22 செப்டம்பர் 2008

உறவுகளும் நட்பும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'கடந்து வந்த பாதை' என்ற தொடரில் என்னுடைய நெடுநாள் நண்பர் ராஜ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதை படிக்காதவர்கள் இங்கு செல்லலாம்

பகுதி I

பகுதி II

கடந்த வாரம் சென்னையிலுள்ள ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. (Conjectivitis என்கிற கண் நோயால் இரு வாரங்களுக்கு மேலாக அவதிப்பட்டு இந்த மருத்துவமனைக்கு சென்றபிறகுதான் அதிலிருந்து விடுபட்டேன்.)

நான் மருத்துவரைக் காண வரவேற்பறையில் காத்திருந்தபோது எனக்கு எதிரிலிருந்த லிஃப்ட்டிலிருந்து ஒரு சக்கர நாற்காலியில் வய்தான ஒருவரை வைத்து ஒரு பெண் (அவரும் வயதானவர்தான்) தள்ளிக்கொண்டு வருவதைக் கண்டேன். அவர் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தேன். அவரை எங்கோ பார்த்ததுபோன்று தோன்றியது. ஆனால் எப்படி கேட்பது என்று தயக்கத்துடன் அவரையே பார்த்தேன்.

அவரும் என்னை பார்த்தவாறே அருகில் வந்ததும், 'Don't mistake me....நீங்க ஜோசஃப்தானே' என்றார். நான் தயக்கத்துடன் 'ஆமாம்.' என்றேன்.. 'தப்பா நினைக்காதீங்க...அடையாளம் தெரியல...'

அவர் புன்னகையுடன். 'எத்தன வருசமாச்சி பாத்து... எப்படி ஞாபகம் இருக்கும்? ராஜ்.... FCI...' என்றார்.

ராஜ்! சட்டென்று நினைவுக்கு வர அவருடைய கரங்களைப் பற்றியவாறே அவருக்கருகில் நின்றிருந்த பெண்ணை நோக்கினேன்...'நீங்க இவருக்கு....' என்று இழுத்தேன் தயக்கத்துடன். ஏனெனில் அவருடைய தோற்றமே - நல்ல சிவந்த நிறம் - என்னுடைய நண்பருக்கு உறவினராய் இருக்க முடியாது என்று கூறியது.

அவர் பதிலளிக்காமல் என்னுடைய நண்பரைப் பார்த்தார். அவர் ஒரு பெருமூச்சுடன் 'அது ஒரு பெரிய கதை ஜோசஃப்' என்றார். தொடர்ந்து, 'நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? கண்ணுல ஏதாச்சும் பிரச்சினையா?' என்றார்.

'ஆமா சார். ரெண்டு வாரமா கண்ணுல கொஞ்சம் ப்ராப்ளம். போன வாரம் வந்து டாக்டரை பார்த்தேன். இப்ப பரவாயில்லை.. இன்னும் மருந்த கண்டினியூ பண்ணணுமான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.'

'நா வேணும்னா வெய்ட் பண்றேன். ரொம்ப நாள் கழிச்சி பாத்துட்டு இப்படியே போயிர முடியாது. உங்ககிட்ட பேசறதுக்கு நிறைய இருக்கு.' என்றார்.

'இன்னும் ஒரு பேஷண்ட்தான் அடுத்தது நாந்தான்னு சிஸ்டர் சொல்லியிருக்காங்க. மேக்சிமம் பத்து நிமிஷம் ஆகலாம்.'

ஆனால் அடுத்த நிமிடமே என்னுடைய பெயர் அழைக்கப்பட 'இருங்க இதோ வந்துடறேன்.' என்று மருத்துவர் அறையை நோக்கிச் சென்றேன். அவர் என்னுடைய கண்களைப் பார்த்துவிட்டு, 'இன்னும் ஒரு நாலஞ்சி நாளைக்கி கண்டினியூ பண்ணுங்க. அப்புறம் ஸ்டாப் பண்ணிறலாம்.' என்று விடைகொடுக்க வெளியில் வந்து என்னுடைய நண்பரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வாசலை அடைந்தேன்.

'என் கார்லயே போயிரலாம். பேசிக்கிட்டே போகலாம்.' என்றேன்.

அவர் சரியென்றாலும் அவருடன் வந்திருந்த பெண் சற்று தயங்குவதுபோல் தெரிந்தது. ராஜ் புன்னகையுடன். 'பரவால்ல பார்வதி. ஜோசப்புக்கு உன்னைப் பத்தியும் தெரியும்.' என்றார் என்னை பார்த்தவாறு.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆயினும் தயக்கத்துடன், 'இவங்க... உங்க பழைய பிராமின் ஃப்ரெண்ட்....' என்றேன்..

ஆமாம் என்றவாறு அவர் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி நிற்க நான் அவரை பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு எதிர்ப்புற கதவை திறந்து அந்த பெண்ணை அமரச்செய்தேன்.

என்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து பிரதான சாலையில் கலக்கும் வரை காத்திருந்த அவர் மெள்ள பேச ஆரம்பித்தார். என்னுடைய கவனம் சாலையில் இருந்தாலும் அவர் கூறியதைக் கேட்டு மனம் நைந்துப் போனது. இப்படிப்பட்ட உறவுகள் தேவைதானா என்று தோன்றியது.

****

அவரைப் பற்றிய முந்தைய பதிவில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் தனியாக வசித்துவந்ததாக குறிப்பிட்டிருந்தேன்.

நான் அவரை சந்தித்த அடுத்த சில மாதங்களில் அவருடைய உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவருடைய இளைய சகோதரருக்கு தெரிவித்துள்ளனர். அவரும் வந்து பார்த்துவிட்டு என்னுடைய நண்பரின் நிலையைப் பார்த்துவிட்டு, 'என் கூடவே வந்துருங்கண்ணே.' என்று அழைத்துச் சென்றிருக்கிறார்.

'ஆனா என் கொழுந்தியாளுக்கு என்னெ வீட்ல வச்சிக்க விருப்பமேயில்ல ஜோசஃப். ரெண்டு மாசம் பல்ல கடிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நம்ம பழைய காலனிக்கே போயிரலமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பத்தான் பார்வதி வீட்டுக்கு வந்தா.' என்றார் ராஜ்.

பார்வதிதான் என்னுடைய நண்பர் திருமணம் செய்துக்கொள்ள விரும்பிய பிராமண வகுப்பைச் சார்ந்த பெண். ஆனால் அவருடைய வீட்டில் சம்மதிக்காமல் போகவே வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டவர். அவருக்கு ஒரு மகனும் மகளும். இருவருக்கும் திருமணம் முடிந்து சென்னையில்தான் வாசம். பார்வதியின் கணவர் இறந்தபிறகு அவரால் மருமகளுடன் ஒத்துப்போக முடியவில்லை. மகனே ஒரு தனிவீட்டில் தன் தாயை குடி வைத்துவிட தனியாளாய் போனார் பார்வதி.

'மக கூட போய் இருந்திருக்கலாம். ஆனா அவ அவங்க மாமனார், மாமியாரோட இருக்கா. எப்பவாச்சும் ஒருதரம் போய் வந்தாலே அவங்க மாமியார் ஒரு மாதிரி பேசுவாங்க. அதனால அங்கயும் போய் இருக்க முடியலை. ஊருக்குள்ளயே இருந்தும் பேரப் பிள்ளைங்களக் கூட இருக்க முடியலையேன்னு தோனும். அதுவும் ரிட்டையர் ஆனதுக்கப்புறம் எதுக்குடா இந்த வாழ்க்கைன்னுல்லாம் கூட தோனும். அப்பத்தான் இவர் நினைப்பு வந்துது. இவர் என் நினைப்பாவே கல்யாணம் பண்ணிக்காம இருக்கார்னு தெரியும். இவர் ஆஃபீஸ்ல போய் கேட்டு இவர் விலாசத்த தேடிக்கிட்டு போய் பார்த்தேன். ஆனா நா அங்க போனதே இவருக்கு பெரிய பிரச்சினையா போயிருச்சி....' என்ற பார்வதி கண்கள் கலங்கிப் போய் மேலே தொடர முடியாமல்....

சிறிது நேரம் மவுனமாய் மூவரும் அமர்ந்திருந்தோம். பிறகு அவரே சுதாரித்துக்கொண்டு தொடர்ந்தார். 'இவர பாத்துட்டு வந்ததுலருந்தே எனக்கு மனசே சரியில்லைங்க. என்னாலதான் இவருக்கு இந்த நிலைமைன்னு நினைச்சி, நினைச்சி ஒரு வாரமா அவஸ்த்தைப்பட்டேன். சரி, வர்றது வரட்டும்னு மறுபடியும் இவர் தம்பி வீட்டுக்கு போனேன். இவர் அங்க இல்லை. ஆனா இவரோட தம்பி வய்ஃப் என்னெ ரொம்ப மரியாதையில்லாம பேசி அவர் எங்கருக்கார்னு எங்களுக்கு தெரியாது இங்க வந்து மானத்த வாங்காதீங்கன்னு சொல்லி அசிங்கப்படுத்திருச்சி. ஆனா பக்கத்து ஃப்ளாட்டுக்காரங்க இவரோட அட்றச குடுத்து 'நீங்களாச்சும் போய் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்கம்மா. உடம்பு சரியில்லாத மனுசன்னு சொன்னாங்க. நா அங்க போயி இவர் குடியிருந்த போர்ஷன பாத்தப்ப மனசு பதறிப்போச்சி. கட்டாயப்படுத்தி வீட்ட காலி பண்ண வச்சி எங்கூடவே கூட்டிக்கிட்டு போயிட்டேன். அதுவும் பிரச்சினையாத்தான் முடிஞ்சிது.' என்றவர் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் மவுனமாகிப் போனார்.

