23 ஏப்ரல் 2007

அழகுகள் ஆறு...

இறைவனின் படைப்பிலே எதுதான் அழகில்லை?

கடந்த வாரத்தில் ஒருநாள் தருமி சாரிடமிருந்து அழைப்பு வந்தபோது எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பத்திலிருந்தேன்...

அந்த சமயத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன..

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு..

என்று துவங்கி அவர் இடும் பட்டியலில்தான் எத்தனை அழகுகள்?

அந்த முழுப்பாடலே ஒரு தனி அழகு!

ஆனாலும் என்னைக் கவர்ந்தவை என்று ஸ்பெஷலாக சில இருக்கத்தான் செய்கின்றன.

1. பிறந்த பத்தாம் நாளே ஒரு freak மழையில் நனைந்து மரணப் படுக்கையில் கிடந்த என் இரண்டாவது மகளுடைய முகத்தில் ஒரு நொடி நேரமே தோன்றி மறைந்த அந்த புன்னகை! மறக்க முடியுமா அந்த அழகிய புன்னகையை! இன்றும் நினக்கும்போதெல்லாம் கண்களில் நீரை வரவழைக்கிறதே! அதைப்பற்றி சொல்வதா?

2. என்னுடைய இளைய மகளுடைய (கணக்கில் மூன்றாவது) கல்லூரி நண்பன் ஒருவர் விபத்தில் அடிபட்டு மரித்த முதலாண்டு நினைவு தினத்தன்று அவளும் அவளுடைய நான்கு நண்பர்களும் தலைக்கு ரூ.500/- என்று திரட்டி அனாதைக் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து அதையும் ஒரு ஏழை நடைபாதை வியாபாரியிடமிருந்தே வாங்க வேண்டும் என்று நினைத்த அழகைச் சொல்லவா? அல்லது அந்த ஏழை வியாபாரி தன் பங்குக்கு ரூ.100 பெறுமானமுள்ள ஆடையை இலவசமாக வழங்க முன்வந்தாரே அந்த அழகை சொல்லவா?

3. நான் என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபோது என்னுடைய வங்கியின் மாத இதழை வெளியிடும் பொறுப்பு என்னிடமிருந்தது. அதில் வங்கியை சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். என்னுடைய ஐந்தாண்டுகால கல்லூரி அனுபவத்தில் என்னுடைய நண்பர் ஒருவருடைய பத்து வயது மாணவி அவளுடைய வீடு அமைந்திருந்த சாலையில் தினமும் குப்பைகளை சேகரித்து விற்கும் அவள் வயதொத்த சிறுமியைப் பற்றி, forgotten children என்ற தலைப்பில் எழுதியிருந்த உணர்ச்சிபூர்வமான கட்டுரையை வாசித்து முடித்தபோது மனதில் ஒரு இனம் தெரியாத நிறைவு ஏற்பட்டதே அந்த அழகைச் சொல்லவா? அல்லது அத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஏழைச் சிறுமியின் அழகு புன்னகையை சொல்லவா?

4. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நான் முதன் முதலாக குமரி முனையில் விடியற்காலை அடித்துப் பிடித்து எழுந்து ஜகஜ்ஜோதியாய் எழுந்த கதிரவனை முகமுகமாய் கண்ட அழகைச் சொல்லவா? அல்லது இப்போதும் சென்னை போக்குவரத்து நெரிசலின் நடுவிலும் மாலை நேரங்களில் மஞ்சள் வட்டமாய் உயர்ந்த கட்டடங்களுக்கு பின்னால் விழும் மாலைக் கதிரவனின் அழகைக் காணம் மனம் அடித்துக்கொள்கிறதே அதைச் சொல்லவா?

5. சென்னையிலுள்ள முதியோர் இல்லத்தில் ஒரு பகுதிநேர சேவகனாய் பணியாற்றிக்கொண்டிருக்கையில் நான் ரகசியமாய் வாங்கிவரும் ஐஸ்க்ரீமை கன்னியர்களுக்கு தெரியாமல் வயதான தாத்தாவும் பாட்டியும் ருசித்து உண்டுவிட்டு 'ரொம்ப நன்றிப்பா..' என்றவாறு பொக்கை வாய் விரிய சிரித்த அந்த சிரிப்பில் தெரிந்த அழகைச் சொல்லவா?

6. சமீபத்தில் பார்த்த மொழி திரைப்படத்தில் செவிட்டு ஊமை கதாபாத்திரம் காய் கறியை வெட்டும் ஓசையை மனதில் கற்பனை செய்வதுபோல் காட்சியமைத்த அந்த படைப்பாளியின் கற்பனை அழகைச் சொல்லவா அல்லது அந்த காட்சியில் உண்மையிலேயே உணர்ந்து நடித்த ஜோதிகாவின் முகத்தில் தோன்றிய அந்த அழகு பரவசத்தைச் சொல்லவா?

இப்படி எத்தனையோ... சொல்லிக்கொண்டே போகலாம்...

இறைவனின் படைப்பிலே எதுதான் அழகில்லை....

அவற்றைக் காணும் கண்களிலும் மனித மனங்களிலும்தான் அவற்றைக் கண்டுணரும் பக்குவம் தேவை...

சரி.. என் பங்குக்கு யாரைக் கூப்பிடுவது?

சென்ற முறையைப் போல 'ஏற்கனவே என்னை அழைச்சிட்டாங்களே சார்' என்றால் என்ன செய்ய?

இருந்தாலும் சடங்குன்னு ஒன்னு இருக்கில்லே...

அதனால அதே பட்டியல மாற்றமே இல்லாம மறுபடியும்...

ஜோ,
ஜிராகவன்,
முத்து தமிழினி மற்றும்
வினையூக்கி...

கொத்தனார மட்டும் விட்டுட்டேன்.. அவர்தான் இந்த சங்கிலியையே துவக்கி வச்சவர் போலருக்கு... சரியாங்க?

அழகுகள் ஆயிரம் ஆனால் சொல்ல முடிஞ்சது ஆறுதான்:-)

16 கருத்துகள்:

  1. // சமீபத்தில் பார்த்த மொழி திரைப்படத்தில் செவிட்டு ஊமை கதாபாத்திரம் காய் கறியை வெட்டும் ஓசையை மனதில் கற்பனை செய்வதுபோல் காட்சியமைத்த அந்த படைப்பாளியின் கற்பனை அழகைச் சொல்லவா அல்லது அந்த காட்சியில் உண்மையிலேயே உணர்ந்து நடித்த ஜோதிகாவின் முகத்தில் தோன்றிய அந்த அழகு பரவசத்தைச் சொல்லவா?
    //

    ம்ம்.. இந்தப் பாடலை பார்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் சொன்ன இந்தக் காட்சி மனதை வருடுவதுண்டு.

    சார் அழைப்புக்கும் நன்றி.

    தங்களை பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வினையூக்கி,

    ம்ம்.. இந்தப் பாடலை பார்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் சொன்ன இந்தக் காட்சி மனதை வருடுவதுண்டு. //

    சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி இது...

    தங்களை பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்தேன்.//

    அன்றைக்கு டிபிஏ சிலரை எடுப்பதற்கான நேர்காணலை வைக்க வேண்டியிருந்தது.. உங்கள் எச்.ஆருக்கும் தெரியுமே...

    11:55 AM

    பதிலளிநீக்கு
  3. TBR Sir,

    There is something spl in you,"அழகுகள் ஆறு" which you mentioned really makes one to think in himself.....

    பதிலளிநீக்கு
  4. அழகு # 5 தான் சூப்பர்:-)))))

    பதிலளிநீக்கு
  5. வாங்க ஆணி,

    There is something spl in you,"அழகுகள் ஆறு" which you mentioned really makes one to think in himself..... //

    அப்படியா! நன்றி:)))

    பதிலளிநீக்கு
  6. வாங்க துளசி,

    அழகு # 5 தான் சூப்பர்//

    உண்மைதான்...

    பதிலளிநீக்கு
  7. இந்த பதிவை பார்க்காம விட்டுட்டேன். மாப்பு ஐயா!!

    ஆமாங்க இந்த ஆட்டத்தின் துவக்க ஆட்டக்காரம் நாந்தாங்க. எதோ தமிழ்மண முகப்பில் அழகு அழகு எனப் பார்க்க ஒரு ஆசை. அதாங்க இப்படி. :)

    பதிலளிநீக்கு
  8. வாங்க கொத்தனார்,

    ஆமாங்க இந்த ஆட்டத்தின் துவக்க ஆட்டக்காரம் நாந்தாங்க. எதோ தமிழ்மண முகப்பில் அழகு அழகு எனப் பார்க்க ஒரு ஆசை. அதாங்க இப்படி. :)//

    நல்ல அழகான ஆட்டம்... நன்றி

    பதிலளிநீக்கு
  9. முதலில் நன்றியைப் பிடியுங்கள் - இத்தனை வேலைப்பளுவிற்கும் நடுவில், சொன்னதைச் சொன்னதுபோல நடத்தியிருப்பதற்காக.

    நானும் வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்பேனென்று நினைத்திருந்தேன் - ஏமாற்றம்தான்.

    எங்கும் அழகு என்றதே அழகுதான் .

    பதிலளிநீக்கு
  10. வாங்க தருமி சார்,

    முதலில் நன்றியைப் பிடியுங்கள் - இத்தனை வேலைப்பளுவிற்கும் நடுவில், சொன்னதைச் சொன்னதுபோல நடத்தியிருப்பதற்காக.//

    என்னை அழைச்சதுக்கு நாந்தான் ஒங்களுக்கு நன்றி சொல்லணும்...

    நானும் வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்பேனென்று நினைத்திருந்தேன் - ஏமாற்றம்தான்.//

    அன்றும் நான் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.. இன்னும் சில மாதங்களுக்கு ஓழிச்சலில்லாத வேலைதான் போலிருக்கிறது.. என்ன செய்வது. அதனாலேயே நண்பர்கள் எழுதும் பல பதிவுகளை படிக்கும் வாய்ப்பை இழந்துப்போனேன்..

    ஆனால் மா.சிவக்குமார் மற்றும் பொன்ஸ் ஆகியோரின் பதிவுகளைப் படித்தபோது கூட்டத்திற்கு வந்திருந்ததுபோன்ற மனநிறைவு..

    எங்கும் அழகு என்றதே அழகுதான் .//

    அது நம் கண்ணோட்டத்தையும் பொருத்திருக்கிறது என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. ஜோசப் சார்,
    மனதை உருக்குற மாதிரி எழுதிட்டீங்க! உங்கள் பதிவுகளை பாராட்டி நண்பர் மா.சிவகுமார் ஒரு பதிவு போட்டிருந்தார்.படிச்சீங்களா?

    அழைப்புக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வாங்க ஜோ,

    மனதை உருக்குற மாதிரி எழுதிட்டீங்க! //

    நன்றி ஜோ.

    உங்கள் பதிவுகளை பாராட்டி நண்பர் மா.சிவகுமார் ஒரு பதிவு போட்டிருந்தார்.படிச்சீங்களா?//

    இல்லையே. இன்றைக்கா? பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  13. முதல் அழகு, மனதை தொட்டது.. 'திரும்பிப்பார்கிறேன்-I' ல் படித்த பொழுதே மனசு கஷ்டமாக இருந்தது...

    ஒவ்வொரு அழகிலும் ஒரு 'சின்ன' சோகம் ஒளிந்திருக்கின்ற மாதிரி ஓர் உணர்வு ...

    /சென்ற முறையைப் போல 'ஏற்கனவே என்னை அழைச்சிட்டாங்களே சார்' என்றால் என்ன செய்ய?/
    ;) நான் ஏற்கனவே ஜோ-வை அழைத்திருந்தேன்..

    பதிலளிநீக்கு
  14. வாங்க தென்றல்,

    ஒவ்வொரு அழகிலும் ஒரு 'சின்ன' சோகம் ஒளிந்திருக்கின்ற மாதிரி ஓர் உணர்வு ...//

    அப்படியா? சோகமும் ஒரு அழகு உணர்வுதானே..

    /சென்ற முறையைப் போல 'ஏற்கனவே என்னை அழைச்சிட்டாங்களே சார்' என்றால் என்ன செய்ய?/
    ;) நான் ஏற்கனவே ஜோ-வை அழைத்திருந்தேன்.. //

    நினைச்சேன்:)))

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஜோசப் சார் வாங்க. இப்பதான் ஒங்க பதிவைப் பார்த்தேன். அழகு அழகு.

    ஆம்...உங்கள் இரண்டாவது மகளைப் பற்றி திரும்பிப் பார்க்கிறேன் ஒன்றாம் பாகத்தில் படித்தேன். அப்பப்பா! மனம் கனக்கச் செய்ததே! மறுபடியும் நினைவு படுத்தி விட்டீர்கள். இறைவா!

    ஒவ்வொரு அழகும் அருமை. வயதான காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதும் அழகுதான். அதற்கு நீங்கள் உதவியதும் அழகுதான். அருமை. அருமை. மக்களுக்குச் செய்யும் சேவை மகேசனுக்குச் செய்யும் சேவை என்று சொல்வார்கள். அது உண்மை. உண்மை. உண்மை.

    அழகு பதிவிட அழைத்தமைக்கு நன்றி. ஏற்கனவே அழகு பற்றி பதிவிட்டிருக்கிறேன் இங்கே.
    http://gragavan.blogspot.com/2007/04/blog-post.html

    பதிலளிநீக்கு
  16. வாங்க ராகவன்,

    அழகு பதிவிட அழைத்தமைக்கு நன்றி. ஏற்கனவே அழகு பற்றி பதிவிட்டிருக்கிறேன் இங்கே.
    http://gragavan.blogspot.com/2007/04/blog-post.html //

    அப்படியா? மிஸ் பண்ணிட்டேன். இப்பவே பாக்கறேன்.

    பதிலளிநீக்கு