நகைகளை அடகு வைத்தோ அல்லது குறுகிய கால கடன்களை வங்கிகளல்லாத நிதிநிறுவங்களிலிருந்து பெற்றோ வீட்டு மனைகளை வாங்க முயலாதீர்கள். அடுத்த ஆறு மாத காலத்தில் வங்கிகள் கடன் வழங்கும் சூழலில் பெரிதாக மாற்றம் ஏதும் வரப்போவதில்லை.

2. புதிதாக துவக்கப்பட்டும் கட்டுமான திட்டங்களில் குடியிருப்புகளை முன்தொகை கொடுத்து (அது எத்தனை சிறிய தொகையாயிருந்தாலும்) முன்பதிவு செய்யாதீர்கள். அடுத்த ஓராண்டு காலத்திற்கு அந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற வாய்ப்பில்லை.

3. கடந்த ஆறு மாதகாலத்தில் துவக்கப்பட்ட கட்டுமான திட்டங்களில் முன்பதிவு செய்திருந்தால் அதில் மேலும் தொகையை முடக்காதீர்கள்.

4. வங்கிக்கடன் எளிதில் கிடைத்தாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு வீட்டுக் கடன் பெறுவது புத்திசாலித்தனமல்ல! அதுவும் Floating Rate கடன்களை கண்டிப்பாக வாங்கலாகாது!

'சந்தோஷமாக கடன் வாங்குங்க' என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய நானே இதை சொல்வது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதுதான் இன்றைய நிலை.

வீடுகட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடைய வருமானத்தில் ஒரு பெரும் விழுக்காட்டை முடக்கிவிட்டு திகைக்கும் நண்பர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால் இந்த எச்சரிக்கை!

***********

18 மார்ச் 2009

தேர்தல் கலாட்டா - 3

கலைஞர் காட்டுல மழை!

கோபாலபுரம் வீடு.

கலைஞரின் சக்கர நாற்காலியை சுற்றிலும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.

ஆற்காட்டார்: எப்படி தலைவரே திடீர்னு ரெண்டு பேரும் மனச மாத்திக்கிட்டாங்க?

மு.க.: (பதிலளிக்காமல் புன்னகையுடன் தன் வலது கை மாறனை பார்க்கிறார்) எல்லாம் உன் ப்ளான் தான?

(மாறன் பதிலளிக்காமல் ஒரு மர்ம புன்னகையை உதிர்க்க விஷயம் தெரிந்த ஸ்டாலினைத் தவிர மற்றவர்கள் கலைஞரை குழப்பத்துடன் பார்க்கின்றனர்.)

அன்பழகன்: என்ன தலைவரே சொல்றீங்க?

மாறன்: அது ஒன்னுமில்லை சார். தலைவர் சஜஸ்ட் பண்ணாமாதிரி நேத்து ரெண்டு, மூனு ஃபோன் கால் பண்ணேன். அதனோட பலந்தான் இதுன்னு நினைக்கேன். ஷ்யூரா சொல்ல முடியாது.

ஆற்: டாக்டர் ஐயாகிட்டருந்து இத எதிர்பார்த்ததுதான். ஆனா கேப்டனோட ஸ்டாண்ட்தான் புதுரா இருக்கு.

கலைஞர் (புன்னகையுடன் மாறனை நோக்கி கண்சாடை செய்கிறார்): யார், யார எப்படி டீல் பண்ணணுங்கற வித்தைய இந்த காலத்து பசங்கதான் நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க. நம்மள மாதிரி ஆளுங்கதான் கவுரத்த புடிச்சிக்கிட்டு தொங்கறோம். (மாறனை பார்க்கிறா) என்னப்பா நா சொல்றது சரிதானே?

மாறன்: தெரியலைய்யா, ஏதோ எல்லா இடத்துலயும் நண்பர்கள் இருக்கறதால ஈசியா முடிஞ்சிருச்சி...