'பார்வதி என்னெ பாக்க வந்தது என் தம்பி குடும்பத்துக்கு புடிக்கல... நா இவளோட போய் இருந்தது இவளோட சன்னுக்கு புடிக்கல. 'இந்தாளூ இங்க இருக்கறதாருந்தா நா இந்த பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டான்.' என்று தொடர்ந்தார் ராஜ் சோகத்துடன். 'நா மட்டும் பட்டுக்கிட்டுருந்த கஷ்டம் பாவம், இவளையும்.....'

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒன்றும் சொல்ல முடியாமல் மனம் கணத்துப் போக பாதையில் கவனத்தை செலுத்தினேன்.

'அத்தோட நிக்கல அந்த பாவி.. நா அவன் சொன்னத கேக்கலேன்னுட்டு நா குடியிருந்த வீட்டுக்காரர உசுப்பேத்தி என்னை அங்கிருந்தே காலி பண்ண வச்சிட்டான். எங்கயும் வீடு கிடைக்காம இவர் தன்னோட ஆஃபீஸ்ல போயி கேக்க அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இப்ப நாங்க இருக்கற வீட்டை குடுத்தார். வாடகைன்னு பெருசா இல்லை. இப்ப ரெண்டு வருசமா அங்கதான் இருக்கோம்.' என்றவாறு பார்வதி விலாசத்தை கூற அடுத்த அரை மணியில் அங்கு சென்றடைந்தோம்.

தனி வீடு. சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. நடுத்தரத்துக்கும் சற்று உயர்ந்தவர்கள் குடியிருந்த சூழல் என்பதால் இவர்களுடைய விஷயத்தில் தலையிட யாரும் இருக்கவில்லை.

'நாங்க ரெண்டுபேருமே எங்க குடும்பத்துக்காகன்னு சொல்லி ஒருத்தர் மேல் ஒருத்தருக்கிருந்த அன்பைக் கூட சாக்ரிஃபைஸ் பண்ணோம். ஆனா ரெண்டு குடும்பங்களுக்குமே நாங்க இப்ப வேண்டாதவங்களா போய்ட்டோம். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எங்கள புரிஞ்சிக்கிட்ட அளவுக்குக் கூட எங்க குடும்பத்துலருக்கறவங்க எங்கள புரிஞ்சிக்கலையேங்கறத தவிர எங்களுக்கு எந்த வருத்தம் இல்லை ஜோசஃப்.' என்று நான் விடைபெற்றபோது ராஜ் கூறினாலும் அவருடைய குரலில் இருந்த சோகம் என்னை கஷ்டப்படுத்தியது.

உறவுகள் வேண்டாம் என்று ஒதுக்க அலுவலக நட்பு இவருக்கு துணை சென்றதை நினைத்துப் பார்க்கிறேன். உறவுகளைவிட நட்புதான் சிறந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தோன்றும் நட்புக்கு இணை எந்த உறவும் இல்லை.

ராஜும் பார்வதியும் இப்போதும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். இளம் வயதில் அவர்களைப் பிரித்து வைத்த விதி முதிய வயதில் அவர்களை இணைத்திருக்கிறது, நல்ல நண்பர்களாக... தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் துணையாக...

*********

12 செப்டம்பர் 2008

மலேசியாவில் இந்தியர்களின் அவல நிலை

சமீபத்திய மலேசிய பயணத்தில் எனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களில் ஒன்று கே.எல். விமானநிலையத்தில் நடந்த இம்மிக்ரேஷன் என்ற பெயரில் மலேசியர்கள் நடத்திய கூத்து.

என்னுடைய விமானம் சென்றடைந்தபோது நேரம் காலை 4.45. அதிகம் போனால் நூறு பயணிகள். அந்த நேரத்தில் வேறெந்த விமானமும் வந்திருக்கவில்லை. ஆனால் இம்மிக்ரேஷன் முடிந்து வெளியில் வந்தபோது மணி ஏழு!

