29 மே 2008

பணவீக்கம் - காரணிகள் 2

விலைவாசி உயர்வு ஏன் ஏற்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்த்தோம்.

அதாவது விலைவாசி உயர்வதற்கு நுகர்வோரின் தேவைகள் (Demand) அதிகரிப்பதும் ஒரு காரணம் என்று பார்த்தோம். ஆனால் அது மட்டுமே முழுமையான காரணம் அல்ல.

நுகர்வோர் தேவைப்படும் பொருட்கள் சந்தையில் சரிவர கிடைக்காமல் போனாலும் விலைவாசி உயரும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. தேவைப்படும் பொருளின் உற்பத்தி குறைந்துபோவது.

குறிப்பாக உணவுப் பொருட்கள். பருவமழையையே நம்பியிருக்கும் விவசாயம் பருவமழை பொய்த்தால் நலிந்துபோக நேருகிறது. அது அதீத மழையாலும் நேரிடலாம். அறுவடைக்கு காத்திருக்கும் நெற்பயிர் திடீரென்று கொட்டி தீர்க்கும் அடை மழையால் நீரில் மூழ்கிப்போவதும் வளர்ந்து கனி கொடுக்க காத்திருக்கும் வாழை, கரும்பு பேய்க் காற்றால் சரிந்துபோவதும் நம் நாட்டில் அவ்வப்போது காணும் நிகழ்ச்சிகள்.

2. வியாபாரிகளின் நேர்மையற்ற நடத்தைகள்.

பருவமழை, பேய்க்காற்று ஆகியவற்றையாவது முன்னறிவிக்க வளர்ந்துவரும் தொழில்நுட்பம் வகைசெய்கிறது. ஆனால் artificial shortage எனப்படும் மனித வக்கிரங்களால் ஏற்படும் பதுக்கல் மற்றும் cartel எனப்படும் கூட்டுக் களவானித்தனத்தை எப்படி முன்னறிவது? மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பதுக்கல் பெரும்பாலும் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலையைப் பாதிக்கிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கூட்டு சேர்ந்து தங்களுடைய பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு கீழ் விற்பதில்லை என்று முடிவெடுத்துக்கொள்வது இரும்பு, சிமிட்டி போன்ற கட்டுமான பொருட்களின் விலையைப் பாதிக்கிறது.

இயற்கையின் இடையூறுகளால் ஏற்படும் தட்டுப்பாட்டை, குறிப்பாக உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஈடுகட்ட அரசு தங்களிடம் உள்ள கையிருப்பை உடனே சந்தையில் வினியோகிப்பதோ அல்லது இறக்குமதி செய்வதோ அவசியமாகிறது. இது ஒரு குறுகிய கால நடவடிக்கை. நீண்ட கால நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு, அவர்கள் மீண்டும் உணவு உற்பத்தியில் ஈடுபட சலுகை கடன் வசதிகள் ஆகிய நடவடிக்கைகளும் உணவுப்பொருள் உற்பத்தி மிகுதியாகும் காலங்களில் அவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து தேவைப்படும்போது சந்தையில் இறக்கி விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, உணவுப்பொருள் தட்டுப்பாடு உள்ள காலங்களில் அவற்றின் ஏற்றுமதியை தடைசெய்வது என பல்வகை நடவடிக்கைகளை எடுக்கும் கடமை அரசுக்கு உண்டு.

அதுபோன்றே தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் செயற்கையான பற்றாக்குறையை நேர்மையுடனும், கண்டிப்புடனும் எதிர்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமையாகும். அரசின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கும் உற்பத்தியாளர்களை வழிக்குக்கொண்டு வர தங்களிடம் உள்ள அதிகாரத்தை அரசு தயங்காமல் பயன்படுத்த முன்வருவதன் மூலம் செயற்கையாக சந்தையில் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இதைத்தான் supply side management என்கிறார்கள். அதாவது நுகர்வோரின் தேவைகளை ஈடுகட்ட (to meet the consumers’ demand) எடுக்கப்படும் நடவடிக்கைகள்.

