21 டிசம்பர் 2007

வங்கிகளில் கணினி - 6

அன்றைய மென்பொருள் நிர்வாகத்தில் இருந்த பல குறைபாடுகளுக்கு முக்கிய காரணம் Distributed Environment என்கிற சூழல்தான்.

முந்தைய இடுகையில் மென்பொருளின் ஒவ்வொரு versionஐயும் கிளைகளில் நிறுவுவதில் உள்ள பிரச்சினையை கோடிட்டு காட்டியிருந்தேன். மத்திய அலுவலகத்தில் இயங்கிவந்த கணினி இலாக்கா அதிகாரிகள் அநேகமாக ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய versionஐ கிளைகளூக்கு floppyகளில் அனுப்பி வைப்பது வழக்கம். இன்று உள்ளதுபோல் தனியார் குரியர் வசதிகள் அப்போது இருக்கவில்லை. ஆகவே நம்முடைய good old தபால் இலாக்காவைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. வட மாநிலத்திலிருந்த கிளைகளுக்கு floppyகள் சென்றடையவே ஒரு வார காலம் ஆகிவிடும். அப்படி கிளைகளில் சென்றடைந்தாலும் அதிலுள்ள .exe கோப்புகள் நிறுவ தகுதியுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியில்லை. Dir கட்டளையில் பட்டியலிடப்படும் கோப்புகள் Ins கட்டளைக்கு படியாது! அல்லது கிளை அலுவலர்கள் தங்களுடைய அறியாமையாலோ ஆர்வ கோளாறாலோ format கட்டளை கொடுத்து floppyயிலுள்ள அனைத்து கோப்புகளையும் களைந்திருப்பார்கள்!! அத்தகைய சூழலில் இலாக்காவிற்கு SOS வரும். சில கிளைகள் தொலைபேசியில் அழைத்து கணினி இலாக்கா அதிகாரிகள் கூறுவதை பொறுமையாக கேட்காமல் எதிர் கேள்வி கேட்டே நேரத்தை வீணடித்துவிட்டு கைகளை பிசைந்துக்கொண்டு நிற்பார்கள்.

ஆகவே எல்லா கிளைகளிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட versionஐ நடைமுறைக்கு அமுல்படுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்தது. இது என்ன பெரிய விஷயமா என்று கேட்க தோன்றலாம். பெரிய விஷயம்தான். வங்கி மேலிடம் ஒவ்வொரு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்கு வழங்க/வசூலிக்கப் படும் வட்டி விகிதத்தை அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட தியதியிலிருந்து மாற்றங்கள் கொண்டு வருவதுண்டு. இன்றைய Centralised சூழலில் நினைத்த நேரத்தில் உடனடியாக அமுல்படுத்த முடிகிற மாற்றங்கள் அன்றைய Distributed சூழலில் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்தே அறிமுகப்படுத்த முடிந்தது

. ஆகவே அறிமுகப்படுத்த வேண்டிய தியதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே மாற்றங்களின் விவரங்களை கணினி இலாக்காவிடம் ஒப்படைத்துவிடுவார்கள். கணினி இலாக்காவினர் அவற்றை மென்பொருளில் உட்படுத்தி புதிய versionஐ எல்லா கிளைகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதை குறிப்பிட்ட தியதிக்குள் எல்லா கிளைகளிலும் நிறுவாவிட்டால் பிரச்சினைதான். உதாரணத்திற்கு ஒரு சேமிப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய வட்டி 10% லிருந்து 9% ஆக குறைக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். புதிய மென்பொருள் version கிடைக்கப் பெறாத கிளை அதற்கு முந்தைய விகிதத்திலேயே தன்னுடைய சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும். அதனால் வங்கிக்கு ஏற்படக்கூடிய இழப்பு லட்சக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளதே!

இது ஒரு புறம். எல்லா கிளைகளிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட version நிறுவப்பட்டுவிட்டதா என்பதை கணினி இலாக்காவால் உறுதிப்படுத்திக்கொள்வதிலும் சிக்கல் இருந்தது. இதற்கென அனுப்பப்படும் சுற்றறிக்கையில் கணினி இலாக்காவால் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் versionஐ இன்ன தியதிக்குள் கிளைகள் நிறுவிவிடவேண்டும் என்றும் அதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் புதிய version வந்து சேராவிட்டால் கணினி இலாக்காவை தொலைபேசி மூல அணுகவேண்டும் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

குறிப்பிட்ட நாட்கள் வரை காத்திருக்க பொறுமையில்லாமல் மத்திய அலுவலகத்திலிருந்து இத்தகைய சுற்றறிக்கை வந்த நாளிலிருந்தே கிளைகளிலிருந்து இதை உள்ளடக்கிய மென்பொருள் எங்கே, எங்கே என்ற தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். இவற்றை சமாளிக்கவே தனியாக ஒரு குழு தேவைப்படும். கிடைக்கப்பெற்றாலும் அதை நிறுவ இயலவில்லை என்ற புகார்கள். நிறுவினாலும் சரிவர இயங்கவில்லை என்ற புகார்கள். பெரும்பாலும் இதற்கு பயணாளர்களின் தவறுகளே காரணமாயிருக்கும். நான் கிளை மேலாளராக இருந்த சமயத்தில் என்னுடைய துணை மேலாளர்கள் தாங்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் பொறுமையாக கணினி இலாக்கா அதிகாரிகள் பதிலளிப்பதில்லை என்ற புகார்களை கூற கேட்டிருந்தேன். ஆனால் கிளையிலிருந்து மாற்றலாகி கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகியபிறகுதான் தெரிந்தது கிளையிலுள்ளவர்களுக்கு கற்பிப்பது எத்தனை சிரமம் என்பது.

சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட திட்டங்கள் மட்டுமில்லாமல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதம் மாறுதலுக்குள்ளாவதுண்டு. அத்தகைய சமயங்களில் இன்றைய Centralised சூழலில் மத்திய தகவல் மையத்திலுள்ள மென்பொருளில் இந்த மாற்றத்தை ஒட்டுமொத்த வங்கிக்கும் அமுலாக்கிவிட முடிகிறது. ஆனால் அப்போது புதிய மென்பொருள் கிளையில் நிறுவப்பட்டுவிட்டாலும் வட்டி வழங்க/வசூலிக்க வேண்டிய நாளுக்குள் அத்திட்டங்களிலுள்ள அனைத்து கணக்குகள் ஒவ்வொன்றிலும் புதிய வட்டி விகிதத்தை கைப்பட (Manual) மாற்ற வேண்டியிருக்கும். சுமார் பத்தாயிரம் கணக்குகள் உள்ள கிளைகளில் இதை செய்து முடிக்கவே ஒரு மாதத்திற்கு மேல் தேவைப்படும். ஆனால் மத்திய அலுவலகம் தாங்கள் இறுதியாக அறிமுகப்படுத்திய மாற்றங்கள் கிளையிலுள்ள அனைத்து திட்டங்களிலும் செய்தாகிவிட்டது என்ற தகவலை உடனடியாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கிளைகளூக்கு கட்டளையிடும். அத்துடன் தன்னுடைய உள் ஆய்வாளர்களிடம் (Internal auditors) அவர்களுடைய அடுத்த கிளை விஜயத்தின்போது இதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கட்டளையிடும். ஆனால் மத்திய அலுவலகம் குறிப்பிட்டிருக்கும் நாளுக்குள் நடுத்தர மற்றும் பெரிய கிளைகள் நிச்சயம் முடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் மத்திய ஆய்வாளர்கள் (Internal Inspectors) தங்களுடைய கிளைக்குள் வருவதற்குள்.எப்படியும் செய்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் பல கிளை மேலாளர்களும் இந்த அலுவலை செய்து முடித்தாகிவிட்டது என்று தெரிவித்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய அனுபவத்தில் பல ஆய்வாளர்கள் நான்கைந்து மாதங்கள் கழித்து ஆய்வுக்கு செல்லும் நேரத்திலும் மத்திய அலுவலகம் அறிமுகப்படுத்திய வட்டி விகித மாற்றங்கள் பல கிளைகளிலும் செய்யப்படாமல் இருப்பதை கண்டுபிடித்து தங்களுடைய ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

இது Distributed சூழலில் இன்றும் தீர்வு காண முடியாத பிரச்சினையாகவே இருந்துவருகிறது.

இந்த சிக்கலில் இருந்து மீள என்ன வழி என்று சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு சிந்திக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் நாட்டின் முன்னனி நிறுவனங்களில் சில தங்களுடைய Core Banking Solution என்கிற மென்பொருளை வங்கிகளில் அறிமுகப்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கியிருந்தன. ஆனால் அந்த நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளுக்கு கோரிய விலை எங்களைப் போன்ற சிறு வங்கிகள் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியததாக இருந்தது.

இருப்பினும் அவர்களுடைய மென்பொருளை காண்பது (Demo) என தீர்மானித்து அப்போது எங்களுடைய வங்கியின் பயிற்சி கல்லூரி முதல்வராக என்னுடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. எங்களுடைய கணினி இலாக்கா அதிகாரிகளுள் சிலரும் குழுவில் இருந்தனர்.

உடனே முன்ன்னி நிறுவனங்கள் சிலவற்றை தொடர்பு கொண்டு ஒரு தேதி நிர்ணயித்து Demo பார்த்தோம்....

எனக்கு இரு நிறுவனங்களுடைய மென்பொருளும் வெகுவாக பிடித்துப்போனது. ஆனால் எங்களுடைய குழுவில் இருந்த கணினி இலாக்கா அதிகாரிகளுள் மூத்த சிலருக்கு 'சார் இது நம்ம பேங்குக்கெல்லாம் சரி வராது. நெறைய கஸ்டமைஸ் செய்ய வேண்டியிருக்கும். இவுங்க அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..' என்று துவக்கத்திலேயே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர்...

அவர்களுடைய போக்கு எனக்கு இது மாறுதலுக்கு எதிரான (resistence to change) போக்கு என்றே தோன்றியது.

தொடரும்..

6 கருத்துகள்:

  1. எந்த நிறுவனங்கள் எனச் சொல்வீர்களா? எங்கள் நிறுவனமுமா எனத் தெரிந்து கொள்ள ஆசை!

    பதிலளிநீக்கு
  2. வாங்க கொத்தனார்,

    எந்த நிறுவனங்கள் எனச் சொல்வீர்களா? எங்கள் நிறுவனமுமா எனத் தெரிந்து கொள்ள ஆசை!//

    Iflex and Infosys. இதுல எது ஒங்களுடையது;-)

    பதிலளிநீக்கு
  3. Hi Teri!

    Thanks for coming. Wish you the same :-))

    பதிலளிநீக்கு
  4. ரெண்டில் ஒண்ணுதான்//

    முதலா ரெண்டா:-0

    பதிலளிநீக்கு