08 ஜூலை 2006

கடந்துவந்த பாதை 3 a

அவரும் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டபோதுதான் அடையாளம் தெரிந்தது..

விஜயா!

கணக்குப்பிள்ளை கண்ணையாவின் இரண்டாவது மகள்!

உமா அக்காவின் தங்கை!

நான் திகைத்துப் போய் அமர்ந்திருக்க அந்த பெண் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு வெளியேறினாள்..

சுதாரித்துக்கொண்டு எழுந்த நான், ‘சார் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..’ என்று என்னுடைய அதிகாரியிடம் கூறிவிட்டு அவர் பின்னால் ஓடினேன்..

நான் படிகளை நெருங்குவதற்குள் மின்னலென மறைந்துப் போனவரைக் காணாமல் வெறுத்துப் போய் இறங்கி நடைபாதையில் நின்று நாலா புறமும் பார்த்தேன்.. காணவில்லை..

சரி.. எங்க போயிருவா.. கொஞ்ச நேரம் நிப்போம்.. ஏதாவது கடைக்குள்ளத்தான் போய் ஒளிஞ்சிக்கிட்டிருப்பா என்றுநினைத்தவாறு நின்றேன்..

நான் நினைத்ததுபோலவே நடந்தது..

அவள் ஒரு கடையிலிருந்தவாறு சாலையின் இரு மருங்கிலும் பார்த்துவிட்டு தயக்கத்துடன் வெளியே வர நான் ஒளிந்துக்கொண்டேன்..

பிறகு அவள் சாலையில் இறங்கி நடக்க நான் சற்று தள்ளி அவளை பின் தொடர்ந்தேன்..

எங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளை நெருங்கி, ‘ஏய் விஜயா, நில்லு..’ என்றேன் மெள்ள, ஆதரவாக..

அவள் அப்படியே நின்றாள்.. ‘வேணாம் சூசை.. என்னை விட்டுரு.. ஒன்னும் கேக்காத.. நா அழுதுருவேன்..’

அவளுடைய தோள்கள் குலுங்குவதிலிருந்தே அவள் அழுவது எனக்கு புரிந்தது..

என்னுடைய வீடு என்னுடைய அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இருந்தது.

‘இங்க பார் விஜயா.. ஒன்னைய இப்படியே போக விட்டுரமாட்டேன்.. நான் ஒரு ரிக்ஷஅ பிடிச்சி குடுக்கேன்.. நீ நம்ம வீட்டுக்கு போ.. நான் ஆபீஸ்ல சொல்லிட்டு ஒடனே வந்திடறேன்.. அதுவரைக்கும் அம்மாகிட்ட பேசிட்டிரு..’ என்று கூறிவிட்டு அவள் மறுப்பை பொருட்படுத்தாமல் ஒரு கை ரிக்ஷ¡வை அழைத்து அவளை அதில் வற்புறுத்தி ஏற்றி என்னுடைய வீட்டு விலாசத்தை ரிக்ஷ¡ இழுப்பவரிடம் கொடுத்து, ‘இவங்கள நான் சொல்ற வீட்லதான் எறக்கி விடணும்.. இடையில இவங்க சொன்னாலும் இறக்க கூடாது.’ என்று கண்டிப்பாய் உத்தரவிட்டு அனுப்பிவைத்துவிட்டு என்னுடைய அலுவலகத்திற்கு திரும்பி, ‘சார் ஒரு அரை நாள் லீவு வேண்டும்.’ என்று கெஞ்சி கூத்தாடி பெற்றுக்கொண்டு வீட்டையடைந்தேன்..

வீட்டு வாசலிலேயே நின்றிருந்த என் அம்மா, ‘எதுக்குடா அந்த பிள்ளைய நம்ம வீட்டுக்கு அனுப்பி வச்சே.. வந்ததுலருந்து அழுதுக்கிட்டே இருக்கு.. நா என்ன கேட்டும் பதில் வரமாட்டேங்குது.. நீயே வந்து கேளு..’ என ‘பாவம்மா அவ.. அவமானத்துல கூனி குறுகி போயிருக்கா.. நான் பேசறேன். நீங்க வாங்க..’ என்றவாறு வீட்டுக்குள் நுழைந்து முன் அறையை பார்த்தேன். அவளை காணவில்லை.

‘அவ எங்க இங்க இருக்கா.. கிச்சன்ல போய் பார்.. அங்க ஒக்காந்து அழுதுகிட்டிருக்கா.’

அடுக்களையில் தரையில் குத்திட்டு, தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று முன் அறையில் அமர்த்தி குடிக்க சூடாக ஒரு காப்பியை கொடுத்தோம். அதன் பிறகு சற்று தெளிந்து  மெள்ள, மெள்ள அழுகையினூடே அவள் கூறியது..

