04 செப்டம்பர் 2007

போலி சண்டை போதுங்க (நகைச்சுவை)

இது ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை உரையாடல்தான். ஆனால் இதன் மூலம் சொல்ல வருவது நிஜமான மனத்தாங்கலின் வெளிப்பாடு.

இதை இருதரப்பினரும் உணர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..

அன்புடன்,
ஜோசஃப்


ஏ.வி.எம் ஸ்டுடியோவில் வடிவேலு தன்னுடைய அறையில் தனியாக அமர்ந்து கையில் இருந்த பேப்பரிலிருந்து அன்றைய காட்சிக்கான வசனத்தை உரக்க ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அறைக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழையும் பார்த்திபன் உடம்பை வளைத்து, கை கால்களை ஆட்டியவாறு எதிரிலிருந்த முகக் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்துடன் பேசிக் கொண்டிருக்கும் வடிவேலுவைப் பார்க்கிறார்.

பார்: டேய்...

வடி: (திடுக்கிட்டு திரும்புகிறார். பார்த்திபனைப் பார்த்ததும் தனக்குள்) இவன் எங்க இங்க... இன்னைக்கி இவன் கூடவா கால்ஷீட்டு... கிளிஞ்சது போ... அந்த அஜிஸ்டெண்ட் டைரடக்கர் பய சொல்லவே இல்ல?

பார்: டேய் என்ன மொனகுற? சத்தமா பேசுன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்... (வடிவேலுக்கு பக்கத்திலிருந்த சோபாவில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பை திறந்து 'ஆன்' செய்கிறார்.)

வடி: (ஆச்சரியத்துடன்) ஏய்யா.. நீ கம்ப்யூட்டர் எல்லாம் கூட பாப்பியா?

பார்: டேய்... இது என்ன டிவியா பாக்கறதுக்கு? கம்ப்யூட்டர்றா.... (அவருடைய வசனம் அடங்கியிருந்த கோப்பைத் திறந்து மேலோட்டமாக தனக்குள் ஒருமுறை வாசிக்கிறார். வடிவேலுவின் முகம் பிரகாசமடைகிறது)

வடி: ஏய்யா... இதென்ன புதுசாருக்கு... கம்ப்யூட்டர்ல தமிள்லயும் தெரியுதா? ((திரையை தொட்டுப் பார்க்க கையை நீட்டுகிறார்.)

பார்: டேய்.. தொடாத... தொடாம பாரு... சாரி படி..

வடி: இதுதான் ஒன் டயலாக்கா?

பார்: அதான் பார்த்தாலெ தெரியுதுல்லே... பிறவென்ன கேள்வி..

வடி: அது சரி... ஒனக்கு மட்டும் எப்படியா இந்த ஐடியாவெல்லாம் வருது?

பார்: (எரிச்சலுடன்) ஐடியா என்ன பெரிய ஐடியா, பொடலங்கா... நா இப்பல்லாம் தமிழ்ல ப்ளாகே எழுதறேன்....

வடி: (குழப்பத்துடன்) என்னது ப்ளாக்கா? அப்படின்னா... இந்த கருப்பும்பாங்களே அதா.. அதுல என்னய்யா எளுதறதுக்கு இருக்கு... சும்மாவே கருப்பாருக்கும்... அதுல எளுதுனா படிக்கவா முடியும்?

பார்: (கோபத்துடன்) டேய்.. வாணா... காலங்கார்த்தால அடி வாங்காத... போய் ஒழுங்கா ஒன் டயலாக்க பாரு... அப்புறம் ஷாட்ல வந்து சொதப்பாத... ஷாட் படி எங்கிட்ட நிறைய வாட்டி அடி வாங்கப் போற... அதுக்கும் சேத்து இப்பவே ஒத்திகை பாத்துருவேன்... மரியாதையா போயிரு...

வடி: (குழைந்து) கோச்சிக்காதய்யா.... நீ தான சொல்வே... நான் ஞானசூன்யம்னு... மருதையில சுத்திக்கிட்டு திரிஞ்ச பயதானய்யா... இந்த ப்ளாக்கு ஒய்ட்டுன்னா எனக்கென்ன தெரியப் போவுது... சொல்லுய்யா.... ப்ளாக்குன்னா என்னது?

(பார்த்திபன் உடனே தன்னுடைய ஏர்டெல் டேட்டா அட்டையை உபயோகித்து இணைப்பை ஏற்படுத்தி தன்னுடைய கிறுக்கனின் கிறுக்கல்கள்.ப்ளாக்ஸ்பாட்.காம் வலைப்பூவை திறக்கிறார். வடிவேலுவின் கண்கள் அகல விரிகின்றன. பார்த்திபன் அன்று காலை கிறுக்கிய கவிதை வரிகளை உரக்கப் படிக்கிறார்.)

வடி: இத நீயா எளுதின?

பார்: (திருவிளையாடல் நாகேஷ் பாணியில்) பின்னே... மண்டபத்துல யாராச்சும் எழுதிக் குடுத்ததையா போடறேன்... நான், நான், நாந்தாண்டா எழுதினேன்... இங்க பார், நா இத போட்டு ஒரு மணி நேரம் கூட ஆவலை... எத்தன பேர் படிச்சிட்டு பாராட்டியிருக்காங்க... (தனக்குத் தானே வெவ்வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டு பாராட்டியவற்றையெல்லாம் காட்டுகிறார்)

வடி: என்னது நீ எளுதினத ஒரு மணி நேரத்துக்குள்ள இத்தன பேர் படிச்சிட்டு பாராட்டியிருக்கானுவளா? என்னய்யா இது நம்பவே முடியல? நீ இத எளுதறது அவனுங்களுக்கு எப்படிய்யா தெரியுது?

பார்: நா மட்டுமில்லடா... என்னையெ மாதிரி ஆளுங்க எழுதறதையெல்லாம் கலெக்ட் பண்ணி போடறதுக்குன்னே ஒரு சைட் இருக்கு... இரு காட்டறேன். (பார்த்திபன் தன்னுடைய வலைப்பூவிலிருந்த தமிழ்மணம் லிங்க்கை தட்டிவிட அடுத்த சில நொடிகளில் தமிழ்மணம் தளம் விரிகிறது.. முகப்பிலேயே 'போலி பிடிபட்டான்' என்ற தலைப்பில் காரசாரமான பதிவு கண்ணில் படுகிறது. பார்த்திபன் அவசரமாக ஸ்க்ரோல் செய்து தன்னுடைய பதிவை காட்ட முயல்கிறார்.)

வடி: யோவ் நில்லு, நில்லு... இதென்ன... போலி பிடிபட்டான்னு போட்டுருக்கு... அத தொறய்யா படிக்கலாம்....

பார் (எரிச்சலுடன்) டேய்... அந்த கண்றாவியெல்லாம் நமக்கு வேணாம்.... அதெல்லாம் நம்மள மாதிரி, இல்ல, என்னைய மாதிரி டீசெண்டான ஆளுங்க படிக்கறதுக்கு கிடையாது...

வடி: (முறைக்கிறார்) சரிய்யா... நா டீஜெண்ட் இல்லதான்... அதான் கேக்கேன்... அத தொற... படிச்சிட்டுத்தான் மறுவேலை...

பார் டேய்.. மொதல்ல இன்னைய டயலாக்க பார்ப்போம்... அப்புறமா படிக்கலாம்....

வடி (பிடிவாதத்துடன்) யோவ் ட்ராக்க மாத்தாத.... இதென்னா பிச்சாத்து டயலாக்.... நாம என்னைக்கி இவனுங்க எளுதுன டயலாக்க பேசியிருக்கோம்... தன்னால ஸ்பாட்டுல பேசறதுதானய்யா.... என்னமோ போலின்னு எளுதியிருந்துதே அத காட்டு.... என்னதான் போட்டுருக்கான்னு பார்ப்பம்...

பார் (சலிப்புடன்) இந்தா நீயே படி... ஆனா ஒன்னு...

வடி: என்னது?

பார் இதுலருக்கறத படிச்சுட்டு உடனே மறந்துறணும்... ஸ்பாட்டுல வந்து இதுலருக்கறத பேசின... மவனே ஷூட்டிங்குன்னு கூட பாக்காம சொருகிருவேன்...

வடி ஏன்... அப்படி என்ன எளுதியிருக்காய்ங்க... காட்டுய்யா பாப்பம்...

(பார்த்திபன் வேண்டா வெறுப்பாக முகப்பில் பிரதானமாக தெரிந்த பதிவை திறந்து வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு எழுந்து கண்ணாடியைப் பார்த்தவாறு நிற்க, வடிவேலு உரக்க வாசிக்க துவங்கிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார். அடுத்த சில நிமிடங்கள் அறையில் நிசப்தம்.)

வடி என்னய்யா இது அக்கிரமமா இருக்கு... இப்படி அசிங்கமா எளுதறாய்ங்க? ச்சை... நாமளே மேல் போலருக்கு? யார்யா இந்த டோண்டு... அந்தாளுக்கு போலின்னா... டூப்பா... எதுக்கு.. ?

பார் டேய்... அது ஒரு பெரிய கதை... தமிழ் சீரியல் மாதிரி எடுக்கலாம்.... ஆனா என்ன வீடே நாறிப் போயிரும்.... அவ்வளவு அசிங்கமா இருக்கும்... ஒரு வாரமா இதே அசிங்கம்தான்.. மொதல்ல அந்த போலி எல்லாத்தையும் நாறடிச்சான்... இப்ப இவங்க அவனெ...

வடி சரிய்யா.. இப்படி அசிங்க, அசிங்கமா எழுதறாங்களே.. இதுக்கெல்லாம் சென்சார்னு ஒன்னு கெடையாதா... நாம சும்மானாச்சும் பேசறதையெல்லாம் சென்சார்ல வெட்டிடறானுங்களேய்யா...

