08 மே 2007

தயாநிதிமாறன் நம்பர் ஒன்!

கடந்த சில நாட்களாகவே சன் டிவியில் வெளியாகும் சர்வே முடிவுகள் (தினகரன் மற்றும் ஏசி நெயில்சன் இணைந்து நடத்தும்) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

நேற்றைய சர்வேயில் தமிழகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர்களை பற்றிய பொதுமக்களின்(!) கணிப்பில் தயாநிதிமாறன் முதலிடத்தையும் அவரைவிட சுமார் 30% வித்தியாசத்தில் அடுத்தபடியாக ப.சிதம்பரத்தையும் கணித்திருந்தார்கள். ப சிதம்பரத்தை குறைத்து மதிப்பிட்டதும் அத்தனை முக்கியமாக படவில்லை. ஆனால் அன்புமணியை ஒரேயொரு விழுக்காடு மக்கள் மட்டும் தெரிந்தெடுத்திருப்பதுதான் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அதாவது தமிழக முதல்வரே இத்தகைய சர்வேக்கள் தேவைதானா என கேட்கும் அளவுக்கு...

அதற்கு அவர் கூறியுள்ள காரணம் இத்தகைய கணிப்புகள் கூட்டணி கட்சிகயினருடைய மனதை சங்கடப்படுத்தி விடக்கூடிய வாய்ப்புள்ளன என்பதுதான்...

குறிப்பாக சமீபகாலமாக ஆட்சியை எதற்கெடுத்தாலும் குறை கூற துவங்கியிருக்கும் ஒரு கட்சித்தலைவரைப் பற்றித்தான் அவருடைய கவலையெல்லாம்...

சரி...இத்தகைய கணிப்புகளில் எந்த அளவுக்கு உண்மையிருக்க வாய்ப்புள்ளது. அல்லது அதை எந்த அளவுக்கு நம்பலாம்?

சாதாரணமாக பொதுமக்களுடைய கருத்துக் கணிப்பு எனப்படும் ஒரு முயற்சி உலகெங்கும் உள்ளதுதான்.

ஆனால் கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் கருத்தை விடவும் அதில் கருத்து கூறுபவர்களின் தரம்தான் மிகவும் முக்கியமானது. மேலை நாடுகளை எடுத்துக்கொண்டால் கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் கரு தேவையற்றது அல்லது அது அத்தனை பெரிய விஷயமல்ல என மக்கள் கருதும் பட்சத்தில் 'I have nothing to say' என்று பெரும்பாலோனோர் மறுத்துவிடுவார்கள். விருப்பமில்லாவிடினும் எதையாவது சொல்லி வைப்போமே என்று தங்களுடைய விருப்பத்திற்கு நேர் எதிராக சொல்லி வைப்பதில்லை. ஏனெனில் படித்தவர்கள், விஷயஞானம் உள்ளவர்களுக்கு தங்களுடைய கணிப்பின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதனுடைய மதிப்பையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். மேலும் அங்கு நடைபெறும் கருத்து கணிப்புகளில் மிகவும் வளர்ச்சியடைந்த அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்பு முறைகள் (assessment tools) பயன்படுத்தப்படுகின்றன.

தினகரனுடன் இணைந்து செயல்பட்ட ஏசி நெயில்சன் நிறுவனம் பயன்படுத்திய கணிப்பு முறைகளில் குறை காணுவதில் பயன் இல்லை. ஆனால் அவர்கள் கணிப்புக்கு பயன்படுத்திய மக்கள் (target group) எந்த அளவுக்கு விஷயஞானம் உள்ளவர்கள் என்பதில்தான் ஐயம் உள்ளது.

தினம் ஒரு செய்தியுடன் மக்கள் முன் பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவரை சிறப்பாக செயல்படுகிறார் என கணிப்பது எவ்வளவு சரியில்லையோ அதைவிட தவறானது திரைமறைவில் அயாரது உழைப்பவரை, தன்னை மக்கள் முன் படம் பிடித்துக் காட்ட விரும்பாதவரை குறைவாக மதிப்பிடுவது.

மேலும் பொதுமக்களுடைய கருத்து என்பது நாட்டின் அல்லது தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் கருத்து அல்ல என்பதையும் நம்மவர்களுள் பலரும் உணர்வதில்லை. ஒரு பகுதியைச் சார்ந்த மக்களுள் ஒரு சிலரை random முறையில் தெரிவு செய்து அவர்களுடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களுடைய கணிப்பாக முடிவு செய்வதுதான் இத்துறையில் பிரபலமாக இருக்கும் ஏசி நெயில்சன் போன்ற சர்வதேச கருத்து கணிப்பு நிறுவனங்களின் வேலை.

அவர்கள் இதற்கு பயன்படுத்தும் கருவிகள் assessment tools or methods பல உள்ளன.

ஆனால் அதில் முக்கியமானது sample group.. அதாவது ஒரு கோடி ஜனத்தொகையில் நேரடியாக சந்தித்து கேள்விகளைக் கேட்க பயன்படுத்தும் மக்களின் தொகை (எண்ணிக்கை). இத்தகைய ஜனத்தொகையில் வெறும் ஆயிரம் பேரை மட்டும் சந்தித்து கேட்டுவிட்டு அதை மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுமொத்த ஒரு கோடி மக்களின் கணிப்பாக மாற்றுவதை ஏமாற்று வேலை என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.

பிறகு யாரிடம் கேள்வி கேட்பது என்பது. அதாவது target group. இதற்கு சாதாரணமாக தொலைபேசி டைரக்டரியை சில நிறுவனங்கள் பயன்படுத்துவதுண்டு. இதன் நோக்கம் ஒரு பகுதியில் வசிப்பவர்களை மட்டுமல்லாமல் ஒரு நகரத்தில் வசிக்கும் சகலரையும் target செய்ய முடியும். அப்படியல்லாமல் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள வாக்காளர் பட்டியலை ஆதாரமாக வைத்து தெரிவு செய்தால் ஒரே பகுதியில் அல்லாமல் சில சமயங்களில் ஒரே தெருவில் வசிப்பவர்களும் கூட அதிக அளவில் தெரிவு செய்துவிட வாய்ப்புள்ளது.

அடுத்தது பதில் சொல்பவர்களை lead செய்வது. அதாவது கருத்து கணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு என்ன தேவையோ அந்த பதில் வரும்வரை தொந்தரவு செய்வது. 'எனக்கு பதில் சொல்ல இஷ்டமில்லீங்க.' என்பவர்களையும், 'பரவால்லீங்க எதையாவது மனசுல பட்டத சொல்லுங்க. சரியா இருக்கணும்னு இல்லை.' என்று கேட்டு துளைப்பது. அவர்கள் 'விடமாட்டான் போலருக்கே... எதையாவது சொல்லி வைப்போம்.' என்று பட்டியலில் இருப்பவர்களில் எவரையாவது சொல்லி வைப்பார்கள்.

இறுதியாக கேள்விகளை கேட்கும் முறை. குறிப்பாக தினகரன் ஏசி நெயில்சர்ன் நிறுவன கணிப்பில் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். இதிலுள்ள எல்லா கேள்விகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களிடம் கேட்பதில் பயனில்லை. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியைக் கலைத்துவிடலாமா என்ற கேள்வியை கிராமவாசிகளிடமோ அல்லது தாத்தா பாட்டியிடமோ கேட்பதில் பயனில்லை. அதுபோலத்தான் மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டைக் குறித்த கேள்வியும். முதலில் மத்திய அமைச்சரவையில் இன்று தமிழ்நாட்டிலிருந்து எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதே எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. அந்த முழுப்பட்டியலையும் கேள்வி கேட்டவர்களிடம் காண்பித்து கேள்வி கேட்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் பெயரை மக்கள் முன்வைத்து கேட்டால் அவரைத்தான் பலரும் தெரிவு செய்வார்கள் என்பதும் உண்மைதான்.

இதற்கு உதாரணம் நம்முடைய தமிழ்மண பதிவாளர்கள் 'இவ்வருடத்திய சிறந்த பதிவுகள்' அல்லது 'சிறந்த பதிவாளர்கள்' என்று சகட்டுமேனிக்கு வெளியிடப்படும் பட்டியல்கள். இதை 'எனக்கு பிடித்த பத்து பதிவுகள்' என்றோ அல்லது 'படித்ததில் பிடித்தது' என்றோ பட்டியலிட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் எனக்கு பிடித்தவை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாமே..

ஆகையால் இத்தகைய கணிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு முதலமைச்சரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டணி கட்சி தலைவரோ ஆதங்கப்படுவது தேவையில்லாத ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்து. இதற்கும் மாற்று கருத்து இருக்கலாம். தவறில்லை.

*********

15 கருத்துகள்:

  1. //தமிழ்மண பதிவாளர்கள் 'இவ்வருடத்திய சிறந்த பதிவுகள்' அல்லது 'சிறந்த பதிவாளர்கள்' என்று சகட்டுமேனிக்கு வெளியிடப்படும் பட்டியல்கள். இதை 'எனக்கு பிடித்த பத்து பதிவுகள்' என்றோ அல்லது 'படித்ததில் பிடித்தது' என்றோ பட்டியலிட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் எனக்கு பிடித்தவை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாமே..//

    ம்ம்ம் கொட்டத் தான் முடியுது...

    பதிலளிநீக்கு
  2. சன் டி.வி. மற்றும் தினகரன், இவ்விரண்டுமே ஆட்சியில் இருப்பவர்களின் சொத்து மட்டுமல்லாமல் தயாநிதி மாறனுக்கு தனி ஆதரவு உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. என்னைப் பொருத்த வரையில் இக்கருத்து தேவையற்றது.......

    பதிலளிநீக்கு
  3. வாங்க தேவ்..

    ம்ம்ம் கொட்டத் தான் முடியுது... //

    அப்படீன்னா.. பாராட்ட முடியலைன்னு சொல்றீங்களா?

    பதிலளிநீக்கு
  4. வாங்க அத்திப்பட்டி,

    சன் டி.வி. மற்றும் தினகரன், இவ்விரண்டுமே ஆட்சியில் இருப்பவர்களின் சொத்து மட்டுமல்லாமல் தயாநிதி மாறனுக்கு தனி ஆதரவு உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. என்னைப் பொருத்த வரையில் இக்கருத்து தேவையற்றது.......//

    இவர்கள் அவருக்கு ஆதரவு இருப்பதில் தவறில்லை.. ஆனால் அதையோ பொதுமக்களுடைய கருத்தாக முன்வைப்பதுதான் தேவையா என்று கேட்க தோன்றுகிறது..

    தயாநிதி மாறனுடைய முயற்சியால் தமிழகத்தில் பல தொழில்களும் துவக்கப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.. ஆனால் அதற்காக அவரை மற்றவர்களுடன் ஒப்பிடுவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து..

    பதிலளிநீக்கு
  5. I feel that Anbumani's figure is the only thing that lets one suggest that the survey is genuine.
    GK

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஜிகே,

    I feel that Anbumani's figure is the only thing that lets one suggest that the survey is genuine.//

    You mean to say that Anbumani deserves it?

    பதிலளிநீக்கு
  7. இது முழுக்க, முழுக்க அரசியல் ஸ்டண்ட் ஸார்.. நீங்க எதுக்கு வீணா மனசை போட்டுக் குழப்பிக்கிறீங்க?

    இதெல்லாம் தாத்தாவுக்குத் தெரியாமல்லாம் பேப்பர்ல பப்ளிஷ் ஆகாது.. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீங்க அணைக்கிற மாதிரி அணைங்க.. என்று தாத்தாவும், பேரனும் போடுற தமாஷ் நாடகம்.. தமிழ்நாட்டு அரசியல்ல இதெல்லாம் சகஜமாக்கும்..

    பதிலளிநீக்கு
  8. சும்மா உழைக்கும் போல் நடிக்கும் தயாநிதியை விட பல விசயங்களில் அன்புமணி பரவாயில்லை என தோன்றுகிறது , (புகையிலைக்கு எதிராக கடுமையாக இருப்பது போன்றவை .)

    பதிலளிநீக்கு
  9. வாங்க தமிழன்!

    தமிழ்நாட்டு அரசியல்ல இதெல்லாம் சகஜமாக்கும்.. //

    இந்த மாதிரி ஒரு கணிப்பு வடக்கிலிருந்து வரும் ஒரு ஆங்கில நாளிதழிலும் வந்திருந்தது...

    படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

    ஆகவே இத்தகைய கணிப்புகளை நடத்தும் முறை நம் நாட்டுக்கு ஒத்துவராது என்பதைத்தான் கூற நினைத்தேன்...

    பதிலளிநீக்கு
  10. வாங்க மூர்த்தி!

    சும்மா உழைக்கும் போல் நடிக்கும் தயாநிதியை விட பல விசயங்களில் அன்புமணி பரவாயில்லை என தோன்றுகிறது , (புகையிலைக்கு எதிராக கடுமையாக இருப்பது போன்றவை .) //

    அப்படியா சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  11. கருத்து கணிப்பை பற்றிய நல்ல அலசல், சார் உங்க பதிவு!

    இது தேவையில்லாத ஒன்று தான். மக்கள் 'pulse' பார்க்கிற வேலை. உண்மைத் தமிழன் சொன்ன மாதிரிதான்! மக்கள் புரிஞ்சிகிட்டா நல்லது.

    பதிலளிநீக்கு
  12. தயாநிதியோ, அன்புமணியோ மக்களால் தெரிந்தெடுக்கப் பெற்று மந்திரி ஆகியவர்களல்ல. நம்முடைய மக்கள் பிரதிநிதி மந்திரிகளில் ஒருவர் கூடவா வேலை பார்க்கவில்லை? அல்லது அவர்களி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா?

    பதிலளிநீக்கு
  13. Dayanthai Maran may be a efficent
    minister, but is highly unethical in throttling competition to Sun TV.he tried his best to block Raj News and Raj TV. the whole Minsitry
    should be abolished and let free market competition allowed. the spectrum/ bandwidth can be auctioned to the highest bidder and
    a joint secratary in commerce minstry can do it. License raj still exists in this area and also
    in bus tranport sector,and this
    results in crony capitalism and
    corruption.

    Anbudan
    K.R.Athiyaman
    athiyaman.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. அரசியல்ல இது எல்லாம் சகஜம் சார்
    :-)

    பதிலளிநீக்கு
  15. Poetic justice has happened.
    Uoolvinai...

    and pirrakkinna murpagal seyyin....

    the industry may morn the loss of the minister but Raj TV and other
    victims like Tatas will be happy

    பதிலளிநீக்கு