31 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து... 4

ஹிந்த்ராஃப் என்ற ஒரு அமைப்பு (Rights Action Force என்றால் அமைப்பு என்று பொருள் கொள்ளலாமா? தெரியவில்லை.) மலேசியாவில் இருப்பதே பல மலேசிய தமிழர்களுக்கு, குறிப்பாக இளையதலைமுறையினருக்கு, தெரிய வந்தது அவர்களுடைய சமீபத்திய சாலை  மறியலின்போதுதான் என்றால் மிகையாகாது.

ஹிந்த்ராஃப் அமைப்பின் பூர்வீகத்தைப் பற்றி எந்தஒரு அதிகாரபூர்வ தகவலும் தளங்களில் இல்லை. மலேசிய வாழ் இந்துக்களின் உரிமைகளை  பாதுகாப்பதே இதன் லட்சியம் என செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கூட்டமைப்பு என்கின்றன சில வலைத்தளங்கள். இங்குள்ள  மலேசிய தமிழர்களில் பலருக்கும் கூட அது ஒரு இந்துக்களின் சங்கம் என்கிற அளவில் மட்டுமே தெரிந்திருக்கிறது. அதன் தலைவர் திரு வைத்தா  மூர்த்தி ஒரு தமிழ் ராணுவ வீரரை இந்து முறைப்படி அடக்கம் செய்ய மலேசிய இராணுவம் அனுமதிக்க மறுத்ததன் விளைவே இந்து மக்களின்  உரிமைகளை பாதுகாக்க ஒரு அமைப்பை துவக்க தன்னை தூண்டியதாக ஒரு தமிழ் சஞ்சிகையின் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்று என்னுடைய முந்தைய இடுகையில் நண்பர் சிவா தன்னுடைய மறுமொழியில் தெரிவித்திருந்தார் (நான் அந்த பேட்டியை படிக்கவில்லை).

ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. அப்படி பார்த்தால் இதற்கு முன்பு தமிழ் இந்து இராணுவ வீரர்கள் எவரும்  இறக்கவில்லையா அல்லது அவர்கள் அனைவருமே இந்து முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லையா?

அவர்களுடைய அடுத்த குற்றச்சாட்டு இந்திய மக்களினத்தை அடியோடு ஒழிக்க மலேசிய அரசாங்கம் முயல்கிறது என்பது. இந்த குற்றச்சாட்டை  போராட்டத்தின் முக்கிய காரணமாக முன்வைத்தது பல மலேசிய தமிழ் இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்தது என்றும் கூட சொல்லலாம். நான்  சந்தித்த சில இளைஞர்கள் சிரிக்கக் கூட செய்தனர். அதைவிட பெரிய வேடிக்கை - இதை முதிர்ச்சியற்ற செயல் எனவும் கூறுகின்றனர் - எலிசபெத்  மகாராணிக்கு நஷ்ட ஈடு கேட்டு கடிதம் அனுப்பியது.

அடுத்தது ஹிந்து ஆலயங்களை அரசு முன்னறிவிப்பில்லாமல் இடித்து தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டு. அதாவது அரசு நிலத்தில் அல்லது  தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஆலயங்களை மட்டுமே இடிக்கப்பட்டுள்ளதாக அரசில் பங்குபெற்றுள்ள  இந்தியர்களின் அரசியல் கட்சியே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக அறிவித்துவிட்டே இந்த  ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில்  கட்டப்பட்டிருந்த மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதாக இங்குள்ள பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதை பார்த்தபோது இதில் பெரிதாக தவறேதும்  இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அடாவடியாக பாபர் மசூதியை இடித்து தள்ளியதை விட்டுவிடுவோம்.

ஆனால் இடிக்கப்பட்ட சில ஆலயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்துள்ளன என்றும் அந்த ஆலயங்களில் நடைபெற்ற  விழாக்களில் இன்று அரசில் அமைச்சர்களாக இருக்கும் பல அரசியல் தலைவர்களும் பங்கு பெற்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதையும்  அலட்சியப்படுத்துவது முறையல்ல. ஆகவேதான் இதன் தீவிரத்தை உணர்ந்த மலேசிய அரசு உடனே நடவடிக்கையில் இறங்கி அரசில்  பங்குபெற்றுள்ள இந்தியர்கள் கட்சியான இ.ம.கா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவை இத்தகைய ஆலயங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை  தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் அவர்களே பணித்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கலந்தாலோசிக்காமல் எந்த இந்து  ஆலயங்களும் இடிக்கப்படலாகாது என்றும் அப்படி இடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமானால் அவர்களுக்கு அரசே மாற்று இடம் ஒன்றை  அளிக்க வேண்டும் என்றும் அரசு முடிவெடுத்துள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்பு டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களே அறிக்கையிட்டுள்ளார்.

அடுத்த குற்றச்சாட்டு தமிழ் பள்ளிகள் மூடப்படுகின்றன என்பது. இவர்கள் முன்வைக்கும் வாதம் நாடு சுதந்திரம் பெற்றபோது இயங்கிவந்த பள்ளிகளின் எண்ணிக்கையை இப்போது இயங்கிவரும் பள்ளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கூடுவதற்குப்பதிலாக குறைந்துள்ளது என்பது.

ஆனால் அரசின் வாதம் இப்படி செல்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றிய பல இந்தியர்களுக்கும்  நகரங்களில் குடியேறிவிட்டனர். ஆகவே அவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டன  அல்லது அதற்கருகில் இயங்கிவந்த வேறு சில பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல தமிழ் பள்ளிகளில் தலைமையாசிரியர் இடங்கள்  காலியாகவே உள்ளன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய பள்ளிகள்  பெரும்பாலும் கிராம மற்றும் தோட்டப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் என்றும் இந்த பள்ளிகளில் தலைமையாசிரியராக பணி நியமனம் பெறும் பல  இளைஞர்கள் அதை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

அரசு துறைகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லை. இதுதான் இவர்களுடைய குற்றச்சாட்டுகளில் கவனிக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல்  முழுக்க முழுக்க உண்மையும் கூட. சமீப காலமாக பல அரசு அலுவலகங்களிலும் இந்திய அலுவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்துள்ளது என்பதை அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே சுட்டிக்காட்டியுள்ளன. இதற்கு அரசு அலுவல்களுக்கு விண்ணப்பிக்கும்  மலேசியரல்லாதவர்களின், அதாவது சீன மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடுகளுக்கும் குறைவே என்கிறார் சம்பந்தப்பட்ட  அமைச்சர். ஆனால் இந்த அறிக்கையைக் குறித்து அரசில் பங்குபெறும் ம.இ.கா கட்சியே அதிர்ச்சியடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு  மலேசியாவிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையே தன்னுடைய தலையங்கத்தில் இதைக் குறித்து தங்களுடைய மனத்தாங்கலை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு அலுவல்களுக்கு மலேசியல்லாதோர் குறிப்பாக தமிழர்கள் விண்ணப்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை  எனவும் சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து இன்னும் நேரகாணலுக்கும் அழைக்கப்படாதோர் பல்லாயிரக்கணக்கில் உள்ளதாக கூறுகிறது.

ஆக ஹிந்த்ராஃப் அணி முன் வைத்து போராட்டத்தில் இறங்கியிருக்கும் கோரிக்கைகளில் அரசு அலுவல்களில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம்  அல்லது அவர்களுக்கென தனி விழுக்காடு (கோட்டா) ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திருந்தால் அது  அனைத்து மலேசிய இந்தியர்களின் ஆதரவையும் நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைவிட்டு விட்டு சமீப காலமாக இந்து  ஆலயங்கள் முன்னறிவிப்பின்றி இடித்துத் தள்ளப்படுகின்றன என்றதைக் காட்டி இந்திய வம்சமே அழித்தொழிக்கப்படுகிறத என்ற எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாத கோரிக்கையை முன்வைத்ததன் மூலம் அது ஒரு இந்திய இந்துக்களுடை உரிமையை பாதுகாக்கும் அணியாகவே தன்னை  இனங்காட்டிக்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியவில்லை.

ஆனால் முந்தைய தலைமுறையினர், அதாவது அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் சிலருடைய பார்வையில் ஹிந்த்ராஃபின் அணுகுமுறை  வற்ரு அதிகபட்சமாக தெரிந்தாலும் அது இந்திய மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சியாகவே படுகிறது. அவர்களில் சிலர் -  இங்கு நான் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி குறிப்பிட்டால் அவர்களுடைய கருத்துக்கு வேறு வர்ணம் பூசிவிடுவீர்களோ என்ற அச்சத்தில்  அதை தவிர்க்கிறேன் - இப்படியும் சிந்திக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. 'ஹிந்த்ராஃபின் நோக்கம் எல்லாமே இந்துக்களின் உரிமையை, காப்பதுதான். அதாவது அவர்களுடைய ஆலயங்களை அரசு சமீபகாலமாக இடித்துத்தள்ளுவதை முன்வைத்தே அவர்கள் போராட்டத்தில்  இறங்கியுள்ளனர். ஆகவே அதற்கு அரசு நல்லதொரு பரிகாரத்தை முன்வைத்தாலே அவர்கள் சமாதானமடைந்துவிடுவார்கள். அத்துடன் இப்போது  சிறையிலடைத்து வைத்துள்ள அவர்களுடைய தலைவர்களை விடுவித்துவிட்டால் அவர்களுடைய ஒத்துழைப்பை தற்சமயத்திற்கு, அதாவது அடுத்த  பொதுத்தேர்தல் வரை, பெற்றுவிடமுடியும்.'

சரி, ஹிந்த்ராஃபின் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காரணம் காட்டி அதன் முக்கிய ஐந்து தலைவர்களை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத சிறையடைப்பு தேவைதானா?

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் இதற்கு வகையுள்ளதா?

தொடரும்..

27 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து... 3

மலேசிய அரசியலில் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுவது மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா). நாடு அடிமைப்பட்டு இருந்தபோது (1946ல்) துவக்கப்பட்ட கட்சிகளில் இதுவும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததும் (1957) ம.இ.கா., ஐக்கிய மலாய் மக்கள் கட்சி, அனைத்து மலேசிய சீனர்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசீய அளவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த அமைப்பே இப்போது பாரிசான் நேஷனல் (Barisan Nasional) எனப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை நடைபெற்ற அனைத்து பொதுத் தேர்தல்களிலும் இந்த கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சி செலுத்திவருகிறது!

இளம் வயதில் மிகவும் சிரமங்களை சந்திக்க நேர்ந்த டத்தோஸ்ரீ சாமிவேலு தன்னுடைய 23ம் வயதில் ம.இ.காவில் அடிப்படை அங்கத்தினராக சேர்ந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கினார். பிறகு தன்னுடைய நண்பர் துரைராஜ் என்பவருடைய உதவியால் மலேசிய வானொலியின் தமிழ் பிரிவில் செய்தியாளராக சேர்ந்தார். தன்னுடைய குரல் வளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார். ம.இ.காவில் இணைந்த ஐந்து வருடங்களில் கட்சியின் செலாங்கொர் கமிட்டி உறுப்பினராகவும் கட்சியின் கல்ச்சுரல் தலைவராகவும் தெரிந்தெடுப்பட்டார். 1974ம் வருடம் மலேசிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கைக்கு பிறகு கட்சியின் தலைவர் பதவியை பிடித்தார். ஆனால் அவர் தலைவர் பதவியை பிடித்த விதம் கட்சியை இரண்டாக பிளந்தது எனலாம். கட்சியில் பெரும்பாலான தொண்டர்களின் மதிப்பைப் பெற்றிருந்த எம்.ஜி. பண்டிதன், சுப்பிரமணியம் போன்ற தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றியதுடன் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியின் பல கிளைகளையும் முடக்கியதாக அவருடைய அதிருப்தியாளர்கள் இன்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அவருடைய தலைமையில் ம.இ.கா இன்று ஒரு பலம் வாய்ந்த கட்சியாக, மலேசிய தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருப்பது உண்மைதான் என்றாலும் அவருடைய பாணியில் இன்றைய தலைமுறையினர் பெரும் அதிருப்தியடைந்திருப்பதும் உண்மை.

பெரும்பான்மை மலாய் கட்சியினருடன் கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கு பெற்றிருந்தாலும் அவரைத் தவிர வேறெந்த தமிழின தலைவரும் மத்திய அமைச்சரவையில் காபினெட் அந்தஸ்த்து பெற்ற அமைச்சராக இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர். மலேசிய ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தன்னையே ஒரே தலைவராக அவர் முன்னிறுத்திக்கொள்வதும் பலருக்கும் எரிச்சலை உண்டுபண்ணியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

இவருக்கு எதிராக ஊழல், குண்டர்களை வைத்துக்கொண்டு எதிராளிகளை பயமுறுத்தி அடிபணிய வைப்பது, அவர் பொறுப்பிலிருந்த பல இலாக்கா மேற்கொண்ட பல அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதியை தவறான, சுயலாபத்துக்காக செலவழித்தது என குற்றச்சாட்டுகளின் பட்டியலைப் பார்த்தால் நம்முடைய தலைவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவரல்ல என்பது தெளிவு.

