10 மார்ச் 2008

விவசாயக் கடன் தள்ளுபடி - விளைவுகள்

'குழந்தைகள், ஏட்டில் கணக்கை தவறாக எழுதினால் அதை அழித்து மாற்றிவிடுகிறோம். நோட்டில் கணக்கை தவறாக எழுதினால் ரப்பர் வைத்து அழித்து விடுகிறோம். அதே மாதிரி, விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அழித்துவிட்டு, அவர்களுக்கு புதுவாழ்வு தரக்கூடாதா?'

இது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கேள்வி.

விவசாயிகளுக்கு புதுவாழ்வு தரவேண்டும் மத்திய அரசு நினைப்பதில் தவறேதும் இல்லை. அதுவும் தேர்தல் நெருங்கும்போது.

ஆனால் ரூ.60000/- கோடி சுமையை வங்கிகளின் தலையில் சுமத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.

புதுவாழ்வு தர நினைப்பது அரசு. ஆகவே அதற்கு தேவையான தொகையையும் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் வங்கிகளை நீங்கள் வழங்கிய கடனை உங்கள் புத்தகங்களிலிருந்து ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள் என்றால் அது ஒரு பொறுப்பற்ற செயல் என்றே சொல்ல தோன்றுகிறது.

1980-90களில் லோன் மேளா நடத்தில சீரழிந்துப்போன வங்கிகளின் - குறிப்பாக இந்தியன் வங்கி போன்ற அரசு வங்கிகள் - முதலீட்டை மேம்படுத்த அரசே மான்யமாக ஆயிரம் கோடிக்கும் மேலாக ஒதுக்க வேண்டியிருந்ததை சிதம்பரம் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. வாராக் கடனை எழுதி தள்ளி தங்களுடைய முழு முதலீட்டையுமே இழந்து நின்ற அரசு வங்கிகள் ஒன்று, இரண்டில்லை. க்டந்த பத்து ஆண்டுகளில் இதுவரை சுமார் ரூ.20000/- கோடிக்கு மேலாக அரசு வங்கிகளின் முதலீட்டை வலுப்படுத்த மத்திய அரசு ஒதுக்க வேண்டி வந்ததையும் சிதம்பரம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியிருந்தும் இப்போது எழுதி தள்ளவேண்டிய ரூ.60000/- கோடி கடனை வங்கிகள் மீது சுமத்துவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்று விளங்கவில்லை.

எழுதித் தள்ளுவது என முடிவெடுத்துவிட்டு அதற்கு என்ன செய்யலாம் என்று இனிமேல்தான் திட்டமிடவேண்டும் என்றும் சிதம்பரம் அவர்கள் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

இவருடைய அறிவிப்பு வந்ததிலிருந்தே பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. சரியாக திட்டமிடாமல் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் தாங்கள் ஈட்டவிருக்கும் லாபத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடுவரை வங்கிகள் இந்த தள்ளுபடியை எழுதித்தள்ளலாம் (writeoff)என்பது போன்ற முடிவை அரசு எடுக்குமானால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய 'எழுதித்தள்ளுவதற்கு' வருமான வரி விலக்கு என்ற ஒரு சலுகையையும் வங்கிகளுக்கு அரசு அளிக்க முன்வரலாம். ஆனால் அதுவும் ஒரு அரசுக்கு ஒருவகையில் இழப்பே.

எப்படியோ, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதைதான் இதுவும்.

11 கருத்துகள்:

  1. நீங்க விவசாயிகளின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்களா ஜோசப்? அவர்கள் படும் அல்லல்கள் உங்களுக்கு தெரியுமா? எதோ விவசாயிகள் பெரும் பங்களாக்கள் கட்டவும் தொழிற்சாலைகளும் சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை மையங்களும் ஆரம்பிக்க கடன் பெறுகிறார்கள் என்று நினைத்து விட்டீர்களோ. தங்கள் நிலங்களில் பயிர் செய்யவும் அதை பராமரிக்க பூச்சி மருந்து மற்றும் உரங்கள் வாங்கவும் தான் கடன் பெறுகிறார்கள். ஆனால் பருவ மழை பொய்த்துவிடுவதாலும் அல்லது பெரு மழை பெய்து வெள்ளம் ஏற்படுவதாலும் விலை இன்மையாலும் போட்ட பணத்தில் பாதி கூட எடுக்க முடிவதில்லை. வட்டி வாங்கி லாபம் மெல லாபம் குவிக்கும் வங்கிகளுக்காக இவ்வளவு பரிதாபப் படுகிறீர்களே.. வட்டிக்கு பணம் வாங்கி அதையும் கட்ட முடியாமல் மேற்கொண்டு விவசாயமும் செய்ய முடியாமல் வாழ்க்கையை இழக்கும் விவசாயிகளை பற்றி உங்களுக்கு கவலை இல்லயா நண்பரே. மேலும் சிறு விவசாயிகளுக்கு மட்டும் தான் இந்த சலுகை. வசதி படத்த விவசாயிகளுக்கு அல்ல. திரு சிதம்பரம் அவர்கள் முழு சுமையையும் வங்கிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களின் நிதி இழப்பை சரி கட்ட அரசாங்கம் உதவும் என்று தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அப்படி செய்தாலும் நாட்டுக்கு நிதி இழப்பு என்கிறீர்கள். நாடு என்பது என்ன? கடையில் விற்கும் பொருளா? நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் விவசாயிகள் இல்லாமல் நாடு என்று எதை குறிப்பிடுகிறீகள்.?. பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. விவசாயி என்பவன் வழிப்பிள்ளையாரும் இல்லை
    கடன் தள்ளுபடி கடைத்தேங்காயும் இல்லை..
    ம்ற்ற் தொழில்களுக்கு வரி விலக்கு அளித்தால் தொழில் வளர்ச்சி..!! அதே போன்ற பயன் விவசாயத்திர்க்கு அளித்தால் அழிவு...?
    விவசாயத்திர்க்கு கிடைக்க வேண்டிய நியாயமான பலன்தான் இந்த தள்ளுபடி. திரு.வைகோ சொல்வதுபோல் சிறிய அளவு விவசாய நிலம் வைத்திருப்பவன் சின்ன கடன்காரன் பெரிய அளவு விவசாய நிலம் வைத்திருப்பவன் பெரிய கடன்காரன்... நீங்கள் குற்ற்ம் சாட்டுவதர்க்கு உகந்த நபர் பசுமைபுரட்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை விச நிலங்களாக மாற்றியவர்தான்..பெயர் தேவை இல்லை என்று நினைக்கிறேன்...

    நன்றி...
    பாலா

    பதிலளிநீக்கு
  3. விவசாயி என்பவன் வழிப்பிள்ளையாரும் இல்லை
    கடன் தள்ளுபடி கடைத்தேங்காயும் இல்லை..
    ம்ற்ற் தொழில்களுக்கு வரி விலக்கு அளித்தால் தொழில் வளர்ச்சி..!! அதே போன்ற பயன் விவசாயத்திர்க்கு அளித்தால் அழிவு...?
    விவசாயத்திர்க்கு கிடைக்க வேண்டிய நியாயமான பலன்தான் இந்த தள்ளுபடி. திரு.வைகோ சொல்வதுபோல் சிறிய அளவு விவசாய நிலம் வைத்திருப்பவன் சின்ன கடன்காரன் பெரிய அளவு விவசாய நிலம் வைத்திருப்பவன் பெரிய கடன்காரன்... நீங்கள் குற்ற்ம் சாட்டுவதர்க்கு உகந்த நபர் பசுமைபுரட்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை விச நிலங்களாக மாற்றியவர்தான்..பெயர் தேவை இல்லை என்று நினைக்கிறேன்...

    நன்றி...
    பாலா

    பதிலளிநீக்கு
  4. வாங்க பாலா,

    நீங்க என்னுடைய இடுகையை தவறாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள்.

    என்னுடைய நிலை கடன் தள்ளுபடியைஇ எதிர்ப்பது அல்ல. அது அரசின் உரிமை. ஆனால் அதற்குவங்கிகள் தலையில் கை வைக்காதீர்கள் என்பதுதான். வங்கிகள் வர்த்தக நிறுவனங்கள். தொண்டு நிறுவனங்கள் அல்ல. பலர் பொருளாதார வல்லுனர்களுடைய எதிர்ப்பிற்குப் பிறகுதான் வங்கிகள் எழுதித்தள்ளும் ரூ60000/-- கடன் தொகைக்கு இவ்வருடன் ரூ 10 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக சிதம்பரம் அவர்கள் இறங்கி வந்துள்ளார். மீதித்தொகையை தவணை முறையில் 2010க்குள் அளிப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆயினும் 2008-09ல் எழுதி தள்ளும் தொகை வங்கிகளின் லாபத்தை நிச்சயம் பாதிக்க்கும். அதுவும் அரசுடைமையாக்கப்படாத வங்கிகள் குறிப்பாக சிறிய வங்கிகள் இந்த சுமையை தாங்க முடியாது.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு, சார்!

    /ஆனால் ரூ.60000/- கோடி சுமையை வங்கிகளின் தலையில் சுமத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.
    /
    உண்மைதான்!

    இதை ப.சி project பண்ணவிதமும் ....
    நம் பிரதமர் பாராட்டுவதும்...
    நம்மில் எத்தனைபேர் 'உண்மையை' புரிந்து கொண்டனர்..?

    பதிலளிநீக்கு
  6. இதை பார்க்கவும் :

    Oh! What a lovely waiver
    by P. Sainath

    http://www.thehindu.com/2008/03/10/stories/2008031055091100.htm

    பதிலளிநீக்கு
  7. வாங்க சஞ்சய்,

    நீங்க விவசாயிகளின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்களா ஜோசப்?//

    நிச்சயமாக. நான் ஒரு வங்கி மேலாளராக தஞ்சையிலும், தூத்துக்குடியிலும் பணியாற்றியபோது பல விவசாயக் கடன்களை வழங்கியுள்ளேன். அவை வாராக் கடன்களாகும்போது தள்ளுபடி செய்யவும் பரிந்துரைத்திருக்கிறேன்.

    என்னுடைய இப்போதைய வாதம் கடன்களை தள்ளுபடி செய்யலாகாது என்பதல்ல. அதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்த சுமையை வங்கிகள் மீது திணிக்கவேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

    நாடு என்பது என்ன? கடையில் விற்கும் பொருளா? நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் விவசாயிகள் இல்லாமல் நாடு என்று எதை குறிப்பிடுகிறீகள்.?. //

    தனிமனித இழப்பும் நாட்டின் இழப்பும் நிச்சயம் வெவ்வேறுதான். விவசாயிகளை குற்றமோ குறையோ கூற விழையவில்லை. ஆனால் ஒரூ திட்டமும் இல்லாமல், தங்களுடைய தகுதிக்கு மீறி, ஏனோதானோவென்று விவசாயம் செய்துவிட்டு தங்களுடைய முதலீட்டை இழந்துவிட்டு வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். வங்கிக் கடந்தானே அதை திருப்பி செலுத்த தேவையில்லை என்ற நினைப்பில் கையில் பணம் இருந்தும் திருப்பிச் செலுத்தும் எண்ணம் இல்லாத விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன்.

    வட்டி வாங்கி லாபம் மெல லாபம் குவிக்கும் வங்கிகளுக்காக இவ்வளவு பரிதாபப் படுகிறீர்களே.. //

    வங்கிகளில் உள்ள பணமும் நம்முடையதுதான் நண்பரே. பொதுமக்கள் சிரமப்பட்டு உழைத்து சம்பாதித்து, சிக்கனத்துடன் சேமித்து வைத்த பணம். அதை இப்படி கோடி கணக்கில் தள்ளுபடி செய்தால் வங்கிகளையே இழுத்து மூட வேண்டி வரும். மறந்துவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. //நிச்சயமாக. நான் ஒரு வங்கி மேலாளராக தஞ்சையிலும், தூத்துக்குடியிலும் பணியாற்றியபோது பல விவசாயக் கடன்களை வழங்கியுள்ளேன். அவை வாராக் கடன்களாகும்போது தள்ளுபடி செய்யவும் பரிந்துரைத்திருக்கிறேன்.//
    அப்போது உங்களுக்கு தெரியவில்லையா.. இது அடுத்தவர் பணம் என்று. நீங்கள் ஒரு வங்கியில் இருந்து செய்ததை தான் சிதம்பரம் அனைத்து வங்கிகளுக்கும் செய்திருக்கிறார்.உங்கள் செயலால் வங்கிக்கு நிதி இழப்பு ஏற்பட்டால் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் சிதம்பரம் வேறு வகை உதவிகளின் மூல சரி செய்வார்.முதல் தவணையாக 10000 கோடி ஒதுக்கி இருக்கிறார்.

    //ஆனால் அந்த சுமையை வங்கிகள் மீது திணிக்கவேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.//
    அவர் வங்கிகளின் மீது திணிக்கவில்லை. வங்கிகளில் லாபமாக இருக்கும் சில ஆயிரம் கோடிகளை தவிர மற்றவை மக்களின் பணம் என்பது அவருக்கும் தெரியும். தனிப்பட்ட ஒருவரின் சேமிப்பை எடுத்து மற்றவருக்கு யோசிக்காமல் கொடுக்க இது ஒன்றும் சர்வாதிகார நாடு அல்ல.

    //ஆனால் ஒரூ திட்டமும் இல்லாமல், தங்களுடைய தகுதிக்கு மீறி, ஏனோதானோவென்று விவசாயம் செய்துவிட்டு தங்களுடைய முதலீட்டை இழந்துவிட்டு வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன்.//

    தகுதிக்கு மீறி என்று எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஒரு விவசாயியின் தகுதி எது? உங்கள் மதிப்பீடுகளின் படி அவர்கள் தகுதிக்கு மீறி உங்களை யார் கடன் கொடுக்க சொன்னது?. அவர்களின் தகுதி எது என்பதை தயவு செய்து விளக்குங்கள். இது எனக்கு புரியவில்லை.

    //வங்கிக் கடந்தானே அதை திருப்பி செலுத்த தேவையில்லை என்ற நினைப்பில் கையில் பணம் இருந்தும் திருப்பிச் செலுத்தும் எண்ணம் இல்லாத விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன்.//

    இது ஒரு வங்கி அதிகாரியின் முற்றிலும் பொருப்பற்ற வார்த்தை. அவர்கள் கையில் பணம் இருந்தால் சட்ட படி அத வசூலிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது.இது போன்ற செயல்களை நிச்சயம் நான் ஆதரிக்க வில்லை. ஆனால் இது முற்றிலும் வங்கியின் கையாலாகாத் தானம் தான்.

    //வங்கிகளில் உள்ள பணமும் நம்முடையதுதான் நண்பரே. //
    நிச்சயமாக. இதை சரி கட்ட அரசாங்கம் உதவும் என்று சிதம்பரம் சொல்லி இருக்கிறார்.

    //பொதுமக்கள் சிரமப்பட்டு உழைத்து சம்பாதித்து, சிக்கனத்துடன் சேமித்து வைத்த பணம். //
    வராக் கடனை தள்ளுபடி செய்ய நீங்கள் பரிந்துரைத்த போது இது தெரியாதா உங்களுக்கு?

    //அதை இப்படி கோடி கணக்கில் தள்ளுபடி செய்தால் வங்கிகளையே இழுத்து மூட வேண்டி வரும். மறந்துவிடாதீர்கள்.//

    இது அதீத கற்பனை. பல தொழிலதிபர்களின் தொழில் வளர்ச்சிக்கு கோடி கோடியாய் கடன் கொடுத்து அது வராக் கடன் பட்டியலில் சேர்ந்த கதை உங்களுக்கு தெஇர்யாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்போதெல்லாம் எத்தனை வங்கிகள் இழுத்து மூடப் பட்டது?.

    பதிலளிநீக்கு
  9. முன்குறிப்பு: என் பெரியம்மாவுக்கும் கொஞ்சம் நிலம் இருக்கு.அதுல எது போட்டாலும் பெரும்பாலான வருடங்களில் நட்டம்தான். நிலத்தை விற்க்கச் சொன்னால் அவர் ஒத்துக்கொள்வதில்லை. இதையேதான் இன்னொருவரும் சொல்ரார்.

    <== சஞ்சை said
    உதவிகளின் மூல சரி செய்வார். முதல் தவணையாக 10000 கோடி ஒதுக்கி இருக்கிறார். ==>
    ரூ.10,000 கோடி வங்கிகளூக்குக் கடனாகத்தான் தரப்படுகிறது. அதாவது,இப்பணம் அந்த ரூ.60,000 கோடி நட்டத்துக்கு ஈடு அல்ல.
    [ஆதாரம் : இந்த வார துக்ளக்கில் குரு மூர்த்தி]

    சன்ஞை, உங்களோட விவசாயிகளின்மேல் உள்ள அக்கறை புரிகிறது.ஆனால், இப்போது பிரச்னை , ரூ.60,000 கோடி(உண்மையில் ரூ.23,000 கோடிதான் என்கிறார்கள்)கடன் தள்ளுபடி பண்ணியது பற்றி அல்ல. அதற்க்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை என்பதுதான் பிரச்னை.

    இக்கடன் தள்ளுபடியால் விவச்சாயிகளின் தற்கொலை நிற்கப்போவதில்லை. இதை சொன்னது மத்திய விவசாய மந்திரி சரத் பவார். ஏனெனில், வங்கிக் கடனால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை. கந்துவட்டிகாரர்களீடம் கடனை திருப்பி கொடுக்காததால்தான் தற்கொலை செய்கிறார்கள். ப.சிதம்பரம் க.வட்டிகாரர்களிடம் வாங்கிய கடனுக்கும் தள்ளுபடி கொடுத்தால்தான் அதன் நோக்கம் நிறைவேறும்.

    பதிலளிநீக்கு