29 நவம்பர் 2006

வம்பு சொம்பு பண்ணாதீங்க - நகைச்சுவை தினம்

வடிவேலு டீக்கடையொன்றில் அமர்ந்து டீயை அனுபவித்து பருகிக் கொண்டிருக்கிறார்.

சுற்றிலும் பெஞ்சில் பலரும் தினத்தந்தி செய்தித்தாளைப் படித்தவாறு அமர்ந்திருக்கின்றனர்.

அதில் சிலர் சற்று தூரத்தில் மடித்துக் கட்டிய லுங்கி, மைனர் பனியன், கழுத்தில் மைனர் செயின், வாயின் ஓரத்தில் ஊஞ்சலாடும் துண்டு பீடி சகிதம் சாவகாசமாக வந்துக்கொண்டிருந்த பார்த்திபனைப் பார்த்துவிட்டு தங்களுக்குள் ‘டே.. அங்க பாரு.. அடாவடி ஆளு வரான்.. வாங்கடா’ என்றவாறு ‘எஸ்கேப்’ ஆக, வடிவேலு மட்டும் நெருங்கி வந்துக்கொண்டிருந்த ஆபத்தை உணராமல் டீயை உறிஞ்சுகிறார்.

பார்த்திபன் ‘எஸ்கேப்’ ஆன ட்களைப் பார்த்துவிட்டு தனக்குள் சிரித்துக் கொள்கிறார்.. ‘அத்த்த்து’ என்று அலட்சியத்துடன் வளைகிறது அவரது உதடுகள்..

பார்த்திபன் கடையை அடைந்ததும் மீதமிருந்த ஒரு சில இளைஞர்களும் மரியாதையுடன் எழுந்து மடித்துக் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு நிற்க அவர் வந்ததை கவனியாமல் டீயில் லயித்திருந்த வடிவேலுவை ஒரக்கண்ணால் பார்த்துவிட்டு அவர் அமர்ந்திருந்த பெஞ்சை எட்டி ஒரு உதை விட கையிலிருந்த சூடான காப்பியுடன் தரையில் சாய்கிறார் வடிவேலு..

அருகிலிருந்தவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தவாறே பார்த்திபனை ஓரக் கண்ணால் பார்க்கின்றனர்...

வடி: எ..எ... எவண்டாவன்.. சுத்த கபோதியாருப்பான் போ.. (நிமிர்ந்து பார்த்திபனைப் பார்த்துவிட்டு தனக்குள்) இ.. இவனா.. இவன் எங்க வந்தான்? படுபாவிப்பய நிம்மதியா ஒக்காந்து ஒரு டீ கூட குடிக்கக விடமாட்டறான்யா.. இன்னைக்கி இவனெ எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே.. யப்பா சாமி... இன்னைக்கி யார் முகத்துல முளிச்சேன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே..

பார்: டேய்.. என்ன கீழ புதையல் இருக்கான்னு பாக்கறியா.. எந்திர்றா..

வடி: (சட்டை மீது சிந்தியிருந்த டீ கறையைப் பார்க்கிறார். சட்டென்று வந்த கோபத்தில் பேச வாய் திறந்து.. பிறகு மூடிக்கொள்கிறார். தனக்குள் புலம்புகிறார்) எதுக்குடா வம்பு.. வேணாம்.. டீக் கறைய வேணா ஆத்தா ரெண்டு சத்தம் போட்டுட்டு வெளுத்து வெள்ளையாக்கிரும்.. ஆனா இவங்கிட்ட அதுக்காக வம்பு வளக்க போனே..நீ தொலைஞ்சே..

பார்: டேய்.. என்ன ஒனக்கு நீயே பேசிக்கிட்டிருக்கே.. எந்திர்றா

வடி: (தட்டு தடுமாறி எழுந்து கறையாகிப் போன தன்னுடைய சட்டையைக் பொருட்படுத்தாமல் டீக்கடைக்காரனைப் பார்க்கிறார்) யோவ்.. பாதி டீயதான் குடிச்சிருக்கேன்.. எவ்வளவு குடுக்கணுமோ அத கணக்குல எளுதிக்க.. (நகர்கிறார்)

டீக்கடைக்காரர் (பார்த்திபனைப் பார்க்கிறார்) பாத்தீங்களா தம்பி.. இவன் குடிக்கறதே நாலணா டீ.. இதுல பாதிய தரானாம். அதையும் கணக்குல எளுதிக்கறவாம்.. நா என்ன பேங்கா வச்சிருக்கேன்.. நீங்களே கேளுங்க தம்பி..

பார்(நகர்ந்துக்கொண்டிருந்த வடிவேலுவின் ஜிப்பா கழுத்தை எட்டிப் பிடிக்கிறார்) டேய் நில்றா.. அவர் கேட்டதுக்கு பதில் சொல்றா.

வடி: (ஜிப்பாவை சரிசெய்துக் கொண்டு எரிச்சலுடன் டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) யோவ்.. காசு கொண்டு வரலேன்னுதான கணக்குல வச்சிக்கன்னு சொல்றேன்.. அதுக்கெதுக்கு அந்தாள பஞ்சாயத்துக்கு கூப்புடறே.. பிச்சாத்து நாலணா.. அதுல பாதி.. ரெண்டனா.. அதுக்குக் கூட பொற மாட்டானாய்யா இந்த வடிவு....

(டீக்கடைக்காரர் பார்த்திபனைப் பார்க்கிறார்.)

பார்: டேய்.. டீ குடிக்க வர தெரியுதுல்ல.. காசில்லாம ஏண்டா வர்றே..

வடி: (திரும்பி பார்த்திபனைப் பார்க்கிறார்) யோவ்.. ஒன்கிட்ட நா பேசினனா.. இல்ல பேசினனான்னு கேக்கேன்..

பார்: (அலட்சியத்துடன் சிரிக்கிறார்) தோ பார்றா.. ஒனக்கு கோவம்லாம் கூட வருமா.. குடிச்சது இருபத்தஞ்சு பைசா டீ.. அதுல பாதிக்குத்தான் காசு தருவேங்கற.. இதுல கனக்குல எழுதிக்கய்யான்னு ஜம்பம் வேற.. வரும்போதே காச கொண்டு வர வேண்டியதுதானடா..

வடி: ஏய்யா யோவ்.. ஒன் கண்ணு என்ன பொட்டையா? இது என்ன?

பார்: (வடிவேலுவின் கையிலிருந்த பித்தளை செம்பைப் பார்க்கிறார்.மூக்கைப் பொத்திக்கொள்கிறார்) கர்மம்.. கர்மம்.. போறியா.. இல்ல போய்ட்டு வரியா..? இந்த நாத்தம் நாறுது..

வடி: யோவ்.. இவ்வளவு நேரம் அடிக்காம இப்ப அடிக்குதா.. போய்யா.. நீயும்.. ஒன்.. காலங்கார்த்தால வந்துட்டான் பஞ்சாயத்து பண்றதுக்கு.. (டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) யோவ்.. நீ அடிச்ச கூத்துக்கு அந்த ரெண்டனாவும் கிடையாது.. என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ.. (விரைப்புடன் போகிறார்)

பார்: (எரிச்சலுடன்) சரியான சாவுக்கிராக்கி.. (கடைக்காரரிடம்) யோவ்.. ஏலக்கா டீ இருக்கா?

டீக்கடை: (பணிவுடன்) இருக்குண்ணே..

பார்: போடு.. (தொலைவில் செல்லும் வடிவேலுவைப் பார்க்கிறார்) போடா.. டேய்.. போய்ட்டு.. இந்த பக்கந்தான வருவே.. வச்சிக்கறேன்.. (டீயைக் குடித்தவாறு செய்தித்தாளை மேய்கிறார்..) இன்று நகைச்சுவை தினம்.. அட.. இங்க பார்றா.. இதுக்கெல்லாம் கூட தினமா.. வர வர நாட்டுல எதுக்குத்தான் தினம்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிருச்சு..

டீக்கடை: (பணிவுடன்) அண்ணே இன்னைக்கி நம்ம என்.எஸ். கேயோட பிறந்தநாள்... அதான்..

பார்: (அலட்சியத்துடன்) யோவ்.. எனக்கு தெரியாமயா? வேலைய பாருய்யா.. (தொடர்ந்து படிக்கிறார்)

(டீக்கடைக்காரர் முகத்தை சுளித்துக்கொண்டு தன் வேலையைத் தொடர்கிறார்)

சிறிது நேரம் செல்கிறது..

(டீக்கடைக்காரர் வடிவேலு வருவதைப் பார்க்கிறார்.)

டீ: (குரலை இறக்கி) அண்ணே அதோ அவன் வரான்.. விடாதீங்க..

பார்: (டீக்கடைக்காரர¨ எரிச்சலுடன் பார்க்கிறார்) ஏன்? ஒனக்கென்ன அதுல அவ்வளவு அக்கற?

டீ: (அசடு வழிந்தவாறு) இல்லன்னா.. இன்னைக்கி நகைச்சுவை தினம்.... அதான்.. கொஞ்சம் ஜாலியா சிரிக்கலாமேன்னு..

பார்: யோவ்.. ஒருத்தன் அவஸ்த்தையில ஒங்களுக்கு சிரிப்பா.. என்.எஸ்.கே அப்படியாய்யா செஞ்சார்? அவர் காலத்துல யாரையாவது அழ வச்சிருக்காறாய்யா.. இப்ப மாதிரியா இவன் அவனெ அடிக்கறதும்.. அவன் இவனெ ஒதக்கறதும்.. இதெல்லாம் ஒரு பொழப்பாய்யா..

டீ: (முனகுகிறார்) சந்தடி சாக்குல கவுண்டமனி செந்தில் ஜோடியத்தான சொல்றீங்க.. நீங்க மட்டும் என்னவாம்..

பார்: டேய் மொனகாத.. நாங்க அப்படியாடா? கையால என்னைக்காச்சும் இவனெ (வடிவேலுவை காட்டுகிறார்) அடிச்சிருக்கேனடா..

டீ: (முனகுகிறார்) கையால அடிச்சாத்தானா?

(வடிவேலு நெருங்கவே வாயை மூடிக்கொள்கிறார்.)

(வடிவேலு வரும்போதே பார்த்திபனைப் பார்த்து திடுக்கிட்டு ‘இந்த பய இங்கனயேதான் இருக்கானா.. வாண்டாம்டா சாமி என்று முனகியவாறு தலையைக் குணிந்தவாறே கடையைக் கடந்து போகிறார்)

டீ: (பதற்றத்துடன்) அண்ணே.. போறார் பாருங்க..

பார்: (குரலை இறக்கி) போகட்டுண்டா.. பாவம்.. (உரத்த குரலில்) பொளச்சி போ.. இன்னைக்கி நம்ம என்.எஸ்.கே தெனமாம்லே.. அதான்..

வடி: (சட்டென்று நின்று திரும்பிப் பார்க்கிறார்) என்னது? நம்ம தலைவர் தெனமா? எங்க போட்டுருக்கு, காட்டு? (ஆவலுடன் திரும்பி வருகிறார்)

பார்: (நக்கலுடன் டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) மாட்னான் பாத்தியா.. (திரும்பி வடிவேலுவைப் பார்க்கிறார்) டேய்.. அந்த கர்மத்தோட இங்க வராத..

வடி: (திடுக்கிட்டு தன் கையிலிருந்த பாத்திரத்தைப் பார்க்கிறார்) எது? ஓ! இதா.. இனி இது நாளைக்குத்தான வேணம். இங்கயே இருக்கட்டும்.. (சாலையின் வைத்துவிட்டு ஓடிச் சென்று ஆவலுடன் பார்த்திபனின் கையிலிருந்த பத்திரிகையை வாங்கி பக்கம் பக்கமாகத் தேடுகிறார்) எங்கய்யா.. எங்க..?

பார்: டேய்.. என்னத்த தேடறே?

வடி: (பத்திரிகையை தேடியவாறு) அதான்யா.. நம்ம கலைவாணரப் பத்தி ஏதோ சொன்னியேய்யா.. அதத்தான் தேடறேன்..

பார்: ஒங் கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது.. அங்க வச்சிட்டு இங்க என்னெ பார்.. நா சொல்றேன்..

(வடிவேலு பத்திரிகையை மடித்து கைக்கு இடையில் வைத்துக்கொள்ள பார்த்திபன் பறித்து பெஞ்சில் எறிகிறார்) டேய்.. இதான் சாக்குன்னு பேப்பரெ தள்ளிக்கிட்டு போயிரலாம்னு பாக்க பாத்தியா..? இப்படி ஒக்கார்... இன்னைக்கி என்ன நாளுன்னு சொன்னேன்?

வடி: (சிணுங்குகிறார்) யோவ்.. போய்க்கிட்டிருக்கறவனெ கூப்ட்டு ஒக்காத்தி வச்சி ரப்ச்சர் பண்ணாத.. கலைவாணர்னா நமக்கு உசுருய்யா.. அது போட்டிருக்காங்காட்டியும்னு திரும்பி வந்தா.. (எதிர் பெஞ்சில் தொப்பென்று அமர்கிறார்) சொல்லுய்யா.. இப்ப என்ன வேணும் ஒனக்கு..?

பார்: உண்மைய சொல்லு.. கலைவாணர்னா ஒனக்கு உசுருன்னு சொன்னே இல்லே..

வடி: ஆமா.. அதுக்கென்ன இப்ப?

பார்: எப்படி உசுரு?

வடி: எப்படின்னா? (தனக்குள்) என்னடா இவன் வெவரங்கெட்டவானாருக்கானே.. (உரக்க) உசிருன்னா உசிருதான்..

பார்: சரி.. அத விடு.. அவர் படத்த நீ பாத்திருக்கியா?

வடி: (எகத்தாளமாக) பின்னே.. பாக்காமயா?

பார்: சரி.. பாத்தே.. என்னென்ன படம் பாத்துருப்பே.. சொல்லு கேப்போம்..

வடி: (தனக்குள்) வச்சாண்டா ஆப்பு.. ச்சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா.. (சமாளித்தவாறு) யோவ்.. பேரெல்லாம் சட்டுன்னு கேட்டா.. நான் இத்தனூண்டு இருக்கறப்ப பாத்தது (தரையிலிருந்து அரையடி உயரத்தைக் காட்டுகிறார்)..

பார்: (டீக்கடைக் காரரையும் அருகிலிருந்தவர்களையும் பார்க்கிறார். ஒருவரிடம்) ஏண்ணே.. நீங்க இத்தனூண்டு இருக்கறப்போ ஒங்களுக்கு எத்தன வயசுருக்கும்?

(அவர் இதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்று பதிலளிக்காமல் தயங்குகிறார்)

பார்: ச்சும்மா சொல்லுங்கண்ணே.. என்னா ஒரு அஞ்சு வயசு இருக்குமா?

ச்சேச்சே.. என்ன தம்பி நீங்க? நெலத்துலருந்து அரையடி ஒயரத்துல அஞ்சு வயசா.. என்னா மிஞ்சிப் போனா ஒரு ஆறு மாசம் இருக்கும்.. எந்திச்சி ஒக்கார முடியாம தவழ்ந்துக்கிட்டிருக்கறப்பன்னு வச்சிக்குங்களேன்..

பார்: பார்த்தியாடா.. அவருக்கே ஆறு மாசந்தான் இருக்கணும்னா பனமரம் மாதிரி நீ இப்ப இருக்கற ஒயரத்துக்கு.. நீ மூனு மாசங் கூட இருந்துருக்க மாட்ட.. அப்பப் பாத்தது இப்ப நினைவுல நிக்குதா..

வடி: (கிலு, கிலு என்ற சப்தத்துடன் சிரிக்கிறார்) அட என்னண்ணே நீங்க.. அரையடின்னா அரையடியா..சும்மா ஒரு பேச்சுக்கு கைய காட்டுனா..

பார்: அதென்ன பேச்சுக்கு சொன்னேன்.. பேசாம சொன்னேன்னுட்டு.. இப்படி பேசாதேன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்.. சொல்லு.. எத்தன படம் பாத்துருப்பே..

வடி.. (யோசிக்கிறார்) என்ன.. ஒரு அஞ்சாறு இருக்கும்..

பார்: சரி.. படத்தோட பேர் வேணாம்.. ஏதாச்சும் ஒரு சீன் ஞாபகம் இருக்குமில்ல? அதாண்டா நீ ரொம்ப ரசிச்சி சிரிச்சிருப்பியே.. அதுல ஏதாச்சும் ஒன்னெ சொல்லு.. இன்னைக்கி நகைச்சுவை தினம்டா.. நாங்களும் கொஞ்சம் சிரிக்கணுமில்ல..

வடி: (தனக்குள்) நாசமா போச்சு.. வேணும்.. வேணும்.. ஒனக்கு வேணும்.. பேசாம சொம்ப தூக்கிக்கிட்டு போயிருக்கலாமில்லே.. ஒன்னுத்தையுமே பாக்கலையேடா.. இப்ப என்னத்த சொல்லி.. சரி.. வாயில வந்தத எதையாவது சொல்லி வைப்போம்.. இவனுங்களுக்கு மட்டும் தெரிஞ்சிருக்கவா போவுது.. எல்லா பயலுவளும் நம்மள விட ச்சின்னதாவுல்ல இருக்கானுவோ.. ஆனா இந்த எடக்கு புடிச்ச பயதான்.. நம்மளவிட பெரியவனாச்சே.. இவன் தலைவர் படத்த பாத்துருக்கறா மாதிரி தெரியுதே.. என்னடாயிது.. எளவா போச்சுதே..

பார்: டேய்.. என்னத்த மொனவுற? சீக்கிரம் சொல்லு.. நேரமாவுதுல்ல..

வடி: (எரிச்சலுடன்) அட இருய்யா.. யோசிக்க வேணாமா.. எப்பவோ பாத்தது.. ஒன்னா ரெண்டா.. டைலாக்கையெல்லாம் அப்படியே அவர் மாதிரியே சொல்லணுமில்லே..

பார்: (நக்கலுடன்) யார் நீ..? டைலாக்க..? அவர் மாதிரியே..?

(குழுமியிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். வடிவேலு முறைக்கிறார்)

வடி: (பல முறை வாயைத் திறந்து பேச வந்து மூடிக்கொள்கிறார்) ஒன்னுமே யாபகத்துக்கு வரமாட்டேங்குதேய்யா..

பார்: பாத்தாவுல்லடா ஞாபகத்துக்கு வரும்?

வடி: (முறைக்கிறார்) யோவ்.. வாணாம்.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஆங்! அந்த சர்வர் சுந்தரம் படத்துல ரெண்டு கைலயும் கப்புகள அப்படியே எல்.ஐ.சி பில்டிங் சைசுக்கு அடுக்கி வச்சிக்கிட்டு வருவாரே.. அந்த சீன் ஒன்னு போறாது..?

(பார்த்திபனைத் தவிர குழுமியிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்)

வடி: (பெருமையுடன் அனைவரையும் பார்க்கிறார்) பாத்தியாய்யா.. என்னமோ சொன்னியே.. அய்யா சீன சொன்னவுடனே இவிங்க எப்பிடி சிரிக்கிறானுவ.. அதான்யா வடிவு.... இன்னும் ஏதாச்சும் சீன் சொல்லவா?

பார்: டேய்.. எரிச்சல கெளப்பாத.. சர்வர் சுந்தரம் நாகேஷ் சார் நடிச்சது.. சிரிக்காம பின்னெ வேறென்ன செய்வாய்ங்கெ..

வடி: (குரலை இறக்கி தனக்குள் பேசிக்கொள்கிறார்)அட பாவமே.. நம்ம தலைவர் நடிச்ச சீன பழுவடியும் எடுத்துட்டானுவளோ.. நா நம்ம கலைவாணர் நடிச்சில்ல பாத்ததா ஞாபகம்? இந்த மாதிரி திருட்டெல்லாம் அப்பவே இருக்குதா?

பார்: டேய்.. அவங்க யாரும் திருடல.. நீதான்.. இங்கருந்து திருடி அங்க சொருகறே. உண்மைய சொல்லிரு.. நீ என்.எஸ்.கே படத்துல ஒன்னையாவது பாத்திருக்கியா இல்லையா?

(வடிவேலு தலையைக் குனிந்துக்கொள்கிறார்)

பார்: சொல்றா.. இல்லல்லே..

வடி: இல்லய்யா..

பார்: பின்னே எதுக்கு பாத்தேன்னு சொன்னே?

வடி: ச்சும்மா.. ஒரு இதுக்குத்தான்..

பார்: இதுக்குன்னா, எதுக்கு?

வடி: ஒரு தமாசுக்குத்தான்.. நீதானய்யா சொன்னே..

பார்: நானா.. என்னன்னு?

வடி: இன்னைக்கி நகைச்சுவை தெனம்னு..

பார்: அதுக்கு?

வடி: நாஞ் சொன்னதும் ஒங்க எல்லாருக்கும் சிரிப்பு வந்துதா இல்லையா?

(மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றனர்,பார்த்திபனைத் தவிர)

பார்: டேய்.. இதுக்கு பேர் சிரிப்பில்லை.. நக்கல்..

வடி: சரி ஏதோ ஒன்னு.. (எழுந்து திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.. 'யோவ் சொம்பு..' என்கின்றனர் கூட்டத்தினர்) அட போங்கய்யா.. ச்சொம்பாம்.. ச்சொம்பு.. இந்தாளோட வம்புலருந்து தப்பிச்சது போறாது..?

(அனைவரும்.. சிரிக்கின்றனர்)
******
















17 நவம்பர் 2006

ஒங்க செல்ஃபோன பாருங்க!

இது சமீபத்தில் மலேசியாவில் நடந்த உண்மைச் சம்பவம்!


என்னுடைய மூத்த மகள் குடியிருக்கும் குடியிருப்பில் வசிக்கும் ஒருவரின் (மலாய் பெண்) கைப்பையை ஷாப்பிங் மால் ஒன்றில் தவற விட்டுவிட்டிருக்கிறார். அதில் அவருடைய, ATM Debit Card, Credit Card மற்றும் கைத்தொலைப்பேசி ஆகியவை இருந்துள்ளன.

ஷாப்பிங் முடித்துவிட்டு வெளியே வரும் நேரத்தில்தான் அதைக் கவனித்திருக்கிறார். உடனே தன்னுடைய கணவரை அழைத்து விவரத்தைக் கூறி 'காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்' என்றாராம்.

அதற்கு அவருடைய கணவர் ‘நீ சற்று முன்னர்தானே நம்முடைய வங்கி PIN எண்ணை SMS மூலம் கேட்டாய். நானும் உடனே SMS வழியாக அதை அனுப்பினேனே.’ என்றாராம்.

‘ஐய்யோ நா அனுப்பலீங்க.’ என்று மனைவி பதற கணவரும் மனைவியும் தங்களுடைய வங்கிக்கு விரைந்திருக்கின்றனர்.

அந்த பெண்மனியுடைய கைப்பையை எடுத்தவன் அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்த அனைத்தையும் எடுத்திருக்கிறான்.

எப்படி?

அம்மணியின் கைத்தொலைப்பேசியில் கணவருடைய கைத்தொலைப்பேசியின் எண் ‘கணவர்’ என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்ததால் கள்வனால் எளிதாக அவருக்கு SMS செய்து PIN எண்ணைக் கேட்டறிய முடிந்திருக்கிறது.

படிப்பினை:

நம்முடைய உறவினர்களுடைய செல்ஃபோன் எண்ணை கணவர், மனைவி, மகன், மகள் என்ற உறவு முறையில் கைத்தொலைப்பேசியில் சேமிக்கலாகாது!

நானும் என்னுடைய மகளிடமிருந்து கிடைத்த இந்த மயிலைப் படித்தவுடனே செய்த முதல் காரியம் என்னுடைய செல்ஃபோனில் சேமித்திருந்த எண்களுடைய உறவுமுறையை மாற்றியதுதான். அவரவர் பெயரிலேயே எண்களை சேமித்துவைப்பது உத்தமம்.

ஒங்க செல்ஃபோன்ல எப்படிங்க.. பாருங்க!!

***