பார் (வியப்புடன்) தோ பார்றா... சமயத்துல நீ கூட புத்திசாலித்தனமாத்தான் பேசற.... ஆனாலும் நீ சொன்னது சரிதான்... இதுக்கும் சென்சார் வரணும்.... அப்பத்தான் இது சரி வரும்... படிச்சவங்க.. பொறுப்பா இருப்பாங்கன்னு பார்த்தா... ஹூம்... விட்டுத்தள்ளு.... நம்ம டயலாக்க பார்ப்பம்...

வடி இதுல போய்த்தான் நீயும் கிறுக்கிக்கிட்டு இருக்கியாக்கும்.... ஒனக்கு தேவையா? நாளைக்கி ஒனக்கே போலின்னு எவனாச்சும் முளைச்சி வந்துறப்போறான்...

பார் (கோபத்துடன்) டேய்... என்ன அப்படியொரு ஐடியா இருக்கா மனசுக்குள்ளே...

வடி: சேச்சே... சும்மா ஒரு வெளையாட்டுக்கு சொன்னேம்பா... சரி... சரி... நீ ஒன் டயலாக்க சொல்லு...

பார் (தன்னுடைய வசன கோப்பிலிருந்து வாசிக்கிறார்) போலியே போலின்னு ஒத்துக்கற வரைக்கும் போலி, போலி இல்லடா!

வடி அடச் சை... இங்கயும் போலிதானா!

பார்: அதான... நம்ம வசனகர்த்தாவும் ப்ளாக் எழுதறவர்தான் போலருக்கு (இருவரும் சிரிக்கின்றனர்)

******

01 செப்டம்பர் 2007

பிரிவோம்... சந்திப்போம்

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சினை என்றால் சிலருக்கு வீட்டிலேயே பிரச்சினை.

அலுவலகத்தில் பிரச்சினை என்றால் எப்போது அலுவலகம் நேரம் முடியும் என்று காத்திருப்பார்கள். ஆனால் வீட்டிலேயே பிரச்சினை என்றால் அலுவலகமே கதி என்று கிடப்பார்கள். காலை ஏழு மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டால் அலுவலகத்தின் கதவுகள் சாத்தப்படும் வரை அமர்ந்திருப்பார்கள்.

முன்னவர்கள் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை அமர்ந்து செய்யும் அதே அளவு பணியைக் கூட பின்னவர்கள் செய்வதில்லை என்பது மேலதிகாரிகளுக்கு தெரிவதில்லை. 'Look at him. He is more dedicated to his work. You should try to emulate him.' என்பார்கள். Quality is more important than the quantity என்பது பல உயர் அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது போலத்தான் மேலாண்மையும். அனுபவத்தினால் வருவது இந்த கலை. ஆளைப் பார்த்து எடை போடாமல் அவனுடைய வேலையைப் பார்த்து எடை போடு என்பது நம்முடைய அலுவலக உயர் அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

வீட்டுப் பிரச்சினை எப்படி அலுவலகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை விடவும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துவது இந்த அலுவலகப் பிரச்சினை என்றால் மிகையாகாது.

அதுவும் Rat Race என்பார்களே அதுபோன்ற பிரச்சினைகள் இந்த அதிவேக உலகத்தில் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்!

ஆனால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்லது வடிகால் நிச்சயம் இருக்கும்.

சினிமா, இசை, நண்பர்களுடன் அரட்டை, ஓவியம், பாட்டு, விளையாட்டு போன்றவைகளைப் போலத்தான் எழுத்தும்...

அலுவலகத்தில் சோர்வு ஏற்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு உற்சாகத்தை திருப்பித் தரும் மருந்தாக இருந்து வந்தது வலைப்பூக்களில் எழுதுவது.

விளையாட்டாக எழுத துவங்கி சுமார் இரண்டரை ஆண்டுகள்... வாரம் ஒருமுறை, இருமுறை என துவங்கியதுதான் சுமார் இரண்டாண்டு காலமாக தினமும் எழுதுவது என ஒருவிதத்தில் obsession என்பார்களே அதுபோன்ற நிலை ஏற்பட்டது.

தமிழ்மணத்தை ஒருமுறையாவது பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பது போன்ற நிலை...

ஒருகாலத்தில் என்னுடைய அலுவலக stressஐ (மன அழுத்தம் என்பது சற்று மிகையான சொல் என்று கருதுகிறேன்) குறைக்க முடிந்த வடிகாலே சமீபத்தில் சில பிரச்சினைகளுக்கு source (மூல காரணம் எனலாமா?) ஆகிப்போனதால் எழுத்துக்கு சற்று விடுப்பு கொடுக்க வேண்டிய சூழல்.... நிர்பந்தம் என்று கூட சொல்லலாம்.

அலுவலகத்தில் வேலைப்பளு என்கிற போர்வையில் இனியும் ஒளிந்துக் கொண்டிருக்க முடியாமல்தான் போட்டு உடைத்திருக்கிறேன்..

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்கிற வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன..

பிரிகிறேன்... மீண்டும் சந்திக்க முடியும் என்கிற நினைவுடன்...

என் மனதுக்கு மிகவும் பிடித்த 'நாளை நமதே' என்கிற தொடரையும் தொடர முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.....

***********