27 ஜூன் 2008

பணவீக்கமும் வீட்டுவாடகையும் நடுத்தர குடும்பங்களும்

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் வெளிவந்த
கட்டுரை

நான் சென்னையில் 1980களில் பணியாற்றியபோது சுமார் 1100 ச.அடி மூன்று படுக்கையறை தனி வீட்டில் மாத வாடகை ரூ.750/-க்கு குடியிருந்தேன். அங்கிருந்து தஞ்சை, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றிவிட்டு 1987ல் திரும்பி வந்தபோது கே.கே. நகரில் இரண்டு படுக்கையறை குடியிருப்பின் ( flat) வாடகை ரூ.2250/- ஆக உயர்ந்திருந்தது. மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் மாற்றலாகி மும்பை சென்று 1997ல் திரும்பியபோது அதே அளவு குடியிருப்பு ரூ.3500/- 2002ல் நான் கொச்சிக்கு மாற்றலாகி சென்றபோது அதுவே ரூ.5000/- ஆக உயர்ந்திருந்தது. 2005ல் திரும்பி வந்தபோது ரூ.7000/- இப்போது நான் குடியிருக்கும் குடியிருப்புக்கு மாத வாடகை ரூ.12000/- பராமரிப்புக்கு தனியாக ரூ.1500/- இதுதான் நான் இதுவரையில் குடியிருந்த குடியிருப்புகளிலேயே மிகவும் சிறியது!

வாடகை உயர்வது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு அல்ல. ஆனால் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏதோ சமீபத்தில் உயர்ந்த பணவீக்க விகிதத்தின் விளைவே இந்த வாடகை உயர்வு என்பதுபோல் சித்தரித்திருக்கிறது. அதுபோலத்தான் முதல் பக்கத்தில் வந்துள்ள கட்டுரையும்.

1980 மற்றும் 1990களில் சென்னையில் வீட்டு வாடகை உயர்வுக்கு காரணமாயிருந்தவர்கள் வங்கி ஊழியர்கள் என்றனர். இப்போது அது ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களால் என்கின்றனர். இது ஓரளவுக்கு உண்மைதான். என்னுடைய கட்டடத்திலேயே நான் குடியிருக்கும் அதே அளவு உள்ள குடியிருப்புக்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒரு இளம் ஜோடி ரூ.15,000/-க்கு சமீபத்தில் குடிவந்துள்ளனர்!. நான் இருப்பது 2ம் தளத்தில் அவர்கள் 8ம் தளத்தில். தளம் உயர, உயர வாடகையும் உயருமோ என்னவோ. அல்லது இருவரும் ஊதியம் ஈட்டுகின்றனர் என்பதாலோ. இதற்கு இடைத்தரகர்கள்தான் முக்கிய காரணம் எனலாம்.

இதற்கும் சமீபத்திய பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதுபோன்றே நாளிதழ்கள் தினமும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைப் பற்றி தெருவில் போவோர் வருவோர் மற்றும் குடும்பப் பெண்கள் இவர்களிடமெல்லாம் பேட்டி கண்டு விலைவாசி உயர்வைப் பற்றி அவர்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று கேட்டு அதை பெரிதுபடுத்தி பக்கங்களை நிரப்புவதைக் காண்கிறோம். இதனால் தேவையற்ற பீதி மக்களிடம் பரவுகிறது என்பதுதான் உண்மை.

பணவீக்கமும் விலைவாசி உயர்வும் புதியதும் அல்ல, இப்போதைய விலைவாசி உயர்வு இந்தியாவில் மட்டுமே நிலவும் நிகழ்வும் அல்ல. உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் நிலவும் ஒரு பொது பிரச்சினை. இதை நாம் நினைத்தால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது. இதன் தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ் சமீபத்தில் கூறியதுபோல இதை தீர்க்க யாரிடமும் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை. இடதுசாரி கட்சிகள் முறையிடுவதுபோல இது நம்முடைய பிரதமரின் பொருளாதார கொள்கைகள் மட்டுமே காரணமும் இல்லை. உலகமயமாக்கல் என்பது இன்று அனைத்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொதுவான பொருளாதார கொள்கை! அதிலிருந்து நாம் மட்டும் விலகி நிற்க இயலாது. இத்தகைய சூழலில் உலகில் மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினை நம்மையும் பாதிக்கத்தான் செய்யும்.

இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொல்லையால் ரிசர்வ் வங்கியும் பல அவசர நடவடிக்கைகளில் இறங்கி பிரச்சினையை மேலும் சிக்கலாகி வருகின்றது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய நிதியை கூட்டுவதன்மூலம் கடன் வட்டி விகிதம் நிச்சயம் உயரும். அது மேலும் விலைவாசியைக் கூட்டுமே தவிர குறைக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அலங்கோலமாகவே இருக்கும் என்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.

25 ஜூன் 2008

இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?

இன்றைய பதிவுலகின் முதுகெலும்பே இந்த பின்னூட்டங்கள்தான் என்றால் மிகையாகாது.

ஒரு பதிவாளரின் எண்ணச் சிதறல்களை தாங்கி வரும் இடுகைகளை படித்து அதற்கு தங்களுடைய கருத்தை அது மாற்றுக் கருத்தாக இருப்பினும், ஆக்கப்பூர்வமான முறையில் (constructive) விமர்சனம் செய்ய இந்த பின்னூட்டங்கள் மிகவும் உதவுகின்றன.

எந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த மாற்றுக் கருத்தையும் நேர்மையான முறையில் ஒருவர் முன் வைக்கும்போது பதிவாளர் அதை சரியான, அதாவது அதே நேர்மையான முறையில் எதிர்கொண்டு தன்னுடைய கருத்தை சார்ந்து வாதிடும்போது அந்த வாதமே சூடு பிடித்து மற்ற பதிவர்களுடைய கவனத்தையும் ஈர்த்து 'சூடான இடுகைகள்' பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறது. இதற்கு கருத்து எழுதுபவர்கள் (பின்னூட்டம் இடுபவர்கள்) தங்களை முழுமையாக அடையாளம் காட்டிக்கொள்வது மிக, மிக அவசியமாகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஒரு சிலர் இதை தவறாகப் பயன்படுத்தி அநாமதேயங்களாக வந்து பதிவாளரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவரையே விமர்சித்தனர். மேலும் சிலர் தேவையில்லாத அதாவது சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதி பதிவர்களிடையே ஒருவித 'கலவர சூழலை' உருவாக்கினர் என்பதும் உண்மை.

அப்போதுதான் தமிழ்மணம் தலையிட்டு தங்களுடைய திரட்டியில் பதிவு செய்திருந்த பதிவர்களை ப்ளாகர் அளித்துள்ள பின்னூட்ட மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரை பயனளிக்கத் தவறியபோது மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்தாத பதிவுகளை நீக்கிவிடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டிவரலாம் என்ற சூழலும் எழுந்தது.

ஆகவே ஏறத்தாழ அனைவருமே தங்களுடைய பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தலை அறிமுகப்படுத்தினர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தில் நிலவும் சூழல் ஒரு நட்புச் சூழலாகவே எனக்குப் படுகிறது. இடுகைகளும் சரி, அதற்கு பிறகு வரும் பின்னூட்டங்களும் சரி அமைதியானதொரு சூழலை காட்டுகிறது. இடுகைகளின் தரமும் சற்று உயர்ந்துள்ளது என்பதையும் மறுக்கவியலாது. துறைசார்ந்த பதிவுகள், படு ஜாலியான பதிவுகளுடன் கும்மியடிக்கும் பதிவுகளும் வந்தாலும் எவரும் எவருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக பதிவுகளோ அல்லது இடுகைகளோ வரவில்லை அல்லது வெகுவாக குறைந்துள்ளது என்பது உண்மை. உண்மைத் தமிழன் போன்றவர்களுடைய பின்னூட்ட அன்பு தொல்லையும் யாரையும் எந்தவிதத்திலும் சங்கடத்திற்குள்ளாக்கியதாக தோன்றவில்லை.

