23 ஜூன் 2008

க்விட் ப்ரோ க்வோ'

நான் சமீபத்தில் (1995ல்தான்) மும்பையில் பணியாற்றியபோது என்னுடைய வட்டார அலுவலகத்தில் உயர் அதிகாரியாய் இருந்தவர் படு ஜாலியான மனிதர். அவரால் பேசாமல் இருக்கவே முடியாது. அந்த அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் (வட்டார மேலாளர்) அவருக்கு நேர் எதிர். மனிதர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார். பிறகு பகலுணவு வேளையில் வெளியில் வருவார். அலுவலகத்திலுள்ளவர்கள் உண்பதற்கு அரை மணிக்கு முன்பு பொது உணவறைக்கு சென்று தனியாக அமர்ந்து உணவருந்திவிட்டு சென்றுவிடுவார். அவருக்கு 'சரியான முசுடு' என்ற பட்டப்பெயரும் உண்டு.

நான் குறிப்பிட்ட உயர் அதிகாரி அந்த அலுவலகத்தில் 2ம் ஸ்தானத்தில் இருந்தவர். ஆனால் ஒட்டுமொத்த அலுவலகமும் இவரைத்தான் தன்னுடைய தலைவராக ('தல' ன்னும் சொல்லலாம்) கொண்டிருந்தனர். அலுவலக விஷயங்களில் மட்டுமல்லாமல் 'வெளி' விஷயங்களிலும் அவர்களுக்கு அவர்தான் 'தல'. குறிப்பாக மாலை நேர 'தாக சாந்தி' நேரங்களில்.

அவருக்கு வேறொரு பழக்கமும் உண்டு. தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நெருங்கிப் பழகுவது. அதாவது சமயம் கிடைக்கும்போதெல்லாம் (வார இறுதி நாட்களில்) அவர்களுடைய வீடுகளுக்கு செல்வது அவருடைய வழக்கம். அப்போது அந்த அலுவலகத்தில் சுமார் பத்து கடைநிலை மற்றும் இடைநிலை அதிகாரிகள் இருந்தனர். நான் அங்கிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவிலிருந்த செம்பூர் கிளையில் மேலாளராக இருந்தேன். அவர் அந்த அலுவலகத்தில் வந்து இணைவதற்கு முன்பு வட்டார அலுவலகத்தில் பணியாற்றியிருந்ததால் நானும் அவர்களுடைய அலுவலகத்தின் அங்கமாகவே கருதப்பட்டேன்.

எனவே என்னையும் சேர்த்து பதினோரு குடும்பங்கள். இதற்கெனவே ஒரு டைரியும் வைத்திருப்பார். ஒவ்வொரு வாரம் ஒரு வீடு. அவரும் அவருடைய மனைவி மட்டுமே மும்பையில் இருந்தனர். மகள் மற்றும் மகன் கேரளத்தில் மாமியார் வீட்டில். ஆகவே தம்பதி சமேதராய்தான் விசிட்டுக்கு வருவார்கள். அவரைப் போலவே அவருடைய மனைவியும் கலகலப்பானவர் என்பதால் அவருடன் சேர்ந்துக்கொண்டு நன்றாக அரட்டையடிப்பார். புறப்படும்போது 'நான் வந்து அட்டெண்டன்ஸ் குடுத்தாச்சி' என்று கூறிக்கொண்டே விடைபெறுவார். அதாவது நாம் அவருடைய வீட்டுக்கு கூடிய விரைவில் செல்ல வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நம் வீட்டுக்கு மீண்டும் வருவார் என்று பொருள்!

இதைத்தான் quid pro quo என்றேன். அதாவது "Something for something; that which a party receives (or is promised) in return for something he does or gives or promises." இதுதான் பொருள்.

****

இது நம் பதிவுலகுக்கும் பொருந்தும். புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். பின்னூட்ட ரகசியமும் இதுதான்.

நாளைய பதிவு: 'பதிவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா?'