(ஆற்காட்டார் பொறாமையுடன் மாறனைப் பார்க்கிறார். 'இந்த பயல ஒழிச்சிக் கட்டலாம்னு பாத்தா முடியமாட்டேங்குதே. மறுபடியும், மறுபடியும் மொளச்சி வந்துர்றானே. ஊர்ல இருக்கற கம்பெனிங்களையெல்லாம் இங்க கூட்டி வந்து பவர் ப்ராப்ளத்த உண்டாக்கி நம்ம தலையையே உருட்ட பார்த்தான். இப்ப ஊர்ல இருக்கற ஆளுங்களையெல்லாம் கூட்டணியில கொண்டுவந்து... புதுசா என்ன ப்ராப்ளத்த கொண்டு வரப்போறானோ...')

பேராசிரியர்: (மாறனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பிடிக்கவில்லை என்றாலும் அதை வெளிக்காட்டாமல்) இவங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தர, ஒருத்தர கட்டோட பிடிக்காதே எப்படி தலைவரே இவங்கள வச்சிக்கிட்டு பிரச்சாரம் பண்றது?

ஆற்காட்டார்: பேராசிரியர் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. சீட் அலாட்மெண்ட்டுலயும் பிரச்சினை பண்ணுவாங்க. நாற்பது இடத்தையும் புடிச்சிருவோம்னுல்ல கேப்டன் சொல்லிக்கிட்டிருந்தாரு நேத்து வரைக்கும்...

கலைஞர்: (புன்னகை மாறாமல் ஆற்காட்டாரைப் பார்க்கிறார்) உன் சங்கடம் புரியுதுய்யா. ஒன் கோட்டாவுல கைய வச்சிருவேனோன்னுதான பயம்? பயப்படாதே. போன தரம் வைகோவுக்கும் கம்யூனிஸ்டுங்களுக்கும் நாலு, நாலு குடுத்தோம். டாக்டர் ஐயாவுக்கு அஞ்சி. மொத்தம் பதிமூனு. அதுல பாதிய நாம எடுத்துக்குவோம். மீதிய புதுசா வந்தவங்களுக்குன்னு வச்சிருவோம். இருந்தாலும் நானா போயி டாக்டர் ஐயாகிட்ட பேசப் போறதில்லை. கேப்டன் கிட்டயும் அப்படித்தான். ரெண்டு, மூனு நாளைக்கி நா ஒன்னுமே ரியாக்ட் பண்ணப் போறதில்லை. மேலுக்கு சரியில்லைன்னு எல்லா ப்ரோக்ராமையும் கேன்சல் பண்ணிற சொல்லிட்டேன். தங்கபாலுவே இத டீல் பண்ணிக்கட்டும். (மாறனைப் பார்த்தவாறு) இதுவும் இவன் சொன்னதுதான்.

(ஆற்காட்டாருக்கு உள்ளூர கொதிக்கிறது. இருந்தும் வாய்மூடி மவுனியாக அமர்ந்திருந்தார். இந்த முடிவில் தளபதிக்கும் உடன்பாடுதான் என்றாலும் இந்த விஷயத்தில் தலைவர் மாறனை முழுவதுமாக சார்ந்திருப்பதில் சற்று மனவருத்தம் இருந்ததை அவர் தலைவரைப் பார்த்த பார்வையிலிருந்தே தெரிகிறது. பேராசிரியர் லேசான புன்னகையுடன் அமர்ந்திருந்தார் எப்போதும் போல. )

தொடரும்..

லோக்சபாவில் அத்வானியின் தீர்க்கதரிசனம்!

கடந்த ஆண்டு மே மாதம் 5ம் நாள் எதிர்கட்சித் தலைவர் அத்வானி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாடுகையில் ஆளுங்கட்சி தலைவ ப்ரனாப் அவர்களை 'மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே' என தவறாக அழைத்துவிட்டு தன்னை திருத்திக்கொள்ள முயல்கையில் நகைச்சுவை குறுக்கீடுகளுக்கு பெயர்போன சபாநாயகர் குறுக்கிட்டு 'திரு அத்வானி அவர்கள் ஆளுங்கட்சித் தலைவராக வரப்போவதை சூசகமாக தெரிவிக்கிறார் போலிருக்கிறது' என வேடிக்கையாக சொல்ல சபையே சிரிப்பொலியால் அதிர்ந்ததாம்! அது தீர்க்கதரிசனமாக மாறாமல் இருந்தால் சரி!!

17 மார்ச் 2009

தேர்தல் கலாட்டா - 2

ஐயாவின் மன(தடு)மாற்றம்.



அன்றைய தினத்தாளில் வெளியாகியிருந்த கேப்டனின் பேட்டி ஐயாவின் மேசையில் விரிந்து கிடக்கிறது. அருகில் புதல்வர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள்.

ஐயாவின் புதல்வர் (கோபத்துடன்): இத எதிர்பார்த்துத்தான் இப்ப இருக்கற கூட்டணியிலயே இருக்கலாம்னு நா சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க கேட்டாத்தான?

ஐயா: இவன் இப்படியொரு முடிவுக்கு வருவான்னு யார்யா எதிர்பார்த்தா? கூத்தாடி பயலுக பண்ற கூத்த தாங்க முடியல. இவன் என்னமோ இலங்கை தமிழர்களுக்காக எலக்ஷனையே பாய்க்காட் பண்ணணும்னு சொல்லிக்கிட்டிருந்தான். இப்ப எதுக்கு பல்ட்டி அடிக்கான்?

க.நிர் (தயக்கத்துடன்): எல்லாம் காசுக்காத்தான்யா.

புதல்வர் (எரிச்சலுடன்): என்ன சொல்றீங்க? நாம மட்டும் என்ன?

க.நிர்:அதில்ல தம்பி.. அந்த பயலுக்கு எப்படியும் ஒரு சீட்டும் கிடைக்க போறதில்ல. இருந்தாலும் போன அசெம்ப்ளி எலக்ஷன்ல கொஞ்சம் ஜாஸ்தி பர்சண்டேஜ் ஓட் கிடைச்சிருச்சில்ல? அத வச்சி பேரம் பேசி மத்தியிலருக்கற அம்மா கிட்டருந்த ஒரு நூறு ருபாய கறந்துரலாம்னுதான். அடுத்த அசெம்ப்ளி எலக்ஷனுக்கு யூஸ் பண்ணிக்கிறலாம்லே. அதான்.

புதல்வர்: (எரிச்சலுடன்) என்னது நூறு ரூபாயா? என்னங்க சொல்றீங்க?

க.நிர் (தனக்குள்... ஆமா பால் குடிக்கற புள்ள.. ஒன்னும் தெரியாது!): அதான் தம்பி பெரீய நூறு, ஏழு சைபர்.

(ஐயா சிரிக்கிறார். புதல்வர் எரிந்து விழுகிறார்) அதை கோடின்னுதான் சொல்லுமேய்யா. இங்கன யார் இருக்கா?

க.நிர். (சுற்றிலும் பார்க்கிறார்): சொல்ல முடியாது தம்பி. அந்த மதுரக்கார தம்பி ஆளுங்க எங்கனயாச்சும் மைக்க வச்சிருந்தாலும் வச்சிருப்பாய்ங்க.

(ஐயா வாய்விட்டு சிரிக்கிறார்) சரியான ஆளுய்யா நீ. நா எதையாச்சிம் குத்தம் சொல்லணுமேன்னு சொன்னத போயி நம்பிக்கிட்டு. நம்ம கோட்டைக்குள்ள எவனாச்சும் நுழைஞ்சிர முடியுமா என்ன? (சீரியசாகிறார். தன் புதல்வரைப் பார்த்து) இப்ப சொல்லுய்யா. நீ என்னதான் சொல்ல வரே.

புதல்வர்.: இங்க பாருங்கய்யா. மத்தியில சோனியா மேடம் ஆட்சிதான். அப்படித்தான் ராவுலருந்து (RAW) ஆரம்பிச்சி சிபிஐ ஏன் எஃப்.பி.ஐ வரைக்கும் சொல்றாய்ங்க. எனக்கு இன்னும் அஞ்சி வருசம் மினிஸ்ட்ரியில இருக்கணும். நா செய்ய வேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கு. அதனால இங்க இருக்கற மேடத்தோட சேரலாம்ங்கற என்னத்த விட்டுருங்க.

ஐயா தன் கட்சி நிர்வாகிகளூள் மூத்தவரைப் (சுருட்டை முடி கரு,கரு நிறம்)பார்க்கிறார். அவரும் தலையை அசைக்கிறார்.)

ஐயா: சரிய்யா. நீ சொல்றது சரின்னே வச்சிக்குவம். இப்ப கலைஞர் இருக்கற மூடுல நாமளாத்தான் போவேண்டியிருக்கும். அது நல்லாருக்குமா?

புதல்வர் (எரிச்சலுடன்): ஏன் போனா என்ன? புள்ளைங்களுக்காக இத கூட நீங்க செய்யக் கூடாதா?

ஐயா: அது எப்படிய்யா? அஞ்சாறு மாசமா அவர போட்டு கொட, கொடன்னு கொடஞ்சிட்டு.. இப்ப எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு போயி நிப்பேன்.

புதல்வர்: அதான் கலைஞர ஆஸ்பத்திரியில போயி பாத்தீங்கல்லே? அப்பவே சூசகமா சொல்லிட்டு வந்துருக்காம்லே?

(ஐயா சங்கடத்துடன் தன் நிர்வாகியை பார்க்கிறார். இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்ற தோரனையில்.. சிறிது நேரம் ச்ங்கடத்துடனான மவுனம் அந்த அறையில்..)

புதல்வர்: அப்ப ஒன்னு பண்ணுங்க.

ஐயா (ஆர்வத்துடன்): சொல்லுய்யா.

புதல்வர்: எலக்ஷன் கோலிஷன் டிசைட் பண்றதுக்கு ஒரு கமிட்டி போடுங்க, என் தலைமையில நா சொல்ற ஆளுங்க வச்சி... நா போயி கலைஞர பாத்து பேசறேன். (சுருட்டை முடிக்காரரை காட்டி) இவர்லாம் கூட வரணும்னு இல்லை. என் ஆளுங்கள கூட்டிக்கிட்டு போறேன்.

ஐயா (சோகத்துடன்): அதாவது என்னைய ஒதுங்கிக்கன்னு சொல்றே? அதானய்யா.. அத தெளிவாத்தான் சொல்லிறேன்.

புதல்வர்: அத நீங்களே புரிஞ்சிக்கிட்டா சரி.

க.நிர்: தம்பி நீங்க இப்படி பேசறது நல்லால்லை. ஒங்களுக்குன்னு ஒரு எதிர்காலத்த உண்டாக்கி குடுத்தவரே ஐயாதான்.