‘அப்பாவுக்கு ஒங்க தாத்தா செத்தது பெரிய அதிர்ச்சியா இருந்தது சூசை.. ஒடனே வீட்டை மாத்திக்கிட்டு போவோம்னு பிடிவாதமா மாத்திக்கிட்டு போனாங்க..  அதுக்கப்புறமும் ஒங்க தாத்தா கனவுல வராங்க, வராங்கன்னு ராத்திரியில புலம்பிக்கிட்டே இருந்தாங்கடா.. அப்புறம் திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல..  ஒரு நா அவங்க புத்தியே பேதலிச்சி போச்சிரா.. என்ன ஏதுன்னு தெரியாம நாங்க அழுதுக்கிட்டு நின்னப்போ மாசிலாமணிதான் ஒரு ஜோசியர் அப்பாவுக்கு ஏதோ மருந்து, மாயம் பண்ணித்தான் இப்படியாயிருச்சி பரிகாரம் செஞ்சா சரியாப் போயிரும்னு சொன்னான். அம்மாவுக்கும் பாட்டிக்கும் அப்பாவுக்கு எப்படியாவது சரியா போனா போறுங்கற ஆசையில கையிலிருந்த பணத்தையெல்லாம் அந்த மாசிலாமணிக்கிட்டயே குடுத்து அப்பா மேலருக்கற மருந்த எடுத்துரச் சொல்லுரான்னு அனுப்புனாங்க.. அஞ்சாறு மாசம் பணம் தண்ணியா செலவழிஞ்சதுதான் மிச்சம்.. அப்பாவுக்கு சரியே ஆவலை.. அப்புறமா வேற வழியில்லாம ஆஸ்பத்திரியில கொண்டு சேத்தோம்.. அப்பா இன்னும் அங்கதாண்டா..’

நானும் என் அம்மாவும் திகைத்துப்போய் இப்படியும் நடக்குமா என்று அமர்ந்திருந்தோம்..

‘அந்த மாசிலாமணி ஒரு சரியான ஃப்ராடுன்னு தெரிஞ்சப்போ எங்ககிட்டருந்த பணமெல்லாம் காலியாயிருச்சி.. வீட்டு வாடகை கூட குடுக்க முடியாம தடுமாறுனப்பத்தான் உமா அப்பா செஞ்ச வேலைய நாமளே செய்யலாம்டின்னு என்னையும் ஸ்கூல்லருந்து நிறுத்திட்டு அப்பா கணக்கு எழுதிக்கிட்டிருந்த ஒவ்வொரு கடையா ஏறி இறங்குனோம்.. யாருக்குமே எங்க மேல நம்பிக்கை வரலை. அப்பாவுக்கு ரொம்ப தெரிஞ்ச நாலஞ்சு பேர் மட்டும் சரிம்மான்னு நம்ம அப்பா பேர்லருக்கற அனுதாபத்துல குடுத்தாங்க.. உமா அப்பாகூடவே இருந்து பார்த்திருந்ததால கணக்கு நல்லா எழுத வந்துது.. அப்பா மாதிரி இழுத்தடிக்காம சட்டுன்னு முடிச்சி குடுக்க அப்பாகிட்ட முன்ன கணக்கெழுத குடுத்துருந்தவங்க எல்லாம் மறுபடியும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க.. நாங்க மறுபடியும் கொஞ்சம், கொஞ்சமா நல்லா வந்துக்கிட்டிருந்தோம்டா..’

‘அப்படியா.. அப்புறம் ஏண்டி இந்த நிலமை?’ என்றேன். நானும் விஜயாவும் ஒரே வயதொத்தவர் என்பதால் நாங்களிருவருமே சிறுவயதில் சேர்ந்தே படிப்போம், விளையாடுவோம்.. அடா புடா என்றுதான் அழைத்துக்கொள்வோம்.

‘கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு வராம இருந்த மாசிலாமணி நாங்க மறுபடியும் நல்லாய்ட்டோம்னு தெரிஞ்சதும் அம்மாக்கிட்ட கெஞ்சி கூத்தாடி மறுபடியும் வந்து ஒட்டிக்கிட்டான். அப்பாவ ஆஸ்பத்திரியில போய் பாக்குறதுக்கு துணையா அவன் இருக்கட்டுமேன்னு அம்மாவும் பாட்டியும் சேத்துக்கிட்டாங்க.. உமாவும் நானும் அவன தள்ளியே வச்சிருந்தோம்.. ஆனா நாளடைவில என்ன மாயம், மந்திரம் செஞ்சானோ உமா அவன்கிட்ட நெருங்கி பழக ஆரம்பிச்சி.. நாங்க கொஞ்சமும் எதிர்பாக்காத நேரத்துல அவங்கூட ஓடிப்போயி கல்யாணம் செஞ்சிக்கிட்டு வந்து நின்னாடா..’