14 கருத்துகள்:

  1. //நான் சமீபத்தில் (1995ல்தான்) //

    உங்களுக்கும் தொற்றிக் கொண்டதா ?
    :)

    ஜோசப் ஐயா,

    // 'நான் வந்து அட்டெண்டன்ஸ் குடுத்தாச்சி' //

    புரிந்தது...! சொல்ல வேண்டியதைச் சொல்ல 'பாக்கியா' பதில்களைப் போல் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பது கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறது.

    நானும் வருகையை பதித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம் நானும் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டேன் சார் :))

    பதிலளிநீக்கு
  3. ///இது நம் பதிவுலகுக்கும் பொருந்தும். புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். பின்னூட்ட ரகசியமும் இதுதான். ///

    நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் சந்தைப் படுத்தும் தொழிலில் அதை Mutual Benefit என்போம்!

    நாளொன்றுக்கு 478 பதிவுகள் என்றால்:
    எதையெல்லாம் படிப்பது?
    எதற்கெல்லாம் பின்னூட்டம் போடுவது?

    (இன்னும் ஒராண்டிற்குள் அது ஆயிரத்தைத் தொடும்)

    நம் பதிவுகள்/அதற்குரிய பின்னூட்டங்களுக்கான பதில்கள் - ஆகியவற்றிற்கு ஒதுக்கிய நேரம்போக
    மிச்ச நேரம் எவ்வளவு கிடைக்கும்? அதில் இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது?

    ஒரு தீர்வு இருக்கிறது!

    நன்றாக எழுதுங்கள்; பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் குறிவைக்காதீர்கள்
    தேனைத் தேடி வண்டுகள் நிச்சயம் வரும்!

    ஆத்ம திருப்திக்கு Visitors Counter வைத்து வருபவர்களின் எண்ணிக்கையைப்
    பார்த்து, அதைத் தேற்ற நன்றாக - சுவையாக எழுதலாம்!

    பதிலளிநீக்கு
  4. வாங்க கண்ணன்,

    சொல்ல வேண்டியதைச் சொல்ல 'பாக்கியா' பதில்களைப் போல் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதி //

    நான் எழுதிய அனுபவம் உண்மைங்க. ஆனா நான் சொல்ல வந்ததுக்கு அத பயன்படுத்திக்கிட்டேன். அவ்வளவுதான்.

    ஆனா நீங்க நம்ம பதிவுக்கு வந்தத்தான் இனி உங்க பதிவுக்கு வருவேங்கறா மாதிரி.... கண்டிப்பா அப்படியில்லை. இப்ப நான் பாத்துக்கிட்டிருக்கற ப்ராஜக்ட் இம்ப்ளிமெண்டேஷன் ஸ்டேஜுக்கு வந்தாச்சு. இனியும் கொஞ்ச நாளைக்கி கிறுக்கறதுக்கும் படிக்கறதுக்கும் டைம் கிடைக்கிது. இது எத்தனை நாளைக்கோ.

    பதிலளிநீக்கு
  5. வாங்க வினையூக்கி,

    நானும் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டேன் சார் //

    கண்ணனுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். அதுவும் பதிவுலக நண்பர்களுள் நீங்க ஒரு ஸ்பெஷல் நண்பர். நீங்க எழுதறத எதையுமே நான் படிக்காம இருந்ததில்லை.

    பதிலளிநீக்கு
  6. வாங்க சுப்பையா சார்,

    நன்றாக எழுதுங்கள்; பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் குறிவைக்காதீர்கள்
    தேனைத் தேடி வண்டுகள் நிச்சயம் வரும்!//

    சட்டியிலருந்தாத்தானே அகப்பையில வரும். முடிஞ்சதத்தானே செய்ய முடியும்!