பின்னுட்டங்கள் வந்தவுடன் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள 'கூகிள்' மின்னஞ்சல் விலாசத்தை பதிவு செய்துக்கொண்டால் 'கூகிள் டாக்' வழியாக அவற்றை உடனுக்குடன் அறிந்துக்கொள்ளவும் தேவைப்பட்டால் விரும்பத்தகாத பின்னூட்டத்தை நீக்கிவிடவும் வசதியுள்ளதால் நான் மட்டுறுத்தல் வசதியை நீக்கிவிட்டேன். நாம் இடும் பின்னூட்டத்தை உடனடியாக பதிவில் காண்பதும் ஒரு மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது! அநாமதேய ஆப்ஷனை நீக்கிவிட்டால் யாரும் தேவையில்லாத பின்னூட்டங்களை இட வாய்ப்பில்லை.

ஆகவே இனியும் இந்த பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையில்லை என கருதுகிறேன்.

தமிழ்மணமும் இதற்கு மறுப்பு தெரிவிக்காது என நம்புகிறேன்.

24 ஜூன் 2008

பதிவாளர்கள் எழுத்தாளர்களா?

ஒவ்வொரு காலக்கட்டத்துல ஒவ்வொரு விஷயம் பிரபலமா இருக்கும். சரியான சொல்லணும்னா craze ஆ இருக்கும்.

பதிவெழுதறதுதான் இப்ப craze. இதுக்குன்னு இலவசமா இடமும் (space) சூப்பரா வடிவமைச்ச பலகையும் (design templates) கிடைச்சிருது. அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது.

அப்புறம் என்ன? ப்ளாக் ரெடி.

எழுதறதுக்கு (கிறுக்கறதுக்குன்னு சொல்றதுதான் சரி)விஷயம்?

அப்படீன்னு ஒன்னு தேவையே இல்லீங்க. கண்ணால பாக்கறது, காதால கேக்கறதுன்னு எதப்பத்தி வேணும்னாலும் கிறுக்கலாம்.

ஆனா அதெல்லாம் எழுத்தாயிருமா இல்ல நாமதான் நம்மள எழுத்தாளர்னு நினைச்சிக்கலாமா?

இதுதான் இன்றைய கேள்வி.

சிலரோட பதிவு தலைப்புல ஒரு mission statement இருக்கும்.

'இது என்னை ஒரு எழுத்தாளனாக்க நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி'

அதாவது இப்ப நான் எழுத்தாளன் இல்லை. ஆனா ஒரு காலத்துல எழுத்தாளனாயிருவேன். அதுக்காக இன்னையிலருந்து முயற்சி பண்ணப்போறேன்னு சொல்றாங்க.

இதுதான் நிதர்சனம்.

நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் இருக்கற ஒரு சின்ன ஆசை.

இந்த மாதிரி வந்து தினம் ஒரு பதிவு எழுதி ஆரம்பத்துல பிரமாத பேசப்பட்டு தன்னைத்தானே ஒரு பெரிய எழுத்தாளனா கற்பனை செய்துக்கிட்டு பிறகு அட்ரஸ் தெரியாம ஆன பதிவர்கள் ஏராளம், ஏராளம்.

இத்தகைய பதிவர்கள் அநேகம் பேர் அவங்க இடுகைகளுக்கு வர்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து 'அட! இவ்வளவு பேர் நம்ம எழுத்த படிச்சி அவங்களோட கருத்த எழுதறாங்களே. அப்ப நம்ம எழுத்துலதான் ஏதோ இருக்கு போலருக்கு.'ன்னு நினைச்சி தங்களையும் எழுத்தாளராளர்களாக கற்பித்துக்கொண்டவர்கள்.

அதில் தவறேதும் இல்லை. ஆனா அத ரொம்ப சீரியசா எடுத்துக்குறக் கூடாதுன்னுதான்...