நுகர்வோரின் அத்தியாவசிய தேவைகளுக்கு நிகரான பொருட்கள் சந்தையில் கிடைக்கச் செய்வது மத்திய/மாநில அரசுகளின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் நுகர்வோரின் தேவைகள் தேவைக்கு மேல் ஏற்படும்போது என்ன செய்வது? அவர்களுடைய அதீத தேவைகளை நிவர்த்தி செய்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. ஆகவேதான் நுகர்வோரின் கைவசமுள்ள ரொக்கத்தை (Money) கட்டுப்படுத்தவும் அரசு முயல்கிறது.

நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை அவ்வப்போது கண்கானித்து தேவைப்பட்டால் கட்டுப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் எடுத்து வருகிறது.

நம் நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி எவ்வாறு கணக்கிடுகிறது?

1. நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் (Currency with Public)
2. வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புநிதி திட்டங்களிலுள்ள தொகை (Deposits with commercial Banks)

இவற்றின் மொத்த மதிப்பே நாட்டின் மொத்த பணப்புழக்கமாக கணிக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி இவ்விரண்டின் மொத்த மதிப்பு சுமார் ரூ.40,00,000 கோடிகள்!! இதில் நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் மட்டும் ரூ.5,67,700 கோடி!

வங்கி சேமிப்பு திட்டங்களிலுள்ள தொகையை எப்போது வேண்டுமானாலும் ரொக்கமாக மாற்றிவிட முடியும் என்பதால் அதுவும் நாட்டின் மொத்த பணப்புழக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவை இரண்டும் சுமார் 21% விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது சுமார் ரூ.8,00,000 கோடிகள் உயர்ந்துள்ளன!

இந்த அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்தால் விலைவாசி உயர்வதை எவ்வாறு தடுப்பது!!

நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது இவை இரண்டும்:

1. வங்கிகள் அரசுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Govt)
2. வங்கிகள் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Commercial Sector)

வங்கிகள் அரசுக்கு வழங்கும் கடன் முழுவதும் அரசை நடத்திச் செல்லவும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் செலவிடப்படுவதால் அது நுகர்வோரின் கையிருப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல.

ஆனால் வங்கிகள் தயாரிப்பாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வழங்கும் கடன் அவர்களுடைய தயாரிப்பு மற்றும் வர்த்தக திறனை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக சந்தையில் கிடைக்கும் பொருட்களின் அளவு மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபமும் கணிசமாக உயர்கிறது.

மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் வங்கிகள் அரசுக்கு வழங்கிய கடன் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் வர்த்தகத்திற்கு வழங்கிய கடன் தொகை சுமார் ரூ.2,35,000 கோடிகள் உயர்ந்துள்ளன என்கிறது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை.

ஆகவேதான் இத்தகையோருக்கு கடன் வழங்கும் வங்கிகளுடைய கடன் வழங்கு சக்தியை (Lending Power) முடக்கும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய தொகையின் அளவை 7.5%லிருந்து 8%ஆக (Cash Reserve) உயர்த்தியது. அதாவது வங்கிகளுடைய சேமிப்பு திட்டங்களிலுள்ள மொத்த தொகையில் 8 விழுக்காடு ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுவிடும். இது 31.3.07ல் 6% ஆக இருந்தது.

இதன் மூலம் வங்கிகள் கடன் வழங்கும் திறன் குறைக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள்/ வர்த்தகர்கள் வங்கிகளிலிருந்து பெறும் கடனின் அளவும் கணிசமாக குறையும். இதன் விளைவாக தயாரிப்பு குறையும், கொள்முதல் குறையும், சந்தைக்கு வரும் பொருட்களின் அளவும் குறையும்.

ஆனால் இது விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்துமா?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக