08 மே 2008

வங்கிகளில் கணினி - புதிய முயற்சி

கடந்த பதினெட்டு மாத காலமாக எங்களுடைய வங்கி மற்றும் சென்னையைச் சார்ந்த லேசர் சாஃப்ட் (Laser Soft Infotech Chennai) மென்பொருள் நிறுவனத்தைச் சார்ந்த மென்பொருள் வல்லுனர் குழுவினரின் இடைவிடா முயற்சியில் உருவாக்கப்பட்ட மென்பொருள் (Centralised Banking Solution) கடந்த வாரம் எங்களுடைய வங்கியின் இரு சென்னைக் கிளைகளில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்து Live Run துவங்கியுள்ளது.

இது இந்திய வங்கி சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என்றாலும் மிகையாகாது என்றே கருதுகிறேன்.

ஏனெனில் இந்த மென்பொருள் பல ‘முதல்’ சாதனைகளை படைத்துள்ளது.

இதுதான்

1. இந்தியாவின் முதல் முழுமையான ஜாவா மொழியில் தயாரிக்கப்பட்ட வங்கி பரிவர்த்தனையில் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள்.
2. முதன் முறையாக ஒரு வங்கியும் ஒரு மென்பொருள் நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்பட்ட மென்பொருள்.
3. முதன் முறையாக ஒரு வங்கிக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளையும் (Transaction Modules) உள்ளடக்கிய மென்பொருள் (Infosys, Iflex, TCS) போன்ற நிறுவனங்களுடைய மென்பொருள் பல வெளியார் நிறுவனங்களின் மென்பொருளுடன் Interface செய்யப்பட்டுள்ளது)

Oracle நிறுவனத்தின் உதவியுடன் நாட்டிலேயே முதன் முறையாக Oracle 10g Real Application Cluster (RAC) வெற்றிகரமாக நிறுவப்பட்டதும் ஒரு சாதனை எனலாம்.

இனி எங்களுடைய வங்கியின் மீதமுள்ள 350 கிளைகளிலும் இதை வெற்றிகரமாக நிறுவும் பணி துவங்கியுள்ளது.

ஒரு மென்பொருளை தயாரிப்பதை விடவும் பன்மடங்கு சிரமமானது அதை அனைத்து கிளைகளிலும் கொண்டு செல்வது. கிளைகளிலுள்ள ஒவ்வொரு பணியாளரையும் புதிய மென்பொருளை பயன்படுத்த பயிற்சிவிப்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

பல இடைஞ்சல்களையெல்லாம் சந்தித்து வெளிவந்துள்ள இந்த மென்பொருள் இனி வரும் காலங்களில் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதுதான் இன்றைய ஆவல்.

மென்பொருளை வடிவமைத்து, தயாரித்து சோதனை செய்த காலங்களில் அனுபவித்த தடங்கல்கள், தோல்விகள், வெற்றிகள் எல்லாவற்றையும் முழுமையாக எழுத வேண்டும் என்று ஆவல்தான். ஆனால் அதற்கென நேரம் ஒதுக்குவது என்பது அடுத்த ஆறுமாத காலத்திற்கு இயலாதென்றே கருதுகிறேன்.

ஆனாலும் கடந்த சில மாதங்களாக இருந்த வேலைப்பளு சற்றே குறையும் என்று கருதுகிறேன்.

ஆகவே இப்போதுள்ளதுபோல் அல்லாமல் வாரம் இரு முறையாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்து இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கும் விலைவாசி உயர்வு, இதை கையாள ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த முயற்சிகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆவல்..

அடுத்த வாரம் திங்களன்று துவங்கி நான்கைந்து பாகங்களாக எழுதுகிறேன்.

******

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பி.கு: சமீப காலமாக குரலை உயர்த்தி சகட்டு மேனிக்கு அனைவரையும் குறை கூறி வரும் பா.ம.க. தலைவர் மருத்துவரே ஒரு பெரிய தலைவலியா என்ற ஒரு கருத்து கணிப்பை துவக்கியுள்ளேன். இதுவரை ‘ஆம்’ என்ற வாக்குகளே அதிகம் வந்துள்ளன.

உங்கள் வாக்கை தவறாமல் அளியுங்கள்.

1 கருத்து: