22 அக்டோபர் 2005

பெண் குழந்தைகள் புறக்கணிப்பு

நான் என்னுடைய வங்கியின் மதுரைக் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் மதுரையைச் சுற்றிலுமிருந்த கிராமங்களில் விவசாயக் கடன் பெற்றவர்களின் விவசாய மற்றும் ஆடு, கோழி வளர்ப்பு செயல்பாட்டினை மேற்பார்வையிடவும், வாராக் கடனை வசூலிக்கவும் மாதத்திற்கொருமுறை அக்கிராமங்களுக்கு சென்று வருவது வழக்கம்.

அதில் ஒன்று (கிராமம் என்றும் சொல்ல முடியாமல் பெரு நகரம் என்றும் சொல்ல முடியாமல் ஒரு இரண்டும் கெட்டான் நகரம். அதாவது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்) உசிலம்பட்டி.

அப்போதெல்லாம் ஊர்வாசிகள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒரு விஷயம் பெண் சிசுக்கொலை. பெண் குழந்தைகள் பிறந்தவுடனே நெற்கதிர்களை மூக்குத்துவாரங்களில் நிறைத்து கொடூர முறையில் கொலை செய்யும் பழக்கம் சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டிருந்த காலம் அது.

“பருவ மழை பொய்த்து, கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பாமர மற்றும் ஏழை விவசாயிகள் தங்களுடைய உயிரையே தக்க வைத்துக்கொள்ள ஒரு வேளை அரிசிக்கஞ்சியை நம்பியிருந்த நிலையில் பெண் குழந்தைகளை வீட்டின் தலைச்சுமையாய் நினைத்ததில் தவறென்ன?”

இத்தகைய கொடூரத்தை தடுத்த நிறுத்த உங்களால் இயலவில்லையா என்று ஊர் பெரியவர்களிடம் வாக்குவாதத்தில் இறங்க நான் முயற்சித்த வேளைகளிலெல்லாம் என் முன்னே எடுத்து வைக்கப்பட்ட வாதத்தைத்தான் மேலே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

இத்தகைய நீசச்செயலை அடக்க காவல்துறையின் இரும்புக்கரத் துணையுடன் போராடித் தோற்ற பிறகுதான் அரசாங்கம் ‘தொட்டில் திட்டத்தை’க் கொண்டு வந்தது.

இப்போது, பெண்குழந்தைகளைத் தலைச்சுமையாய் கருதி வந்திருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் துவங்கியிருக்கிறதென்பதை மறுக்கவியலாது.

வேகமாய் மாறி வரும் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாய் கருதப்படுகிறது.

ஆணாதிக்கத்தின் சுவடு தேய்ந்து, மறைந்துபோகும் காலம் வந்துவிட்டது என்று கூற இயலாவிடினும் வந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி!

ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிக்கும் மக்கள் மத்தியில் இத்தகைய இண பேதம் இன்றும் ஆட்டிப்படைத்துக்கொண்டுதானிருக்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டாய் நான் குடியிருக்கும் வீட்டின் அருகே நடந்துகொண்டிருக்கும் விஷயத்தை இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

சென்னையில் மாடி வீடுகளுக்கருகிலேயே குடிசைவாசிகளும் வசித்து வரும் காட்சி சர்வ சாதாரணம்.

அப்படித்தான் நான் வசித்துவரும் பலமாடி குடியிருப்பிலிருந்து சற்று தள்ளி சுமார் நூறு குடிசைகள் அடங்கிய குடியிருப்பு உள்ளது. சுமார் மூன்று குறுக்கு தெருக்களை அடைத்துக்கொண்டு பரவியிருக்கும் அந்தப் பகுதி ஒரு குக்கிராமம் போன்றே காட்சியளிக்கும்.

அப்பகுதியைச் சுற்றிலும் அமைந்துள்ள பலமாடி குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்ய பெண்குழந்தைகளை அனுப்பிவிட்டு ஆண் குழந்தைகளைப் படிக்க அனுப்புவதைக் கண்கூடாகக் காணலாம்.

அந்த பகுதியில் தினந்தோறும் குடிநீர் வழங்கும் மாநகராட்சி குடிநீர் வாகனம் வந்து நின்றதும் பெண் குழந்தைகள் ஓடி வந்து தண்ணீரை போட்டி போட்டுக்கொண்டு பிளாஸ்டிக் குடங்களில் பிடிக்க இளைஞர்கள் ஹாயாக அருகிலிருக்கும் டீக்கடை பெஞ்சுகளில் அமர்ந்து கிண்டலடித்துக்கொண்டிருப்பதையும் தினசரி காணலாம்.

அரசாங்கம் என்னதான் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டாலும் கடைநிலையிலுள்ள மக்களை அது சென்றடையும்வரை இத்தகைய இண பேதங்களும், பெண் குழந்தைகள் புறக்கணிக்கப் படுவதும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கும்.

4 கருத்துகள்:

  1. பெயரில்லா2:04 PM

    Nallaach chonninga!

    பதிலளிநீக்கு
  2. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. அதைமட்டும் கவனியுங்கள்.

    மற்றது, உங்களுடைய ப்ளொக்கர் தளத்தில் மறுமொழிகள் பிரிவில்(comments section)

    Show word verification for comments?

    என்று ஒரு கேள்வி இருக்கும்.

    'ஆமாம்'

    என்று கொடுங்கள். மேலே வந்த பின்னூட்டங்கள் வராது.

    -மதி

    பதிலளிநீக்கு
  3. இயல்பா எழுதியிருக்கீங்க..மாற்றங்கள் வரும் ஆனால் மெதுவாக..

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா5:50 PM

    Checked out your blog - it's great!

    signs of a cheating wife

    பதிலளிநீக்கு