27 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து... 3

மலேசிய அரசியலில் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுவது மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா). நாடு அடிமைப்பட்டு இருந்தபோது (1946ல்) துவக்கப்பட்ட கட்சிகளில் இதுவும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததும் (1957) ம.இ.கா., ஐக்கிய மலாய் மக்கள் கட்சி, அனைத்து மலேசிய சீனர்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசீய அளவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த அமைப்பே இப்போது பாரிசான் நேஷனல் (Barisan Nasional) எனப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை நடைபெற்ற அனைத்து பொதுத் தேர்தல்களிலும் இந்த கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சி செலுத்திவருகிறது!

இளம் வயதில் மிகவும் சிரமங்களை சந்திக்க நேர்ந்த டத்தோஸ்ரீ சாமிவேலு தன்னுடைய 23ம் வயதில் ம.இ.காவில் அடிப்படை அங்கத்தினராக சேர்ந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கினார். பிறகு தன்னுடைய நண்பர் துரைராஜ் என்பவருடைய உதவியால் மலேசிய வானொலியின் தமிழ் பிரிவில் செய்தியாளராக சேர்ந்தார். தன்னுடைய குரல் வளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார். ம.இ.காவில் இணைந்த ஐந்து வருடங்களில் கட்சியின் செலாங்கொர் கமிட்டி உறுப்பினராகவும் கட்சியின் கல்ச்சுரல் தலைவராகவும் தெரிந்தெடுப்பட்டார். 1974ம் வருடம் மலேசிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கைக்கு பிறகு கட்சியின் தலைவர் பதவியை பிடித்தார். ஆனால் அவர் தலைவர் பதவியை பிடித்த விதம் கட்சியை இரண்டாக பிளந்தது எனலாம். கட்சியில் பெரும்பாலான தொண்டர்களின் மதிப்பைப் பெற்றிருந்த எம்.ஜி. பண்டிதன், சுப்பிரமணியம் போன்ற தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றியதுடன் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியின் பல கிளைகளையும் முடக்கியதாக அவருடைய அதிருப்தியாளர்கள் இன்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அவருடைய தலைமையில் ம.இ.கா இன்று ஒரு பலம் வாய்ந்த கட்சியாக, மலேசிய தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருப்பது உண்மைதான் என்றாலும் அவருடைய பாணியில் இன்றைய தலைமுறையினர் பெரும் அதிருப்தியடைந்திருப்பதும் உண்மை.

பெரும்பான்மை மலாய் கட்சியினருடன் கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கு பெற்றிருந்தாலும் அவரைத் தவிர வேறெந்த தமிழின தலைவரும் மத்திய அமைச்சரவையில் காபினெட் அந்தஸ்த்து பெற்ற அமைச்சராக இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர். மலேசிய ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தன்னையே ஒரே தலைவராக அவர் முன்னிறுத்திக்கொள்வதும் பலருக்கும் எரிச்சலை உண்டுபண்ணியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

இவருக்கு எதிராக ஊழல், குண்டர்களை வைத்துக்கொண்டு எதிராளிகளை பயமுறுத்தி அடிபணிய வைப்பது, அவர் பொறுப்பிலிருந்த பல இலாக்கா மேற்கொண்ட பல அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதியை தவறான, சுயலாபத்துக்காக செலவழித்தது என குற்றச்சாட்டுகளின் பட்டியலைப் பார்த்தால் நம்முடைய தலைவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவரல்ல என்பது தெளிவு.

இத்துடன் சர்வாதிகார போக்கில் செயல்படுபவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தன்னுடைய கருத்துக்களுக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடும் குணமும் அவருக்கு உண்டு என்கிறார்கள் எதிரணியினர். ஆகவே அவர் அரசு மற்றும் கட்சி பதவியிலிருந்து விலகினால் ஒழிய ம.இ.கா நாளடைவில் தன்னுடைய செல்வாக்கை இழந்துவிடும் என்கின்றனர்.

ஆனால் அவருடைய பதவி விலகலை கோருபவர்களுக்கு அவர் கூறிவந்ததையே நேற்றும் ஒரு அறிக்கையில் இவ்வாறு பதிலளித்துள்ளார். 'எனக்கு ஓட்டு போட்டவர்கள் சொல்லட்டும் பதவி விலகுகிறேன். அதுவரை நானே முடிவு செய்யும் வரை பதவி விலக மாட்டேன்.'

மேலும் அதே அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறியதாக இன்றைய மக்கள் ஓசை செய்தித்தாளில் வெளிவந்திருப்பதை பார்த்தால் அவருடைய துணிச்சலை நினைத்து வியக்க தோன்றுகிறது: 'என்னிடம் மோதியவர்கள் பலர் இன்று மண்ணுக்குள் இருக்கின்றனர். இப்போது பலர் பேச நான் அமைதியாக இருக்கிறேன். ஆனால் பேசுபவர்களையும் எழுதுவர்களையும் விட்டுப்பிடித்து கடைசியில் ஒரு தட்டு தட்டுவேன்.' உண்மையிலேயே அவர் இப்படித்தான் பேசினாரா அல்லது அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் குறை காணும் மக்கள் ஓசை செய்தித்தாளின் சில்மிஷமா என்பது தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து ஆட்சியில் பங்குபெற்றுள்ள ம.இ.கா தலைவர்களால் மலேசிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர முடியவில்லை.

அரசு பள்ளிகளில் தமிழாசிரியர்கள் பற்றாக்குறை, தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் தமிழ் பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இல்லாதது, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த இந்து கோவில்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக முன்னறிவிப்பின்றி இடித்து தள்ளுவது, அரசு அலுவலகங்களுக்கு இந்தியர்களை புறக்கணிப்பது, அரசு கல்லூரிகளில் தனி ஒதுக்கீடு இல்லாதது போன்ற பல நியாயமான கோரிக்கைகள்...

இத்தகைய புறக்கணிப்பை இனியும் சகிக்க முடியாமல்தான் இருபதுக்கும் மேற்பட்ட இந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான HINDRAF சாலை மறியலில் இறங்கியது.

ஆனால் hindraf என்னும் அமைப்பின் நோக்கம் என்ன? அதன் பெயரிலேயே அந்த அமைப்பின் நோக்கம் தெரிகிறது: ஹிந்து உரிமைகளை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அணியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு அணி எந்த அளவிற்கு மலேசிய தமிழர்களுடைய பிரதிநிதியாக நிலைப்படுத்திக்கொள்ள முடியும் என்பது புரியவில்லை.

ஆனால் அதன் தலைவர்களுள் பலரும் தங்களை ம.இ.காவினராக இனம் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர் என்பதும் அவர்களுடைய பொது எதிரி அரசில் அங்கம் வகிக்கும் ம.இ.காவின் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள் என்பதும் அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.

அதே சமயம் hindraf அணியினரின் குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றச்சாட்டு இந்திய வம்சாவளியை மலேசிய அரசு களைந்தெறிய முயல்கிறது என்பதுதான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மலேசிய தமிழர்களே தயாராயில்லை. அது சற்று அதிகபட்சமான குற்றச்சாட்டு என்றும் இந்திய தலைவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் கூறுகின்றனர் இளைய தலைமுறை தமிழர்கள்.

மேலும் தங்களை இந்திய இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அணி என இனங்காட்டிக்கொள்வதால் இந்திய கிறிஸ்த்துவ, இஸ்லாம் மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் இந்த அணி இழந்துவிட்டது எனவும் கூறலாம்..

இவர்களுடைய அடுத்த குற்றச்சாட்டு என்ன?

காலங்காலமாக இயங்கிவரும் ஹிந்து கோவில்களை மலேசிய அரசாங்கம் இடித்து தள்ளி வருகிறது...

இதன் பின்னணி என்ன?

தொடரும்....

5 கருத்துகள்:

  1. <==
    hindraf என்னும் அமைப்பின் நோக்கம் என்ன? அதன் பெயரிலேயே அந்த அமைப்பின் நோக்கம் தெரிகிறது:
    ===>
    "துக்ளக்"கில் வெளியாகியுள்ள அவர்களின் பேட்டி படிங்க.ஒரு இந்திய வம்சாவளி மலேசிய ராணுவ வீரர் இறந்தவுடன் அவர் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்ய அரசு அனுமதிக்காததால்,அவ்வுரிமையைப் பெற வேண்டி HINDRAF துவக்கப்பட்டது.அந்த அமைப்பை வைத்தே, இப்போதைய பிரச்னை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    மேலும்,இந்திய முஸ்லிம்களூக்கு எவ்விவிதப்பிரச்னையும் இருப்பதற்கில்லை. ஏன்,இந்திய வம்சாவளி இந்துக்களே,முஸ்லிம்களாக மாறிவிட்டாலும் பிரச்னை இல்லை. அவர்களுக்கு, மலாய்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் முஸ்லிமாகிய காரணத்தால் தானாகவே வந்தடைகின்றன.வேறு வழியில்லாமல் நிறைய பேர் மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.

    இந்திய வம்சாவளி என்று சொன்னாலும்கூட மதம்தான் இங்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.

    "இனப்படுகொலை" என்பது அதிகப்படியான வார்தைப்பிரயோகம் என்றாலும், "நான் உன்னைக்கொல்ல மாட்டேன். ஆனால்,உனக்கு சாப்பாடு எதுவும் தராமல் பட்டினி போடுவேன்" என்பதுதான் ஆளும் மலேசிய அரசின் கொள்கை.

    பதிலளிநீக்கு
  2. வாங்க சிவா,

    "நான் உன்னைக்கொல்ல மாட்டேன். ஆனால்,உனக்கு சாப்பாடு எதுவும் தராமல் பட்டினி போடுவேன்" என்பதுதான் ஆளும் மலேசிய அரசின் கொள்கை.//

    இதுவும் கூட சற்று அதிகப்படியான குற்றச்சாட்டாகவே தோன்றுகிறது.

    நேற்று வெளியாகியுள்ள பள்ளி இறுதி தேர்வுகளின் முடிவில் எல்லா பாடங்களிலும் ஏ பெற்று வெற்றிபெற்ற தமிழ் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் பட்டியலைப் பார்த்தால் மலேசிய தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ, ஒதுக்கப்படுவதாகவோ தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  3. Mr.Joseph,

    Your article brings forth lot of clarity to the issue.

    Malaysian Govt had commented lot of respect earlier but later this incident had brought doubts about that goodwill.

    Many blogs written from within Malaysia had expressed deep hurt at the way the hindraf had conducted themselves.

    Appealing to the British Queen for essentially an internal problem of Malaysia had deeply hurt the Malaysian sentiments.

    Instead of fostering unity among its followers, they had isolatated themselves by identifying with an image, which no sensible people from India would endorse. And moreover by aligning openly with the communal elements of India, whose credibility internationally is not worth mentioning, they had put their own credentials into question.

    Rather they should realise now, and concentrate more on the core issue affecting every one - as a collective entity representating the interests of all sections of the people of Indian Origin - not the Hindus alone.

    However, this agitation whether agreeable or not agreeable had extracted some assurances from the government that their grievances would be favourably looked into.

    Meanwhile, the Hindraf should conduct itself as a party of Malaysian citizens of Indian Origin - not that of Indian citizens. Throwing out far fetched allegations on their own government where the people of Indian origin is also a part would only discredit them.

    We hope that Malaysican government should also take into account the grievances of the people of Indian Origins especially dealing with the religious matters.

    Good post with lot of clarity.

    (Sorry for writing in English as my eKalappai is not working)

    பதிலளிநீக்கு
  4. வாங்க நண்பன்,

    உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

    ஹிந்த்ராஃபின் போராட்டம் எந்த அளவுக்கு இந்திய இளைஞர்களை பாதித்துள்ளது என்பதை இனி வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு