12 ஆகஸ்ட் 2006

கோவா பயணம் நிறைவு பதிவு

நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது பழைய கோவா.

அங்குதான் சுமார் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் தூய சவேரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப் பிரசித்தமான தேவாலயங்களில் ஒன்றான பாம் ஜீசஸ் தேவாலயம் இருந்தது.

அத்தேவாலயத்திற்கு ஏற்கனவே ஒரு முறை, அதாவது நான் மும்பையில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் (1995ம் ஆண்டு) சென்றிருக்கிறேன்.

அத்தேவாலயத்தில் வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் உடல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். அது 1995ல் நடந்தபோது நான் அலுவல் விஷயமாக கோவா செல்ல வேண்டியிருந்தது.

அடுத்த பத்தாண்டின் இறுதியில், அதாவது 2005ம் ஆண்டு அங்கு செல்ல விரும்பியும் முடியாமற் போகவே இம்முறை கோவா செல்ல வாய்ப்பு கிடைத்ததும் நிச்சயம் அத்தேவாலயத்திற்கு சென்று வருவதென தீர்மானித்தேன்.

பகல் சுமார் இரண்டரை மணிக்கு புறப்பட்ட நாங்கள் அடை மழை காரணமாக மோசமாக பழுதடைந்திருந்த சாலையில் வேகமாக செல்ல முடியாமல் நாற்பத்தைந்து நிமிடத்தில் முடிய வேண்டிய பயணம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்தது.

பிற்பகல் நேரமானதாலும் மழை பெய்துக்கொண்டே இருந்ததாலும் தேவாலய வளாகம் காலியாக இருந்தது.

சுற்றுலா தளமான பழைய கோவாவில் பிரசித்தமான சுற்றுலா தளமான இத்தேவாலயத்திற்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் என்றார் எங்களுடன் துணைக்கு வந்த மேலாளர்.

தேவாலய வளாகத்தின் முன்பு அமைந்திருந்த புகைப்பட ஸ்டுடியோக்களும், பல்பொருள் அங்காடியும், புனிதரின் புகைப்படங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கையில் மெழுகு திரிகள், மாலைகளை வைத்துக்கொண்டு எங்களை சூழ்ந்துக்கொண்ட கோவன், மலையாளி மற்றும் தமிழ் பேசும் பெண்களையும் பார்த்தபோது என்னுடைய நண்பர் கூறியது உண்மைதான் என்பது எங்களுக்கு விளங்கியது.

மழை சற்றே ஓய்ந்திருக்க என்னுடைய டிஜிட்டல் கேமராவிற்கு தேவையான பாட்டரிகளையும் சில மெழுகு திரிகளையும் வாங்கிக் கொண்டு ஆலயத்தை நோக்கி நடந்தோம்.




சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு புனிதப்படுத்தப்பட்ட கருங்கற்களாலான தேவாலயம் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காட்சியளித்தது. 1946ம் ண்டு இந்தியாவின் முதல் மைனர் பசிலிக்காவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேவாலயம் அது என்பதை எங்கோ படித்த ஞாபகம்.

ஆலயத்தின் வாயிலில் நின்று உள்ளே பிரதான பலிபீடத்தைப் பார்த்தபோது அதனுடைய பிரம்மாண்டம் தெரிந்தது. சுமார் இருநூறடி நீளமும் அறுபதடி அகலமும் அறுபதடி உயரமும் கொண்ட தூண்களில்லாத பிரதான ஹால் பிரமிக்க வைத்தது.

என்னுடைய கேமராவை எடுத்து வாயிலிலிருந்து பிரதான பீடம் வரை மெதுவாக நடந்து அந்த பிரம்மாண்டத்தை முடிந்த அளவு பிடித்துக்கொண்டேன்.

நடுபீடத்திற்கு வலப்புறத்தில் இருந்த பிரம்மாண்ட பீடத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கோவாவின் கொல்லர்களால் செய்யப்பட்ட வெள்ளி பேழையில் தூய சவேரியின் அழியா உடல் வைக்கப்பட்டிருந்தது.




நடு பீடத்திற்கு வலப்புறத்தில் காவல் தூதரின் பீடமும் ஆலயத்தின் இடப்புறத்தில் தூய மரியாளின் பீடம் தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

ஆலயம் முழுவதும் பழைய பொலிவு அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டு வந்திருப்பது நன்கு தெரிந்தது. அமைதியான அச்சூழலில் மெய்மறந்து மவுனமாய் அமர்ந்திருந்தேன். மனதில் இனம் புரியாத அமைதி, மகிழ்ச்சி. என் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோருக்காகவும் ஒரு நிமிடம் கண் மூடி இறைவனைப் பிரார்த்தித்தேன்.



சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தபின் மீண்டும் விடுதி நோக்கி புறப்பட்டோம். கோவாவில் பிரசித்தமான முந்திரி பருப்பு, பிபின்கா அல்வா (உண்மையிலேயே சூப்பராக இருந்தது) ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விடுதிக்கு திரும்பினேன்.

தேவாலய வளாகத்தில் இறங்கியதும் அதிசயமாக நின்றிருந்த மழை வாகனத்தில் ஏறியதும் மீண்டும் துவங்கி விடுதி வந்து சேரவும் நின்று போனது!

போக வர சுமார் நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தூரம் ஆளை விழுங்கும் குழிகளில் விழாமல் பயணம் செய்த களைப்பில் நானும் என் நண்பரும் அவரவர் அறைக்கு திரும்பி குளித்து முடித்து ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்.

அன்று இரவு மீண்டும் கலகலப்பான கலை நிகழ்ச்சி இரவு ஒன்பது மணிக்கு..

முந்தைய நாள் கஜல் இசை என்றால் அன்று இந்தி சினிமா பாடல்கள் கச்சேரி.