ஆயிரம் பதிவர்கள்ல ஒரு பத்து பேர் எழுத்தாளரா வரலாம்னு வேணும்னா சொல்லலாம். அதாவது தொடர்ந்து ஒரு பத்து வருசம் எழுதுனா. அதாவது வெறும் கும்மி பதிவா எழுதாம... பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பத்தியெல்லாம் கவலைப்படாம...

அதுக்கு ரொம்ப பொறுமை வேணும். நிறைய படிக்கணும் (ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் இந்த படிக்கும் ஆர்வம்), ஆய்வு செய்யணும், etc, etc. அதுக்கு நிறைய நேரம் வேணும். அதுதானே இப்ப பிரச்சினையே.

அதனால நா சொல்ல வர்றது என்னன்னா ஆஃபீஸ் நேரத்துல மட்டும் பதிவுல எழுதறவங்க எல்லாம் எழுத்தாளர்களாகி விட முடியாதுங்க.

வேணும்னா நாம எல்லாம் கத்துக்குட்டி எழுத்தாளர்ங்கன்னு வேணும்னா சொல்லிக்கலாம்.

ஆனா ஒன்னு. ஒரு முழுநேர எழுத்தாளனுக்கு இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கு. நாம எதப்பத்தி வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் எழுதலாம். ஒரு கட்டுப்பாடும் இல்லை.

அதனால எழுத்தாளன்னு எந்தவித pretensionம் (பாவனை செய்துக்கொள்ளாமல்) இல்லாம மனம்போன போக்குல எழுதி, தப்பு, தப்பு, கிறுக்கி தள்ளுங்க.

நம்ம பதிவுல நாம கிறுக்கறதுக்கு யார் பர்மிஷன் வேணும்?

எச்சரிக்கை: யாராவது உங்களை ஒரு எழுத்தாளனாக்குகிறேன் என்றால் அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள். They will take your ideas, dress them up in such a way that you won't recognise your own work when it is published, would take the cake and give you only the crumbs. Beware of such parasites.

நாளைய பதிவு: இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?

23 ஜூன் 2008

ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி துவக்கம்

இன்று மதிய உணவுக்கு சென்றிருந்த நேரத்தில் (ஆஃபீசும் வீடும் அடுத்தடுத்த பில்டிங்லங்க. நூறடி தூரம்தான்) இன்று கலைஞர் துவக்கி வைத்த ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி அலைவரிசையைப் பார்க்க நேர்ந்தது.

அதில் மு.க. அவர்களை அழகிரி கைத்தாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் அமர்த்த அவர் 'ஒரு காலத்தில் எங்களைப் பற்றிய செய்திகளை ஒளிபரப்ப எந்த தொலைக்காட்சியும் முன்வராதபோது தைரியமாக ஒளிபரப்ப முன்வந்தது ராஜ் தொலைக்காட்சி' என்றார்.

அப்படியொரு நிலமை மு.கவுக்கு வந்திருக்கிறதா என்ன?

அது சரி.. ஸ்டாலினை அந்த விழாவில் காணவில்லையே.

சுத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டாரா என்ன?

க்விட் ப்ரோ க்வோ'

நான் சமீபத்தில் (1995ல்தான்) மும்பையில் பணியாற்றியபோது என்னுடைய வட்டார அலுவலகத்தில் உயர் அதிகாரியாய் இருந்தவர் படு ஜாலியான மனிதர். அவரால் பேசாமல் இருக்கவே முடியாது. அந்த அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் (வட்டார மேலாளர்) அவருக்கு நேர் எதிர். மனிதர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார். பிறகு பகலுணவு வேளையில் வெளியில் வருவார். அலுவலகத்திலுள்ளவர்கள் உண்பதற்கு அரை மணிக்கு முன்பு பொது உணவறைக்கு சென்று தனியாக அமர்ந்து உணவருந்திவிட்டு சென்றுவிடுவார். அவருக்கு 'சரியான முசுடு' என்ற பட்டப்பெயரும் உண்டு.

நான் குறிப்பிட்ட உயர் அதிகாரி அந்த அலுவலகத்தில் 2ம் ஸ்தானத்தில் இருந்தவர். ஆனால் ஒட்டுமொத்த அலுவலகமும் இவரைத்தான் தன்னுடைய தலைவராக ('தல' ன்னும் சொல்லலாம்) கொண்டிருந்தனர். அலுவலக விஷயங்களில் மட்டுமல்லாமல் 'வெளி' விஷயங்களிலும் அவர்களுக்கு அவர்தான் 'தல'. குறிப்பாக மாலை நேர 'தாக சாந்தி' நேரங்களில்.

அவருக்கு வேறொரு பழக்கமும் உண்டு. தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நெருங்கிப் பழகுவது. அதாவது சமயம் கிடைக்கும்போதெல்லாம் (வார இறுதி நாட்களில்) அவர்களுடைய வீடுகளுக்கு செல்வது அவருடைய வழக்கம். அப்போது அந்த அலுவலகத்தில் சுமார் பத்து கடைநிலை மற்றும் இடைநிலை அதிகாரிகள் இருந்தனர். நான் அங்கிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவிலிருந்த செம்பூர் கிளையில் மேலாளராக இருந்தேன். அவர் அந்த அலுவலகத்தில் வந்து இணைவதற்கு முன்பு வட்டார அலுவலகத்தில் பணியாற்றியிருந்ததால் நானும் அவர்களுடைய அலுவலகத்தின் அங்கமாகவே கருதப்பட்டேன்.

எனவே என்னையும் சேர்த்து பதினோரு குடும்பங்கள். இதற்கெனவே ஒரு டைரியும் வைத்திருப்பார். ஒவ்வொரு வாரம் ஒரு வீடு. அவரும் அவருடைய மனைவி மட்டுமே மும்பையில் இருந்தனர். மகள் மற்றும் மகன் கேரளத்தில் மாமியார் வீட்டில். ஆகவே தம்பதி சமேதராய்தான் விசிட்டுக்கு வருவார்கள். அவரைப் போலவே அவருடைய மனைவியும் கலகலப்பானவர் என்பதால் அவருடன் சேர்ந்துக்கொண்டு நன்றாக அரட்டையடிப்பார். புறப்படும்போது 'நான் வந்து அட்டெண்டன்ஸ் குடுத்தாச்சி' என்று கூறிக்கொண்டே விடைபெறுவார். அதாவது நாம் அவருடைய வீட்டுக்கு கூடிய விரைவில் செல்ல வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நம் வீட்டுக்கு மீண்டும் வருவார் என்று பொருள்!

இதைத்தான் quid pro quo என்றேன். அதாவது "Something for something; that which a party receives (or is promised) in return for something he does or gives or promises." இதுதான் பொருள்.

****

இது நம் பதிவுலகுக்கும் பொருந்தும். புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். பின்னூட்ட ரகசியமும் இதுதான்.

நாளைய பதிவு: 'பதிவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா?'

19 ஜூன் 2008

இது அரசியல் கட்டுரை அல்ல!!

குறை கூறுவது மனித இயல்பு. நம்மில் குறை கூறாதவர்களே இல்லை எனலாம்.

இருவர் கூடிவிட்டாலே அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவதுதான் வாடிக்கை. ஏனெனில் அந்த இருவரே ஒருவரையொருவர் குறை கூற துவங்கினால் இறுதியில் கைகலப்பில்தான் முடியும் என்பதால் அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவது இயல்பு.

ஆனால் நாம் எப்படி மற்றவர்களை குறை கூறுகிறோமோ அதேபோல் மற்றவர்களும் நம்மை குறை கூற வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்!

மற்றவர்களை குறை கூறுவதில் மகிழ்ச்சி காணும் நாம் நம்மை மற்றவர்கள் குறை கூற முயல்கையில் வெகுண்டு எழுகிறோம்.

இதுவும் மனித இயல்புதான்.

குறை கூறுவதும் ஒரு கலை. அதில் கற்று தேர்ந்தவர்கள்தான் தலைமை இடத்திற்கு வரமுடியும் போலிருக்கிறது.

அதாவது நமக்கு கீழே இருப்பவர்களை குறை கூறி, கூறி நம்முள் இருக்கும் குறைகளை நமக்கு மேலிருப்பவர்கள் உணராமல் செய்துவிடமுடியும்!