‘அடிப்பாவி.. உமாவா.. சாதுவாட்டம் இருப்பாளே.. அவளா?’ என்ற என் அம்மாவை கண்சாடை செய்து ‘சும்மா இருங்கம்மா’ என்றேன்..

‘அம்மா அவள ஏத்துக்க தயாராத்தான் இருந்தாங்க.. ஆனா பாட்டிதான் இந்த கேடு கெட்டவள வீட்ல சேர்த்தே.. நான் சீம எண்ணெய ஊத்தி எரிச்சுக்குவேன்னு பயங்காட்டி அவள வீட்டுக்குள்ள விடாம.. வெரட்டி.. இப்போ மூனு நாலு வருசமாவுது.. இப்போ பாட்டியும் இல்ல.. அம்மாவும் இல்ல.. நான், ராஜேஸ்வரி, மாலா மட்டும் தனியா ஒரு ரூம்ல.. இப்படியெல்லாம் வேலை செஞ்சி..’ மேலே தொடர முடியாமல் அழுத அவளை எப்படி தேற்றுவதென தெரியாமல் நானு என் அம்மாவும் அமர்ந்திருக்க நேரம் போனதே தெரியவில்லை..

‘சரி.. உமா எங்கருக்கா? இங்கனதானடி இருக்கணும்.. தேடி பாக்கறதுதானே..?’ என்றார் என் அம்மா..

‘அவ இங்கதான் இருக்கா ஆண்ட்டி.. ஆனா.. அந்த மாசிலாமணிய நெனச்சி எங்கள சேர்த்துக்க பயப்படறா.. அவன் ரொம்பவும் மோசமாய்ட்டான்.. பொம்பள சோக்கு.. குடின்னு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை.. உமாவும் சந்தோஷமா இல்லை.. எங்க கதியும் இப்படி ஆயிருச்சி.. இதெல்லாம் ஒங்கிட்ட சொல்லி கஷ்டப்படுத்த வேணாமேன்னுதான் ஒன்னைய பாத்ததும் ஓடி ஒளிஞ்சேன்..’

இதை எழுதி முடித்தபோதே என் மனம் அவர்களை நினைத்து அங்கலாய்க்கும்போது அவள் எங்களிடம் இதையெல்லாம் விவரித்தபோது..

இப்படி மோசம் போனோமே என்ற ஆதங்கத்தில் அழுத அவளுடைய  முகம் தொடர்ந்து பல தினங்கள் என் கனவில் வந்து என்னை அலைக்கழித்ததை இன்னும் மறக்க முடியவில்லை என்னால்..

‘அடுத்த தடவ நீ ஒங்கப்பாவ பாக்க போகும்போது என்னையும் கூட்டிக்கிட்டு போறியா?’ என்ற என் கேள்விக்கு, ‘இப்பல்லாம் நாங்க அவர போயி பாக்கறதே இல்லைடா.. அவர பார்த்துட்டு வந்தா தொடர்ந்து பல நாள் எனக்கு தூக்கமே வராது.. அப்படி மாறி போயிருக்குது அவர் முகம்.. எங்கப்பான்னா எங்களுக்கு எவ்வளவு உசிருன்னு ஒனக்கு தெரியுமேடா.. நாங்க எப்படிறா அவர இந்த கோலத்துல.. அதான் கடவுள் பாத்துப்பாருன்னு இப்பல்லாம் போறதேயில்லை..’

நான் எத்தனை வற்புறுத்தி கேட்டும் தன்னுடைய வீட்டு விலாசத்தை கூற மறுத்த அவளை அன்று ரிக்ஷ¡வில் ஏற்றிவிட்டு வந்ததுதான், பிறகு பார்க்கவே இல்லை..

எப்படி வாழ்ந்த குடும்பம்.. என்று இப்போது நினைத்தாலும் மாய்ந்துபோகிறேன்..

கண்ணையன் மாமா அவருடைய வாடிக்கையாளர்களுடைய கண்களுக்கு எப்படியோ..

ஆனால் நான் அவருடைய வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ‘வாடா கரியா.. கொஞ்சம் எட்டியே நில்லு.. ஒன் கறுப்பு ஒட்டிக்க போவுது..’ என்று வேடிக்கையாக கூறிவிட்டு தள்ளிவிடுவது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது..

‘ஆம்புள புள்ள இல்லேன்னுதாண்டா நீ ஒரு நா வராட்டியும் அந்த கரியன் எங்க காணம்னு கேட்டுக்கிட்டே இருப்பான்..’ என்ற அவருடயை தாயாரின் பேச்சையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை..

கம்பீரமாக கூடத்தில் அமர்ந்திருக்கும் கண்ணையன் மாமா, எப்போதும் பெருமை பொங்கிய முகத்துடன் தெய்வீக களையுடன் வலம் வந்த அவருடைய மனைவி, உமா அக்கா, விஜயா இவர்களையெல்லாம் இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்..

அந்த குடும்பத்தினர் என் மீது வைத்திருந்த கள்ளங்கபடு இல்லாத அன்பு அப்படிப்பட்டது..

இனியும் வரும்..

6 கருத்துகள்:

  1. வீட்டுலே அம்மா, அப்பான்னு உறவுகளுக்கு மருந்து வச்சுருக்காங்கன்னு சொல்லி பணத்தை மொத்தமா
    அழிச்ச கதை நம்ம வீட்டுலேயும் ஒண்ணு நடந்துருக்கு.

    எத்தத் தின்னா பித்தம் தீரும்?னுதான் ஒவ்வொருத்தர் சொல்ற வைத்தியத்தும் ஓடு ஓடுன்னு ஓடியிருந்தோம்.

    திருவல்லிக்கேணியிலே ஒரு இஸ்லாமியர் ஒரு ப்ளேட்டை மந்திரிச்சு அதுலே கொஞ்சம் தண்ணீர் ஊத்தி,அப்புறம்
    அந்தத்தண்ணீரை நோயாளிக்குக் கொடுக்கணும், சரியாயிரும்னு சொன்னார். ஒரே கண்டிஷன் அங்கே போயிட்டுத் திரும்ப
    வரும்வரை பேசக்கூடாது. எல்லாம் சரியாக் கடைபிடிச்சும் நோய் குணமாகலை. பணமும், ஆளும்தான் போச்சு.

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    எத்தத் தின்னா பித்தம் தீரும்?னுதான் ஒவ்வொருத்தர் சொல்ற வைத்தியத்தும் ஓடு ஓடுன்னு ஓடியிருந்தோம்.//

    இதுதாங்க யதார்த்தம். நமக்கு ஒரு பிரச்சினைன்னு வரும்போது, நம்ம மனசு எங்கயாவது இதுக்கு தீர்வு கிடைக்காதான்னுதான் பதறும். அந்த நேரத்துல யார் என்ன சொன்னாலும் கேக்காது. ஐயோ, என் புள்ள, என் புருசன், என் மனைவி இப்படி அவஸ்தை படுதேன்னு யார் என்ன சொல்றாங்கன்னு யோசிக்காம தீர்வை தேடி ஓடும்..

    பணமும், ஆளும்தான் போச்சு.//

    பணம் போனா பரவால்லை. சம்பாதிச்சிக்கலாம். ஆனா ஆளே போனா.. அதுதான் உச்சகட்ட கொடுமை..

    பதிலளிநீக்கு
  3. நன்றாக வாழ்ந்திருந்த குடும்பம் நம் கண்முன்னே சீரழிந்திருப்பதைக் கண்பது மிகக் கொடுமையான விதயம்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க மணியன்,

    இதுல மூனு விஷயம் இருக்கு.

    ஒன்னு அப்பாவுக்கு சரியாகணுமேங்கற ஆதங்கத்துல ஒரு எத்தன்கிட்ட ஏமாந்தது. அது நம்பிக்கையா இல்ல மூடநம்பிக்கையாங்கறது அவரவர் கண்ணோட்டத்த பொறுத்தது.

    ரெண்டாவது ஏற்கனவே மோசமானவன் என்பது தெரிந்தும் மாசிலாமணியை வீட்டுக்குள் சேர்த்தது.

    அது அம்மா மற்றும் பாட்டியின் தவறு.

    மூன்றாவது அவனும் உமாவும் திருமணம் புரிந்துக்கொண்டு வந்ததும் அவர்களை சேர்த்துக்கொள்ளாமல் விரட்டியடித்தது.

    அது பாட்டியின் பேச்சைக் கேட்டு அம்மா செய்த தவறு..

    அவர்கள் இருவருமே அடுத்தடுத்து மரணமடைய அவர்களுடைய முடிவால் வேதனைப்படுவது பிள்ளைகள்தான்..

    பதிலளிநீக்கு
  5. "ஓவியம் குலைந்த தென்று ஓவியரும் வெறுப்பதில்லை;
    உருக்குலைந்த கோட்டையினை
    சரித்திரமும் மறப்பதில்லை..."

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஜி!

    ஓவியம் குலைந்த தென்று ஓவியரும் வெறுப்பதில்லை;
    உருக்குலைந்த கோட்டையினை
    சரித்திரமும் மறப்பதில்லை..." //

    அடடடா பின்னூட்டம் போடறதுல ஒங்களுக்கு நிகர் நீங்களேதாங்க..

    பதிலளிநீக்கு