    ஆத்ம திருப்திக்கு Visitors Counter வைத்து வருபவர்களின் எண்ணிக்கையைப்
    பார்த்து, அதைத் தேற்ற நன்றாக - சுவையாக எழுதலாம்!//

    நா கிறுக்கறதே அந்த் ஆத்ம திருப்திக்கித்தானே:-))

    பதிலளிநீக்கு
  7. நானும் அட்டெண்டன்ஸ் கொடுத்தாச்சி

    பதிலளிநீக்கு
  8. தலைப்பைப்பார்த்து நானும் ஏதோ ஒரு புது வைரஸ்-ன் பெயர்தான் என்று நினைத்துவிட்டேன். அப்படியா சங்கதி.....? நல்லா கிளப்பறீங்கய்யா பீதியை.....!!... சரி அப்புறம்...நானும் ... அட்டன்டன்ஸ் குடுத்துட்டேன். சந்தோஸம் தானே.....

    பதிலளிநீக்கு
  9. //நான் சமீபத்தில் (1995ல்தான்)//

    கலக்கல் :-)))


    நானும் உள்ளேன் அய்யா!

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஜி!

    நானும் அட்டெண்டன்ஸ் கொடுத்தாச்சி/

    ஒங்க பேரை பாக்கவே சந்தோசமா இருக்கு ஜி!

    அடுத்த மீட்ல சந்திக்கலாம்னு நினைக்கேன். பாத்து ரொம்ப நாளாச்சி. வந்ததுக்கு ரொம்ப நன்றி:)))

    பதிலளிநீக்கு
  11. வாங்க ப்ரதாப்,

    நானும் ஏதோ ஒரு புது வைரஸ்-ன் பெயர்தான் என்று நினைத்துவிட்டேன்//

    நமக்கே வைரஸ்னு ஒரு பட்டம் இருக்குங்க. அது ஒரு காலம்.

    ஒங்க பதிவுக்கும் தோ வந்துட்டேன்:)))

    பதிலளிநீக்கு
  12. வாங்க லக்கி

    //நான் சமீபத்தில் (1995ல்தான்)//

    கலக்கல் :-)))//

    ராகவன் சார் ஏதாச்சும் காப்பி ரைட் வாங்கி வச்சிருக்காரான்னு பாத்தேன். கிடைக்கலை. அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன்:)))))))

    நானும் உள்ளேன் அய்யா!//

    சரிங்க ஐயா:)

    பதிலளிநீக்கு
  13. புதுத் தாத்தா ஆனது துளசிதளத்தில் தெரிந்தது. வாழ்த்துகள்!!

    மும்பை நிகழ்வுகளின் 'திரும்பிப் பார்க்கிறேன்' ஆரம்பித்து விட்டது என மகிழ்ந்தேன்; க்விட் ப்ரோ க்வோ வாக்கிவிட்டீர்கள் :(

    பதிலளிநீக்கு
  14. வாங்க மணியன்,

    தாத்தாவாகறதுல நீங்க முந்திக்கிட்டீங்க. இப்பத்தான் தெரிஞ்சது. வாழ்த்துக்கள். பேத்தி பொறந்ததுமே நம்மள மறுபடியும் பேசீலராக்கிட்டா. அதனால மீண்டும் சொந்த சமையல்தான். அதப்பத்தி ஒரு குட்டி சீரியல் வருது:)))

    மும்பை நிகழ்வுகளின் 'திரும்பிப் பார்க்கிறேன்' ஆரம்பித்து விட்டது என மகிழ்ந்தேன்; க்விட் ப்ரோ க்வோ வாக்கிவிட்டீர்கள் :(//

    இப்ப கிடைச்சிருக்கற ஃப்ரீ டைம் எத்தனை நாளைக்கின்னு தெரியலை. தொடர்ந்து டைம் கிடைச்சா எழுதலாம்தான். ஆனா நம்ம சீனியர் ராகவன் சார் சொன்னா மாதிரி மும்பை அனுபவத்தை எழுத ஆரம்பிச்சப்பல்லாம் ஏதாச்சும் ஒரு இடைஞ்சல் வந்துருது. பார்ப்போம். டைம் கிடைச்சா மறுபடியும் எழுதறேன்.

    பதிலளிநீக்கு