ஆனால் குறை கூறுவதும் தேவையான ஒன்றுதான்.

No pain no gain என்பார்கள். நம் உடம்பில் உள்ள குறைகளை நாம் கண்டுணர்வது வலியால்தான். சாதாரண வலி என்றுதான் மருத்துவரை அணுகுகிறோம். பிறகுதான் தெரிகிறது வலிக்கு பின்னால் இருக்கும் நோய் (சரிதானே ப்ருனோ?).

அதுபோன்று நம்முடைய செயல்களைக் குறித்து பிறர் விமர்சிக்கும்போதுதான் நம்மில் உள்ள குறை நமக்கே தெரிகிறது. இதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.

நமக்கு நெருங்கியவர்கள், நம்மில் அக்கறையுள்ளவர்கள் நம்மை குறை கூறுவதும் நமக்கு எதிரிகள் என்று நாம் கருதுபவர்கள் குறை கூறதும் ஒன்றல்ல. முன்னவர்களுடைய குறை கூறும் போக்கு அவர்களுக்கு நம் மீதுள்ள அக்கறையை, அன்பை, எதிர்பார்ப்பைக் காட்டுகிறது என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

'குறை கூறுபவர்களுக்கு எவ்வித தகுதியும் தேவையில்லை. அடிமுட்டாளும் குறை கூறுவான். ஆனால் அதை ஏற்றுகொள்ள அல்லது பொருட்படுத்தாமல் இருக்க அனைவராலும் முடிவதில்லை. It needs a strong character, willpower to put up with criticism especially when it is not constructive'

***

இதை நான் பா.ம.க தலைவருக்காகவோ அல்லது மு.கவுக்காகவோ எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

18 ஜூன் 2008

விட்டது தொல்லை!

கடந்த சில மாதங்களாகவே பலராலும் எதிர்பார்க்கப்பட்ட முறிவு இறுதியில் ஏற்பட்டுவிட்டது.

இதை 'விட்டது தொல்லை' என்று தி.மு.க தலைமையும் அதன் தொண்டர்களும் என நினைத்து மகிழலாம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட.

பா.ம.க தலைமையும் இதை 'ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்' என ஒதுக்கித் தள்ளியும் விடலாம்.

ஆனால் இந்த முடிவு சரியானதுதானா?

இந்த முடிவிற்குப் பின்னால் தி.மு.கவின் ஒட்டுமொத்த தலைமை நிற்கிறதா?

கட்சித் தலைவர்களில் ஒருவரும் மு.க.விற்குப் பிறகு முதல்வர் பதவியில் அமரக்கூடும் என பலராலும் கருதப்பட்ட ஸ்டாலின் ஊரில் இல்லாத சமயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்துப் பார்த்தால்...

கடந்த வாரம் நடந்து முடிந்த தி.மு.க மகளிர் அணி மாநாட்டிலும் அவர் கலந்துக்கொள்ளாமலிருந்ததையும் மு.க. அழகிரிக்கும், அவருடைய மகள் மற்றும் கனிமொழிக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் வைத்து பார்த்தால்...

ஒருவேளை ஸ்டாலின் ஒதுக்கப்படுகிறாரோ என்கிற எண்ணமும் தோன்றத்தான் செய்கிறது...

இத்தகைய சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு சரியானதுதானா?

விட்டது தொல்லை என்று நினைத்து எடுக்கப்பட்ட முடிவே ஒரு பெருந்தொல்லையாகிவிடுமோ?

காலம்தான் பதில் சொல்லும்..

13 ஜூன் 2008

வேலியே பயிரை மேய்ந்தால்!



ஒரு விளையாட்டு வீரர் போதை மருந்து உட்கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர் சாதித்த சாதனைகளை நிராகரித்துவிடுவார்கள்.

அதுபோன்று இந்த நீதிபதி மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் இவர் எழுதிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதுமா?

இவருடைய தீர்ப்பால் தில்லியில் எத்தனை நடுத்தர மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்!

