10 மே 2006

கலைஞருக்கு ஒரு கடிதம்..


மதிப்பிற்குறிய கலைஞர் அவர்களே!

தாங்கள் மீண்டும் முதல்வரானதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கும் தங்களிடம் என்னைப் போன்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை சுருக்கமாகக் கூறவே இக்கடிதம்.

முதல்வர் இருக்கையில் அமர்ந்தவுடன் 'நான் இடும் முதல் கையொப்பம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலே அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்க உத்தரவிடும் ணையாகத்தான் இருக்கும்' என்றீர்கள்.

நல்ல திட்டம். வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இல்லையென்று கூறவில்லை. ஆனால் அதை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை நீங்கள் எண்ணிப் பார்த்து ஒரு தெளிவான வரைமுறையை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் அரசு மான்யத்தை உபயோகித்து செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டம் ஏழை எளியோர்க்கு, அதாவது உண்மையிலேயே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை மட்டுமே சென்றடையவேண்டும் என்பதை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களுடைய கட்சி தொண்டர்கள் இத்திட்டம் சரிவர செயல்பட இடையூறாக இருக்க தாங்கள் அனுமதிக்கலாகாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாணையில் கையொப்பம் இட்ட அதே மூச்சில் தாங்கள் கையொப்பம் இட வேண்டிய வேறோரு ஆணையும் இருக்கிறது. அதுதான் வேலையிழந்து நிற்கும் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தும் ஆணை. அத்துடன் கடந்த நான்காண்டுகாலமாக அவர்களுக்கேற்பட்டுள்ள பொருளாதார இழப்பையும் தங்களால் இயன்ற அளவு ஈடுகட்டவேண்டும்.

இரண்டாவது.. உங்களுடைய கடந்த ஆட்சிக் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ.. அல்லது உங்களுடைய விருப்பத்துனுடனோ, இல்லாமலோ முந்தைய முதல்வர் ஜெயலலிதாவையும் அவருடைய உடன்பிறவா சகோதரியையும் குறிவைத்து பல விரும்பத்தகாத நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன.

அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மீண்டும் அவசரப்பட்டு எடுக்கலாகாது என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் மீது ஏற்கனவே தொடுக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை தகுந்தபடி நடத்துவதற்கு கர்நாடகா அரசுக்கு ஒத்துழைப்பு தந்து நடத்திமுடித்தாலே போதுமானது. அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கிடைக்கும் தண்டனையே போதுமானதாக இருக்கும். அதை விட்டுவிட்டு மீண்டும் அவரைக் கைது செய்து அவர் மேல் தேவையில்லாத அனுதாபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். என்னைக் கேட்டால் அப்படியொரு அரசியல்வாதி இருந்தார் என்பதையே மக்கள் மறந்துபோகும் அளவுக்கு நீங்கள் அவரை உங்களுடைய நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கிவிடவேண்டும்.

மூன்றாவது. ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்கிக் காட்டுவேன் என்றார். ஆனால் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது என்று பல பொதுக்கூட்டங்களில் புள்ளி விவரத்துடன் விளக்கினீர்கள். என்னைக் கேட்டால் அதையே நீங்கள் சவாலாக ஏற்றுக்கொண்டு உங்களுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டை உண்மையிலேயே முதல் மாநிலமாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்று கூறுவேன்.

நான்காவது. தங்களைப் பற்றி அடிக்கடி கூறப்படுவது. அதாவது வெட்டொன்று துண்டு இரண்டாக முடிவெடுக்காமல் பார்ப்போம், பார்ப்போம் என்று காலந்தள்ளுவது. முக்கியமாக தங்களுடைய கட்சியினர் ஊழலிலும், அராஜகத்திலும் ஈடுபடும்போது உடனே தட்டிக் கேட்காமல் இருப்பது. ஜெயலலிதா எதில் வெற்றி பெற்றாரோ இல்லையோ சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும்  அடாவடி அரசியல் நடத்திவந்த ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது என்னைப் போன்ற நடுத்தரவாசிகளுக்கெல்லாம் மிகுந்த ஆறுதலாக இருந்தது. அதே மாதிரியானதொரு சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும்.

ஐந்தாவது. அமைச்சரவை அமைப்பது. தங்கள் மேல் இருக்கிற இன்னுமொரு குற்றச்சாட்டு. வயதானவர்களுக்கே எதிலும் முன்னுரிமை என்பது. தங்களைச் சுற்றி தங்களுடன் கட்சி துவக்கப்பட்ட காலத்திலிருந்தே உண்மையுடனும், விசுசாசத்துடனும் இருந்தவர்களிடம் நன்றியுடன் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதே சமயம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காவினை திறம்பட நடத்திச்செல்லக்கூடியவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு தங்களுடைய அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழலுக்கு இலக்காகியிருந்த எவரையும் இம்முறை அமைச்சரவையில் இடமளிக்காமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இளைஞர்கள், பட்டதாரிகள், சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர்கள் இவர்களுக்குத்தான் அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆறாவது. வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவது. தங்களுடைய குடும்பத்தாரை எப்போதுமே அரசு பதவிகளிலிருந்து தாங்கள் விலக்கி வைத்திருந்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அது இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும். தங்களுடைய மகன் என்ற காரணத்திற்காகவே திரு. ஸ்டாலின் அவர்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். சமீபத்திய கணிப்பில் அவருக்கு ஒரு சதவிகித வாக்காளர்களே முதல்வராக வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதைக் கேட்க வருத்தமாகத்தான் இருந்தது. தாங்கள் அவரை மீண்டும் சென்னையின் மேயராக இருத்த வேண்டும். அவர் கடந்தமுறை மேயராக இருந்து ஆற்றிய பணிகள் மிகச்சிறந்தவை என்பது என்னைப்போன்ற பலருக்கும் தெரிந்ததே. ஆகவே அவர் தங்களுடைய அமைச்சரவையில் இருப்பதை விட தனித்து சென்னை மாநகராட்சியை நடத்திச் செல்வதே நல்லது என்று நினைக்கிறேன். இரு பதவிகளை ஒருவரால் வகிக்கமுடியாதென்றால் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தாலும் நல்லதுதான் என்று எண்ணுகிறேன். அத்துடன் திரு.மு.க அழகிரியை தங்களுடைய நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் வேண்டும்.

ஏழாவது. நீங்கள் தேர்தலின்போது கொடுத்த மற்ற வாக்குறுதிகள். அவற்றுள் விவசாய பெருங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கடனை ரத்து செய்வதைப் பற்றி மட்டும் கூற விழைகிறேன். அதில் ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை மட்டுமே தாங்கள் ரத்து செய்ய வேண்டும். பணம் படைத்த முதலைகள் பெற்றிருக்கும் கடன் தொகையையும் ரத்து செய்வதில் எந்த பயனும் இல்லை. மற்றபடி கேஸ் அடுப்பு, கலர் தொலைக்காட்சி பெட்டி வழங்குவது எல்லாம் இப்போதைக்கு முக்கியமில்லை என்றும் கூற விழைகிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இவ்விரு திட்டத்தையும் செயல்படுத்த முயலும்போது ஊழல் நடக்க வாய்ப்பிருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யப் போய் வயதான காலத்தில் தேவையில்லாத தலைவலியை வாங்கிக்கொள்ளாதீர்கள்.

எட்டாவது. போலீஸ் நிர்வாகம். ஜெயலலிதாவைப் போலவே காவல்துறையை தாங்களே தங்களுடைய பொறுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் தாங்கள் வரையறுத்த எல்லைக்கோட்டை விட்டு தாண்டிச்செல்ல அனுமதிக்கலாகாது. முந்தைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக எவரையும் தகுந்த காரணம் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து தகுந்த விளக்கம் கேட்காமல் இடம் மாற்றம் செய்யக்கூடாது.

ஒன்பதாவது. மதுபானக் கடைகள். ஒரு அரசின் தலையாயப் பணி ஆட்சி செய்வ்துதான். வணிகம் செய்வதல்ல. ஆகவே மதுபானக் கொள்முதல், சில்லறை விற்பனை எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிட வேண்டும். விமர்சனங்களுக்கு அஞ்சாமல் தாங்கள் நேர்மையான முறையில் இவற்றை செயல்படுத்த வேண்டும். அதே போன்றதுதான் கல் மற்றும் மணல் குவாரிகளையும்.. ஆனால் அதே சமயம் எவர் மீதும் பழிவாங்கும் (மிதாஸ் நிறுவனத்தைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும்) எண்ணத்துடன் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படலாகாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்..

பத்தாவது மற்றும் இறுதி வேண்டுகோள்.. தங்களால் உடல் ரீதியாக என்றைக்கு முதலமைச்சராக திறம்பட பணியாற்ற இயலவில்லை என்று நீங்கள் உணர்கிறீர்களோ அன்றைக்கே, அந்த நிமிடமே தாங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களை சுதந்திரமாக, எவ்வித தலையீடும் இல்லாமல் ஒரு முதலமைச்சரை தெரிந்தெடுக்க வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதே சமயம் இனி வரும் ஐந்தாண்டுகாலமும் தாங்கள் முதலமைச்சர் பதவிலியிருந்து திறம்பட பணியாற்ற தங்களுக்கு நல்ல உடல் வலிமையை அளிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கும்,

தங்களில் உண்மையுள்ள,
...

05 மே 2006

என் ஓட்டு யாருக்கு?


தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கடந்த ஒரு வார காலமாக சூடு பிடித்திருக்கிறது.

பிரதமர், சோனியா என பல தேசிய தலைவர்களும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து தமிழக அமைச்சர்களும் முகாமிட்டு காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்..

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம்.. பிரச்சாரம் ஓயப்போகிறது.

இந்த சூழலில் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.. என் ஓட்டுக்கு யாருக்கு?

தமிழகத்திற்கு வெளியே பணியாற்றிக்கொண்டிருந்ததால் கடந்த பல சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டளிக்க முடியாமல்போன எனக்கு இத்தேர்தல் தனி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நினைக்கிறேன்.

கடந்த இரு வார காலத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சித்தலைவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளை சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் பார்த்து கேட்டதை வைத்து எழுதப்பட்டதே இந்த கட்டுரை. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்னுடைய கருத்துகள் மட்டுமே..

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவருடைய உரையில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் இருந்தவர்கள் என்ன செய்து கிழித்தார்கள் என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு விளக்கமளித்தார்..

அவை எந்த அளவுக்கு தமிழகத்திற்கு நன்மையளித்திருக்கிறது என்பதை ஆராய்வதை விட்டுவிடுவோம். ஆனால் பல நல்ல திட்டங்களை ப.சிதம்பரம், டி.ர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் அன்புமனி போன்றவர்கள் தமிழகத்திற்கு கிடைக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவே மறுக்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

சரி. அது ஒருபுறம் இருக்கட்டும்..

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சி என்ன செய்தது என்று ஒரு கேள்வியையும் கேட்டுவிட்டு தானே கிண்டலுடன் பதிலும் அளித்தார் நிதியமைச்சர்.

ப.சிதம்பரம் அவர்கள் மற்ற எந்த தலைவருக்கும் இல்லாத அளவு பொறுமை இருக்கிறது. அவர் பேச்சில் கண்ணியமும் இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்டு சேற்றை வாரி இரைக்கும் சில தலைவர்களுடன் (பெயர் வேண்டாம்) ஒப்பிடுகையில் அவர் மிகச்சிறந்தவர். அவர் பேசும்போது கைதட்டல்கள் எழவில்லை.. யாரும் எழுந்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.. ஆனால் நிசப்தம் நிலவியது.. மக்கள் அப்படியே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னால் முடிந்த வரை சாதாரண பாமரர்களுக்கும் விளங்கும் வகையில் பேசினார்.

அவர் அன்று ற்றிய உரையில் என்னுடைய நினைவில் குறித்துவைத்திருந்தவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

2001ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களாயிருந்தவர்களில் இருவர் அல்லது மூவரைத் தவிர (ஜெயலலிதாவை விட்டுவிட்டு) இன்று எத்தனை அமைச்சராக இருக்கிறார்கள்? ஒருவரை நீக்குவீர்கள் பிறகு அவரையே மீண்டும் சில மாதங்கள் கழித்து சேர்த்துக்கொள்வீர்கள்.

உங்களுடைய அமைச்சர்கள் எல்லோரும் தினம் காலையில் கண்விழித்ததும் உங்களுடைய கட்சி தினசரியை பார்த்துத்தானே நாம் இப்போது அமைச்சரவையில் இருக்கிறோமா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறீர்கள்..

சென்னைக்கு எத்தனை கமிஷனர்களை நியமித்தீர்கள்.. கணக்கு வைத்திருக்கிறீர்களா? எத்தனை டி.ஜி.பிக்கள்?

எத்தனை முறை தலைமைச் செயலாளரை மாற்றியிருக்கிறீர்கள்? எத்தனை அமைச்சரவை செயலர்கள்?

சரி அது போகட்டும்..

திடீரென்று ஒருநாள் எஸ்மா, டெஸ்மா என்றீர்கள்.. இரவோடு இரவாக கள்வர்களைப் பிடிப்பதுபோல வீடு புகுந்து கைது செய்தீர்கள்.. கூண்டோடு கூண்டாக வேலையை விட்டு வெளியேற்றினீர்கள்..

பிறகு பாராளுமன்ற தேர்தலில் சூடுபட்டதும் நீங்கள் அவர்கள் மேல் தொடுத்த எல்லா வழக்குகளையும், சிலவற்றைத் தவிர, விலக்கிக்கொண்டீர்கள். வீட்டுக்கு அனுப்பிய எல்லோரையும் திரும்ப அழைத்து வேலை கொடுத்தீர்கள்.. வாபஸ் பெறாமல் மீதமிருந்த வழக்குகளையும் வாபஸ் பெற்றீர்கள்.

பொட்டாவை மிகச்சிறப்பாக (நக்கலுடன் சிரிக்கிறார்) செயல்படுத்திய முதலமைச்சர் நீங்கள்தான். அதற்கும் பணியாதவர்களை கஞ்சா வழக்கில் வீழ்த்தினீர்கள்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலையை விட்டு வெளியேற்றினீர்கள்.. சட்டத்தை மதிக்கும் நீங்கள் நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மீறி இன்றுவரை அவர்களை பணியமர்த்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள்.

இப்போது தாலிக்கு தங்கம் என்கிறீர்கள்.. சாலைப் பணியாளர்களின் ஐம்பதுக்கு மேற்பட்டோர் தங்களுடைய தாலியையே பறிகொடுத்தார்களே.. அதற்கு நீங்கள்தானே காரணம்?

மதமாற்ற சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.. பிறகு விலக்கிக்கொண்டீர்கள்..

சிறுபான்மையினரிடத்தில் ஏதோ கரிசனம் உள்ளவர்களைப்போல காட்டிக்கொள்ள கிறித்துவ தேவாலயங்களிலும் சமபந்தி போஜனம் என்றீர்கள்.. அதை சம்பந்தப்பட்டவர்களில் சிலர் எதிர் குரல் கொடுத்ததும் பின்வாங்கிவிட்டீர்கள்..

மத்திய அரசு எந்த திட்டத்தை தமிழகத்திற்கு ஒதுக்கினாலும் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்..

சேது சமுத்திர திட்டத்திற்கு முதலில் குரல் கொடுத்தது நீங்கள்தான் என்றீர்கள். ஆனால் அதை பிரதமர் அறிவித்தபோது அது நிறைவேறாமல் இருப்பதற்கு தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தீர்கள்.. திட்டம் முடிந்து வெற்றிகரமாக செயலாக்கப்பட்டால் மீண்டும் என்னால்தான் என்றும் பேசுவீர்கள்..

இன்று தமிழகத்தில் பல இடங்களிலும் மத்திய தரைவழி அமைச்சகம் செயல்படுத்த முயன்றும் எத்தனை மேல்வழி பாலங்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன..? அதற்கெல்லாம் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதில் தங்களுடைய அரசு காட்டும் தாமதம்தானே காரணம்?

சென்னைக்கு உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றை ஆயிரம் கோடி செலவில் பிரதமர் அறிவித்தார். அதை செயல்படுத்த இதுவரை நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா? இப்போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசு பொறுப்பில் செய்வோம் என்கிறீர்கள்..

இந்தியாவில் உத்தரபிரதேசத்திலும்தான் எதிர்கட்சி ஆட்சி செலுத்துகிறது.. அவர்கள் மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்திருக்கிறார்கள். பிரதமர் பங்கேற்கும் எல்லா விழாக்களிலும் பங்கேற்கிறார்கள்..ஆனால் இங்கு நிலை என்ன?