மும்பையில் தற்போது மிகவும் பிரபலமான கே.கே என்ற இளைஞர் தலைமையில் நான்கு இளைஞர்களைக் கொண்ட குழு சுமார் மூன்று மணி நேரம் கலக்கியது.

முந்தைய நாள் இரவு சீனியர் கஜல் பாடகருக்கு மதிப்பு கொடுத்து அரங்கத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மதுபான பார் இன்று அரங்கத்திற்குள்ளேயே!

முந்தைய நாள் அரங்கத்தின் முற்பகுதியில் விரிக்கப்பட்டிருந்த மெத்தை இருந்த இடத்தில் இன்று தரையிலிருந்து அரையடி உயரத்திற்கு சுமார் இருபது பேர் ஆடுவதற்க வசதியாக ஒரு குட்டி மேடை..

அதை சுற்றிலும் ஜோடி, ஜோடியாக அமர்ந்து ரசிப்பதற்கு இருக்கைகள்..

மேடையில் ஏறுவதற்கு அமைக்கப் பட்டிருந்த மூன்று படிகளும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு கலர் கலராய் கண்ணடிக்க மேடையில் அமர்ந்திருந்த ஐந்து இசைக் கலைஞர்களைச் சுற்றியும் இடைவிடாமல் மின்னிக்கொண்டிருந்தன வண்ண, வண்ண விளக்குகள்..

ஒரு திரைப்பட செட்டிங்கைப் போலிருந்த மேடையைப் பார்த்ததுமே சிஸ்கோ மற்றும் வங்கிகளைச் சார்ந்த இளம் அதிகாரிகள் படு உற்சாகமடைந்தனர்.

கச்சேரி துவங்குவதற்கு முன்பே இரண்டு, மூன்று சுற்றுகளை முடித்துவிட்டிருந்த இளைஞர்களும், இளைஞிகளும் (இவர்களில் பலரை முதல் முதலாக பார்க்கிறேன். விடுதியில் தங்கியிருந்த மேல் மட்டத்தை சேர்ந்தவர்கள்!) அளித்த உற்சாக வரவேற்புடன் மேடையில் தோன்றினார் ஒரு எலும்புக் குச்சி மனிதர்..

ஜோக் அடிப்பவராம்!

சரசரவென்று மூச்சு விடாமல் ஹிந்தியில் அவர் அடித்த பல ஜோக்குகளும் சென்சார் செய்யப்பட வேண்டியவை. ஆனாலும் போதையில் இருந்த குடி மகன், மகள்களுக்கு மத்தியில் அவை மிகவும் வரவேற்பை பெற்றன.

மட்ட ரகமான சிரிப்பு வெடிகளை ரசித்து கரவொலி எழுப்பிய அரங்கத்திலிருந்த இளைஞர்/இளைஞி கும்பலைப் பார்த்தபோது நாம் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறோம் என்று கேட்க தோன்றியது.

எனக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்த இரு நடுத்தர மேல்மட்ட பெண்கள் சிரித்த சிரிப்பில் இருக்கையிலிருந்தே விழுந்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர்கள் தன்னை மறந்து ஜோக் அடித்துக்கொண்டிருந்த இளைஞனையே பார்த்துக்கொண்டிருந்தனர். என்ன ரசனையோ என்று நினைத்தேன்.

இருப்பினும் அடுத்த ஒரு மணி நேரம் அவருடைய சர வெடிகள் அரங்கமெங்கும் சிரிப்பு வெடிகளாக எதிரொலிக்க ஹாலின் கோடியிலிருந்த 'பார்' பரபரப்பாக இருந்தது.

மணி பத்து!

பசி வயித்தைக் கிள்ள எழுந்து அரங்கத்தை அடுத்திருந்த வராந்தாவிற்குள் நுழைந்தோம் நானும் என் நண்பரும்.

வகை, வகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவை சீந்த ஆள் இல்லை. எல்லோரும் ‘குடிப்பதிலேயே’ குறியாயிருந்தனர் போலும்.

சற்று முன் வரை வயிற்றைக் குடைந்தெடுத்த பசி பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைக் கண்டதும் போன இடமே தெரியவில்லை. பேருக்கு எப்போதும் சாப்பிடும் நான், மீன் கறி ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு அரங்கத்திற்குள் நுழைந்தோம்.

மைக் டெஸ்டிங்.. செக் ஒன் டூ த்ரீ நடந்துக்கொண்டிருந்தது..

அடுத்த சில நொடிகளில் ஆடம்பரமில்லாத் ஜீன்ஸ், டீஷர்ட் உடையில் கையில் மைக்குடன் அட்டகாசமான டான்ஸ் மூவ்மெண்டுடன் மேடையில் நுழைந்த கே.கே என்ற அந்த இளைஞர் நள்ளிரவு கடந்தும் யாரும் கலைந்து செல்லா வண்ணம் தன்னுடைய திறமையில் கட்டிப் போட்டுவிட்டார் என்றால் மிகையாகாது.

அவர் அன்றைய நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்திருந்த பாடல்கள் அனைத்துமே ஆடாதவரையும் ஆடவைத்துவிடும் பாடல்களாக இருந்தன.

ஓரிரு பாடல்கள்வரை அரங்கம் அமைதியாய் கேட்டுக் கொண்டிருக்க வெறுத்துப் போன கே.கே மேடையிலிருந்து இறங்கி தரையில் அமைக்கப்பட்டிருந்த நடன மேடையில் வந்து பாடிக்கொண்டே முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞ்களைப் பார்த்தவாறே ஆட அவர்களும் உற்சாகம் மற்றும் போதை தலைக்கேற எழுந்து அவருடன் சேர்ந்து ஆட.. அரங்கத்திலிருந்த அனைத்து இளைஞர், இளைஞிகளும் மேடையை நோக்கி படையெடுக்க.. பிறகென்ன..

செடேட் சென்னை வாழ்க்கையைப் பார்த்து பழகிப்போன என்னைப் போன்றவர்களுக்கு அது ஒரு தனி உலகமாகத்தான் தெரிந்தது..

என்னருகில் அமர்ந்திருந்த அவ்விரு நடுத்தர இளைஞிகளுக்கும் ஆடுவதற்கு ஆசைதான்.. ஆனால் உடல் ஒத்துழைக்க வேண்டுமே.. சேர்த்து வைத்திருக்கும் சொத்து முழுவதுமே இடுப்பிலும் அதற்குக் கீழும் அல்லவா இருந்தது! இருக்கையிலிருந்தவாறே இடுப்பை வளைத்தும் கால்களை உதைத்தும் அவர்கள் பட்ட பாட்டை பார்த்து சிரிப்பதா அழுவதாவென தெரியாமல்..

நேரம் போனதே தெரியாமல் நள்ளிரவைக் கடந்து சுமார் இரண்டு மணி வரை நானும் அமர்ந்திருந்தேன்!

அடுத்த நாள் காலையிலேயே கிளம்பிச் செல்ல வேண்டியிருந்தவர்கள் காலை உணவுடன் விடைபெற்று செல்ல மழை சற்றே நின்றிருந்ததால் நானும் என்னுடைய நண்பரும் விடுதியையொட்டியிருந்த கடற்கரையை நோக்கி நடந்தோம்.

எங்களுடைய அறையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பச்சைப் பசேலென காட்சியளித்த புல் தரை, ஆங்காங்கே அம¨க்கப்பட்டிருந்த புதர்கள், மரத்தாலான டிசைனர் பாலங்கள், நீருற்றுகள் என அந்த சூழலே பார்க்க ரம்மியமாக இருந்தது.

வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் கடலும் ஆக்ரோஷமாக காட்சியளித்தது. சாதாரண உயரத்திற்கும் சற்று கூடிய உயரத்தில் அலைகள் கோபத்துடன் கரையை அறைந்துக் கொண்டிருக்கவே கடற்கரையில் விடுதியின் காவலர்கள் ஆங்காங்கே குளிக்க வருபவர்களைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர்.


சற்று நேரம் நின்றிருந்து மாசில்லாத காற்றை நெஞ்சு முழுக்க இழுத்து நிரப்பிக்கொண்டு பை, பை சொல்லிவிட்டு அறைக்கு திரும்பினோம்.

நன்பகல் விமானத்தைப் பிடித்து மும்பை வந்து சேர்ந்தபோது நல்ல மழை. நாங்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய விமானம் புறப்பட இன்னும் அரை மணியே இருந்த நிலையில் ஜெட் நிறுவனத்தின் மேலதிகாரி ஒருவர் எங்களுடைய விமானத்திற்கே வந்திருந்து போர்டிங் பாஸ்சில் கையொப்பமிட்டு கோவா விமானத்திலிருந்து சென்னை விமானத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றார்.

சென்னை வந்து சேர்ந்தபோது மாலை ஐந்து மணி..

இரண்டு இரவு மூன்று பகல்..

மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது கோவா பயணம்!

இத்துடன் Desk Top ல் சேமித்துக்கொள்ளும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் சேமித்துக்கொள்ளுங்கள்..

இப்போதெல்லாம் இந்த மலர்கள்தான் என்னுடைய மடிக் கணினியில் ஜொலிக்கின்றன.. அங்கிருந்து என்னுடைய செல் ஃபோனுக்கும் மாற்றி அங்கும் இவைதான் Desk Top Screens!

சார்.. போறும் சார்.. நாங்க ஒலகமெல்லாம் சுத்தி வந்துக்கிட்டிருக்கோம்.. நீங்க என்னவோ இங்கருக்கற கோவா போய் வந்துட்டு...

நிறுத்திட்டேன்:)













Image and video hosting by TinyPic

11 ஆகஸ்ட் 2006

கோவா பயணம் 2

ஆஹா.. போதையில் விழுந்தாலும் யாருக்கு தெரியப் போகிறதென்ற திருப்தியில் குடிமகன்கள் அனைவரும் கூடத்தின் பின் பகுதியிலிருந்த இருக்கைகளை தவிர்த்து கையிலிருந்த கோப்பைகளுடன் மெத்தைகளில் அமர இன்னிசை உதாஸ் சாப்பின் தங்கக் குரலுடன் துவங்கியது..


Photobucket - Video and Image Hosting




பங்கஜ் உதாஸ்சைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நான் பலமுறை அவருடைய பாடல்களை கேட்டிருந்தாலும், தொலைக் காட்சியில் பார்த்திருந்தாலும் அன்றுதான் அவரை மிக அருகில் இருந்து பார்க்கவும் அவருடைய இன்னிசையை கேட்கவும் முடிந்தது.

மாலை துவக்க விழாவில் அரங்கம் நிறைந்திருந்தாலும் அன்று இரவு இசை நிகழ்ச்சி குறிப்பிட்ட விருந்தினர்களுக்கென மட்டுமே நடந்ததால் அவ்வளவாக கூட்டம் இருக்கவில்லை.

அரங்கத்தின் முன் பாதியில் தரையில் மெத்தைகளும் திண்டுகளும் பிற்பாதியில் சுமார் ஐம்பது இருக்கைகளும் என ஏற்பாடு சிறப்பாக இருந்தது.

காலையில் மிகவும் ஃபார்மலாக உடையணிந்து வந்திருந்த எல்.ஐ.சியின் முன்னாள் தலைவர், IIT Powai பேராசிரியர் உள்பட்ட அனைத்து முக்கிய விருந்தினரும் அவரவர் எத்னிக் உடைகளில் வந்திருந்தனர்.

என்னைப் போன்ற சிலர் டீஷர்ட், ஜிப்பா குர்த்தா உடையில். எல்லோருக்கும் கலர், கலரான துப்பட்டாக்களை இலவசமாகவே வழங்கினர்.

அரங்கம் மங்கலான விளக்கொளியில் மறைந்திருக்க பளிச்சென்ற விளக்கொளியில் மேடை பங்கஜ் உதாஸ் சாப் குழுவினர் காட்சியளித்தனர்.

சற்று முன் அரங்கத்திற்கு வெளியே கோப்பை கோப்பையாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தவர்கள்தான் - அந்த ஹீரோ உட்பட. அவரும் இசைக்கலைஞர்தான்- மேடையில் பங்கஜ் உதாஸ்சுடன் கலைஞர்களாக அமர்ந்திருந்தனர்!

அரங்கத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களுடைய கைகளில் இருந்த பாதி கோப்பைகளைப் பார்த்ததும் பங்கஜின் உதடுகளில் ஒருவித கேலிப் புன்னகை மலர 'தோடி, தோடி பியா கரோ' என்று துவங்க அரங்கமே வாஹ், வாஹ் என்று விகசித்தது.

அதனையடுத்து 'சாந்தி ஜைசா ரங் ஹை தேரா சோனே ஜைசா பால்,' பிறகு 'பியார் கரானே வாலே, ப்யார் காராத்தே ஹை ஷான் சே' என தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரம் உருது மற்றும் தூய ஹிந்தி பாடல்களை தனக்கே உரிய பாணியில் பாடிய போது என்னை போன்றவர்களுக்கு வார்த்தைகள முழுவதுமாக விளங்காவிட்டாலும் அவருடைய குரலிலும் உடனிருந்த இசைக் கலைஞர்களின் திறமையிலும் அமிழ்ந்துப் போய் நேரம் போனதே தெரியவில்லை.

கச்சேரி நடந்துக் கொண்டிருக்கையிலேயே அரங்கத்திலிருந்தவர்கள் அவ்வப்போது எழுந்து சென்று காலியாகிப்போன மது கோப்பைகளை நிரப்பிக் கொண்டு வருவதிலும் அவருக்கு எந்தவித இடைஞ்சலும் இருந்ததாக தெரியவில்லை.

உமர் கயாம் ஒரு நேரம் மசூதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தாராம். அப்போது ஒருவர், ‘இப்படி இறைவனின் சன்னிதானத்தில் மது அருந்தி புனிதத்தைக் கெடுக்கிறீர்களே’ என்று வருத்தப்பட்டாராம். அதற்கு உமர் ‘இறைவன் இல்லாத இடத்தை எனக்கு காட்டுங்கள் அங்கு மது அருந்தாமல் இருக்கிறேன்’ என்றாராம்.

ஆம்.. இறைவன் எங்குதான் இல்லை அங்கு மது அருந்தாமல் இருப்பதற்கு.

ஆனால் போதை தரும் மதுவும் பங்கஜ் அவர்களின் மனதை மயக்கும் இசையில் தோற்றுத்தான் போனது.

தொடர்ந்து எழுந்து சென்று மது கோப்பைகளை நிரப்புவதில் குறியாயிருந்த வெகு சிலரும் கச்சேரி சூடுபிடிக்க அதை மறந்தே போய் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அவ்வப்போது அரங்கத்தில் எழுந்த வாஹ், வாஹ் ஒலி இந்தியனாய் இருந்தும் மொழியில் அன்னியனாகிப் போனேனே என்று நொந்துப் போனேன்.

நள்ளிரவைக் கடந்து சென்ற அன்றைய இசையில் முழுமையாக மூழ்கிப்போன அனைவருமே அடுத்த நாள் காலையில் விழித்தெழ மிகவும் சிரமப்பட்டனர் என்பது அவர்களுடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

நானும் கண் விழித்தபோது மணி எட்டைக் கடந்திருந்தது. ஒன்பது மணி வரை காலை உணவு என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்ததால் குளித்து முடித்து காஷ¤வல் உடையில் முந்தைய நாள் இரவு உணவு பரிமாறப்பட்ட இடத்திலேயே அமைக்கப்பட்டிருந்த பஃபே வகை உணவை ஒரு கை பார்த்தேன்(!).

அடடடடா.. எத்தனை வகை உணவு.. இந்தியன் ரொட்டி எனப்படும் நான், பரோட்டாவிலிருந்து மேற்கத்திய வகை பேக்கன் வரை இருந்தும் நம் பக்கத்து இட்லி, கல் தோசை, உப்புமா சட்னி, சாம்பார் ருசியே தனிதானே..

புறப்படும்போதே என்னுடைய மனைவி இட்ட வேண்டுகோள் (உத்தரவு என்பதே சரி) காதில் ஒலிக்க நல்ல பிள்ளையாய் நம் பக்கத்து உணவு வகைகளோடு பசியை ஆற்றிக்கொண்டு.. முட்டை ஸ்க்ராம்பிள், முட்டை ம்லெட், பீஃப் சாண்ட்விச், என வகை வகையாய் அறுபது எழுபது வயதைக் கடந்த பெரியவர்கள் உள்ளே தள்ளுவதைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ‘பினா ஷக்கார் காஃபி தேனா’ என்று ஆர்டர் செய்வதை விட எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஹ¥ம்..

அன்றைய காலை நிகழ்ச்சிகள் சரியாக பத்து மணிக்கு துவங்கின. நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்டிருந்த பேச்சாளர்கள் அனைவருமே இந்தியா பொருளாதார மற்றும் வங்கி உலகில் பிரபலமானவர்கள்.

அவர்களுள் ஐ.ஐ.டி பொவாய், மும்பை பேராசிரியர் டாக்டர் திபக் பத்தக் அவர்களின் நகைச்சுவைக் கலந்த பேச்சு மிகவும் பிடித்திருந்தது.

அவருடைய உரையின் இறுதியில் வேடிக்கையான கற்பனை நிகழ்ச்சி ஒன்றை விவரித்ததைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

இந்திய வங்கி உலகில் மேலதிகாரிகள் முக்கியமாக அரசு வங்கிகளில் கணினி மற்றும் தகவல் இலாக்காவில் தொழில்நுட்ப மாற்றங்களை வரவேற்க எவ்வளவு தயக்கம் காட்டுகின்றனர் என்பதை சுவைபட எடுத்துரைத்தார்.

பொதுவாகவே அரசு அதிகாரிகள், இதில் வங்கித்துறை மட்டும் விதிவிலக்காகுமா என்ன?, எந்த ஒரு முடிவு எடுக்கவும் தயங்குவார்கள். Pass the Buck Attitude தான் அதிகம் காணப்படும்.

வங்கித் துறையில் முக்கியமாக கணினி மற்றும் தகவல் துறை இலாக்காக்களில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. காலதியாகிப் போன வன்பொருட்களை (Hardware) மாற்றி நடைமுறை சந்தையில் உள்ளவற்றை வாங்க அவர்களை மசிய வைப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதுவும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனர் (CVC) என்ற அமைப்பு அமைக்கப்பட்டப் பிறகு தங்களுடைய எந்த ஒரு முடிவும் அவர்களால் பரிசீலிக்கப்படும் என்பதை காரணம் காட்டியே தங்களுடைய முடிவுகளைத் தள்ளிப்போடுவது வழக்கமாகிப்போனது.

கணினி இலாக்காவை சரிவர நடத்திச் செல்ல தகுதியான ஆட்களை பணிக்கு அமர்த்துவதும் அவ்வளவு எளிதானக் காரியமல்ல. இன்று வங்கித் துறையில் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கும் எவருமே கணினி துறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல. இருக்கவும் முடியாது. ஏனெனில் வங்கித்துறையில் இன்று உயர் பதவியில் இருப்பவர் அனைவருமே ஐம்பது, ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள். அவர்கள் கல்லூரியில் படித்த நாட்களில் கணினித் துறை சம்பந்தப்பட்ட படிப்பு இல்லை.

இருப்பினும் தங்களுக்கு பரிச்சயமில்லாத கணினி துறையை நிர்வகிக்க இளம் அதிகாரிகள் நிச்சயம் தேவை என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.

வங்கித் துறையில் நடைபெறும் பணியமர்த்தும் நடைமுறை செயல்பாட்டை (Recruitment Process) கேலி செய்து பத்தக் அவர்கள் இக்கற்பனை நிகழ்ச்சியை கூறினார்.

ஒருமுறை ஒரு வங்கி அதிகாரி தன்னுடைய வங்கி தலைமை அலுவலக வளாகத்திலிருந்த தென்னை மரங்களில் இருந்து காய்களைப் பறிக்க ஆள் எடுக்க விரும்பினார்.

எங்கே CVC நியதிகளை மீறினால் பிரச்சினையாகி விடுமோ என்று பயந்து ஒரு பணியமர்த்தும் வேலையை ஒரு வெளி மனித வள மேம்பாடு நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

அவர்கள் அதிகாரியின் அறிவுரைப்படி பணியில் அமர்த்தப்படுபவர்களின் தகுதிகளை பட்டியலிட்டனர்.

பணியமர்த்தபடுபவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல் தகுதி.

அதனைக் கண்ட அதிகாரி பதறிப்போய் ‘No, no. If you say that they should be human beings it would be treated as a specific brand and might be objected by CVC.’ என்றாராம்.

சரியென்று வேறுவழியின்றி தகுதி பட்டியலை மாற்றி அமைக்க.. அது கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டது:

1. இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள் இருக்க வேண்டும். தகுதி மதிப் பெண்: 30
2. மரத்தில் வேகமாக ஏறி இறங்க தெரிந்திருக்க வேண்டும்: தகுதி மதிப்பெண்:60

மீதி பத்து மதிப்பெண்களுக்கு எந்த தகுதியை நிர்ணயிக்கலாம் என்று சிந்தித்த அதிகாரி இறுதியில் மூளையும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆக மூளைக்கு பத்து மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது.

தகுதிப் பட்டியல் வங்யின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதைக் கண்டு தங்களுக்கு எல்லா தகுதிகளும் உண்டு என்று நினைத்த பலரும் விண்ணப்பித்தனர்.

இதை காட்டில் வசித்த ஒரு குரங்கு பட்டாளமும் காண நேர அட! நமக்கேற்ற வேலை போலிருக்கிறதே என்று கருதி முழுப் பட்டாளமும் விண்ணப்பித்ததாம்.

மரம் ஏறுவதில் முழு மதிப்பெண்களையும் பெற்ற குரங்குப் பட்டாளம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட வங்கி அதிகாரி பரிந்துரைத்த நிறுவனத்தை நொந்துக்கொண்டாராம்..

இதை படிக்கிறபோது உங்களுக்கு சிரிப்பு வருகிறதோ இல்லையோ அவர் அன்று மேடையில் உடலசைவுகளுடன் எடுத்துரைத்தபோது அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

சிரிப்பொலி முழுவதுமாய் அடங்குவதற்குள் இந்திய செய்தி மற்றும் அரசியல் உலகில் புகழ் பெற்ற பத்திரிகையாளர் அருண் ஷோரியின் படு சீரியசான பேச்சு துவங்கியது.

அவர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வாஜ்பேயி தலைமையிலான தன்னுடைய அரசு என்னவெல்லாம் செய்தது என்று எடுத்துரைத்ததுடன் நில்லாமல் இப்போதைய மன்மோகன்சிங் அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற தோரணையில் பேச அரங்கத்திலிருந்த பலரும் முகம் சுளித்தனர்.

சாதாரணமாக பத்திரிகைகளில் காரசாரமாக எழுதும் அருண் ஷோரி அன்று அவ்வளவாக பிரகாசிக்கவில்லையென்றுதான் கூறவேண்டும். சில கட்டங்களில் தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் திணறி நின்றதும் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.

அரங்கத்தில் குழுமியிருந்த வங்கித்துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆற்ற வேண்டிய உரையின் தரம் அவருடைய அன்றைய பேச்சில் இல்லை என்றுதான் கூறவேண்டும்..

எப்போதடா முடியும் என்று காத்திருந்தவர்கள் அவருடைய உரையின் முடிவில் பேருக்கு கரவொலி எழுப்பிவிட்டு உணவு இடைவேளைக்கு விரைந்தனர்.

வெளியே அடை மழை!

நானும் என் நண்பரும் காலையிலேயே எங்களுடைய கோவா கிளை மேலாளரிடம் பழைய கோவாவில் அமைந்திருந்த தூய சவேரியார் தேவாலயத்துக்கு செல்ல ஒரு வாகனத்தை ஹோட்டலுக்கு அனுப்புங்கள் என்று கூறியிருந்தோம்.

அவரும் சரியாக இரண்டு மணிக்கு வாகனத்துடன் வந்து சேர பகலுணவை முடித்த கையோடு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நானும் என் நண்பரும் செமினாருக்கு மட்டம் போட்டுவிட்டு கிளம்பினோம்..


Photobucket - Video and Image Hosting




படங்களுடன் அடுத்த இறுதிப் பதிவில்..

10 ஆகஸ்ட் 2006

கோவா பயணம் 1

என்னுடைய வீடு கட்டுமான பணியில் நான் சந்தித்த பிரச்சினைகள் முடிந்து மீதமுள்ள கட்டுமான பணிகள் நடந்துக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் நான் சமீபத்தில் 'விடுமுறையில்' கோவா சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு..




நான் ஐந்து நாட்களுக்கு விடுப்பு என்று அறிவித்ததுமே ‘விடுமுறைய ஜாலியா குடும்பத்தோட போய்ட்டு வாங்க சார்’ என்று வாழ்த்து தெரிவித்த நம் தமிழ் மண நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ஆனால் அது உண்மையில் விடுமுறையல்ல. அலுவலக வேலையாகத்தான் கோவா செல்ல வேண்டியிருந்தாலும் அதுவும் ஒருவகை விடுமுறைபோல்தான் இருந்தது.

உலகின் மிகப் பெரிய வலை இணைப்பு நிறுவனமான (Networking Company) சிஸ்கோ வங்கி, காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கருத்தரங்கை (Seminar) கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த கருத்தரங்கிற்கு அழைப்பு வந்திருந்தபோதும் சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக எங்களுடைய வங்கியிலிருந்து யாரும் கலந்துக்கொள்ள இயலவில்லை.

ஆகவே இம்முறை நிச்சயம் வரவேண்டும் என்று எனக்கு மிகவும் நன்கு பரிச்சயமாயிருந்த நண்பர் ஒருவர் வற்புறுத்தியதால் என்னுடைய வங்கியிலிருந்து நானும் என்னுடைய இலாக்காவின் உதவி தலைவரான ஒரு துணைப் பொது மேலாளரும் கலந்துக்கொள்வதென தீர்மானித்தோம்.

இவ்வாண்டின் கருத்தரங்கு கோவாவின் பிரபல ஐந்து நட்சத்திர அந்தஸ்த்துடைய விடுமுறை வாசஸ்தலமான (Holiday Resort) பார்க் ஹையாட் (Park Hyatt Goa Resort and Spa)ல் இம்மாதம் மூன்றாம் தேதி மாலையில் துவங்கி ஐந்தாம் தேதி முடிவடைந்தது.

அதற்காக மூன்றாம் தியதி காலையில் சென்னையிலிருந்து மும்பைக்கு பறந்து அங்கிருந்து நன்பகல் கோவாவிற்கு பறந்தோம். சரியாக பகலுணவிற்கு அங்கு சென்றடைந்தோம். விமானத்தில் பகலுணவு என்ற பெயரில் வாய்க்கும் வயிற்றுக்கும் ஒட்டாத அளவு உணவு கிடைத்தும் கோவா சென்றடைந்தபோது பசி வயித்தைக் கிள்ளியது.

நிர்வாகத்திற்கு பெயர்பெற்ற இரு நிறுவனங்கள் சேர்ந்து (Cisco and Park Hyatt) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு என்றாலும் அங்கு சென்ற சேர்ந்த நேரத்தில் எங்களில் மிகச் சிலருக்கே அறைகள் தயாராக இருந்தன.



இரண்டு நிறுவனங்களையும் சார்ந்த பல கடை, இடை, மேல் நிலை அதிகாரிகள் கைகளைப் பிசைந்துக்கொண்டு நின்ற காட்சியைக் கண்டதும் இதற்கு எங்கள் வங்கியே மேல் என்று தோன்றியது எனக்கும் என் நண்பருக்கும்.

ஒரு கேலிப் புன்னகையுடன் அவர்களுடைய தர்மசங்கட நிலையை ரசித்துக்கொண்டு நின்றோம். நாங்கள் இருவரும் மலையாளத்தில் உரையாடிக்கொண்டிருந்ததை செவியுற்ற ஒரு கோட் சூட்டிலிருந்த சிஸ்கோ நிறுவனத்தின் ஒரு மேல் நிலை அதிகாரி எங்களை நெருங்கி ‘ஞானும் மலையாளியானெ..’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் வாயை மூடிக்கொண்டு சும்மா இராமல், ‘அதான எங்கடா காணமேன்னு பார்த்தேன்.’ என்றேன் நக்கலாக.

அவர் அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் வாய் விட்டு சிரித்தார். ‘You are absolutely right sir. There is no place in this world where you can’t find a Malayalee.’ என்று அவர் தங்களுடைய மாநில மக்களின் அருமை பெருமைகளை பேச ஆரம்பிக்க அதே மாநிலத்தைச் சார்ந்த என்னுடைய நண்பரும் அவருடன் சேர்ந்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் அறை ஒதுக்கப்பட அரை மணி நேரத்துக்கும் மேலாகியும் நேரம் போனதே தெரியாமல் என்னுடைய நண்பரும் அவரும் சேர்ந்து ‘அறுத்து’ தள்ளிவிட்டனர்.

எங்களுடைய அறைகளின் அனுமதி அட்டை (Door Card) கிடைத்ததும் பெட்டியை சிஸ்கோ நிறுவனத்தின் கடைநிலை அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு அருகிலிருந்த அறையில் தயாராயிருந்த பகலுணவை முடித்துக்கொண்டு அவரவர் அறைக்கு சென்றோம். ஐந்து நட்சத்திர விடுதிகளில் கிடைக்கூடிய தரத்துடன் இருந்த buffet lunch உண்மையிலேயே நன்றாக இருந்தது.

வரவேற்பறையிலிருந்தபோது தெரியாத பிரம்மாண்டம் எங்களுடைய அறைக்கு செல்ல புறப்பட்டபோதுதான் தெரிந்தது. சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அந்த விடுமுறை மற்றும் கேளிக்கை விடுதி பார்க்கும் இடமெல்லாம் டிசைனர் லேண்ட்ஸ்கேப் அமைப்புடன் பச்சை பசேலென இருக்க உடனே கையோடு கொண்டு வந்திருந்த டிஜிட்டல் (Cannon A342) காமராவை எடுத்து முடிந்த அளவு வீடியோவாகவும் ஸ்டில்களாகவும் பிடித்துக்கொண்டேன். மழை துளிகள் பூவென காற்றுடன் சேர்ந்து முகத்தை ஊசியாய் குத்த மீதமுள்ள இடங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அறைக்கு சென்றேன். இதற்கெனவே ஏறக்குறைய எல்லா அறை வாசலிலும் பிக்னிக் குடைகளை வைத்திருந்தனர்.



நாளொன்றுக்கு ரூ.4000 முதல் 12000/- வரை வாடகை என்ற பலதரப்பட்ட அறைகளை மூன்று நாட்கள் இரண்டு இரவுகள் என்ற பாக்கேஜில் ரூ.3,000/- முதல் 9000/-வரை என்று ஏற்பாடு செய்தோம் என்று சிஸ்கோ அதிகாரி ஒருவர் கூறியபோது ‘ரீல் விடாதிங்க சார்’ என்று நினைத்த நான் என்னுடைய அறையைக் கண்டதும் உண்மைதான் போல என்று நினைத்தேன். அழைக்கப்பட்டிருந்த விருந்தினரின் பதவியைப் பொருத்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பதை என்னுடைய நண்பரின் அறையைப் பார்த்ததும் உணர்ந்தேன்.





சென்னையிலும் மும்பையிலும் பல ஐந்து நட்சத்திர விடுதிகளில் அலுவலின் நிமித்தம் பலமுறை தங்கியிருந்தாலும் கோவா விடுதியின் அறையின் அலங்காரமும் வசதிகளும் உண்மையிலேயே என்னை அசர வைத்தன. அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தது. என்னுடைய மனைவிக்காகவே அறை முழுவதும் நடந்து வீடியோவில் பதிந்துக்கொண்டேன்.

அன்று மாலை நடக்கவிருந்த துவக்க விழாவுக்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்ததால் கையோடு கொண்டு வந்திருந்த மடிக் கணினியை எடுத்து நம் வலைப்பூவைப் பார்த்தாலென்ன என்று தோன்றியது.

அறையில் அதற்கெனவே ஒரு இணைப்பும் இருந்தது. அதை என்னுடைய கணினியில் இணைத்து முடித்ததுமே ஒரு பாப் அப் ஸ்க்ரீன் வந்து பயமுறுத்தியது. இணைய வசதிக்கு நாளொன்றுக்கு ரூ.800!

இது தேவையா என்று என்னை நானே கடிந்துக்கொண்டு இணைப்பை துண்டித்துவிட்டு மொபைலில் நாலரை மணிக்கு அலாரம் வைத்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருந்ததால் மொபைலின் மெல்லிய அலார ஒலி என்னை எழுப்ப முடியாமல் போக என்னுடைய அறையிலிருந்த இண்டர்காமின் ஓங்கார ஒலி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பியபோது மணி ஐந்தைக் கடந்திருந்தது!

‘எந்தா சாரே ஒறங்கியோ.. இவ்விட சாரெயொழிச்சி பாக்கி சகலரும் வந்துண்டு கேட்டோ..’ என்ற என் நண்பருடைய ஒலி செவியில் விழ அடித்து பிடித்துக்கொண்டு எழுந்து பேருக்கு குளித்து முடித்து உடுத்திக்கொண்டு கிளம்பினேன்.

என் நண்பர் கூறியிருந்ததுபோல துவக்க விழா கூடம் முழுவதும் சுமார் நூறு பேர் குழுமியிருக்க மேடையில் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் அமர்ந்துக்கொண்டிருந்தனர்.

நான் வாசலில் நுழைந்ததுமே கூடத்தின் மத்தியில் அமர்ந்திருந்த என்னுடைய நண்பர் கையைசைத்து சிக்னல் செய்ய அரையிருட்டில் சில பல கால்களை மிதித்துக்கொண்டு என்னுடைய இருக்கையை சென்றடைந்தேன்.

விழாவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்த கோவா மாநிலத்தின் முதன்மை காரியதரிசி (Chief Secretary)யின் துவக்க உரையுடன் துவங்கிய விழா சரியாக இரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக முடிந்தது.

விழாவின் முடிவில் இரவு 8.45 மணிக்கு நடக்கவிருக்கும் ஹிந்தி கஜல் பாடகர் பங்கஜ் உஸ்தாதின் இசை விருந்தில் சந்திப்போம் என்ற அறிவுப்புடன் விடைபெற்று அவரவர் அறைக்கு திரும்பினோம்.

அன்று இரவு சரியாக எட்டு மணிக்கு துவக்க விழா நடந்த கூடத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த விசாலமான வராந்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாக சாந்தி துவங்கியது.
முன்னாள் காப்புறுதி கழகத் தலைவர், முன்னாள் மும்பை ஐஐடி பேராசிரியர் ஒருவர், மும்பை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் என்ற வி.வி.ஐ.பியிலிருந்து என்னைப் போன்ற வங்கி கணினி இலாக்கா தலைமையதிகாரிகள் மற்றும் இலாக்காவில் பணிபுரிந்த இள நிலை அதிகாரிகள் என சமுதாயத்தின் பல நிலைகளிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் வயது அந்தஸ்த்து வேறுபாடுகளை மறந்து ஒரே ‘குடிமகன்களாக’ குழுமியிருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

அதில் ஒரு மூலையில் குழுமியிருந்த கையளவு எண்ணிக்கையுள்ள அதிகாரிகள் குழுமத்தைப் பார்த்தேன். அருகில் சென்றபோதுதான் தெரிந்தது கையில் பழசாற்றுடன் நின்றிருந்த அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் என்று. அவர்கள் எல்லோரையுமே பல கூட்டங்களில் சந்தித்திருந்ததால், ‘என்ன சார் மறுபடியும் ஒன்னா கூடி இந்த சூழ்நிலையையே கெடுக்கிறீங்களே?’ என்றேன் வேடிக்கையாக.

என்னுடைய கையிலிருந்த மது பானத்தைப் பார்த்த அவர்கள், ‘ஒங்களுக்கென்ன சார்.. அதான் நீங்க அந்த மாநில ஆளாவே மாறிட்டீங்களே?’ என்று பதிலுக்கு கிண்டலடிக்க இரவு களைகட்டியது.

என்னுடைய நண்பர் எங்களை விட்டு விலகி அவருடைய ‘நாட்டுக்கார’ கும்பலுடன் சேர்ந்துக்கொள்வதைப் பார்த்தேன். சரி நமக்கு ஒரு கும்பல்னா அவருக்குன்னு ஒரு கும்பலும் வேண்டுமே என்று நினைத்து கண்களை வராந்தா முழுவதும் அலைய விட்டேன். அன்றைய இரவு எப்படியும் அடுத்த நாள் விடியற்காலையில்தான் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த பலரும் சாவகாசமாக ‘அதை’ பருகிக்கொண்டிருக்க மூலையில் நான்கு பேர் அடங்கிய ஒரு சிறு குழுமட்டும் கபக், கபக்கென 'அதை' கோப்பை கோப்பையாக விழுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அனைவருமே கலரிலும், பாவனையிலும் ஹிந்தி திரைப்பட நடிகர்கள் போல தெரிந்தனர். அதில் ஒருவர் மட்டும் தலை நிறைய கருகருவென்ற சுருட்டை முடியுடன் அசல் ஹீரோ போன்று இருந்தார். நான் அவர்களையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, ‘என்ன சார் அப்படி மெய் மறந்து பாக்கீங்க? அவங்க யாருன்னா? இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்து பாருங்க தெரியும்.’ என்று என் விலாவை இடித்தார் நண்பர் ஒருவர்.

இரண்டு பெக்குகள் உள்ளே தள்ளுவதற்கு முன்பே கூடத்திலிருந்து திறந்திருந்த கதவுகள் வழியாக வந்தது அழைப்பு, ‘Pankaj saab is ready to start the programme. Please come in.’ என்று. கையில் பழச்சாற்றுடன் நின்றிருந்த அனைவரும் கோப்பைகளுடன் உள்ளே நுழைய என்னைப் போன்றவர்கள் என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றோம். அடுத்த நொடியிலேயே எங்களுக்கும் அழைப்பு வந்தது, ‘Don’t worry about your glasses. Carry them in.’ என்று.

இது போதாதா என்ற நினைப்புடன் அனைவரும் உள்ளே நுழைய பாதி கூடத்திற்கு தரையில் மெத்தைகள் விரிக்கப்பட்டு சாய்ந்துக்கொள்ள உருட்டை தலையணைகளும் இருந்தன..

ஆஹா.. போதையில் விழுந்தாலும் யாருக்கு தெரியப் போகிறதென்ற திருப்தியில் குடிமகன்கள் அனைவரும் கூடத்தின் பின் பகுதியிலிருந்த இருக்கைகளை தவிர்த்து கையிலிருந்த கோப்பைகளுடன் மெத்தைகளில் அமர இன்னிசை உஸ்தாத் சாப்பின் தங்கக் குரலுடன் துவங்கியது..

தொடரும்.