கடந்த வருடம் (டிசம்பர் மாதம்) சென்றபோது விமானத்திலேயே இம்மிக்ரேஷன் படிவம் வழங்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கி அதை பூர்த்தி செய்து கவுண்டரில் கொடுத்து அடுத்த நிமிடமே பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து அனுப்பிவிட்டார்கள். ஆனால் இந்த முறை படிவம் ஏதும் வழங்கப்படவில்லை. கேட்டால் தேவையில்லை என்றார் விமான பணிப்பென். ஓஹோ இம்மிக்ரேஷன் முறையை எளிதாகிவிட்டனர் போலும் என்று நினைத்தேன்.

அதுதான் இல்லை என்பது எனக்கு முன்னால் நின்றிருந்த ஒவ்வொரு பயணிக்கும் நிகழ்ந்ததை பார்த்தபோதுதான் புரிந்தது. பய்ணிகளின் பாஸ்போர்ட் விவரத்தை கணினியில் நுழைத்து படு சீரியசாக ஆராய்வதும், ஒருசில பயணிகளின் கைபெருவிரல் ரேகைகளை பதிந்துக்கொள்வதும், அதிலும் திருப்தியடையாமல் மேலதிகாரியிடம் சென்று விவாதிப்பதுமாக ஒவ்வொரு பயணிக்கும் சுமார் கால் மணி நேரம் எடுத்தது.

என்னுடைய முறை வந்தது. என்னுடைய பாஸ்போர்ட்டையே துருவி, துருவி ஆராய்ந்த பணிப்பெண் சட்டென்று எழுந்து மேலதிகாரியிடம் சென்று என்னுடைய பாஸ்போர்ட்டைக் காட்டி ஏதோ சொல்ல அவர் அங்கிருந்து என்னை பார்வையால் துளைத்தார். அடடா டெரரிஸ்ட் என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைத்தேன். மேலதிகாரி சிறிது நேரத்தில் பாஸ்போர்ட்டை வாங்கி என்னுடைய பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தில் கையொப்பம் இட்டுவிட்டு தன்னுடைய முத்திரையையும் பதித்து திருப்பித்தர பணிப்பெண் திரும்பிவந்து தன் இருக்கையில் அமர்ந்து அடுத்த இருக்கையில் இருந்தவரிடம் மீண்டும் என்னுடைய விசாவைக் காட்டி ஏதோ கூற அவர் சிரித்தார்.

பிறகு பணிப்பென் என்னுடைய பாஸ்போர்ட்டில் அவர் மேசையிலிருந்த முத்திரையை பதித்தவாறே 'யூ ஆர் கமிங் டு மலேசியா ஃபார் தி செக்கண்ட் டைம் இன் சிக்ஸ் மந்த்ஸ் சார். யூ ஹேவ் எனிபடி ஹியர்?' என்றார். அத்தனை நேரம் பொறுமையுடன் நின்றிருந்த நான் சற்றே எரிச்சலுடன், 'என்னுடைய விசா ஒரு வருடம் செல்லுபடியாகும். எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லக் கூடியது. பிறகு ஏன் இந்த கேள்வி?' என்றேன்.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை போலிர்ந்தது. ஒரு நொடி என்னையே முறைத்துப் பார்த்துவிட்டு 'யூ மே கோ' என்றவாறு பாஸ்போர்ட்டை திருப்பியளித்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டு வெளிவாசலுக்கு செல்லும் வழியில் என்னுடைய பாஸ்போர்ட்டை ஆராய்ந்தேன். பிறகுதான் தெரிந்த்து எதற்காக அந்த பணிப்பெண் அதை மேலதிகாரியிடன் கொண்டு சென்றார் என்பது.

எனக்கு ஒரு வருட விசா அளிக்கப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தியதி. நான் கே.எல் சென்றடைந்தது டிசம்பர் 20ம் தேதி. திரும்பி மலேசியாவில் இருந்து புறப்பட்டது ஜனவரி 5ம் தியதி, அதாவது 05.01.2008. ஆனால் என்னுடைய பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டப்பட்டிருந்த தேதி 05.01.2007! அதாவது இம்மிக்ரேஷன் முத்திரையில் தியதியையும் மாதத்தையும் மாற்றியவர்கள் வருடத்தை மாற்ற தவறியிருக்கிறார்கள். ஆக டிசம்பர் மாதம் வழங்கப்ப்ட்ட விசாவில் நான் அவ்வருடத்திய ஜனவரி மாதத்திலேயே பயணித்திருக்கிறேன்.
இது ஒரு குமாஸ்தா தவறு (Clerical error). இதற்காக கால் மணிநேரம் செலவழித்திருக்க வேண்டுமா என்று நினைத்தேன். சரி என்னுடைய விஷயத்தில் குழப்பம் இருந்தது. ஆனால் எதற்காக அனைவருடைய பாஸ்போர்ட்டையும் இந்த அளவுக்கு துருவி, துருவி பார்க்கவேண்டும்? மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து இந்தியர்களையுமே டெரரிஸ்ட் என்றோ இம்மிக்ரேஷனை ஏமாற்றிவிட்டு நிரந்தரமாக தங்கிவிடுவார்கள் என்றோ மலேசியர்கள் நினைத்துவிட்டார்களோ?

கடந்தமுறை சென்றதற்கும் இந்த முறை சென்றதற்கும் இடைபட்ட காலத்தில் மலேசியாவில் இந்தியர்களின் நிலைமை மோசமாகத்தான் போயுள்ளது என்பதை உணரமுடிந்தது. மலேசியர்களிடமிருந்து இந்தியர்கள் வீடு வாங்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு, இந்தியர்களுடைய வியாபார ஸ்தலங்களில் இனியும் இந்தியர்களை வர அனுமதிப்பதில்லை என்கிற முடிவு என ஒவ்வொரு முடிவும் இந்தியர்களுக்கு எதிராகவே இருப்பதை என்னுடைய மலேசிய வாழ் உறவினர்கள் கூற கேட்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு மலேசிய பாராளுமன்றத்தில் ஒரு மலேசிய துணை அமைச்சர் 'இந்தியனையும் பாம்பையும் கண்டால் முதலில் இந்தியனைத்தான் அடிக்க வேண்டும்' என்றாராம் பகிரங்கமாக. உடனே அவையிலிருந்த இந்திய மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆட்சேபிக்க ஒப்புக்கு மன்னிப்பு கேட்டாராம்.

இந்தியர்களின் வளர்ச்சியைக் கண்டு மலாய் மக்கள் அஞ்சுவதால்தான் இப்படியெல்லாம் முடிவு எடுக்கப்படுகிறது என்பது மிகத்தெளிவாக தெரிந்தது.

*********

11 செப்டம்பர் 2008

அரசு அலுவலகங்களின் அவலநிலை

பல வருடங்கள் கழித்து ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று காத்து கிடக்க வேண்டிய அவலநிலை எனக்கு நேற்று எனக்கு ஏற்பட்டது.

சமீப காலமாக அரசு மான்யத்துடன் வினியோகிக்கப்படும் எரிவாயு குப்பிகள் குடும்ப அடையாள அட்டை (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் எரிவாயு நிறுவனங்கள் தீவிரமாகியுள்ளனவாம். ஆகவே இரு நாட்களுக்கு முன்பு refill எரிவாயு குப்பி ஒன்றிற்கு பதிவு செய்ய தொலைபேசி செய்தபோது 'உங்களுடைய குடும்ப அட்டையுடன் வந்து பதிவு செய்தால் மட்டுமே குப்பி வழங்கப்படும்' என்றனர்.

நான் கேரளத்திலிருந்து மாற்றலாகி வந்தபோது அங்கு இருந்த குடும்ப அட்டையை சரண்டர் செய்து சான்றிதழ் பெற்றிருந்தாலும் அதை சென்னை உணவுப்பொருள் வழங்கு கழக (சிவில் சப்ளை கார்ப்பரேஷன் - சி.ச.கா) அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டையை பெற பலமுறை முயன்றும் முடியவில்லை. என்ன காரணம் என்கிறீர்களா? எல்லாம் நம்முடைய வள்ளல் முதல்வர் அறிவித்த இலவச எரிவாயு அடுப்பு திட்டம்தான். அடுப்பு கிடைத்ததும் அடுத்த வேலை எரிவாயு இணைப்புதானே. கடந்த சில மாதங்களாக சென்னையிலுள்ள சி.ச.காபே அலுவலகங்களில் இத்தகையோரின் கூட்டம்தான். அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய சூழல். எந்த ஒரு உணவுப் பொருளும் தேவையில்லை என்று கருதும் என்னைப் போன்றவர்களுக்கு தனியாக ஒரு வரிசை வைத்திருந்தால் எப்போதோ புதிய குடும்ப அட்டையைப் பெற்றிருக்க முடியும். அலுவலக நுழைவாயிலுக்குள் கூட புக முடியாத அளவுக்கு கூட்டம் அடைத்துக்கொண்டு நிற்பதை பார்த்துவிட்டு வெறுத்துப்போய் திரும்பிய நாட்கள் பல உண்டு.

ஆனாலும் இம்முறை எரிவாயு வினியோகி மிகவும் பிடிவாதமாக குடும்ப அட்டையோ அல்லது அதற்கு விண்ணப்பித்ததற்கான சான்றை சமர்ப்பிக்காவிட்டால் எரிவாயு குப்பி கிடைக்காது சார் என்று கையை விரித்துவிட வேறு வழியில்லாமல் சி.ச.கா அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று சென்றேன். இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. செவ்வாய் கிழமை அன்று சென்றால் கூட்டம் அதிகமாக இருக்காது என்றார் என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர். ஏனென்றால் செவ்வாய் வெறுவாயாம்! அதாவது செவ்வாய் அன்று துவங்கும் எந்த காரியமும் உருப்படாதாம்!! ஆஹா, இதுதான் நமக்கு நல்லது என்று நினைத்து செவ்வாய் அன்று செல்வதென தீர்மானித்தேன்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்த சமயம் உப்புசப்பில்லாத விஷயத்துக்கு வாதிட துவங்கி அது பெரும் விவாதமாக மாறி அலுவலகத்திலிருந்து வெளியேறியது நினைவுக்கு வர வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பே நாட்காட்டியில் இன்றைக்கு என்னுடைய ராசிக்கு என்ன போட்டிருக்கிறது என்று பார்த்தேன். இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றுதான்! மகரத்திற்கு சாந்தம் என்று இருந்தது.

ஆஹா! நமக்கு தேவையான ஆலோசனைதான் என்று நினைத்துக்கொண்டேன். எந்த ஒரு சூழலிலும் நிதானத்தை இழந்துவிடலாகாது என்று தீர்மானித்துக்கொண்டேன். அப்படியே புறப்பட்டு சென்றிருக்கலாம். இதை என் மனைவியிடம் கூற 'சாந்தம்னா போட்டுருக்கு? உங்களுக்கும் அதுக்கும் ரொம்ப தூரமாச்சே இருங்க நானும் வரேன்' என்று ஒட்டிக்கொண்டார்.

சரி வேறுவழியில்லை என்று அவரையும் அழைத்துக்கொண்டு அரும்பாக்கம் சி.ச.கா அலுவலக வாசல்கள் திறக்கப்படுவதற்கு முன்பே சென்றடைந்தோம். என் நண்பர் கூறியதுபோலவே பத்து, பதினைந்து நுகர்வோர் மட்டுமே காத்திருந்தனர். அதில் பெரும்பாலோனோர் அலுவலக பணியாளர்கள் போல் இருந்தனர். ஆகவே இடிபடாமல் அலுவலகத்திற்குள் நுழைய முடிந்தது. வழக்கம்போலவே அலுவலக நேரம் துவங்கி அரைமணி கழிந்து பணியாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர காத்திருந்த நுகர்வோர் கூட்டம் பொறுமையிழந்து 'விசாரணை' என்ற மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்தவரை மொய்க்க துவங்கியது. நான் அதில் கலக்காமல் என்ன நடக்கிறது என்று எட்ட நின்று கவனித்தேன். ஒருநாள் விடுப்பு எடுத்து வந்திருந்ததால் காத்திருந்து என்னுடைய பணியை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். 'என்னங்க நீங்க. கூட்டத்தோடு கூட்டமா போய் நிக்காம...' என்று முனுமுனுத்த என் மனைவியை சமாதானப்படுத்தினேன். 'இவங்க இப்படி போய் மொய்க்கறது அந்தாளுக்கு பிடிக்காது. நீ வேணும்னா பார்.' என்று நான் சொல்லி முடிக்கவில்லை. எரிமலையாய் வெடித்தார் அவர். பதிலுக்கு அதிகாரி போல் உடையணிந்திருந்த ஒருவர் பொறுமையிழந்து பேச அடுத்த அரை மணி நேரத்திற்கு ஒரே களேபரம். 'நான் யார்னு தெரியாத பேசிட்டேயில்ல. எங்க போயி என்ன கம்ப்ளெய்ண்ட் குடுக்கணும்னு எனக்கு தெரியும்யா. நா யார்னு காமிக்கேன்.' என்றவரை அலட்சியத்துடன் பார்த்த அரசு பணியாளர் 'அதச் செய்ங்க முதல்ல.' என்று கூறிவிட்டு 'ஒவ்வொருத்தரா வந்தா அட்டெண்ட் பண்ணுவேன். இல்லன்னா இப்படியே நின்னுக்கிட்டிருக்க வேண்டியதுதான்.' என்று எரிந்துவிழுந்தார் மற்றவர்களிடம். 'பாத்தியா சொன்னேன்ல' என்றேன் மனைவியிடம் அத்துடன் அருகில் இடப்பட்டிருந்த மரப்பெஞ்சில் அமர்ந்துக்கொண்டு 'நீயும் உக்கார். அந்தாளு இவங்கள டிஸ்போஸ் பண்ணி முடிக்கட்டும்.' என்று அவரையும் அமரச்செய்தேன்.

அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது. வந்திருந்த ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒவ்வொரு ஏச்சு. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வந்தவர்களை விரட்டியடிப்பதில் இந்த அரசு ஊழியர்களுக்கு என்னதான் ஆனந்தமோ தெரியவில்லை. ஒரு இளம்பெண் (கேரளத்தைச் சார்ந்தவர். மலையாளம் கலந்த தமிழில் உரையாடினார்) கையில் குழந்தையுடன் 'காஸ் ஏஜன்சியில சிலிண்டர் குடுக்காதுன்னு சொல்லிட்டாங்க சார். ரேஷன் கார்டு வேணுமாம். ஓட்டர் கார்ட் இருக்குது.' என்றார்.

'இது இருந்தா போறுமா? கேரளாவுலருந்து சரண்டர் சர்டிஃபிக்கேட் கொண்டுவா, பாக்கலாம்.' என்னுடைய மனைவி என்னைப் பார்த்தார். 'நம்மக்கிட்ட சரண்டர் சர்ட்டிஃபிக்கேட் இருக்குல்ல. அப்ப நமக்கு பிரச்சினை இருக்காது.'

'அதெப்படி சார் அது எங்கப்பா பேர்லல்ல இருக்குது.' என்றார் அந்த இளம்பெண்.

'அதுல உன் பேர் இருக்கும்ல அத டெலிட் பண்ணி ஒரு சர்ட்டிஃபிக்கேட் வாங்கிட்டு வா பாக்கலாம்.'

'அதுக்கு ரொம்ப நாள் ஆவுமே சார். அதுவரைக்கு சிலிண்டருக்கு என்ன பண்றது?'

எரிந்து விழுந்தார் அரசு பணியாளர். 'அத இங்க வந்து சொல்லாத. சொல்ல வேண்டிய எடத்துல போயி சொல்லு. இப்ப என் டைம வேஸ்ட் பண்ணாத போ.'

அந்த பெண் இதை எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது வசதியான வீட்டிலிருந்த வந்ததைப் போன்ற தோற்றம். கண்கள் கலங்கிப்போக குழுமியிருந்தவர்களை பரிதாபமாக பார்த்தது அந்த பெண். அனைவருமே திருப்பி பரிதாபமாக பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய இயலாமல்..

'சாந்தம்' என்ற எச்சரிக்கையை மட்டும் படிக்காமல் வந்திருந்தால் நிச்சயம் அதை இழந்திருப்பேன். என் முகம் போன போக்கை கவனித்த என்ன்னுடைய மனைவி என்னுடைய கைகளை பிடித்து அழுத்தினார். 'பொறுமையாயிருங்க. நாம வந்த வேலைய மட்டும் பார்ப்போம்.'

வரிசையில் நின்றிருந்த ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையுமே இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வெற்றிகரமாக விரட்டியடித்தார். வரிசை இரண்டு மூன்று பேராக குறைய என் மனைவி எழுந்து நின்றார். 'வாங்க. என்னதான் சொல்றார்னு பார்ப்போம்.'

முந்தைய நாளே சி.ச.கா
வலைத்தளத்திற்கு சென்று புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சென்றிருந்தேன். ஆனால் அதை ஏறெடுத்தும் பாராமல். 'சார் இந்த ஃபார்ம்லாம் போறாது. பக்கத்து ஜெராக்ஸ் கடையில விப்பாங்க. அத ஃபில் அப் பண்ணி ஒங்க ஃபோட்டோ ஒட்டி கொண்டாங்க.' என்றார்.

'சாந்தம், சாந்தம்' என்றார் என் மனைவி முனுமுனுத்தார். பதில் பேசாமல் அலுவலகத்தை விட்டு வெளியேறி இரண்டு கடைகள் தள்ளியிருந்த டீக்கடை மற்றும் ஜெராக்ஸ் கடைக்கு சென்றேன். என்னைப் பார்த்ததுமே 'என்ன சார் ரேஷன் கார்ட் அப்ளிகேஷனா. மூனு ரூபா.' என்றார். வாங்கி பார்த்தேன். என் கையிலிருந்த அதே படிவம்தான். 'சரி வாங்குங்க. என்ன பண்றது?' என்றார் என் மனைவி. நான் விடாமல் 'ஏங்க ஜெராக்ஸ் எடுக்கறதுக்கு ஒரு ரூபாதான் அதென்ன இந்த ஃபார்முக்கு மூனு ரூபா வாங்கறீங்க?' என்றேன். 'இவருக்கு ஒரு ரூபாதான் சார். மீதி ரேஷன் ஆஃபீஸ் ஸ்டாஃபுக்கு' என்றார் டீ அருந்திக்கொண்டிருந்த ஒருவர் ஏளனமாக.