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் திறப்பு விழா அழைப்பிதழில் உங்களுடைய ஒப்புதலின்பேரில் உங்களுடைய பெயர் அச்சிடப்பட்டும் கடைசி நேரத்தில் உடல் நலத்தைக் காரணம்காட்டி வராமல் புறக்கணித்தீர்களே.. எங்களைக் கண்டால் அலர்ஜி.. ஒத்துக்கொள்கிறோம்..ஆனால் பிரதமர் என்ன செய்தார்?

இப்படி மத்திய அரசு என்ன செய்தாலும் நான் ஒத்துவரமாட்டேன் என்றால் யாருக்கு நஷ்டம்? தமிழக மக்களுக்குத்தானே..?


அவருடைய பேச்சில் இருந்த நியாயத்தை, நிதர்சனத்தை உணர்ந்த நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்..

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சிதான் ஆட்சிபுரியவேண்டுமா?

நிச்சயம் இல்லை.. ஆனால் கருத்து ஒற்றுமையுள்ள ஆட்சிகள் வேண்டும்..

சிறுபிள்ளைத்தனமான ஒத்துபோகுதலும் இருக்கலாகாது.. அதே போல நீ எதைச் செய்தாலும் நான் எதிர்ப்பேன்.. என்னைக் கலந்தாசிக்காமல் எதைச் செய்தாலும் நான் ஒத்துழைக்கமாட்டேன் என்று மூர்க்க குணமுள்ள ஆட்சியும் நமக்கு தேவையில்லை..

இன்று களத்தில் மோதிக்கொள்ளும் இருதரப்பிலும் நேர்மையற்ற அரசியல்வாதிகள் இருக்கின்றனர். சாதி, இன அரசியலை நடத்தியவர்களும் இருக்கின்றனர்.. அவர்கள் நடத்தும் வருமானத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லாத வாழ்க்கைதரத்தையும் நாம் கண்கூடாக காண்கிறோம்.

இச்சமயத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது..

ஒரு சமயம் விண்ணகத்தில் நுழைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவரவே கடவுள் பயந்துபோய் இனி நாளொன்றுக்கு இத்தனை பேர் விண்ணகத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானித்து வாயில்காப்போனாக இருந்த மிக்கேல் சம்மனசை (Angel) அழைத்து உங்களுடைய கணிப்பின் முறையை சற்று தளர்த்திக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டாராம்.

ஒரு குறிப்பிட்ட நாளன்று விண்ணகத்திற்குள் அனுமதிக்கப்படவேண்டியவர்களுக்கென குறிக்கப்பட்ட அளவை எட்ட ஒரு நபர் தேவைப்பட்டதாம்..

ஆனால் கணிப்பிற்கு இருவர் காத்திருந்தனராம்..

அவர்களில் ஒருவர் அரசியல்வாதி. மற்றவர் அடியாள்.. அதாவது பணத்திற்காக ‘போட்டு தள்ளு’கிறவர்.

முன்னவர் சரியான ஊழல் பேர்வழி.. அவர் செய்யாத அக்கிரமங்களே இல்லை. அவருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உலகில் நிலுவையில் இருந்தது.. அவரால் இயன்றவரை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு கடைசியில் குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே படுகொலை செய்யப்பட்டவர்.

அடியாளுக்கு எதிராகவும் வழக்கு இருந்தது.. முந்தையவரைக் கொலை செய்த குற்றம். அதாவது மனித வெடி குண்டாக தன் உயிரையே பணத்திற்காக தியாகம் செய்தவர்.

கடவுள் தீர்ப்பிடுவதற்கு முன் ஒவ்வொருவரின் பாவ, புண்ணியங்களை தராசில் எடையிட்டு கடவுளுக்கு பரிந்துரை செய்பவர்தான் மிக்கேல் சம்மனசு (Angel).

அவர் யாரை விண்ணகத்திற்குள் பரிந்துரைப்பார் என்று நினைக்கிறீர்கள்?

அதுமாதிரிதான் நானும் செய்யப் போகிறேன்..

I would prefer the lesser evil.. இதில் யார் lesser evil என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது..

என்னைப் பொறுத்தவரை அது MK தலைமையிலான அணிதான்..