புதல்வர் (எழுந்து நிற்கிறார்): எனக்கு ஒங்க அட்வைஸ்லாம் தேவையில்லீங்க. எனக்கு மினிஸ்ட்ரியில செஞ்சி முடிக்கறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. ஒலகம் முழுசும் சிகரெட், ட்ரிங்க்ஸ் எல்லாத்தையும் ஒழிக்கணும். இன்னும் இதுமாதிரி ஐடியா நிறைய இருக்கு. எனக்கு அதான் முக்கியம். ஒன்னுத்துக்கும் ஒதவாத ஒங்க ஈகோ இல்லை. இது எங்க ஜெனரேஷன் டைம். அது மட்டுமில்ல. நா இப்ப சொல்றத சரியா கேட்டுக்குங்க. இப்ப எங்கூட மினிஸ்ட்ரியில இருக்கற யாருக்கும் மறுபடியும் சீட் குடுக்கக் கூடாது. நா யாருக்கும் சொல்றனோ அவங்களுக்குத்தான். சரியா இங்க்லீஷ் கூட பேசத்தெரியாதவன்லாம் செண்ட்ரல் கேபினட்ல கொண்டு ஒக்கார வச்சிட்டு, அவன்களால என் மானமே போவுது. தமிழ், தமிழ்னு இங்க வேணும்னா பேசிக்கிருங்க.. பார்லிமெண்ட் வரைக்கும் கொண்டு வந்து கேவலப்படுத்தாதீங்க. (ஐயாவின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறுகிறார்.)

க.நிர்: என்னய்யா இது இப்படி பேசிட்டு போகுது தம்பி.. நீங்களும் பதில் பேசாம இருக்கீங்க?

ஐயா (எரிச்சலுடன்): அட நீ வேறய்யா... என்னைய என்ன பண்ண சொல்றே? எல்லாம் வீட்டுலயும் நடக்குறதுதான? சரி, சரி அத விடு. இவன் எதையாச்சும் ப்ரசுக்கு அனுப்பறதுக்குள்ள நாமளும் எதையாச்சும் செஞ்சிரணும். இல்லன்னா இவனே ஒரு உட்கட்சி விரிசல உருவாக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

க.நிர் (தயக்கத்துடன்): நா வேணும்னா ஸ்டாலின பாத்து பேசிட்டு வரட்டுமா?

ஐயா (அவசரமாக): வேணாம்.. நாமளே நேரா போனா இப்ப இருக்கற சீட்டு கூட கிடைக்காம போயிரும். இந்த லட்சணத்துல இந்த கூத்தாடி பய வேற கெடந்து துள்றான்.

க.நிர்: அதனாலத்தான்யா சொல்றன். இவனும் கூட்டு சேந்துக்கிட்டு நம்ம சீட்ட பங்கு போட்டுக்கிட்டான்னா...

ஐயா (யோசனையுடன்) அதுவும் சரிதான். ஆனா நேரடியா போனாலும் நம்ம கவுரவம் போயிரும்...

க.நிர் (சுருட்டை முடிக்காரர் அல்ல) தனக்குள் 'ஆமா இப்ப மட்டும் என்னத்த வாழுதாம்.'

ஐயா (ஒரு முடிவுடன்): சாயந்தரம் ப்ரெஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அப்படியே நமக்கு வேண்டிய ரிப்போர்ட்டர்ங்கக் கிட்ட ஏடாகூடமா எதையும் கேட்டு வைக்காதீங்கன்னு சொல்லி வைங்க. நா ஜெனரலா எப்பவும் பேசறா மாதிரி பேசி வைக்கிறேன். நீங்க இப்போதைய கூட்டணியே வரும் பொதுத்தேர்தலிலும் தொடரும்னு பொதுவா சொல்லி வைங்க... கலைஞர் எப்படி ரியாக்ட் பண்றார்னு பாத்துட்டு மேக்கொண்டு என்ன செய்யலாம்னு பாப்பம். என்ன சொல்றீங்க? (சுருட்டை முடிக்காரர் தலையை அசைத்துவிட்டு தன் சகாக்களுடன் வெளியேறுகிறார்)

அடுத்த நாள் காலை தினத்தாளில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கலைஞர் தலைமியிலான கூட்டணியில் தொடர்ந்து பா.ம.க. பணியாற்றும் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அவர்கள் கூறியதாக செய்தி வருகிறது!

குறிப்பு: இதில் வரும் அனைத்தும் என் கற்பனையே. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.
**


தொடரும்..