'சார் ஃபோட்டோ ஒட்டறதுக்கு கம் வேணுமா?' என்றார் கடையில் நின்ற சிறுவன் புன்னகையுடன். 'சின்ன கம் பாட்டில் இருக்கு ஒரு ரூபாதான்.' இது அங்கு தினசரி வாடிக்கை போலிருந்தது.

கையிலிருந்த படிவத்தில் ஒட்டியிருந்த என்னுடைய புகைப்படத்தை எரிச்சலுடன் பிய்த்து எடுத்து புது படிவத்தில் ஒட்டி நான் கொண்டு வந்திருந்த படிவத்தில் நிரப்பியிருந்த தகவல்களையே மீண்டும் பூர்த்தி செய்து மீண்டும் அலுவலகம் நுழைந்து அதற்குள் குழுமியிருந்த நுகர்வோர் வரிசையில் நின்று சமர்ப்பிக்க. 'ஓட்டர் ஐடி கார்ட் இல்லையே.' என்றார். நான் நிதானமிழந்து 'டெலிஃபோன் பில் காப்பி இருந்தா போறும்னு அந்த ஃபார்ம்லயே இருக்கே.' என்றேன். 'அதுக்கு ஏன் சார் இந்த கத்து கத்தறீங்க?' என்றவர் 'சரி சரி அந்த கவுண்டர்ல போயி குடுத்து அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கிக்கிருங்க.' என்றவாரு அலட்சியத்துடன் என்னிடமே அதை திருப்பித்தர எங்கே நான் பதிலுக்கு பேசிவிடுவேனோ என்று பயந்து என்னுடைய மனைவி என்னை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் குறிப்பிட்டிருந்த கவுண்டருக்கு முன்னால் சுமார் இருபது பேர் அடங்கிய வரிசை.நிற்க கவுண்டரை அடைந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆனது.

என்னுடைய மனைவியை வரிசையில் நிற்க வைத்துவிட்டு அந்த அலுவலகத்தை மெள்ள வலம் வந்தேன்.

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழக முதல்வரின் அலுவலக அவலத்தை நினைவுபடுத்தியது அந்த அலுவலகம். முப்பதாண்டுகள் என்பது எவ்வளவு நீண்ட காலம்! ஆனாலும் அன்று நான் கணட அதே அவலம் இப்போதும் நீடித்திருந்தது.

நிலத்தில் சமமாக நிற்க முடியாத மேசை, நாற்காலிகள். விசாரணை அதிகாரியின் மேசையின் ஒரு காலுக்கு கீழே நான்கைந்து கற்கள் முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு குமாஸ்தாவின் இருக்கை சீட்டில் வலைப்பின்னல் சுத்தமாக கிழிந்து போயிருந்தது. அதன் மீது ஒரு மரப்பலகையை வைத்து அமர்ந்திருந்தார்! கவுண்டர்கள் என்ற பெயரில் அங்கங்கே ஓட்டைகளுடன் ஒரு பழைய காலத்து மரத்தடுப்பு. அதற்கு பின்னால் சாய்மானம் இல்லாத இருக்கைகள். எத்தனை நேரம்தான் இவர்களால் பின்னால் சாய்ந்து அமராமல் இருக்கமுடியும் என்று நினைத்தேன். பெண் குமாஸ்தாக்கள் எளிதில் ஏறி அமரமுடியாமல் இருந்தது அந்த இருக்கைகள். எங்கும் கணினிமயம் என்ற இந்த யுகத்தில் ஒரு கணினி கூட இருக்கவில்லை. குமாஸ்தாக்கள் அமர்ந்திருந்த இருக்கைகளைச் சுற்றிலும் தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகள், புத்தகங்கள்.. எங்கும் எதிலும் ஒரே தூசி மயம். ஹைதர்காலத்து மின் விசிறிகள் மெதுவாக சுழல காத்திருந்த நுகர்வோர் தங்கள் கைகளிலிருந்து விண்ணப்பங்களை விசிறிக்கொண்டிருந்தனர். அப்படியிருக்க சுமார் பத்து மணி நேரம் அலுவகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை!

சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது இப்படிப்பட்ட அவலநிலையில் பணியாற்றும் ஊழியர்களின் மனநிலை வேறெப்படி இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றியது.

மின்சாரமே இல்லாத இல்லங்களுக்கு வண்ணத் தொலைகாட்சி பெட்டி என்று கோடிக்கணக்கில் விரயம் செய்யும் இந்த் அரசு தன்னுடைய ஊழியர்களுடைய நலனில் அக்கறை காட்டாதிருப்பது ஏனோ?

*****