09 ஜூன் 2008

என்ன செய்யப் போகிறார் மு.க?

தங்களுக்கு நான் 10.மே.2006 அன்று எழுதிய கடிதத்தின் தொடர்ச்சி இது.


இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன...

இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்களும் உங்களுடைய அரசும் பலவற்றை சாதித்துள்ளன, மறுக்கவில்லை..

அவற்றுள் என்னுடைய கடிதத்தில் நான் பட்டியலிட்டு காட்டியிருந்த பல வேண்டுகோள்களில் கீழ் காணும் மூன்றும் அடங்கும்.

1. ரூ.2/க்கு ஒரு கிலோ அரிசி.

2. முந்தைய அரசு பணிநீக்கம் செய்த சாலை ஊழியர்களுக்கு மீண்டும் வேலை.

3. வறுமை கோட்டுக்குக் கீழே ?! உள்ளவர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி மற்றும் காஸ் அடுப்பு இத்யாதிகள்

ஆனால் அதிலும் பல குறைகள், ஊழல், கட்சித் தொண்டர்களுக்கு முன்னுரிமை, ரேஷன் அரிசி கடத்தல் என பல குற்றச்சாட்டுக்கள். குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில்... ரேஷன் கடைகளில் எடை குறைவு, கையிருப்பு இல்லாமை என தொடரும் குறைபாடுகள்.

இன்னுமொரு நிறைவேற்றப்பட்ட வேண்டுகோள். முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவருடைய தோழி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.

மற்றபடி என்னுடைய கடிதத்தில் நான் முன்வைத்த எந்த கோரிக்கைகளையுமே நீங்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் வேதனை..

1. முடிவெடுக்கும் திறன்.

நாளுக்கு நாள் அது மோசமாகிக்கொண்டேதான் செல்கிறது. நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிலாவது தெளிவாக முடிவெடுத்துள்ளீர்களா என்று தேடினால்... அது சேது சமுத்திர திட்டமானாலும், ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டமானாலும், மணல் குவாரி, கல்லூரி கட்டண உயர்வு, என எந்த பிரச்சினையிலும் உங்களுடைய தடுமாற்றம் தெளிவாக தெரிகிறது.

2. வாரிசுகளுக்கு முன்னுரிமை

உங்களுடைய ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கையில் இது உங்களுடைய வாரிசுகள் பொற்காலம் என்றால் மிகையாகாது. நீங்கள் இதுவரை முதல்வராக இருந்த எந்த காலத்திலும் உங்களுடைய குடும்பத்தினருக்கு அரசு விழாக்களில் மேடையில் இடம் அளித்ததில்லை. ஆனால் இப்போதோ.. ஒருவர் ஒரு விழா மேடையில் இருக்கை என்றால் மற்றவருக்கு இன்னொரு விழா மேடையில் இருக்கை. இது உங்களுடைய தனிப்பட்ட, குடும்பம் விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியவில்லை.

மு.க அழகிரி விஷயத்தில் நீங்கள் எடுத்த பல முடிவுகள் கட்சியினர் மத்தியில் பல சங்கடங்களை விளைவித்துள்ளதை நீங்கள் உணர்கிறீர்களா என்று தெரியவில்லை. அவருக்கு சாதகமாக, அல்லது அவருடைய அறிவுரையை நீங்கள் ஏற்பது, தயாநிதி மாறன் விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு, அதை மாற்றி அமைத்து அவர் எதிரணியினருடன் இணைந்துவிடாமல் இருக்க ஸ்டாலின் எடுத்த பல முயற்சிகளையும் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது.... உங்களுடைய இந்த போக்கு ஸ்டாலினையே ஓரங்கட்டும் விதமாக அமைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இளையவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மூத்தவருக்கு இல்லை என்று மக்களே தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டதை மனதில் வைத்துக்கொண்டு மாறன் சகோதரர்கள் மீது இன்னமும் காழ்ப்புணர்வு கொள்வது எந்த விதத்தில் அரசியல் புத்திசாலித்தனம் என்பது விளங்கவில்லை. கனிமொழியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி... உங்களுடைய வாரிசுகளில் ஒருவர் என்பதைத் தவிர அவருக்கு வேறென்ன தகுதியுள்ளது?