இத்துடன் சர்வாதிகார போக்கில் செயல்படுபவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தன்னுடைய கருத்துக்களுக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடும் குணமும் அவருக்கு உண்டு என்கிறார்கள் எதிரணியினர். ஆகவே அவர் அரசு மற்றும் கட்சி பதவியிலிருந்து விலகினால் ஒழிய ம.இ.கா நாளடைவில் தன்னுடைய செல்வாக்கை இழந்துவிடும் என்கின்றனர்.

ஆனால் அவருடைய பதவி விலகலை கோருபவர்களுக்கு அவர் கூறிவந்ததையே நேற்றும் ஒரு அறிக்கையில் இவ்வாறு பதிலளித்துள்ளார். 'எனக்கு ஓட்டு போட்டவர்கள் சொல்லட்டும் பதவி விலகுகிறேன். அதுவரை நானே முடிவு செய்யும் வரை பதவி விலக மாட்டேன்.'

மேலும் அதே அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறியதாக இன்றைய மக்கள் ஓசை செய்தித்தாளில் வெளிவந்திருப்பதை பார்த்தால் அவருடைய துணிச்சலை நினைத்து வியக்க தோன்றுகிறது: 'என்னிடம் மோதியவர்கள் பலர் இன்று மண்ணுக்குள் இருக்கின்றனர். இப்போது பலர் பேச நான் அமைதியாக இருக்கிறேன். ஆனால் பேசுபவர்களையும் எழுதுவர்களையும் விட்டுப்பிடித்து கடைசியில் ஒரு தட்டு தட்டுவேன்.' உண்மையிலேயே அவர் இப்படித்தான் பேசினாரா அல்லது அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் குறை காணும் மக்கள் ஓசை செய்தித்தாளின் சில்மிஷமா என்பது தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து ஆட்சியில் பங்குபெற்றுள்ள ம.இ.கா தலைவர்களால் மலேசிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர முடியவில்லை.

அரசு பள்ளிகளில் தமிழாசிரியர்கள் பற்றாக்குறை, தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் தமிழ் பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இல்லாதது, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த இந்து கோவில்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக முன்னறிவிப்பின்றி இடித்து தள்ளுவது, அரசு அலுவலகங்களுக்கு இந்தியர்களை புறக்கணிப்பது, அரசு கல்லூரிகளில் தனி ஒதுக்கீடு இல்லாதது போன்ற பல நியாயமான கோரிக்கைகள்...

இத்தகைய புறக்கணிப்பை இனியும் சகிக்க முடியாமல்தான் இருபதுக்கும் மேற்பட்ட இந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான HINDRAF சாலை மறியலில் இறங்கியது.

ஆனால் hindraf என்னும் அமைப்பின் நோக்கம் என்ன? அதன் பெயரிலேயே அந்த அமைப்பின் நோக்கம் தெரிகிறது: ஹிந்து உரிமைகளை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அணியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு அணி எந்த அளவிற்கு மலேசிய தமிழர்களுடைய பிரதிநிதியாக நிலைப்படுத்திக்கொள்ள முடியும் என்பது புரியவில்லை.

ஆனால் அதன் தலைவர்களுள் பலரும் தங்களை ம.இ.காவினராக இனம் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர் என்பதும் அவர்களுடைய பொது எதிரி அரசில் அங்கம் வகிக்கும் ம.இ.காவின் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள் என்பதும் அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.

அதே சமயம் hindraf அணியினரின் குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றச்சாட்டு இந்திய வம்சாவளியை மலேசிய அரசு களைந்தெறிய முயல்கிறது என்பதுதான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மலேசிய தமிழர்களே தயாராயில்லை. அது சற்று அதிகபட்சமான குற்றச்சாட்டு என்றும் இந்திய தலைவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் கூறுகின்றனர் இளைய தலைமுறை தமிழர்கள்.

மேலும் தங்களை இந்திய இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அணி என இனங்காட்டிக்கொள்வதால் இந்திய கிறிஸ்த்துவ, இஸ்லாம் மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் இந்த அணி இழந்துவிட்டது எனவும் கூறலாம்..

இவர்களுடைய அடுத்த குற்றச்சாட்டு என்ன?

காலங்காலமாக இயங்கிவரும் ஹிந்து கோவில்களை மலேசிய அரசாங்கம் இடித்து தள்ளி வருகிறது...

இதன் பின்னணி என்ன?

தொடரும்....

26 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து.... 2

இரண்டு தினங்களுக்கு முன்பு மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு மலேசிய தொலைக்காட்சி ஆர்.டி.எம்முக்கு அளித்த பேட்டியில் கூறியதை முதலில் பார்ப்போம்.

கேள்வி: மலேசியாவில் இந்திய வம்சாவழியினர்களை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதா?

'இன ஒழிப்பு என்பது ஒரு கொடுமையான செயல். பல ஆண்டுகளாக போஸ்னியாவில் நடைபெற்று வந்துள்ளதைப் போல மலேசியாவில் நிகழவில்லை. மலேசிய தமிழர்களுக்கு அவர் எதிர்பார்ப்பதையும் விட மேலாகவே அரசாங்கம் இதுவரை செய்து வந்துள்ளது. ஆனால் ஒன்றுமே செய்யாதது போன்ற பிரமையை உண்டுபண்ணி மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் சிலர் விஷமப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

மேலும் சாலை ஆர்ப்பாட்டங்களால் எந்த நன்மையில் கிட்டப் போவதில்லை. நமக்கு வேண்டியதை முறையாக அரசாங்கத்திடம் வழங்கினால் மட்டுமே அதற்கான தீர்வுகள் கிட்ட வாய்ப்புள்ளது. அண்மையில் நடந்த சட்ட விரோத பேரணியால் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.'

இத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அவர் தொடர்ந்து கூறுகிறார். 'அத்துடன் இந்தியர்கள் மத்தியில் ம.இ.கா. மற்றும் ஆட்சியிலுள்ள தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் சற்று ஏற்படுத்திவிட்டனர். இந்த அதிருப்தியை போக்க நாங்கள் அவர்களை சந்தித்து உண்மை நிலவரங்களை விளக்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.'

அதாவது அடிப்படை வசதிகளைக் கூட இதுவரை செய்து தரவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார் எனலாமா? சரி. உண்மை நிலவரங்கள் என்பதன் பொருள் என்ன? நீங்கள் நினைப்பதுபோல் நீங்கள் விரும்புவற்றை பெற்றுத்தருவது அத்தனை எளிதல்ல என்று பொருளா? இன்னும் ஒன்று. HINDRAF தலைவர்களின் செயலுக்கு மலேசிய அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்திவிட்டதாகவும் ஆகவே அதை விலக்க முயல்வோம் என்றும் அவர் கூறியிருக்கும் பாணி ஏதோ மலேசிய தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசிலுள்ளவர்களை 'தாஜா' செய்துதான் பெறவேண்டியிருக்கிறது என்பதுபோல் இல்லை? அதுவும் அரசில் ஒரு முக்கிய அமைச்சராக இருக்கும் ஒருவரே இப்படி கூறுகிறார். 'இத்தனை விழுக்காடு மக்கள் நாங்கள் உள்ளோம். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே நாங்கள் அரசுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு உரிய மதிப்பு நீங்கள் வழங்கியே ஆகவேண்டும்' என்று வாதிடுவதை விட்டுவிட்டு இது என்ன அடிமைத்தனம் என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

இதைத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். மலேசிய தமிழர்களின் மற்றொரு பிரபல அரசியல் கட்சியான ஐ.செ.க.தலைவர் இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படியொரு கேள்வியை முன் வைத்துள்ளார். 'ஹிண்ட்ராப் பேரணியில் இந்தியர்கள் (மலேசிய வாழ் தமிழர்களும் மலேசியர்கள்தான் என்பதை இவர்களே மறந்துபோகிறார்கள் பாருங்கள்!) திரண்டு வந்து கலந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று எதிர்கட்சி சட்டசபையில் வினா எழுப்பியதும் அதற்கு பதிலளிக்காமல் ம.இ.காவை சார்ந்த அமைச்சர்கள் மவுனமாக அமர்ந்திருந்தது ஏன்?'

அரசுக்கு எதிராக ஏதேனும் சொல்லப் போக தங்களுடைய பதவிகள் பறிபோய்விடக்கூடும் என்று இன்று பதவியிலுள்ள மலேசிய தமிழ் அமைச்சர்கள் கருதுகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேற்கூறிய பேட்டியில் அமைச்சர் சாமிவேலு அவர்கள் வேறொரு கேள்விக்கு இவ்வாறு  கூறுகிறார். 'நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் வேளையில் ம.இ.கா சார்பில் பல புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்'  ஏன்?  'ம.இ.கா சார்பில் கடந்த தேர்தலில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் சிலர் தொய்வு நிலையை அடைந்துவிட்டதால் அவர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.'

ஏதோ ஒரு சில வேட்பாளர்களுடைய தொய்வினால்தான் மலேசிய தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த சலுகைகள் கிடைக்காமல் போய்விட்டன என்பதுபோல் இருக்கிறது அவருடைய வாதம்.

ஆக, மலேசிய தமிழர்களுக்கு சலுகைகள், அதாவது முன்பு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், இப்போது மறுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

ஏன், எதனால் அரசாங்கத்தின் போக்கில் இந்த திடீர் மாற்றம்?

இதற்கு முக்கிய காரணம் மலேசிய அரசின் Ketuanan Melayu அதாவது 'மலேசியர்களுக்கு முக்கியத்துவம்' என்கிற கொள்கைதான். அரசின் இத்தகைய நிலைப்பாடு 2000ம் வருடத்திலிருந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதுதான் இன்றைய போராட்டத்தின் முக்கிய பின்னணி என்கின்றனர் இன்றைய தலைமுறை மலேசிய தமிழர்கள்.

நம்முடைய நாட்டிலும் 'மண்ணின் மைந்தர்' அல்லது 'Son of the Soil' எனப்படுவதை கண்டிருக்கிறோம். இது தமிழகத்திலும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதை மறுக்க முடியாது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் இது வெளிப்படையாகவே கூறப்பட்டு வருகின்றது. அந்த மாநிலத்தில் அரசு கல்லூரிகளில் கர்நாடகத்தைச் சாராதவர்களுக்கு (கன்னடியர்கள் அல்லாதோர்) முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்பது வெளிப்படை. நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு மறைந்து கடந்த சில வருடங்களாக மொழியின் அடிப்படையில் இந்தியர்கள் பிரிக்கப்பட்டு நிற்பதை கண்கூடாகவே பார்க்கிறோம்.

இதையே மலேசிய அரசாங்கம் செயல்படுத்த முனைகிறபோது அதுவும் அரசாங்கத்தின் இந்த செயல் தமிழர்களை பாதிக்கும்போது அது தமிழகம் வரை எதிரொலிக்கிறது.

சரி மலேசிய அரசில் சிறுபான்மையினர் எனப்படும் சீன, தமிழ் மக்களுக்கு பங்கு அளிக்கப்பட்டுள்ளதே? அவர்களால் இதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

நியாயமான கேள்விதான். மலேசிய அரசின் நிரந்தர ஆளுங்கட்சியான பெரும்பான்மை மலாய் மக்கள் கட்சியுடன் சிறுபான்மையினரின் கட்சிகளான சீன மற்றும் தமிழர் கட்சிகள் கூட்டு சேர்ந்து அமைத்திருக்கும் அரசாங்கம்தான் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நாட்டை ஆண்டு வருகிறது.

அரசின் 'மலேசியர்களுக்கு முக்கியத்துவம்' என்கிற நிலைப்பாட்டை எதிர்கட்சியான டிஏபியே மும்முரமாக தொடர்ந்து எதிர்த்து வரும்போது அரசில் அங்கம் வகிக்கும் ம.இ.காவால் ஏன் அரசின் இந்த போக்கை மாற்ற முடியவில்லை?

இதற்கு முக்கிய காரணம் ம.இ.காவின் இன்றைய தலைவரும் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலுதான் காரணம் என்கின்றனர் எதிர்கட்சியினருடன் கூட்டு சேர்ந்திருக்கும் தமிழர் கட்சிகள்.

இந்த குற்றச்சாட்டு உண்மைதானா?

தொடரும்...

24 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து...

 

என்னுடைய மூத்த மகள் மலேஷியாவில் - கே.எல் - இருப்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவரை சென்று பார்க்க வேண்டும் என்று கடந்த மூன்றாண்டுகளாக திட்டமிட்டு இளைய மகளுக்கு விடுப்பு கிடைக்காமல் தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. இந்த வருடம் எல்லாம் ஒன்றுகூடி வர இரு வார விடுப்பில் வர முடிந்தது.

வரும் வழியில் விமானத்தில் உடன் வந்திருந்த சில பெரிய, சிறிய சினிமா நட்சத்திரங்கள் செய்த பந்தாக்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் விதமாக சுவாரஸ்யமாக ஒன்றும் நடக்கவில்லை. விமானத்தில் கிரீடம் படத்தை பார்க்க முடிந்தது. அதன் மூலம் மலையாளத்துடன் ஒப்பிடுகையில் இதில் ஒன்றும் பிரமாதமாக இல்லை. அஜீத் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதால் அவருடைய நடிப்பு மட்டும் எனக்கு வெகுவாக பிடித்திருந்தது, அவ்வளவே. கிளைமாக்ஸ் படு தமிழ் சினிமாத்தனம்.

கே.எல் விமானதளத்தில் நம்முடைய நடிகர்களை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவேயில்லை, அவர்களை வரவேற்க வந்தவர்களைத் தவிர. அதிலும், சாட்டிலைட் விமானதளத்திலிருந்து மினி ரயிலில் சென்றுக்கொண்டிருந்தபோது பிரசன்னாவை ஒருவர் அப்பாவியாக 'சார் நீங்க சினிமா நடிகர்தானே' என்று கேட்டதும் அருகில் இருந்தவர்கள் சிரிப்பை அடக்க பாடுபட்டதும் நல்ல வேடிக்கை. ஆனால் பிரசன்னா ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு புன்னகைத்து சமாளித்தது நன்றாக இருந்தது. பிரபு தலையில் விக் முடியுடன் பந்தா செய்தது சகிக்கவில்லை. மனிதர் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறார் போலிருக்கிறது. மற்றபடி சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

வந்து நான்கு நாட்களாகிறது. சில குடும்ப வைபவங்கள், விருந்துகளில் கலந்துக்கொள்ள வந்திருந்த பல உறவினர்கள், அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் - பலரும் இன்றைய இளைய தலைமுறை மலேஷிய தமிழர்கள் - ஆகியோருடன் உரையாடியதில் இப்போது மலேஷியாவில் மிகவும் விவாதிக்கப்படும் விஷயம் INDRAF தலைவர்களின் கைதும் மலேஷிய தமிழர்களுடைய இன்றைய நிலையும்.

வந்திறங்கிய அன்றிலிருந்து கடந்த சில நாட்களாக பல இளைய தலைமுறை மலேஷிய தமிழர்களை சந்தித்து விவாதித்ததில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிந்தது. இன்றைய தலைமுறையினர் தங்களை இந்தியர்களாகவே கருதவில்லை. அவர்களைப் பொருத்தவரை அவர்களும் மலாய் மக்களைப் போலவே மலேஷியர்கள். ஆகவே தங்களுடைய முந்தைய தலைமுறையினரைப் போலல்லாமல் தங்களுக்கு மறுக்கப்படும் சலுகைகளை (அவர்களைப் பொருத்தவரை அது சலுகைகள் அல்ல. உரிமைகள்!) விட்டுக்கொடுப்பதாக இல்லை.

என்னுடைய சம்பந்தியைப் போன்ற பல முந்தைய தலைமுறையினர் மலேஷிய அரசாங்கம் தங்களுக்கு அளித்த சலுகைகளை மிகவும் நன்றியுடன் நினைவுகூறுகின்றனர். அவர்களுள் பலரும் 2000ம் ஆண்டு வரை அரசாங்கத்தில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்கள். இப்போதும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள் என்கிற அந்தஸ்த்தும் சலுகைகளும் ஓய்வூதியமும் வழங்கப்படுவதே பெரிய விஷயம் என்று கருதுகின்றனர். 'இப்படி இவங்க பிரச்சினை பண்றதுனால இருக்கறதும் புடுங்கிருவாங்க...' என்பதுபோல் செல்கிறது இவர்களுடைய வாதம்.

ஆனால் மலேஷியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்கள் அப்படி கருதவில்லை. INDRAF தலைவர் வைத்தா மூர்த்தி கூறியுள்ளது போன்று இன்றும் மலேஷிய பல்கலைக்கழகங்களில் நுழைவது குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் வழக்கறிஞர் பட்ட படிப்புகளுக்கு இந்தியர்கள் பலருக்கும் அனுமதி கிடைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் மலாய் மக்களுக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது என்பதால் அரசாங்கத்துறைகளில் உயர்பதவியில் இப்போது இருப்பவர்களுடைய மலேஷிய தமிழர்களுடைய ஓய்வுகாலத்திற்குப் பிறகு அத்துறைகளில் இடைமட்ட, அடிமட்ட நிலைகளுக்கு மேல் மலேஷிய தமிழர்கள் உயர வாய்ப்பேயிருக்காது என்கின்றனர். புள்ளி விவரங்களை எடுத்து வைக்கும் அவர்களுடைய வாதத்தை மறுப்பது அத்தனை எளிதல்ல என்பதால் அவற்றை உண்மை என்றே எடுத்துக்கொள்ள தோன்றுகிறது.

ஆனால் அதற்கு சாலைக மறியல்களில் ஈடுபடுவதும் இந்திய இனமே அழிக்கப்படுகிறது என்று இந்திய அரசியல் தலைவர்களிடம் சென்று முறையிடுவதும் சரியா என்று கேட்டால் அதில் எங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்கின்றனர். 'நாங்கள் மலேஷியர்கள். இதை நாங்களே தீர்த்துக்கொள்வோம். இதில் இந்தியா போன்ற நாடுகளால் எந்த தலையீடும் செய்வதில் பலனில்லை என்றே கருதுகிறோம்.' என்பது அவர்களுள் பலருடைய கருத்தாக இருப்பதை காண முடிகிறது. ஆனால் வேறு சிலரோ INDRAFதலைவர்கள் செய்தது சற்று கூடுதல்தான் என்றாலும் அதில் தவறேதும் காணமுடியவில்லை என்கின்றனர்.

INDRAF தலைவர்கள் செய்ததையோ அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் மலேஷிய அரசு எடுத்த நடவடிக்கைகளையோ எடைபோடுவதைவிட இந்த விஷயத்தில் தீர்வுதான் என்ன என்பதை இதன் மூலத்திலிருந்து நடுநிலையாக விவாதித்தால் என்ன என்று எனக்கு தோன்றியதன் விளைவே இந்த மினி தொடர். அதிகம் போனால் மூன்று அல்லது நான்கு பதிவுகள்...

தொடரும்...

21 டிசம்பர் 2007

வங்கிகளில் கணினி - 6

அன்றைய மென்பொருள் நிர்வாகத்தில் இருந்த பல குறைபாடுகளுக்கு முக்கிய காரணம் Distributed Environment என்கிற சூழல்தான்.

முந்தைய இடுகையில் மென்பொருளின் ஒவ்வொரு versionஐயும் கிளைகளில் நிறுவுவதில் உள்ள பிரச்சினையை கோடிட்டு காட்டியிருந்தேன். மத்திய அலுவலகத்தில் இயங்கிவந்த கணினி இலாக்கா அதிகாரிகள் அநேகமாக ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய versionஐ கிளைகளூக்கு floppyகளில் அனுப்பி வைப்பது வழக்கம். இன்று உள்ளதுபோல் தனியார் குரியர் வசதிகள் அப்போது இருக்கவில்லை. ஆகவே நம்முடைய good old தபால் இலாக்காவைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. வட மாநிலத்திலிருந்த கிளைகளுக்கு floppyகள் சென்றடையவே ஒரு வார காலம் ஆகிவிடும். அப்படி கிளைகளில் சென்றடைந்தாலும் அதிலுள்ள .exe கோப்புகள் நிறுவ தகுதியுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியில்லை. Dir கட்டளையில் பட்டியலிடப்படும் கோப்புகள் Ins கட்டளைக்கு படியாது! அல்லது கிளை அலுவலர்கள் தங்களுடைய அறியாமையாலோ ஆர்வ கோளாறாலோ format கட்டளை கொடுத்து floppyயிலுள்ள அனைத்து கோப்புகளையும் களைந்திருப்பார்கள்!! அத்தகைய சூழலில் இலாக்காவிற்கு SOS வரும். சில கிளைகள் தொலைபேசியில் அழைத்து கணினி இலாக்கா அதிகாரிகள் கூறுவதை பொறுமையாக கேட்காமல் எதிர் கேள்வி கேட்டே நேரத்தை வீணடித்துவிட்டு கைகளை பிசைந்துக்கொண்டு நிற்பார்கள்.

ஆகவே எல்லா கிளைகளிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட versionஐ நடைமுறைக்கு அமுல்படுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்தது. இது என்ன பெரிய விஷயமா என்று கேட்க தோன்றலாம். பெரிய விஷயம்தான். வங்கி மேலிடம் ஒவ்வொரு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்கு வழங்க/வசூலிக்கப் படும் வட்டி விகிதத்தை அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட தியதியிலிருந்து மாற்றங்கள் கொண்டு வருவதுண்டு. இன்றைய Centralised சூழலில் நினைத்த நேரத்தில் உடனடியாக அமுல்படுத்த முடிகிற மாற்றங்கள் அன்றைய Distributed சூழலில் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்தே அறிமுகப்படுத்த முடிந்தது

. ஆகவே அறிமுகப்படுத்த வேண்டிய தியதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே மாற்றங்களின் விவரங்களை கணினி இலாக்காவிடம் ஒப்படைத்துவிடுவார்கள். கணினி இலாக்காவினர் அவற்றை மென்பொருளில் உட்படுத்தி புதிய versionஐ எல்லா கிளைகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதை குறிப்பிட்ட தியதிக்குள் எல்லா கிளைகளிலும் நிறுவாவிட்டால் பிரச்சினைதான். உதாரணத்திற்கு ஒரு சேமிப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய வட்டி 10% லிருந்து 9% ஆக குறைக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். புதிய மென்பொருள் version கிடைக்கப் பெறாத கிளை அதற்கு முந்தைய விகிதத்திலேயே தன்னுடைய சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும். அதனால் வங்கிக்கு ஏற்படக்கூடிய இழப்பு லட்சக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளதே!

இது ஒரு புறம். எல்லா கிளைகளிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட version நிறுவப்பட்டுவிட்டதா என்பதை கணினி இலாக்காவால் உறுதிப்படுத்திக்கொள்வதிலும் சிக்கல் இருந்தது. இதற்கென அனுப்பப்படும் சுற்றறிக்கையில் கணினி இலாக்காவால் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் versionஐ இன்ன தியதிக்குள் கிளைகள் நிறுவிவிடவேண்டும் என்றும் அதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் புதிய version வந்து சேராவிட்டால் கணினி இலாக்காவை தொலைபேசி மூல அணுகவேண்டும் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

குறிப்பிட்ட நாட்கள் வரை காத்திருக்க பொறுமையில்லாமல் மத்திய அலுவலகத்திலிருந்து இத்தகைய சுற்றறிக்கை வந்த நாளிலிருந்தே கிளைகளிலிருந்து இதை உள்ளடக்கிய மென்பொருள் எங்கே, எங்கே என்ற தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். இவற்றை சமாளிக்கவே தனியாக ஒரு குழு தேவைப்படும். கிடைக்கப்பெற்றாலும் அதை நிறுவ இயலவில்லை என்ற புகார்கள். நிறுவினாலும் சரிவர இயங்கவில்லை என்ற புகார்கள். பெரும்பாலும் இதற்கு பயணாளர்களின் தவறுகளே காரணமாயிருக்கும். நான் கிளை மேலாளராக இருந்த சமயத்தில் என்னுடைய துணை மேலாளர்கள் தாங்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் பொறுமையாக கணினி இலாக்கா அதிகாரிகள் பதிலளிப்பதில்லை என்ற புகார்களை கூற கேட்டிருந்தேன். ஆனால் கிளையிலிருந்து மாற்றலாகி கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகியபிறகுதான் தெரிந்தது கிளையிலுள்ளவர்களுக்கு கற்பிப்பது எத்தனை சிரமம் என்பது.

சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட திட்டங்கள் மட்டுமில்லாமல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதம் மாறுதலுக்குள்ளாவதுண்டு. அத்தகைய சமயங்களில் இன்றைய Centralised சூழலில் மத்திய தகவல் மையத்திலுள்ள மென்பொருளில் இந்த மாற்றத்தை ஒட்டுமொத்த வங்கிக்கும் அமுலாக்கிவிட முடிகிறது. ஆனால் அப்போது புதிய மென்பொருள் கிளையில் நிறுவப்பட்டுவிட்டாலும் வட்டி வழங்க/வசூலிக்க வேண்டிய நாளுக்குள் அத்திட்டங்களிலுள்ள அனைத்து கணக்குகள் ஒவ்வொன்றிலும் புதிய வட்டி விகிதத்தை கைப்பட (Manual) மாற்ற வேண்டியிருக்கும். சுமார் பத்தாயிரம் கணக்குகள் உள்ள கிளைகளில் இதை செய்து முடிக்கவே ஒரு மாதத்திற்கு மேல் தேவைப்படும். ஆனால் மத்திய அலுவலகம் தாங்கள் இறுதியாக அறிமுகப்படுத்திய மாற்றங்கள் கிளையிலுள்ள அனைத்து திட்டங்களிலும் செய்தாகிவிட்டது என்ற தகவலை உடனடியாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கிளைகளூக்கு கட்டளையிடும். அத்துடன் தன்னுடைய உள் ஆய்வாளர்களிடம் (Internal auditors) அவர்களுடைய அடுத்த கிளை விஜயத்தின்போது இதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கட்டளையிடும். ஆனால் மத்திய அலுவலகம் குறிப்பிட்டிருக்கும் நாளுக்குள் நடுத்தர மற்றும் பெரிய கிளைகள் நிச்சயம் முடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் மத்திய ஆய்வாளர்கள் (Internal Inspectors) தங்களுடைய கிளைக்குள் வருவதற்குள்.எப்படியும் செய்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் பல கிளை மேலாளர்களும் இந்த அலுவலை செய்து முடித்தாகிவிட்டது என்று தெரிவித்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய அனுபவத்தில் பல ஆய்வாளர்கள் நான்கைந்து மாதங்கள் கழித்து ஆய்வுக்கு செல்லும் நேரத்திலும் மத்திய அலுவலகம் அறிமுகப்படுத்திய வட்டி விகித மாற்றங்கள் பல கிளைகளிலும் செய்யப்படாமல் இருப்பதை கண்டுபிடித்து தங்களுடைய ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

இது Distributed சூழலில் இன்றும் தீர்வு காண முடியாத பிரச்சினையாகவே இருந்துவருகிறது.

இந்த சிக்கலில் இருந்து மீள என்ன வழி என்று சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு சிந்திக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் நாட்டின் முன்னனி நிறுவனங்களில் சில தங்களுடைய Core Banking Solution என்கிற மென்பொருளை வங்கிகளில் அறிமுகப்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கியிருந்தன. ஆனால் அந்த நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளுக்கு கோரிய விலை எங்களைப் போன்ற சிறு வங்கிகள் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியததாக இருந்தது.

இருப்பினும் அவர்களுடைய மென்பொருளை காண்பது (Demo) என தீர்மானித்து அப்போது எங்களுடைய வங்கியின் பயிற்சி கல்லூரி முதல்வராக என்னுடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. எங்களுடைய கணினி இலாக்கா அதிகாரிகளுள் சிலரும் குழுவில் இருந்தனர்.

உடனே முன்ன்னி நிறுவனங்கள் சிலவற்றை தொடர்பு கொண்டு ஒரு தேதி நிர்ணயித்து Demo பார்த்தோம்....

எனக்கு இரு நிறுவனங்களுடைய மென்பொருளும் வெகுவாக பிடித்துப்போனது. ஆனால் எங்களுடைய குழுவில் இருந்த கணினி இலாக்கா அதிகாரிகளுள் மூத்த சிலருக்கு 'சார் இது நம்ம பேங்குக்கெல்லாம் சரி வராது. நெறைய கஸ்டமைஸ் செய்ய வேண்டியிருக்கும். இவுங்க அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..' என்று துவக்கத்திலேயே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர்...

அவர்களுடைய போக்கு எனக்கு இது மாறுதலுக்கு எதிரான (resistence to change) போக்கு என்றே தோன்றியது.

தொடரும்..

10 டிசம்பர் 2007

வங்கிகளில் கணினி 5

எந்த ஒரு நிறுவனத்தின், குறிப்பாக வங்கிகளின்,  சிறப்பான செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சிக்கு அதன் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் (Information) மிகவும் அத்தியாவசியம். இதற்கு அடிப்படை தேவையாக இருந்தது கணினிமயமாக்கல் என்றால் மிகையாகாது.

ஒரே இடத்தில் தங்களுடைய வர்த்தகத்தை செய்து வரும் நிறுவனங்களே தங்களுடைய வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்றால் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியுள்ள வங்கிகளைப் பற்றி கேட்க வேண்டுமா?

அதே சமயம் தங்கள் வசம் வந்து சேரும் தகவல்கள் எல்லாமே தங்களுடைய வர்த்தக வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய தகவல்களாக இருக்கமுடியாது என்பதும் உண்மை! More information more confusion என்பார்கள். இன்றைய கணினி யுகத்தில் நிறுவனங்களின் தகவள்களத்தில் (Database) குவிந்துக்கிடக்கும் தகவல்களை அலசி ஆய்வு செய்வதையே (Business Intelligence and Data Mining) ஒரு டிப்ளமோ கோர்சாக பல நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

ஆனால் ஒரு வர்த்தக அல்லது தொழில் நிறுவனங்களைப் போன்றதல்ல வங்கிகளின் செயல்பாடுகள். வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களையே வாடிக்கையாளர்களாகக் கொண்டு செயல்படுபவை வங்கிகள். ஆகவே வங்கிகளைப் பொறுத்தவரை இத்தகைய நேரடி வாடிக்கையாளர்களுடைய (Direct Customers) தேவைகளுடன் அவர்களுடைய வாடிக்கையாளர்களான மறைமுக வாடிகையாளர்களுடைய (customer's customers or indirect customers) தேவைகளையும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். இதிலிருந்தே வங்கிகளுடைய தகவல்களத்தின் (Database) முக்கியத்துவத்தை உணரமுடிகிறதல்லவா?

இத்தகைய முழுமையான தகவல்களத்தை (Comprehensive Database) வடிவமைப்பது அத்தனை எளிதல்ல என்பது இப்போதும் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பல மென்பொருள் நிறுவன கணினியாளர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அதாவது வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டு சுமார் பதினைந்தாண்டுகளுக்கு பின்னரும் இதுதான் நிதர்சனம்.

அப்படியிருக்க அன்று இத்துறையில் தாங்களாகவே கற்று தேர்ந்த ஒருசில அதிகாரிகளால் என்ன செய்திருக்க முடியும்? அதுவும் ஒரு சில மென்பொருள் மொழிகளே கைவசம் இருந்த நிலையில்!

இன்று அபிரிதமான தகவல் (abundant information) ஒரு தீர்வு காணமுடியாத பிரச்சினையாக உருவெடுத்திருக்க அன்று தகவல் இன்மையும் (lack of information or scarce information) ஒரு பிரச்சினையாக இருந்தது என்பது உண்மை.

ஒரு வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட சகலவித தகவல்களையும் சேகரிக்க மென்பொருளில் வசதிகள் தேவை. இப்போதெல்லாம் ஒரு வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு துவங்க வங்கிகள் வடிவமைத்திருக்கும் விண்ணப்ப படிவத்தின் நீளத்தை பார்த்தாலே தெரிய வரும். நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு குறைந்த படிவங்களே இல்லை. ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்த பட்சம் பத்து, பதினைந்து கட்டங்கள் (Data Boxes). வாடிக்கையாளரின் பெயர், விலாசம் மட்டும் இருந்தால் போதும் என்கிற காலம் போய்  'உங்களுடைய பெட் விலங்கு நாயா, பூனையா இல்லை எலியா?' என்பதுவரை விசாரித்து சேகரிக்கும் சூழல்!'

இத்தகைய தகவல்களை சேகரிக்க வேண்டுமென்றால் வங்கிகள் பயன்படுத்தும் மென்பொருளில் அதற்கு வசதிகள் (Data capturing capacity) அவசியம். அதற்கு அன்றைய காலத்தில் பரவலாக புழக்கத்தில் இருந்த Dos based மென்பொருள் எந்தவிதத்திலும் பயன்படவில்லை.

DOS based மென்பொருளின் அடிப்படை பலவீனமே அது இயங்கும் கணினியின் Base Memoryதான் என்றனர் அன்றைய மென்பொருள் வடிவமைப்பாளர்கள். 640 kb அளவே உள்ள இந்த தளத்தில் இயங்க வேண்டிய அதே சமயம் சகல வசதிகளையும் கொண்ட ஒரு மென்பொருளை உருவாக்குவதிலிருந்த சிரமம் எங்களுடைய கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கி பழகியபோதுதான் எனக்கு முழுமையாக தெரிய வந்தது. 'நீங்க நினைக்கிறா மாதிரி எல்லா வேலிடேஷனையும் பண்ணா .exe பெரிசாயிரும் சார். அடிக்கடி சிஸ்டம் ஹேங் ஆயிரும்.' என்பார்கள். இன்று இத்தகைய மென்பொருட்களை பயன்படுத்த Dos Extenders உள்பட பல வசதிகள் உள்ளன என்றாலும் அதனால் பெரிய மாற்றங்கள் ஏதும் வந்துவிடவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் ஒரு வங்கியின் ஆயிரக்கணக்கான கிளைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட கிளைகளிலேயே சேமிக்கப்பட்டு வைக்கப்படுகிற நிலையில் அதன் முழுமையான பலன் அந்த வங்கிகளுக்கு கிடைத்ததில்லை. இதைத்தான் distributed database என்றார்கள்.

இத்தகைய Distributed software systeத்தில் ஒரு நிறுவனத்தின் (வங்கியின்) அனைத்து கிளைகளும் ஒரே மென்பொருளைத்தான் பயன்படுத்துகின்றனவா (Same version of the package) என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இன்று பல வங்கிகளும் Centralised Solution என்கிற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளன என்றாலும் ஒரு சில வங்கிகளே அதை தங்களுடைய அனைத்து கிளைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளன. அடுத்து வரும் சில வருடங்களில் கூட இத்தகைய நிலையே நீடிக்க வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. குறிப்பாக பதினாயிரம் கிளைகளுக்கு மேலுள்ள பல பெரிய வங்கிகளில் குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இதுதான் நிலைமை.

இன்றைய  Centralised சூழலில் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளும் பயன்படுத்த தேவையான மென்பொருளை மத்திய தகவல் மையத்தில் (Data Centre) உள்ள ஒரு சக்திவாய்ந்த வழங்கியில் (Server) இட்டு வைத்தால் போதும். அதாவது ஒரு வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் சென்று மென்பொருளை நிறுவும் அவசியம் இதில் இல்லை. Browser based மென்பொருள் (உ.ம். Internet Explorer) என்பதால் அதை பயன்படுத்த கிளைகளில் Browser வசதியுள்ள கணினிகள் மட்டுமே தேவை. மத்திய வழங்கியில் உள்ள மென்பொருளை (Application) பயன்படுத்த மட்டுமே இந்த கிளை கணினிகளால் முடியும். அதாவது மத்திய வழங்கியிலுள்ள தகவல்களை பயன்படுத்த மட்டுமே உரிமை வழங்கப்பட்டிருக்கும். அதை தறவிறக்கம் (Download) செய்யவோ அல்லது களையவோ (Delete) அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அன்று இதுவே ஒரு பெரிய அலுவலாக இருந்தது. மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பதால் ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய version தயாரிக்கப்பட்டு கிளைகளில் நிறுவ வேண்டிய சூழல். மென்பொருளை தயாரிக்க ஒரு குழு என்றால் அவற்றை floppyகளில் சேமித்து கிளைகளுக்கு அனுப்ப என்றே வேறொரு குழு அமர்ந்து இடைவிடா பணியில் ஈடுபட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் கிளைகளுக்கு அனுப்ப தேவையான floppyகளை புதிதாக வாங்குவதென்றால் முடியாத காரியம் அல்லவா? ஆகவே கடந்த மாதம் பயன்படுத்திய floppyகளை கிளைகளில் திரும்பப் பெற்று அவற்றை format செய்வதற்கெனவும் இருவர், மூவர் கொண்ட குழு ஒன்று தனியாக இயங்கிக்கொண்டிருக்கும்.

A:Ins என்ற ஒரு கடைநிலை கட்டளையைக் கூட (Basic DOS command) சரிவர புரிந்துக்கொண்டு மென்பொருளை தங்களுடைய கணினிகளில் நிறுவ (Install) தெரியாத கிளை அலுவலர்களை மென்பொருளை முழுமையாக பயன்படுத்த பயிற்றுவிக்க கணினி இலாக்காவினர் எத்தனை பாடுபட வேண்டியிருந்தது?

தொடரும்...