3. மதுபானக் கடைகளை அரசு ஏற்று நடத்துவது

அரசின் பணி வணிகம் செய்வதல்ல, ஆகவே அதை முழுவதுமாக தனியாரிடம் விட்டுவிடுங்கள் என்ற கோரிக்கை வைத்திருந்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் சில வணிகங்களை அரசே ஏற்று நடத்துவதாக முடிவெடுத்துள்ளீர்கள். போதாதற்கு அரசு கேபிள் டிவி வேறு. இதே முடிவை முந்தைய அரசு எடுத்தபோது சன் டிவியின் ஆதிக்கத்தை குலைக்க எடுக்கப்படும் சதி என்றீர்கள். உங்களுடைய முடிவுக்கும் அதுதானே காரணம்? அதற்கும் கூட காத்திராமல் அதிரடியாக நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று SCV Set top boxஐ மாற்றி Hathway set boxஐ வைத்ததும் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சிறிய நிறுவனமான ஹாத்வே அதிக எண்ணிக்கையிலுள்ள நுகர்வோரின் இணைப்புகளை சமாளிக்க முடியாமல் சென்னையிலுள்ள என்னைப் போன்ற பல நுகர்வோர் கடந்த ஒரு மாத காலமாக படும் அவஸ்தையும் உங்களுக்கெ தெரிய வாய்ப்பில்லை. எதற்கு இந்த அவசர முடிவுகள்? ஒரு கடமையுணர்வுள்ள ஒரு அரசின் செயல்பாடுகளா இவை?

4. அண்டை மாநில அரசுகளுடன் சச்சரவு

முந்தைய முதலமைச்சரின் ஆணவப் போக்கே அண்டை மாநில அரசுகளுடன் சுமுக போக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்றீர்கள். ஆனால் இப்போதும் அதே நிலைதானே? தமிழகத்தை சுற்றிலுமுள்ள எந்த மாநில அரசுடன் சுமுக உறவு உள்ளது?

5. இறுதியாக கூட்டணி கட்சியினரிடையில் ஒற்றுமையில்லாமை

பாமக தலைவரை விட்டுவிடுங்கள். அவரை யாராலும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் சமீப காலமாக உங்களுடைய அரசு எடுத்த சில முடிவுகள் இடதுசாரியினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது உண்மைதானே? குறிப்பாக தனியார் கல்லூரி கட்டண உயர்வு. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல் அதிக அளவில் கல்லூரிகள் வசூலித்தனர் என்பதற்காக அரசே அதை உயர்த்தியுள்ளதாக நீங்கள் கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கு இது கூட்டணி அரசு அல்ல, அரசை ஆள்வது திமுக என்கிறீர்கள். இதை உங்களிடமிருந்து உங்களுடைய தனிப்பட்ட அபிமானிகள் (என்னைப் போன்றவர்கள்) நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

இந்த போக்கு நீடிக்குமானால் பா.ம.க மட்டுமல்ல தற்போது கூட்டணியிலுள்ள எந்த கட்சியும் அடுத்த தேர்தலில் உங்களுடன் இருக்கப்போவதில்லை.

காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாலே போதும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அது நிச்சயம் பகற்கனவாய்த்தான் முடியும்.

என்னுடைய முந்தைய கடிதத்தில் இறுதியாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அதாவது தங்களால் உடல்ரீதியாக என்றைக்கு முதலமைச்சராக திறம்பட பணியாற்ற இயலவில்லை என்று நீங்கள் உணர்கிறீர்களோ அன்றைக்கே, அந்த நிமிடமே தங்களுடைய கட்சி உறுப்பினர்களை சுதந்திரமாக, எவ்வித தலையீடுமின்றி ஒரு முதல்வரை தெரிவு செய்ய வழிவகுக்க வேண்டும் என்பது ...

அதற்கு சரியான தருணம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்....

செய்வீர்களா?